Tuesday, December 24, 2013

கங்கைவேடன் காளத்திவேடனுக்கு (3)

        கங்கைவேடன் காளத்திவேடனுக்கு (3)

கங்கை நதியலை கடக்குந் தோணிகள்
   கணக்கில கொண்டவன்நான்--என்முன்
இங்கே பிறப்பலை கடக்குந் தோணியாய்
   இராகவன் நடந்துவந்தான்.

என்னைச் சோதரன் என்றவன் சொற்களில்
   இதயம் பறிகொடுத்தேன்--அந்த
வண்ணக் கோலவாய் வீழ்ந்திடும் சொற்களை
   வாரியே உண்டிருந்தேன்.

உன்னைப் போலவே நானும் உணவுகள்
   ஊட்டிட நினைத்துவிட்டேன்-- அங்கே
உன்னைப் போலவே கறியும் படைத்தேன்
   உணர்வுகள் இரண்டுமொன்றே!

அந்த உணவினை இராகவன் உண்டனென்
   ஆயினம் என்றுரைத்தான்-- உன்றன்
அந்த உணவினை ஏற்றவன் உனக்குநல்
   அற்புதப் பதமளித்தான்.

அன்பினைப் புரியா அடுத்தவர் சுளிப்பை
   அறிந்தவர் நாமிருவர்--தூய
அன்பினைப் போற்றி அணைத்தவ ரன்பை
   அணைத்தவர் நாமிருவர்.

இந்தத் தகுதியை எண்ணிப் பார்த்தே
   இம்மடல் துணிந்தெடுத்தேன்--வேறாம்
எந்தத் தகுதியும் எனக்கிலை கங்கை
   இருகரை திரிபவன்நான்

காளத்தி நாதன் கண்களே இன்று
   கண்ணப்பன் கண்ணலவோ--அந்தக்
காளத்தி யப்பர் அருள்மழை குளித்த
   கண்ணப்பர் நீயலவோ?

உள்ள மொடுங்கி உணர்வுக ளொடுங்கி
   ஒருமடல் வரைந்துவிட்டேன்--அன்பு
வெள்ள மெனவுள உன்னடி வைத்தே
   மெல்ல நழுவுகின்றேன்.
            தேனி--07-10-89




Thursday, December 19, 2013

கங்கை வேடன் காளத்தி வேடனுக்கு (2)

    கங்கைவேடன் காளத்தி வேடனுக்கு (2)

காளத்தி மலையினிலே அற்பு தங்கள்
   காட்டிநின்ற பேரன்பே! உன்னை நெஞ்சின்
ஆழத்தில் நினைத்தாலும் பொங்கி வந்தே
   அகவுணர்வு பித்தாகித் தவிக்கு தந்தோ!
மீளத்தான் உன்செயலை எண்ணுந் தோறும்
   விந்தைமிகப் பெருகுதன்றி வேறு காணேன்;
காளத்திப் பெருந்திறலே! உன்ற னுக்குக்
   கடிதம்நான் எப்படித்தான் எழுதி நிற்பேன்?

ஏடறியேன்; எழுத்தறியேன்; அறிந்த தெல்லாம்
   எம்பெருமான் அருளொளியின் வீச்சொன் றேதான்;
பாடறியேன்; படிப்பறியேன்; அறிந்த தெல்லாம்
   பரம்பொருளின் கண்வீச்சுத் தொண்டொன் றேதான்;
வீடறியேன்; வினையறியேன்; என்ம னத்துள்
   விளைந்துநின்ற மாற்றமட்டும் நன்க றிந்தேன்;
காடறியத் துணையோடு வந்த அந்தக்
   கார்முகிலின் அசைவுக்குப் பணிகள் செய்தேன்.

காளத்தி மலைகூட உன்றன் முன்னே
   கடுகாகிப் போனதுவே! அருகே ஓடும்
ஆழத்துப் பொன்முகலி ஆறு கூட
   அணுவாகி நின்றதுவே! ஆமாம் அந்தக்
காளத்தி யப்பனுக்கே ஆறு நாளில்
   கண்ணப்பும் துணிவுபெற்றாய்; உன்றன் பக்தி
ஆழத்தின் முன்னெந்தக் கடலும் தோற்கும்;
   அடியேனா உன்பெருமை அளக்கக் கூடும்?

