Wednesday, January 25, 2012

நெஞ்சக்கனல்


நெஞ்சக்கனல்
நெஞ்சுக்குள் அக்கினிக்குஞ் சொன்றிருந்தென்
  நினைப்புக்குள் சூடாகித் தகிக்கிற்து-அது
பஞ்சுக்குள் பொறியைப்போல் பரவியேஎன்
  பாட்டுக்குள் தீயாகிச் சுடுகிறது

கற்பனையில் விண்ணேறிக் கதிரவனாய்
  மாறியிந்தக் காசினியைப் பார்க்கிறது
சொற்கூட்டில் நெருப்பாகிச் சுற்றியுள்ள
  தீமைகளைச் சூழ்ந்தெரிக்க முயல்கிற்து

காற்றினிலே ஏறியந்த அண்டமெலாம்
  அளந்தறியக் கண்ந்தோறும் அலைகிறது-புயற்
காற்றையுமே தென்றலாக்கிக் காட்டுதற்கு
  முடியுமெனக் கட்டியமே உரைக்கிறது

சொல்லினிலே ஏறியொரு சுகராக
  மிசைக்குங்கால் சொர்க்கமெனத் தெரிகிறது-அதுவே
வில்லினிலே பாய்ந்திடுமோர் அம்பாகித்
  தாக்குங்கால் வேதனைகள் தருகிறது

பெண்மைகளைப் பெண்மைகளே சுடுகின்ற
  வேதனையில் அக்கனலே எரிகிறது-இந்தப்
பெண்மைகளைச் சீர்குலைக்கும் ஆண்மைகளைக்
  காணுங்கால் பெருஞ்சீற்றம் விரிகிறது

உள்ளுக்குள் கனலில்லா ஒருகவிஞன்
  இல்லையெனும் உண்மையின்று தெரிகிறது-அந்த
உள்ளத்துக் கவிதைவெறி நன்மைக்கே
  இல்லையெனில் உள்ளமெலாம் எரிகிறது

கவிதைக்குள் கனலாகி நிற்குமொரு
  சொற்கூட்டே களிப்பள்ளித் தருகிறது-என்றும்
கவிஞர்தம் நெஞ்சுக்குள் கனலாகும்
  கவிதையினால் கருத்தெல்லாம் இனிக்கிறது

கவிதைகளே நெருப்பாகித் தீமைகளைச்
  சுட்டெரிக்கும் காலமின்று தெரிகிறது-அந்தக்
கவிதைகளைச் சூடாக்கும் கனல்வாழ
  வேண்டுமெனக் கவிநெஞ்சம் விழைகிறது


Tuesday, January 24, 2012

கண்முன் நிலா;கற்பனை உலா


கண்ணில் தெரிகிற நிலவு வந்தே
  கைப்பட மாட்டாதோ?-அட
விண்ணில் திரிகிற மீன்கள் மடியில்
  வீழ்ந்திட மாட்டாவோ?

சோலை தவழ்ந்திடு தென்ற்ல் அதுநம்
  சொல்லினைக் கேட்காதோ?-எந்த
வேளை வேண்டினும் வந்தே நம்முடல்
  மெல்லெனத் தடவாதோ?

காட்டில் திரிந்திடு புலிநரி அவைநம்
  கட்டளை கேட்காவோ?-இந்த
நாட்டு மனிதரில் யாரவை யாரென
  நம்மிடம் உரைக்காவோ?

காற்று வெளியெலாம் நம்செவி வந்தே
  கதைகள் நவிலாவோ?-இங்கே
நேற்றும் நாளையும் இன்றும் நமதென
  நாட்டியம் புரியாவோ?

கண்ணில் தெரிகிற உயிரெலாம் உறவெனக்
  கருத்துள் பதியாதோ?-சிந்தை
எண்ண ஒளிக்கடல் நீந்தித் திளைத்தே
  இன்பம் அடையாதோ?

கதிரும் நிலவும் உறவென வந்து
  கலந்து மகிழாவோ?-அட
எதிரும் புதிருமே இல்லா உலகம்
  இங்கு மலராதோ?

கண்ணில் ஒருநிலா கற்பனை ஆயிரம்
  காட்சி விரியாதோ?-அட
எண்ணிப் பாரடா என்ன உன்னுளே
  இலையென இடிக்காவோ?

கண்ணில் தெரிந்திடு காட்சிகள் நந்தம்
  கற்பனை தூண்டாவோ?-நம்
எண்ணம் ஆயிரம் ஆயிரம் சிட்டாய்
  எங்கணும் பறக்காவோ?

