Saturday, July 28, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                             பாவேந்தர்

பூவேந்தி நிற்கின்ற இதழ்க ளெல்லாம்
  பொலிவுடனே என்றென்றும் நிலைப்ப தில்லை;
காவேந்தி நிற்கின்ற மரங்க ளெல்லாம்
  கனிகாய்கள் என்றென்றும் தருவ தில்லை;
நாவேந்தி நாம்துப்பும் சொற்க ளெல்லாம்
  நல்லினிமை தந்தென்றும் திகழ்வ தில்லை;
பாவேந்தர் நாவேந்தி உதிர்த்த சொற்கள்
  பைந்தமிழில் என்றென்றும் இனிக்கக் கண்டோம்.

இயற்கையினைப் பாடினாலும் இனிக்கும்; நாட்டை
  இடித்துரைத்துப் பாடினாலும் இனிக்கும்; சமய
மயக்கத்தைப் பாடினாலும் இனிக்கும்; ஏழை
  மக்களினைப் பாடினாலும் இனிக்கும்; பெண்கள்
செயற்கையழ குணர்த்தினாலும் இனிக்கும்; அன்னார்
  சிரிப்பழகைப் பாடினாலும் இனிக்கும்; சற்றும்
மயக்கமில்லாச் சொற்கூட்டி எதைச்சொன் னாலும்
  மனசெல்லாம் இன்பமழை பொழியு தந்தோ!

பாரதியின் தாசனென ஆனார்; அய்யர்
  பாட்டுக்கே நானடிமை எனஉ ரைத்தார்;
பாரதியை இகழ்ந்துவிட முனைவோர் தம்மைப்
  பளிச்செனவே அறைவதுபோல் பாடல் தந்தார்;
பாரதியின் சமுதாயப் பார்வை வித்தைப்
  பரந்துநிற்கும் ஆலமர மென்ன வாக்கி
வீரமுடன் தீரத்தைக் காட்டிச் சொல்லால்
  வெல்லுகின்ற கவிதைகளை விதைத்து நின்றார்.

பெண்களினை எவரிவர்போல் பார்த்தார்? பெண்கள்
  படுந்துயரை எவரிவர்போல் இடித்து ரைத்தார்?
புண்நிறைந்த சமுதாய உடலில் தூய
  புதுரத்தம் எவரிவர்போல் பாய்ச்சி நின்றார்?
கண்களெனும் பெண்களிங்கே கைம்பெண் ணாகிக்
  கோரிக்கை யற்றதொரு வேர்ப்ப லாவாய்க்
கண்குருதி சிந்திடவே நையும் காட்சி
  கவிதையிலே எவரிவர்போல் பாடி வைத்தார்? 

Wednesday, July 25, 2012

வானொலிச் சிற்றுரைகள்

                            நேர்மை

  நாம் விடுதலை பெற்றுக் குடியரசு நாட்டில் வாழ்கிறோம்.

  எல்லோரும் இந்நாட்டு மன்னராகி விட்டோம். அதாவது ஆளப்படும்
ஒரு குடிமகனாகவும், அதே நேரத்தில் ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கும்
அதிகாரம் படைத்தவனாகவும், ஒவ்வொரு குடிமகனும் திகழ்கிறான்.
அவனே ஆள்வோனாக மாறவும் வாயில் திறந்தே உள்ளது.
 
  இத்தகைய மாபெரும் பொறுப்பைத் தாங்கியுள்ள ஒவ்வொருவனும்
சான்றாண்மைத் தகுதி மிக்கவனாகத் திகழ்வானாயின் நாடு உலகிற்கே
பேரொளி கொடுக்கும்.

  அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
  நம் உள்ளத்திற்குள்ளே ஓர் உள்முகப் பயணம் சென்று நம் உள்ளம்
தூய்மையுடன் திகழ்கிறதா என்று நுணுகி ஆய்ந்து பார்க்க வேண்டும்.
 
  நாம் பேசுகின்ற சொல்லில், செய்கின்ற செயலில், தூய்மை இருக்க
வேண்டும். சொல்லும், செயலும் தூய்மையாக வேண்டின் அவற்றை
இயக்கும் மனம் தூய்மையுடன் திகழ வேண்டும்.

  இவ்வாறு மனம், சொல், செயல் மூன்றும் இணைந்து தூய்மையுடன்
ஒருவன் திகழ்ந்தால் அவன் நேர்மையாளன் என்று போற்றப் படுவான்.