பிறப்பென்ன பக்திக்குத் தடையா? சாதிப்
   பிரிப்பென்ன தொண்டுக்குப் புறம்பா? வாழ்க்கைச்
சிறப்பென்ன சிலருக்கே உறவா? அந்தச்
   சிவனென்ன சிலர்தொட்டால் தீட்டா? வீணே
மறைப்பென்ன? தடுப்பென்ன? இவற்றை யெல்லாம்
   மண்மீது பொடிப்பொடியா யாக்கி விட்ட
சிறப்பென்ன கண்ணப்ப? உன்ற னுக்கே
   சின்னவேடன் என்னசெய்தி எழுது வேன்நான்?

திண்ணப்ப னாயிருந்த ஏழை யப்பன்
   சிவனப்பன் குறைதீர்க்கக் கண்ணை அப்பிக்
கண்ணப்ப னெனவானாய்; ஆமாம்; அந்தக்
   கண்கட்டு வித்தையதின் மர்ம மென்ன?
திண்ணப்பன் உன்முன்னே அப்பன் கண்கள்
   செவ்வருவி யெனஆகக் குருதி நிற்கக்
கண்ணப்பி வெற்றிகண்டாய்; எல்லாம் அந்தக்
   கங்கைகொண்டான் விளையாட்டுத் திறங்கள் தாமே!

செருப்பாலே மிதித்தாலும் சினக்க வில்லை;
   தீவிழியைத் திறந்துன்னை எரிக்க வில்ல;
விருப்போடு 'கண்ணப்ப' என்ற ழைத்தார்.
   விண்வணங்கும் பெரும்பேற்றை உனக்க ளித்தார்;
பொருப்பிருந்த காளத்தி நாத ரந்தப்
   பெருஞ்செயலைப் போற்றிட்டே உயர்வ ளித்தார்;
செருப்பதனை மலர்க்கொத்தாய்க் கொண்டார்; அந்தச்
   சிறப்பதனில் சிவபெருமான் சிரித்து நின்றார்.
               --தேனி 07-10-89
                              ( தொடரும் )  



 

Friday, December 13, 2013

திரும்பும் திசையெங்கும்

             திரும்பும் திசையெங்கும்

எத்திசையில் திரும்புவது?
   இருக்கின்ற திசையெல்லாம்
ரத்தத்தின் பீச்சல்கள்;
   நாராசக் கூச்சல்கள்;

சாதியென்ற பேரரக்கன்
   சதிராடக் காலடியில்
மீதியின்றி மக்களெல்லாம்
   மிதிபடுவார் ஒருதிசையில்;

நியாயத்தின் புதைகுழிமேல்
   அநியாயம் ஆட்டமிட
வியாபாரம் செழிக்கின்ற
   வித்தகங்கள் ஒருதிசையில்;

உள்ளத்தை மூடிவைத்தே
   உதடுமட்டும் திறந்துபேசிக்
கள்ளத்தை விலையாக்கும்
   கலைகற்றோர் ஒருதிசையில்;

நல்லவரைப் போல்நடித்து
   நடுமுதுகில் குத்துகின்ற
பொல்லாங்கில் அகப்பட்டுப்
   புலம்புகின்றோர் ஒருதிசையில்;

கன்னிகழி யாமலேயே
   கட்டழகு நைந்துபோகப்
பெண்ணென்று மூத்துநிற்கும்
   பிணங்களெல்லாம் ஒருதிசையில்;

திரும்புகின்ற திசையெங்கும்
   தில்லுமுல்லும் தீமைகளும்
நெருங்கிவழி மறிக்கையிலே
   நடப்பதுதான் எத்திசையில்?

எத்திசையில் திரும்புவது?
   எல்லாமே சிரிக்கிறதே!
எத்திசையும் திரும்பாமல்
   இருக்கத்தான் பழகுவோமா? 