நானும் நீயும் அவனும் அவளும்
  நடமிடும் ஆன்மாவே!-அந்த
வானும் நிலவும் வெளியும் ஆன்மா
  ஆடிடு களந்தானே!

கண்ணில் தெரிகிற நிலவே உன்றன்
  கருத்துள் நுழையட்டும்-அந்த
விண்ணில் தவழ்ந்திடு கோள்க ளனைத்தும்
  மனத்துள் தவழட்டும்

Saturday, January 21, 2012

தலைத்தொழில் வல்லோன்


தலையாய தொழிலெங்கள் தொழில்தான்;ஆமாம்
  தலைமீது தானேஎம் தொழில்ந டக்கும்
கலையாத முடிவகைகள்;எந்தப் போதும்
  கலைந்திருக்கும் முடிவகைகள்; அழகு கூட்டும்
நிலையான முடிவகைகள்;நடிகர் தாங்கும்
  நிலையில்லா முடிவகைகள்;எல்லாம் எங்கள்
கலைவண்ணச் சின்னங்கள்;நீங்கள் என்னைக்
  கலையழகாய் முடிகொண்டான் என்ன லாமே

கருப்பரொடு வெள்ளையர்கள் மிகநெ ருங்கிக்
  கலந்துவாழும் சாம்ராஜ்யம்;நிறங்கள் கூட்டும்
நெருப்பங்கே மூள்வதில்லை;தீண்டாப் பொல்லா
  நினைப்பங்கே எழுவதில்லை;காற்றி லாடி
விருப்பமுடன் உறவாடும் அவர்க ளைத்தான்
  வெட்டிவெட்டிக் குவிப்பேன்நான்;விழுந்த போதும்
நெருக்கமுடன் கிடக்கின்ற ஒருமைப் பாட்டை
  நினைத்துமகிழ்ந் திடுவேன்நான் உண்மை யாக

முடியாட்சி தனையொழிக்கப் படைகள் தாங்கி
  முன்னிற்கும் வீரரினம் நாங்கள்;இங்கே
முடியாட்சி படைபலத்தால் வீழுங் கோலம்
  முழுவதையும் கண்டுநெஞ்சில் மகிழ்வு கொள்ளா
முடியரசர் யாருமில்லை; சொல்லப் போனால்
  முடிதுறந்த ம்முடியரசர் அன்பு கொஞ்சப்
படியளப்பா ரென்றிட்டால் எங்கள் மேன்மை
  பாரறியப் பறையறைந்தா சொல்ல வேண்டும்?

முடியரசில் எங்கேனும் ஏற்றத் தாழ்வு
  முனையரும்பின் சரிசெய்ய என்னி டந்தான்
முடியரசர் வருவார்கள்;தலைவ ணங்கி
  முடியரசர் அமர்ந்தபின்னே அவர்த லையில்
துடிப்போடு கைவைப்பேன்;உயர்வு தாழ்வுத்
  தோற்றத்தைச்  சரிசெய்வேன்;தலையை நீட்டும்
முடிகளையே வீழ்த்திடுவேன்;இந்த மண்ணில்
  முடியாட்சி ஒழுங்குபெற்ற தெம்மா லேதான்

Wednesday, January 18, 2012

நான் யார் ?


நான்யார் என்பது தெரியவில்லை-நிற்கும்
  நீயார் என்பதும் புரியவில்லை
நான்யார்? நீயார்? நடப்பவர்யார்?-இங்கே
  நெருக்கிடும் உறவினர் யார்யார்யார்?

நான்நா னென்பதென் உடல்தானா?-அதை
  நடத்திடும் இயக்க உயிர்தானா?
நானெனச் சொல்வ தென்னவென-நான்
  நாளெலாம் நினைக்கிறேன் தெரியவில்லை

நாள்தொறும் உடற்சுவை தேடுகின்றேன்-என்ற்ன்
  நாக்கிற் கோர்சுவை தேடுகின்றேன்
வாளெனத் துயரெனை அறுக்குங்கால்-அந்த
  வாலறி வன்தாள் நாடுகின்றேன்

தேடித் துய்ப்பவன் தான்நானா?-இல்லை
  துன்பில் நைந்தே இறைவன்தாள்
தேடி எய்ப்பவன் தான்நானா?-அந்தத்
  தேட லென்பதே நான்தானா?