  இந்த நேர்மை, உள்ளே வீட்டிலும், வெளியே சமுதாயத்திலும் சுடர்விட
வேண்டும்.

  சமுதாயம் ஓர் ஆலமரம் என்றால், அதன் கிளைகளாகவும், விழுதுகளாக
வும் பல்வேறுபட்ட தொழில் வகைகள், வணிகங்கள் விளங்குகின்றன.

  இந்தக் கிளைகளிலும், விழுதுகளிலும் நேர்மை நிறைந்து திகழ வேண்டும்.

  "கொள்வதும் மிகைகொளாது, கொடுப்பதும் குறைகொடாது" நேர்மையுடன்
வணிகம் நடக்க வேண்டும்

  "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
   பிறவுந் தமபோற் செயின்"---என்பது வள்ளுவம்.

  வணிகம் பற்றிய இந்தச் செய்தி நடுவுநிலைமை அதிகாரத்தில் வருவதிலிருந்தே
வணிகத்திற்கு நேர்மை எவ்வளவு தேவை என்பது தெரியவரும்.

  பிறரை ஏமாற்றாமல், தானும் ஏமாறாமல் நேர்மையுடன் வணிகம் திகழ வேண்டும்.

  சமுதாய உறுப்புகளில் ஒன்றுதான் வணிகம். இன்னும் எத்துணையோ அலுவலகங்
கள், ஆட்சி மன்றங்கள் எனக் குடியரசாட்சியில் நேர்மையுடன் செயல்பட வேண்டிய
பொறுப்பகங்கள் நிறைய உள்ளன.

  குடியரசின் தூண்களாகிய நாம் உரிமைகள் நிறையப் பெற்றுள்ளோம். அதே நேரத்தில்
நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறையவே உள்ளன.

  அவற்றை நாம் மனதில் இருத்தி எப்பணி செய்தாலும், தூய்மையுடன், நேர்மையுடன்
அப் பணியைச் செய்து முடிக்கும் திடமும், உள்ளத் துணிவும் நமக்குத் தேவை.

  நேர்மை சிதறுகாயாகி எந்தெந்தத் தெய்வங்கள் முன்னாலேயோ உடைக்கப் படுவதை
நடைமுறையில் பார்க்கிறோம்.

  இன்றைய உலகில் நேர்மையுடன் வாழ்தல் இயலாது என்ற கருத்து வலியுறுத்தப்
படுகிறது.

  இது தவறு என்பது மட்டுமன்று; இத்தகைய நினைப்பே சமுதாயத்தை, அதன் விரிவாகிய
நாட்டை உருத் தெரியாமல் அழிக்கக் கூடிய ஒரு புற்றுநோய்க் கிருமி என்பதை நாம் உணர
வேண்டும்.

  புகழை நிறுத்தி வாழ்ந்து மறைந்தவர்களே இன்றும் பேசப் படுகிறார்கள்.

  " மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
    தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே." --என்று புறநானூறு கூறுவது போல, உலகம் நிலையில்
லாதது; ஆனால் புகழ் நிலையானது.

  அத்தகைய புகழை நிறுத்த வேண்டுமாயின், நம் உள்ளத்தில் நேர்மையை நிலைநிறுத்த
வேண்டும்.

  வேதனைத் தீயில் வெந்து மடிந்தாலும், சோதனை தாங்காது துவண்டு நைந்தாலும்,
நேர்மை என்ற ஒன்றை உயிருள்ளவரை கடைப்பிடித்து வாழ்ந்தவனே வாழ்ந்தவனாவான்.

  வாய்மையுடன் திகழ்ந்த அரிச்சந்திரன் அடைந்த துன்பங்கள் அவனை வழிமாறச்
செய்யவில்லையே!.

  நம் காலத்தில் காந்தியடிகள் பட்ட இடர்கள் அவர் பாதையை மாற்றவில்லையே!

  இறுதி வரை நேர்மை கடைப்பிடித்து வாழ்ந்தமையாலேயே அவர்கள் இன்றும் பேசப்
படுகிறார்கள்.

  நம் சொல்லோ, செயலோ, வேண்டியோர்- வேண்டாதோர் என்ற பாகுபாடின்றி ஒரே
செம்மைத் தன்மையுடன் திகழ்வதே நேர்மை.