Tuesday, December 10, 2013

பொருள்

                              பொருள்

பொருளுக்குப் பகையாகிப் போன வன்நான்;
   பொருள்நாடி என்நாடி தளர்ந்த தல்லால்
பொருளென்னை நாடிவந்து சேர்ந்த தில்லை.
   பொருளிருக்கும் என்பாட்டில்; வீட்டி லேயோ
பொருட்பகைநா யனார்தான்நான்; இவ்வா றென்றும்
   பொருளற்ற கவிஞனான எனையும் நீங்கள்
பொருளாக மதித்திங்கே பொருளைத் தந்தீர்;
   பொருளுக்காய்ப் பாடுகிறேன்; பொறுத்துக் கேட்பீர்!

போகாத ஊருக்கும் பாதை கூட்டும்;
   பொல்லாத பேர்களையும் நல்லோ ராக்கும்;
ஆகாத காரியங்கள் ஆக வைக்கும்;
   அறிவிலாரை மேதையெனப் புகழ வைக்கும்;
வேகாத பருப்பையெலாம் வேக வைக்கும்;
   மேதினியே கைக்குள்ளே அடங்க வைக்கும்;
ஆகாவென் றுலகோரை வியக்க வைக்கும்;
   அதுவிந்தப் பொருளால்தான் முடியும் கண்டீர்!

பொருளற்ற ஒருவனையார் மதிப்பார்? மண்ணிற்
   பெற்றெடுத்த தாய்கூட மதிக்க மாட்டாள்.
பொருளென்ற ஆதாரம் இல்லை யென்றால்
   புவிவாழ்வில் தாரமுமா தார மில்லை;
பொருளின்றேல் அறமேது? இன்ப மேது?
   புகழேது? பாராட்டு வருவ தேது?
பொருள்மட்டும் குவித்துவிடு! உன்பா தத்தில்
   புகழ்வந்து மாலையிடும்; உயர்வு சேரும்.

பொருள்செய்க என்றாரே! எதனால்? நாம்தாம்
   பொருள்செய்து விட்டாலே போதும்; அந்தப்
பொருளறத்தை இன்பத்தைக் கொண்டு சேர்க்கும்;
   பகல்நேரம் பலர்பார்க்கக் கொலைசெய் தாலும்
பொருளந்தக் கொலையினையே இல்லை யாக்கும்;
   புவிமீது நீதிகூடப் பொருளின் முன்னால்
பொருளில்லை எனவாகிப் போகு மென்றால்
   பொருள்வலிமைக் கினியென்ன சொல்ல வேண்டும்?

பொருள்மட்டும் பொருளாகி விடுமா? அந்தப்
   பொருள்நல்ல வழிவரவே இல்லை யென்றால்
பொருளேயோர் பிணியாகிப் போய்வி டாதா?
   பாவவழி வந்தபொருள் பாவம் தானே!
பொருள்சேர்க்கப் புண்ணியத்தைப் புதைத்தோ ரெல்லாம்
   போகின்ற இடம்கொடிய நரக மென்றே
பொருள்பற்றிச் சொன்னவர்கள் சொன்ன தெல்லாம்
   பொருள்நல்ல வழிவேண்டு மென்ப தால்தான்.

பேரிருக்கும்; புகழிருக்கும்; நாட்டி லெங்கும்
   பாராட்டு மழையிருக்கும்; மிகவு யர்ந்த
சீரிருக்கும்; சிறப்பிருக்கும்; மக்கள் கூட்டத்
   திரளிருக்கும்; வாழ்த்திருக்கும்; கைப்பி டிக்குள்
பாரிருக்கும்; சொல்லினுக்கோர் பலமி ருக்கும்;
   பொழுதிருக்கும் உனைநாடி; எல்லாம் இந்தப்
பாரினிலே பொருளிருக்கும் வரையி லேதான்;
   போட்டுடைத்த மண்பாண்டம் பொருளில் லாக்கால்.  

Wednesday, November 6, 2013

பூக்கள் பேசினால்

                    பூக்கள் பேசினால்........

பூத்துள பூக்களின் மணத்தினிலே --நாளும்
   புத்துணர் வடைந்து திளைக்கின்றீர்;
பூத்துள இதழ்களின் எழிலினிலே --உள்ளம்
   பொங்கியே கவிதைகள் படைக்கின்றீர்;

எங்கள் இதழ்களில் காதலியைக் --கண்டே
   இதயக் களிப்பினில் ஆழ்கின்றீர்;
எங்கள் அசைவினில் அவள்நடனம் --கண்டே
   எங்கெங் கோபோய் வருகின்றீர்.