மனத்துள் பயணம் போகின்றேன்-அங்கே
  மலங்கள் மாசுகள் காண்கின்றேன்
மனமே என்பது நான்தானா?-அந்த
  மலமும் மாசும் தான்நானா?

ஆன்ம ஒளிக்கடல் அலைவீச்சில்-ஓர்
  அற்புதச் சோதி ஒளிர்கிற்தே
ஆன்மா என்பது நான்தானா?-அந்த
  அழகிற் குளிப்பவன் நான்தானா?

புலன்பொறி யனைத்தையும் அவைபோக்கில்-எங்கும்
  போக விடுபவன் தான்நானா?-
புலன்பொறி அடக்கப் போராட்டம்-நாளும்
  புரிந்தே களைப்பவன் தான்நானா?

ஆத்திரக் கொடுமுடி தான்நானா?இல்லை
  அமைதிக் கொள்கலம் தான்நானா?
 ஆத்திரம் போக்கி அறிவொளியை-என்
  அகத்துள் காண்பவன் தான்நானா?

எல்லாம் நான்தான் என்றிட்டால்-உள்ளே
  இருப்பவன் அவனும் நான்தானா?
வல்லவன் எனக்குள் அமர்ந்துவிட்டால்-அந்த
  மாயமும் அவனும் தான்நானா?

Sunday, January 15, 2012

கவிஞன்

கவிஞன் நானோர் அழியாத் தத்துவம்
புவியுள அனைத்துமென் தத்துவ விளக்கம்

வஞ்சகம் சூதில் வசப்பட மாட்டேன்
கொஞ்சிடும் உரைக்குள் குழைந்திட மாட்டேன்

கடும்புலி ஓநாய் கடித்திட வரினும்
நடுங்கிட மாட்டேன்; கவிதை படைப்பேன்:

வறுமை என்னை வாட்டி வதைப்பினும்
பெருமைக் கவிப்பொருட் செல்வனாய் இருப்பேன்:                                                 

பசிநோய் என்னைப் புசித்திட வரினும்
புசியென அதற்கோர் கவிதை கொடுப்பேன்

பொருளற்று நானும் பொருளற்றுப் போயினும்
பொருளுற்ற கவிதைகள் பெற்றெடுத் தளிப்பேன்

கவிதை எனக்கொரு கைவா ளாகும்
புவியுள தீமைகள் பலியா யாகும்;

அறங்கொன் றெவனும் ஆட்டம் போட்டால்
அற்ம்பா டியேஅவன் அழியச் செய்வேன்;

வான்மதி சூரியன் வசப்பட வைப்பேன்
நானுள திசையெலாம் ஒளிபெற வைப்பேன்;

இறைவனை ஏவல் கேட்டிட வைப்பேன்
குறையிலா உலகம் படைத்திடச் செய்வேன்;

தீமைகள் கொடுமை மழையெனப் பொழியின்
வாய்மைக் கவியொரு குடையாய்ப் பிடிப்பேன்;

பொய்யரை அழிப்பேன்;புரட்டரை ஒழிப்பேன்;
வையகம் நலமாய் வாழ்ந்திட வைப்பேன்;

நில்லாப் பொருளை நிற்க வைப்பேன்;
கல்லைக் கனியாய் மாற்றியும் வைப்பேன்;

இல்லா உலகம் இல்லை யாக்குவேன்;
செல்லாப் பொருள்கள் சென்றிடச் செய்வேன்;

படைப்பதால் நானுமோர் கடவுள்; நல்லதே
படைப்பதால் அவனினும் நானே உயர்ந்தவன்;

மண்ணுளே போயினும் மக்கிட மாட்டேன்
மண்ணுளே வைரமாய்ப் பின்னொளி தருவேன்;

அழிவென எனக்கு வருவதே இல்லை;
அழிவதை நானும் படைப்பதே இல்லை;

கவிஞன் நானோர் அழியாத் தத்துவம்;
புவியுள அனைத்துமென் தத்துவ விள்க்கம்   

Friday, January 13, 2012

கூத்து


காலமெனும் மேடையிலே
கோலமிட்டு வேடமிட்டுக்
காட்டுகிறோம் நாம்பலவாய் வித்தை-ஆய்ந்து
கூட்டிடிலோ அத்துணையும் சொத்தை

காதலென்றும் மோகமென்றும்
காதலின்றேல் சாதலென்றும்
கதறுகிறார் இளைஞரெல்லாம் இங்கே-அந்தக்
காதலெல்லாம் ஓய்ந்தபின்னர் எங்கே?

