Saturday, June 30, 2012

Re; குறுந்தொகைச் சித்திரம்

                             நான் யார்? நீ யார்?
 
  மாலை மயங்குகிற நேரம்.ஆளை மயக்குகிற சூழல்.தென்றல் தவழ்கிறது
தேமணம் கமழ்கிறது.சோலை மலர்கள் சுந்தரப் பற்கள் காட்டிச் சிரிக்கின்றன.
சின்னஞ்சிறு சிட்டுகள் குறுக்கே பாய்கின்றன.
  அங்கே...அந்தச் சோலையில்...
  அப்போது..அந்த மாலை நேரத்தில்..
  தம்மை மறந்த தனிநிலையில் இருந்தனர் இருவர்.தலைவனின் கையணைப்பில்
தலைவி.
  அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள் தலைவி திடீரென அவள்
கன்னங்களில் கண்ணீர் வழிகிறது. வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே
விழியைக் கூர்மையாக்கிப் பார்க்கிறான் அவன்.

"அன்பே!"
"என்ன?"
"வரக்கூடாத நேரத்தில் வரக்கூடாத கண்ணீர் வருகிறதே. என்ன காரணம்? நான் அதை
அறியலாமா?" தலைவன் கேட்டான்.
  வரக்கூடாத எண்ணங்கள் என் சிந்தனையில் வந்து மோதிய காரணம்தான் இந்தக்
கண்ணீர்." என்றாள்.
  "அப்படி என்ன சிந்தனை அன்பே!"
  "நாம் முதலில் தலைப்பட்டுச் சந்தித்து உள்ளம் பரிமாறிக் கொண்டோமே அந்த நாளை
நினைத்தேன்."
  அந்த நாள்..அதன் தொடர்பான நிகழ்ச்சிகள்..அவன் உள்ளத்திலும் படமென ஓடின.
  அன்று.. வேட்டைக்கென வந்த தலைவன் தன் தோழர்களைப் பிரிந்தான்.
  வெகு தொலைவு வந்து விட்டான்.
  தோழர்கள் வருவாரோ? அன்றி மயங்கித் திரிவாரோ?..என்று மறுகினான்.
  திடீரென ஓர் அலறல்.பெண் குரல். குரல் வந்த திசை நோக்கி ஓடினான்.
  காற்றில் ஆடும் கொடியென நடுங்கிக் கொண்டிருந்தாள் ஒருத்தி. முகத்தில்
பய உணர்வு படர்ந்திருந்தது.சுற்றும் பார்த்தான்.யாரும் இல்லை.யாரவள்?
எப்படி இங்கே வந்தாள்? ஏன் அலறினாள்?
  நெருங்கினான்.
  "பெண்ணே! யாரம்மா நீ? ஏன் அலறினாய்? " கேட்டான் அவன்.
  அவள் நிமிர்ந்தாள்;பார்த்தாள்; தலை கவிழ்ந்தாள்.
  முகத்தில் அச்சம் விலகி நாணம் குடி புகுந்தது.வாய்மலர் மெல்ல அவிழ்ந்தது.
  "நான்..நான்..தோழிகளோடு வந்தேன்.எப்படியோ அவர்களைப் பிரிந்து வழி
தவறி விட்டேன்.அச்சத்தோடு சுற்றும்போது புதருக்குள் ஏதோ சலசலத்தது.
புலியோ எனப் பயந்து அலறி விட்டேன்.அவ்வளவுதான். தாங்கள்

  "நானும் அப்படித்தான். வேட்டைக்கு வந்தவன்; தோழர்களைப் பிரிந்தவன்; வழி தவறியவன்.
ஆனால் இப்பொழுது எனக்குப் புரிகிறது. இருவருமே வழி தவறவில்லை. சரியான வழியில்
தான் வந்திருக்கிறோம். விதி இப்படிச் சேர்த்திருக்கிறது. விதி வழி தவறுமா?
  அவன் குறிப்பை உணர்ந்தாள் அவள். அவள் நெஞ்சம் நெகிழ்ந்தது. நெகிழ்ந்த நெஞ்சத்தில்
அவன் குடியேறினான். அவன் நெஞ்சில் அவள் தவழ்ந்தாள்.

  இருவரும் சேர்ந்த கதை இது. அதன் பிறகு இது தொடர்கதை யாயிற்று. குறித்த நேரத்தில்
குறித்த இடத்தில் குறித்தபடி இணைந்து மகிழ்ந்தனர் அவர்கள்.
  அத்தகைய ஒரு சந்திப்புத்தான் இது. தலைவன் நினைவை விட்டு நிலைக்கு வந்தான்.
  "அன்பே! யாரென்றே அறியாத நம்மை விதி சேர்த்ததே! ஏன் வீண்  சிந்தனை?"
 
" அன்பரே! என்னை உங்கட்குத் தந்து விட்டேன். ஆனால் ஊரறியத் தரவில்லையே! இந்தக்
களவு கற்பில் முடிந்தால் தானே எனக்கு நிறைவு. மணம் நடைபெற ஏதேனும் இடையூறு
ஏற்பட்டு விடுமோ என்று என் உள்ளம் கலங்குகிறது."