பெண்களைப் பூவினம் என்கின்றீர்; --முகப்
   பொலிவினைப் பூவிதழ் என்கின்றீர்;
கண்களை மலரெனச் சொல்கின்றீர் --மலர்க்
   கணையென மகிழ்வாய் ஏற்கின்றீர்.

பூக்களின் மேலழ குணரும்நீர் --உள்ளே
   பொதிந்துள அவலம் அறிவீரா?
பூக்களின் மென்மையைப் பாடும்நீர் --எம்மைப்
   பொடிசெயும் வன்மைகள் உணர்வீரா?

மலரெனில் மலர்ந்திடல் முதல்தகுதி --பின்
   மணம்பெறல் வாழ்வுப் பெரும்பகுதி
மலர்ந்துள மலரெலாம் பூமியிலே --நல்ல
   வாழ்வுப் பயன்பெறல் நிறைதகுதி.

எத்துணை மலர்கள் மலர்ந்தபயன் --பெற்றே
   இப்புவி போற்ற வாழ்ந்தனவாம்?
எத்துணை மலர்கள் இறைவனடி --பெற்றே
   இந்தப் பிறவியில் உயர்ந்தனவாம்?

பூத்தவை ஒருநாள் வாழ்க்கையுடன் --வாழ்வைப்
   பொசுக்கென முடிப்பதைக் காண்கின்றீர்;
பூத்தவை புயலின் வசப்பட்டே --பூத்த
   பொழுதே அழிவதும் பார்க்கின்றீர்.

ஒருநாள் வாழ்ந்து முடிகின்ற --எங்கள்
   உயர்வைப் பாடித் திளைக்கின்றீர்
ஒருநா ளேனும் மாலைசேர --நாங்கள்
   உளத்தவம் புரிவதைப் பாடுங்கள்.

மாலை சேர்ந்தால் பூத்தபயன் --இந்த
   மண்ணிற் பெற்றதற் குளமகிழ்வீர்!
மாலையே சேரா தந்தியிலே --நாங்கள்
   மண்ணைச் சேர்தற் கழுதிடுவீர்!
                19-08-07


Tuesday, November 5, 2013

அவளே மருந்து

                     அவளே மருந்து

உண்ணவும் உறங்கவும் முடியவில்லை; --என்றன்
   உடலும் உருகுது தாங்கவில்லை;
எண்ணமும் செயலுமே முடங்கிவிட-- என்றன்
   இயக்கமும் தடைப்பட நோய்ப்பட்டேன்.

நெஞ்சுளே ஏதோ உடைகிறது; - என்
   நினைப்பதும் நொறுங்கிச் சிதைகிறது;
பஞ்சென உள்ளம் பறக்கிறது -- எங்கோ
   போய்ப்போய் மீண்டும் வருகிறது.

கண்ணிலே ஒளியும் குறைகிறது; - காணும்
   காட்சிகள் குழம்பித் தெரிகிறது;
கண்ணுளே ஊசி புகுந்ததுபோல் - ஏதோ
   கொடிய வலியுடன் வதைக்கிறது.

பெற்றவள் பார்த்துப் புலம்புகிறாள் - எங்கோ
   பெரிய வைத்தியன் தேடுகிறாள்;
உற்றவ ரெல்லாம் எனைப்பார்த்தே - இங்கே
   உருகி உருகிப் பேசுகிறார்.

வாதமா? பித்தமா? சிலேத்துமமா? -இந்த
   நாடிகள் நாட்டியம் பிடிபடுதா?
வேதனை நான்பட மற்றவர்கள் - என்னை
   வேடிக்கைப் பொருளெனப் பார்த்துநின்றார்.

எத்தனை மருந்துகள் விழுங்கிடினும் -அவள்
   எனைவிழுங் கியநிலை தீர்ந்திடுமா?
எத்தனை மருந்துகள் பூசிடினும் -அவளை
   எண்ணிய கொப்புளம் மறைந்திடுமா?

என்னவ ளிங்கே வரவேண்டும்; -மயில்
   இறகென நீவியே தரவேண்டும்;
என்னவள் தந்தஅந் நோயினுக்கே -அந்த
   இளையவ ளேபிற மருந்தில்லை.