  இத்தகைய நேர்மை இன்றையச் சூழலில் ஆளும் வாய்ப்பைத் தரும் வாயிலாகிய
அரசியலில் இருப்போரிடம் மிக மிகத் தேவை.

  முடியுமா? என்ற ஐய வினாவை எழுப்பாமல், முடியும் என்ற முடிவோடு ஒவ்வொரு
வரும் தம்முடைய உள்ளத்தில் நேர்மை நின்று நிலவச் செய்தால், வீடு, சமுதாயம்,
நாடு அனைத்தும் புகழொளி பெற்றுப் பொலிவுடன் திகழும் என்பதில் ஐயமில்லை.
.

Wednesday, July 4, 2012

Re: சவகர்லால்--வானொலிச் சிற்றுரைகள்


             Re: சவகர்லால்--வானொலிச் சிற்றுரைகள்


                        பொறுமை

   வாழ்க்கையின் களங்கள் இரண்டு. ஒன்று வீடு ; இன்னொன்று சமுதாயம்.
 
   ஆணோ பெண்ணோ, இருவரும் வாழ வேண்டிய,இயங்க வேண்டிய
களங்களும் இவை இரண்டும் தாம்.
   நாம் வெற்றி பெற வேண்டிய களங்களும் இவை இரண்டுதாம்.
   வீட்டில் வீசுகின்ற அலைகளும், உண்டாகின்ற அதிர்வுகளும் நம்
உள்ளத்தைத் தாக்கி ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துவது போலவே
வெளியுலகென்னும் சமுதாய அலைகளும், அதிர்வுகளும் நம்மைப்
பாதிக்கவே செய்கின்றன.
   அந்தப் பாதிப்புப் பல நேரங்களில் நாம் அடக்கித் தூங்க வைத்திருக்கும்
ஆத்திரம், சினம் முதலிய உணர்வுகளைத் த்ட்டி எழுப்பி விடுகின்றன.
   ஆத்திரமும், சினமும் பொங்கியெழுந்து நம்மை நிலை  தடுமாறச் செய்து
நம் நிலைக்குப் பொருந்தாத சொற்களைப் பேச வைத்துச்,செயல்களைச்
செய்ய வைத்து விடுகின்றன.
   இவ்வளவு காலமும் நாம் கட்டிக் காத்து வந்த நம் பேரும் புகழும் கேள்விக்
குரியதாகி விடுகின்றன.
   இத்துணைக்குங் காரணம் நம் உள்ளத்தில் ஓங்கி எழுந்த சினம்.அந்தச்
சினத்தை ஓங்கி எழச் செய்த தூண்டல் வீட்டிலோ,வெளியிலோ உள்ளோர்
செய்த தவறான செயல்கள்.
   ஆக,அவர்களுடைய தவறான செய்கையால் தூண்டப் பெற்று,ஆத்திர
வயப்பட்டு நாமும் தவறையே செய்து விடுகிறோம்.
   இப்படி ஒரு தவறு நிகழாமல் தடுக்க என்ன செய்யலாம்?
   ஆன்றோர்கள் தம் பட்டறிவு வாயிலாக நுணுகி நுணுகி ஆய்ந்து பல
கருத்துகளை நம் நெஞ்சில் பதிக்க வேண்டிக் கூறியுள்ளனர்.
   அவைகளுள் தலையாயது பொறுமை.
      பொறுமை என்பது சொல்லளவில் மிகச் சிறியதே. ஆனால் அதை நாம் ஓர்
அணியாக அணிந்து இயங்க வேண்டுமாயின் அது மிக மிகக் கடினமான பயிற்சியே.
பயிலப் பயிலத்தான் பொறுமை உள்ளத்தில் அமரும்.
     எவ்வளவோ பொறுமையாக நாம் இருந்தாலும், திடீரென ஒரு பொறி பட்டுச்
சினமென்னும் நெருப்புக் கொழுந்துவிட்டெரிய அதில் பொறுமை எரிந்து சாம்பலாகி
விடுவதைப் பார்க்கிறோம்.
    ஆத்திரம் அறிவுக்கு எதிரி. ஆத்திரம் எழுந்து விட்டால் அறிவு அட்ங்கி விடுகிறது.
அறிவைப் புதைத்து விட்டு எழுகின்ற ஆத்திரம் உமிழ்கின்ற சொற்கள் அறிவொடு
பொருந்துமா? தவறான சொற்களே தாவி விளையாட அந்த ஆட்டத்தில் நம் புகழ்
இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாகிப் போகிறது.