மாடுமனை வீடுமக்கள்
கூடுகின்ற மக்களெலாம்
மாட்சியுள்ள போதிருப்பார் கூடி-நாம்
வீழ்ச்சியுற்றால் பறந்திடுவார் ஓடி

செத்தபிணம் தனைச்சுற்றிக்
கத்தைகத்தை யாய்மாலை
சாத்துகிறார் போர்த்துகிறார் ஆடை-நாளும்
சாம்பிணத்துக் கேதுமில்லை ஆடை

வறுமையென்றும் ஒழிப்பென்றும்
வகைவகையாய்க் கொள்கைகளை
வகுத்துரைத்து வாக்குவாங்கிச் செல்வார்-அவர்
வென்றபின்னே ஏழைபக்கம் நில்லார்

யாரிடத்தில் யார்தஞ்சம்
யாரொடுயார் கூட்டணியாம்
நாட்டிலொரு பெருங்கூத்தே நடக்கும்-என்று
நாட்டுமக்கள் அக்கூத்தை முடிக்கும்?

இறைவனைக் கேட்டேன்.

இறைவனைக் கேட்டேன் பதிலில்லை-இங்கே
இருப்பவர் பதிலும் சரியில்லை

நல்லவர் வாழ்க்கை நலிகிறதே-நாளூம்
நடப்பினில் துன்பம் நிறைகிறதே
அல்லவர் வாழ்க்கை உயர்கிறதே-இந்த
அமைப்பெலாம் உன்றன் செயல்தானா (இறை)

வஞ்சகம் கைகொட்டிச் சிரிக்கிறதே-நல்ல
வாய்மையும் தூய்மையும் சரிகிறதே
சஞ்சலம் அறத்தையே சூழ்கிறதே-இந்தச்
சூழலைப் படைத்தவன் நீதானா (இறை)

நல்லன செய்யத் துடித்திருப்பான்-அவன்
நலிந்து கிடக்கிறான் அடித்தளத்தில்
அல்லன செய்பவன் மேல்தள்த்தில்-இந்த
அடித்தளம் மேல்தளம் சரிதானா (இறை)

கள்ளியில் முல்லைகள் பூப்பதில்லை-எந்தக்
கானலும் தாகமே தீர்ப்பதில்லை
கள்ளமே அரியணை அமர்கிறதே-இந்தக்
காட்சி அமைப்பெலாம் சரிதானா (இறை)

காக்கை மயிலென ஆவதிலலை-எந்தக்
காலமும் தோகையை விரிப்பதில்லை
சேர்க்கையில் காக்கை சிறக்கிறதே-இந்தச்
செப்பிடு வித்தைகள் சரிதானா (இறை)

நீதியும் நேர்மையும் சாகிறதே-தூய
நெஞ்சங்கள் தீயினில் வேகிறதே
சாதிகள் சிறகினை விரிக்கிறதே-இந்தச்
சந்தையில் அறங்களே விலைபெறுமா? (இறை)

கீதையை ஏனடா சொல்லிவைத்தாய்?-எந்தக்
கிறுக்கனும் அதன்வழி நடப்பதில்லை
போதையின் நெறிபுகும் மக்களுக்கே-உன்றன்
கீதையின் போதனை சுகம்தருமா? (இறை)

யாரடா அறநெறி தொடர்ந்திடுவார்? இங்கே
யாரடா நாளுமே இடர்ப்படுவார்?
பாரடா கவுரவர் சிரிப்பதனை-அந்தப்
பாண்டவர் கைகளை நெரிப்பதனை

சங்கெடுத் தூதடா சமர்வரட்டும்-அந்தச்
சமரினில் முடிவொன்று தான்வரட்டும்
இங்கெடுத் தெறியடா சக்கரத்தைத்-தீமை
இலையென அழித்துவிட் டதுவரட்டும்