நோய்களைத் தீர்த்திடும் மருந்துவகை; - அந்த
   நோயெலாம் உலகில் வேறுவகை;
நோயிதைத் தீர்க்க மருந்தில்லை - இந்த
   நோய்தந்த அவளே நோய்மருந்து.

பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.
          புணர்ச்சிமகிழ்தல்--1102
  திருவள்ளுவர் இலக்கியமன்றம்
    நங்கநல்லூர்--08-07-06

Sunday, November 3, 2013

படிக்க முடியா ஏடு

                  படிக்க முடியா ஏடு

நாட்டில் நாள்தோறும் உறவாடும் மனங்களாம்
ஏட்டைப் படிக்க என்றேனும் முடிகிறதா?
சிரிக்கின்ற சிரிப்பிலவர் சிந்தையா தெரிகிறது?
விரிக்கின்ற சாகச வலைதானே தெரிகிறது.
அணைக்கின்ற அணைப்பிலவர் அகமா புரிகிறது?
நினைக்கின்ற வஞ்ச நினைப்பன்றோ புரிகிறது.
பேசுகின்ற பேச்சிலவர் பண்பா வருகிறது?
பூசுகின்ற பொய்மைப் பூச்சன்றோ வருகிறது.
உள்ளத்தில் பெருவஞ்சம்; உதட்டோரம் புன்சிரிப்பு;
கள்ளப் புதர்வாழும் குள்ளநரி காணுகின்றோம்.
தஞ்சமிலா ஆடுகளின் செங்குருதி சுவைக்கின்ற
வஞ்சக ஓநாய்கள் வரிசையைக் காணுகின்றோம்.
படங்காட்டி அருகணைத்துப் படக்கென் றேகொத்தி
விடங்கக்கிக் கொல்கின்ற பாம்புகளைக் காணுகின்றோம்.
நல்லபாம்பு குள்ளநரி நயவஞ் சகஓநாய்
எல்லாமே காணுகின்றோம்; மனிதனைத்தான் காணவில்லை.
முகத்தோற்றம் மனிதரென முழங்கி நிற்கிறது;
அகத்தோற்றம் எப்போதும் யாருக்கும் தெரிவதில்லை.
புலியெது? நரியெது? புரியவே முடிவதில்லை;
புலியெல்லாம் பசுத்தோல் போர்வையொடு திரிகிறது.
நரிகள் அமைக்கின்ற மேடையில்தான் இந்நாட்டுப்
பெரிய சிங்கங்கள் பெருமைபெறு கின்றனவாம்.
படித்தவர்கள் இதயமெலாம் பண்புநெறி தேடித்தான்
துடிக்கிற தெனச்சொல்லும் தைரியம் நமக்குண்டா?
மெத்தப் படித்தவர்கள் மத்தியிலே இப்போது
சுத்தக் கோழைகளே தோன்றுவதைப் பார்க்கின்றோம்.
கொடுமையை எதிர்த்துக் குரல்கொடுக்கத் துணிவின்றி
இடுப்பொடிந்து திரிபவர்கள் இருக்கின்றார்; இன்னொருபால்
கொடுமை எதுவென்று குறித்துணர முடியாமல்
எடுத்ததெலாம் எடுத்தெறியும் வீரரும் இருக்கின்றார்.
கொடுமையும் இருக்கிறது; வீரமும் இருக்கிறது;
கொடுமையை இனங்காணாக் குழப்பமும் இருக்கிறது.
முகமோ சிரிக்கிறது; உள்நெஞ்சு வெறுக்கிறது;
பகலிலே நாடகந்தான் பளபளப்பாய் நடக்கிறது.
அணைத்தகை பிரியுமுன்பே அடுத்தகுழி பறிக்கிறது;
நினைத்ததை அடைய நெஞ்சுபலி ஆகிறது.
கிளைவிட்டுக் கிளைதாவும் படலங்கள் நாள்தோறும்
கலையாக நடக்கிறது; கொள்கை பறக்கிறது.
காலிற் கிடப்பதெல்லாம் கைக்கு வருகிறது;
ஆளுகின்ற சட்டமன்றம் அல்லோலப் படுகிறது.
எதைப்படிக்க முயன்றாலும் ஏதேதோ மறைக்கிறதே
எதைப்படித்து எதையுணர்ந்து இங்குவாழப் போகின்றோம்?    