  "காரணம் இல்லாத கலக்கம் கண்ணே இது. இடையூறு என்றால் விதி தானே தர வேண்டும்?
நம்மைக் கூட்டுவித்ததே அந்த விதிதானே; கொஞ்சம் சிந்தித்துப் பார்.

  "என் தாயும் உன் தாயும் உறவினர்களா? இல்லையே! என் தந்தைக்கும் உன் தந்தைக்கும்
ஏதேனும் முறையான உறவுண்டா? இல்லையே!  அது போகட்டும். நம்மைக் கூட்டுவித்த
அந்த நிகழ்ச்சிக்கு முன்னால் நான் யார்?  நீ யார்? நம்மிடையே ஏதாவது அறிமுகம் உண்டா?
இல்லையே!..எப்படிச் சேர்ந்தோம்?..அதுதான் விதி.

  "வானத்தில் மேகம் கூடுகிறது; மழையாகப் பொழிகிறது; நிலத்திலே வீழ்கிறது; மண்ணோடு
கலக்கிறது. செம்மண்ணோடு கலந்த நீர் செந்நிறமாகிறது. மண்ணின் நிறம், மணம், குணம்
அனைத்தோடும் அந்த நீர் பிரிக்க முடியாதபடி இணைகிறது. இந்த மண்ணும் நீரும்
இணைவதற்கு முன்னால் அவைகட்கிடையே ஏதேனும் உறவுண்டா? இல்லையே!..ஆனால்
இணைந்த பிறகு பிரிவதில்லையே!...

  "இதேதான் கண்ணே! நம் நிலையும். மண்ணோடு மழைநீர் சேர்கிறது. இரண்டும் ஒன்றாகிறது.
என்னோடு நீ சேர்ந்தாய். இருவரும் ஒருவரானோம். கூட்டுவித்தது விதி. செம்புலத்திலே
பெய்த நீர்போல அன்பு நிறைந்த நெஞ்சங்கள் கலந்து விட்டன. இனிப் பிரிவே இல்லை.
கலங்காதே!" என்று தேற்றுகிறான் தலைவன்.
           பாடல்;
         "யாயும் யாயும் யாரா கியரோ
          எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
          யானும் நீயும் எவ்வழி அறிதும்
          செம்புலப் பெயனீர் போல
          அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!"
                            ---செம்புலப் பெயனீரார்
                              (குறுந்தொகை..40)
.

...
 
..
     Re; குறுந்தொகைச் சித்திரம் 

Sunday, June 24, 2012

kurunthokaich chiththiram


                   ஊமையன் காவல்

      பாங்கனுக்குத் தலைவனைப் பார்க்கப் பார்க்க உள்ளம் வேதனையில் மூழ்குகிறது.
எப்படி இருந்தவன்! எத்தகைய வலிமை வாய்ந்த உடம்பு ! எத்துணைச் சுவையான
உரையாடல்! இவைகளில் எதுவுமே இப்பொழுது தலைவனிடம் இல்லை. எங்கே
அவையெல்லாம்?
     வாடிக் குலைந்த மேனியோடு, எதையோ நாடித் தவஞ்செய்யும் முனிவரைப் போல
மோனத்தில் ஆழ்ந்து விட்டான் அவன்.எப்போதும் ஒரே சிந்தனை.தேடித் திரிந்த பொருள்
கிடைக்காத ஒரு தவிப்பு.யாருமில்லாத தனிமையில் ஏதோ ஓர் உருவத்தைக் கண்முன்
கொண்டு வந்து களிக்கும் ஒரு தவிப்பு.
 
எத்தனை நாளாக இது?
பாங்கனுக்குப் புரிந்தது.
  அன்று பாங்கனும் தலைவனும் தான் சென்றார்கள்.சென்று கொண்டேயிருந்த பாங்கன்
திரும்பினான். தலைவனைக் காணோம்.அவன் அப்படித்தான். எங்கேனும் ஆடுகின்ற
மயிலோ, அசைகின்ற மலரோ, தாவுகின்ற சிட்டோ, தட்டுப்பட்டால் அந்த அழகை அங்கேயே
நின்று சுவைப்பான்.அப்படித்தான் எதோ ஓர் அழகு அவனை நிறுத்தி விட்டது என்று கருதி
ஓரிடத்தில் அமர்ந்தான் பாங்கன்.

தலைவன் வரவே இல்லை.

 நேரம் ஓடியது.பாங்கனுக்கு வியப்பு.இவ்வளவு நேரமா இயற்கையழகு அவனை இருத்தி
விட்டது? தேடிச் சென்றான் பாங்கன் அருகிருந்த சோலைக்குள்.
 
  அங்கே கொடி கொம்பைத் தழுவிக் கிடந்தது.தம்மை மறந்த நிலையில் இருவர். எதிர்
பார்க்கவில்லை பாங்கன். எப்படி நேர்ந்தது இது? யார் அவள்? யாருக்குத் தெரியும்?