    இத்தனைக்கும் காரணம் என்ன? எழுந்த ஆத்திரம். அதை அடக்கிவிட்டு நாம்
கொள்ளாத பொறுமை
      நெருப்பை விழுங்குவது போல நம்மைத் தாக்கிய கடுஞ்சொற்களை விழுங்கி விட்டுப்
பொறுமை காத்து ஒரு புன்னகையை நெளிய விட்டிருந்தால் எல்லாம் சரியாகி இருக்கும்.
        ஆனால், அது அவ்வளவு எளிதா?
       வீட்டில் விளக்கேற்ற மருமகள் வருகிறாள். ஆயிரம் கனவுகளோடு புகுந்த வீடு வரும்
பெண்ணுக்குப் பிறந்த வீட்டுச் சான்றோர் வழங்கும் அறிவுரை, 'பொறுமை என்னும் நகை
யணிந்து பெருமை கொள்ள வேண்டும்' என்பதே.
      மாமியின் அடக்குமுறை, நாத்தியின் அடங்காமுறை, எனப் பல கோணங்களிலும்
தலைவியைத் தாக்கும் பலவகைக் கணைகளையும் தாங்கிக் கொண்டு தன் பொறுப்பைக்,
கடமைகளைச் செய்து பொறுமையுடன் நற்பெயர் எடுத்து வாழ்வது பெண்கட்கு நெருப்புக்
குளியல்தான்.
    பொறுமை என்ற பண்பைத் தன்னுடைய மன இயல்பாகக் கொண்டுவிட்டால், எல்லாக்
கணைகளும் அவள் காலடியில் வீழ்ந்து நற்பயன் விளைக்கும்.
    ஆண்மகன் வெளியுலகில், சமுதாயத்தில் நடமாடுபவன். நண்பர்கள், பகைவர்கள்,
புதியவர்கள் எனப் பலரையும் சந்தித்து உறவாட வேண்டிய கட்டாயஸ் சூழலில்
உள்ளவன்.
    குறுகிய எல்லைக்குள் இருக்கும் வீட்டுத் தாக்குதல்களைத் தாங்க முடியாமல் ஒரு பெண்
தவிக்கிறாளென்றால் ,பரந்துபட்டுக் கிடக்கும் சமுதாயப் பலகோணத் தாக்குதல்களையும் தாங்கிப்
பொறுமை காத்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகிறான் ஆண்மகன்.
       தன்னை விட வயது, அறிவு, படிப்பு, புகழ், தகுதி - இவை குறைந்தவர் தன்னை இகழ்ந்து பேசு
வதைக் கேட்டால் அவன் உள்ளம் பொங்காதா? ஆத்திரம் எழுந்து அனல் வீசாதா?
     ஆத்திரப் படாதே! என்கிறார் அய்யன்.
     பண்பட்ட நிலத்தைப் பார்! இந்த நிலம் எத்துணை தாக்குதல்கட்கு ஆளாகிறது!
    பயிர் செய்ய, வீடு கட்டச், சுரங்கம் தோண்ட, ஆற்றோட்ட வழி செய்ய, என எத்துணை தாக்குதல்
கட்கு உள்ளாகிறது?
   தன்னைத் தோண்டித் துன்புறுத்துவோரையும் தாங்கி வாழ வைக்கிறதல்லவா நிலம்!
    அந்த மண்ணை விட மனிதனாகிய நீ பண்பிற் குறையலாமா?
   
   "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
     இகழ்வார்ப் பொறுத்தல் தலை."
என்று நமக்கு வள்ளுவர்  கூறுகிறார்.
     இயேசு பெருமான் படாத துயரங்களா? சிலுவையில் அறையப் படும் அந்தக் கொடுமையான
நிகழ்வின் போது கூட அவர்,"இறைவா! தாம் செய்வது இன்னது என்று தெரியாமல் செய்யும்
இவர் பிழையை மன்னியும்! " என்று வேண்டினாரல்லவா?
    அந்தப் பொறுமைதானே அவர்தம் புகழாக நின்று நிலவுகிறது.
 
  "ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
   பொன்றுந் துணையும் புகழ்."
என்ற குறளின் பொருளை மனதிற் கொண்டு ,தகுதி யில்லாதார் மிகையாக ஏதும் செய்தாலும்,
நம் தகுதியால் பொறுமை காத்து அதனால் வென்று வாழ்வோமாக!
.