Friday, November 1, 2013

தாயே!

                            தாயே!

என்னருந் தாயே! இளநலச் செல்வி!
   என்னுயி ரியக்கிடு முணர்வே!
பன்னரும் புகழைத் தன்னுளே கொண்டோய்!
   பாரிலெம் மொழியிலும் மூத்தோய்!
சின்னவிக் கவிஞன் வேண்டிடு மொழியைச்
   சீற்ற மிலாதருள் செய்தே
எண்ணரு நலத்தை என்றனுக் கீவாய்
   என்னுயி ரே!தமிழ்த் தாயே!

இந்தப் பிறவி இனித்திட வாழ்வில்
   என்றனுக் கருள்செய வேண்டும்;
எந்தப் பிறவி நானெடுத் தாலுமென்
   இனிமைத் தமிழையே கொண்டு
சந்தக் கவிசெய முந்தித் துடிப்பொடு
   சாற்றுமோ ருள்ளமே வேண்டும்;
வெந்த நிலையிலும் சொந்த மொழிபயில்
   வீறுடை நாவதும் வேண்டும்;

சின்னதோர் புழுவாய்ப் பிறப்பெடுத் தாலுமிச்
   செந்தமிழ் மண்ணிலே வேண்டும்;
வண்ணக் கிளியாய் வடிவெடுத் தாலுமென்
   வாக்குத் தமிழெனல் வேண்டும்;
பின்னிடு கொடியாய்ப் பிறந்திடு போழ்தும்
   பெருந்தமிழ் மரத்தையே சுற்றிப்
பின்னிடு நிலையை என்றனுக் கீந்தே
   பேரருள் செய்திட வேண்டும்;

காட்டினிற் கழையாய் நின்றிடத் தென்றல்
   கன்னலின் சுவையெனத் தமிழை
ஊட்டியே ஒலிசெய மகிழ்ந்திட வேண்டும்;
   ஒருமர மாய்த்தனி யாயினும்
ஆட்டியே என்னை அலைக்கழித் திடவோர்
   அருந்தமிழ்க் காற்றதே வேண்டும்;
கூட்டிய பேரொலி தமிழென முழங்கக்
   குப்புற வீழவும் வேண்டும்.

என்னுயிர் மூச்சுத் தமிழெனல் வேண்டும்;
   எழுந்திடு விழுந்திடு போழ்தும்
பன்னிய மொழியால் தமிழையே சொல்லிப்
   படுக்கவும் விழிக்கவும் வேண்டும்;
எண்ணுவ தெல்லாம் எழுதிடு கோலும்
   என்னருந் தமிழையே எழுதப்
பண்ணிட வேண்டும்; இதுசெயக் கண்டால்
   பாரினில் வேறெது வேண்டும்?
               30-12-61 

Tuesday, October 29, 2013

ஏன் மறந்தனை?

           ஏன் மறந்தனை?

தென்றலும் வந்தது; தீங்குளிர் வந்தது;
   தேமலர்ச் சோலையில் பாடிடும்
வண்டினம் வந்தது; மலரினை மொய்த்தது;
   மயங்கிய பூக்களும் ஆடிட
நின்றிசை பெய்தது; நீள்கதிர் மாய்ந்தது;
   நிரம்பின செவ்வொளி எங்கணும்;
என்றனைக் கொன்றிட வந்தது மாலையும்;
   ஏனடி நீவர மறந்தனை?

பூங்குயில் வந்தது; புள்ளினம் வந்தது;
   பூத்திடு மலர்களும் சிரித்தன;
மாங்கனி ஒன்றினைத் தீண்டிடும் அணிலெனை
   மாய்த்திடு வகையினில் நகைத்தது;
தாங்கிய ஆவலில் தாவிடு பார்வையில்
   தவித்திடு மென்னிலைக் கிரங்கியே
வீங்கிய மாலையும் வீழ்ந்தது; சோலையில்
   விரைந்திட ஏனடி மறந்தனை?