  ஒரு கனைப்பினால் அவர்கள் தவத்தைக் கலைத்தான். வெட்கித் தலை குனிந்து விலகிச்
சென்றது கொடி. விட்ட தழுவலில் மெய்மறந்து நின்றது கொம்பு.

  அவள் பாங்கியர் சூழப் போய் விட்டாள். அவன் பாங்கனிடம் வந்தான்.

  "நெகிழாத உன் நெஞ்சை நெகிழச் செய்த அந்த நேரிழை யாரோ?" பாங்கன் கேட்டான்.
  "அதுதான் தெரியவில்லை. ஆனால் இதோ இந்த ஊர்தான்." தலைவன் சொன்னான்.
  "என்னப்பா! யாரென்றே தெரியாமலா உள்ளத்தை ஓட விட்டாய்?"
  "நானா ஓட விட்டேன்; அது தானாகவல்லவோ ஓடியது; எப்படி ஓடியது? ஏன் ஓடியது?
யார்க்குத் தெரியும்? ஆனால் ஒன்று சொல்வேன்.இனி அவள்தான் என் தலைவி.
அவளைத்தான் நான் மணப்பேன்." என்றான் தலைவன்.

" சரி சரி வா !" என்றழைத்துச் சென்றான் பாங்கன்.

  அன்று ஏற்பட்ட மாறுதல்தான் தலைவனிடம்.

  நாள் தவறாமல் அதே சோலைக்குச் செல்கிறான். காத்திருந்து காத்திருந்து கவலையோடு
திரும்புகிறான்
   அவள் வரவில்லையே; காண முடியவில்லையே ; அவளை 'இற்செறித்து' விட்டார்களோ?
வீட்டிலேயே சிறை வைத்து விட்டார்களோ? என்று வேதனைப் படுகிறான்.
  வேதனையின் விளைவு அவன் உடல் இளைத்தது.உணர்வுகள் செத்தன.

  பாங்கன் தவித்தான்.தலைவனின் நலம் நாடுபவனல்லவா அவன்.அறிவுரை சொல்லி ஆற்றுப்
படுத்தும் கடமை அவனுக்கிருக்கிறதல்லவா? தவறு கண்டவிடத்து இடித்துரைக்கும் கடப்பாடு
அவனுக்குத்தானே உண்டு.
  "தலைவ! உன் தகுதிக்கும் பெருமைக்கும் இப்படி ஒரு பெண்ணை எண்ணி உருகுவது
ஏற்றதில்லை" என்று இடித்துரைக்கிறான் அவன்.
  தலைவன் தோழனைப் பார்த்துக் கூறுகிறான்;

"இடித்துரைக்கும் நண்பனே! என் மேனி இளைப்பது உனக்குத் தெரிகிறது. காரணமும் புரிகிறது.
நீ இடித்துரைப்பதோடு நில்லாமல் என் மேனி வாடாமல் இருக்க ஏதாவது செய்ய்ஸ் முடியுமானால்
மிக்க நன்றியுடையேனாவேன்; என் தகுதிக்கு இது சரியில்லை என்கிறாய். எனக்கும் அது தெரிகிறது.
என்ன செய்ய? என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே ! அவளை எண்ணி ஏங்கி உருகும் என்
உடல் நலிவைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே!

  நண்ப! இதைக் கொஞ்சம் கேள்! ஒரு பாறை. அதன்மேல் கையில்லாத ஊமையன் ஒருவன். அவனுக்கு
முன்னால் வெண்ணெய். வெய்யில் ஏற ஏற வெண்ணெய் உருகி ஓடுகிறது.கண்ணால் பார்க்கிறான்
ஊமையன்.என்ன செய்வான் அவன்?
  தடுத்து நிறுத்தக் கையில்லையே! அருகுள்ளோரை அழைத்துச் சொல்ல வாயில்லையே! வெயிலில்
வெண்ணெய் உருகிப் பரந்து ஓடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

  அவன் நிலைதான் என் நிலை. வெயில் காய்கிறது; வெண்ணெய் உருகுகிறது. காதல் காய்கிறது; என்
கட்டுடல் உருகுகிறது. ஊமையனால் வெண்ணெய் உருகுவதைத் தடுக்க முடியவில்லை;என்னால் என்
உடல் உருகுவதைத் த்டுக்க முடியவில்லை.நோய் அப்படிப் பரந்து விட்டது. என்ன செய்வேன்?
நீதான் ஏதாவது செய்ய வேண்டும்' என்கிறான் தலைவன்.
    "இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
   நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
   ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
   கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
      வெண்ணெய் உணங்கல் போலப்
      பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே!
                                                               -வெள்ளிவீதியார்
                               குறுந்தொகை--58
(கேளிர்--சுற்றத்தார்,பாங்கன்.குறை--இன்றியமையாத செயல்,அறை--பாறை
   நோன்றுகொளல்--பொறுத்துக்கொளல் )    
.