Wednesday, January 11, 2012

gnanakkirukkan


        ஞானக்கிறுக்கன்

கவிஞன் நானொரு ஞானக் கிறுக்கன்
புவிப்பொரு ளனைத்தும் போதி மரங்கள்

தென்றலை இறுகக் கட்டி யணைப்பேன்
மண்ணில் தீண்டாமை உனக்கிலை என்பேன்

மணக்கும் மலரை மோந்து திளைப்பேன்
உனக்குள் சாதிகள் உண்டா என்பேன்

கதிரவன் ஒளிக்குத் தடைகள் உண்டா?
அதுநுழை வதிலே பேதமே தென்பேன்

பாறையைப் பார்த்துநீ கடவுளா? கல்லா?
யாராய் நீதான் மாறுவா யென்பேன்

கடவுளை நான்தான் கட்டி யிழுத்தே
அடநீ இந்த அவனிபா ரென்பேன்

படைத்தவ  னேநீ படைத்த நெஞ்சுகள்
உடைபடு  மோசை கேட்குதா என்பேன்

பார்முழு தும்களை மண்டியே பயிரை
சீரழித் திடுநிலை தெரியுதா? என்பேன்

கோவிலில் கூட்டம் பக்தியா லல்ல
பாவங்கள் கசக்கிப் பிழிதலால் என்பேன்

கவிஞன் நானொரு ஞானக் கிறுக்கன்
புவியுள நியாயம் புரிபட வில்லை

நரிகள் புலிகளாய் மாறுவ தில்லை
குறுமுயல் சிங்கமாய் உறுமுவ  தில்லை

மனிதனோ மிருகமாய் மாறிடு கின்றான்
மனிதனைக் கடித்துக் குதறிடு கின்றான்

"படைத்தவ  னேநீ மனிதனின் நெஞ்சுள்
குடியிருந் தொருநாள் கூத்தைப் பாரேன்"

என்றுநான் அழைத்தேன் "அய்யோ என்னைக்
கொன்றுபோட் டாலும் குடிவர மாட்டேன்

நான்தான் படைத்தேன் ஆனால் இன்றோ
ஏன்தான் படைத்தேன் எனஅழு கின்றேன்"

என்றான் 'அடநீ என்போன் றோரை
என்ன கருதி நெஞ்சுடன் படைத்தாய்?

என்றேன் அவனோ "கவீஞனே மண்ணில்
உன்றன் நெஞ்சம் அடிபட அடிபடப்

பாட்டினி லேஒரு பக்குவம் தோன்றும்
கேட்பாய் அந்தப் பக்குவம் நான்தான்"

என்றான்;இந்த ஞானக் கிறுக்கன்
ஒன்றும் புரியாமல் பாடித் திரிவேன்.

Tuesday, January 10, 2012


          சிறகு                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
சிறகை விரித்தொரு பறவை பறந்துவிண்
           பரப்பை அளக்கிறது-அங்கே
விரையும் கோளினம் மீனினம் இவ்ற்றின்
           வகையறிந் துணர்கிறது

இயங்கிடு கோள்களின் இயக்கம் அளந்திடப்
            பறவை துடிக்கிறது      
இயக்கம் எத்துணை வகைவகை யெனவே 
            இதயம் நொடிக்கிறது

அண்ட மியங்கிடு பிண்ட மிவைகளை
                    ஆட்டுவோன் யாரெனவே-கண்ணால்
கண்டு மகிழ்ந்திட முனைந்து பார்த்துமே
           களைத்து வீழ்கிற்து

எனக்கொரு சிறகினை அளித்தனன் அதுவெனை                                                                                                                     
                எங்கணும் இழுக்கிறது-மண்ணில்
கணக்கினி லடங்கா மானிட உள்ளக்
              கசடுக ளளக்கிறது

எனக்குளே நுழைந்தென் இதயமே துழாவி
            எதெதோ செய்கிறது-அடா
 எனக்குளே இத்துணை குப்பைக ளாவென
             என்னை இடிக்கிறது
                                                                                                                                                                                                          
அகமும் புறமும் அளந்து பார்த்தென்
          அளவினைக் காண்கிறது-எல்லாப்
பகலும் இரவும் நான்செயும் செயல்கள் 
          பயனுறச் செய்கிறது

சோலையில் பூத்திடு பூவித ழசைவினில்
           சொக்கியே நிற்கிறது-அதி     
காலையில் பூவிதழ் மேடையில் வண்டின்
                    நாட்டியம் காண்கிற்து

மணமுள பூவின் மணமதில் முழுதாய்
          மனதை இழக்கிற்து-ஆங்கே
மணமிலாப் பூவின் இதழ்கள் நிறத்தினில்
          மயங்கித் திளைக்கிறது

எங்கணும் சுற்றித் திரிந்தெதோ செய்தி
          எனக்குத் தருகிறது-அதை
 மங்கிடாக் கவியென வடித்திடச் சொல்லி
            மனசை இடிக்கிறது

நானென செய்வேன் கவியென ஒன்றை
          நறுக்கெனப் படைக்கின்றேன்=அதை
நான்படைத் தேனா சிற்கு படைத்ததா?
          அறிந்திடத் துடிக்கின்றேன்...