கார்முகில் வந்தது; களிமயில் வந்தது;
   களிப்பொடு தோகையை விரித்தது;
சீர்நடம் பயின்றது; சிந்தையைக் கொண்டது;
   சிந்திய பூவினப் பாயலில்
போரினைத் துவக்கியே பூஞ்சிறைச் சிட்டினைப்
   புல்லிப் புரண்டது ஆணிணை.
பாரினில் மாரன்கை ஓங்கிய வேளையில்
   பாவையே ஏன்வர மறந்தனை?
                10-11-61
         சிங்கை தமிழ்முரசு-03-12-61 

Sunday, October 27, 2013

யாரோ?

                        யாரோ?

இருளவித்துத் தலைதூக்குங் கதிரோன் தன்னை
   இதழவிழ்த்துக் கமலங்கள் நோக்கும் போழ்தில்
மருளவித்த ஒளிமுகத்தில் இரண்டு பூக்கள்
   மடலவிழ்த்தே எனைநோக்கக் காண்பேன்; பின்னற்
சுருளவிழ்த்த குழல்சரிய வாச லோடு
   சிறகவிழ்த்த என்னெஞ்சும் சேர்த்துக் கூட்டும்
தெருளவிழ்க்கும் மொழியாட்கு மணமாம்; அந்தத்
   தெவிட்டாத கனிக்குலையைச் சுவைப்பான் யாரோ?

உடல்தாங்கி நலிகின்ற இடையும், வண்ண
   உடைதாங்கி மிளிர்கின்ற உடலும், காமன்
படைதாங்கி எனைத்தாக்குங் கண்ணும், கூந்தற்
   பளுத்தாங்கி வளைகின்ற கழுத்தும், அன்னப்
பெடைதாங்கி அழகூட்டும் நடையும், வானிற்
   பிறைதாங்கி இவட்கீந்த நுதலும், கூட்டும்
இடர்தாங்கி இவள்தாக்கில் மகிழ்வேன்; அந்த
   இன்மொழிக்கு மணமென்றார்; உண்பான் யாரோ?

இடைதனிலே குடமேந்தி வாசல் தாண்டி
   எனைப்பார்வை தன்னாலே சீண்டிச் சன்னல்
இடைதனிலே என்கண்கள் காதல் வேண்டி
   ஏங்குகின்ற நிலைபுரிந்தே இதழின் ஓரக்
கடைதனிலே குறுநகையை நெளிய விட்டுக்
   கதுப்பினிலே செவ்வானப் புதுமை கூட்டி
நடைதனிலே எனைக்கொன்று போடு மந்த
   நங்கைக்கு மணமென்றார்; நுகர்வான் யாரோ?

மணம்நாடி, மலர்ந்துள்ள பூவை நாடி,
   மதுநாடி, அதுதருமவ் வின்பந் தன்னை
மனம்நாடி, மலர்தனையே சுற்றும் வண்டின்
   மனதொடிய அம்மலரைப் பறிப்பார் போலத்
தினம்நாடிப் பார்வையிலே இன்பங் கண்டு
   திளைத்தோடித் திரிந்திட்ட என்றன் உள்ளம்
நிணம்நாடிப் பெறும்வண்ணம் எழிலார் அந்த
   நேரிழைக்கு மணமென்றார், பெறுவான் யாரோ?
                     30-03-60

Monday, October 21, 2013

என் விருப்பம்

                     என் விருப்பம்

    வண்ணக் கனவுகள் என்விருப்பம் --மலரும்
    மாய நிகழ்வுகள்   என்விருப்பம்

பார்முழுதும் பகலவனாய்ப் படர்ந்துவர விருப்பம்;
   பனித்துளியாய்ப் புல்நுனியில் முகங்காட்ட விருப்பம்;
கார்முகிலாய் விண்தடவி மழைபொழிய விருப்பம்;
   காட்டாறாய் மண்தழுவிப் புரண்டுவர விருப்பம்;

பசும்பயிராய்க் காற்றோடு நடனமிட விருப்பம்;
   பசும்பயிரைத் தென்றலெனத் தழுவிடவே விருப்பம்;
பசுமாட்டின் மடுவாகிப் பார்புரக்க விருப்பம்;
   பாரதிரக் காளையெனத் திமிர்ந்துவர விருப்பம்;

முழுமதியைக் கைமீது கொண்டுவர விருப்பம்;
   முகம்பார்க்கும் ஆடியென அதைமாற்ற விருப்பம்;
எழுகதிரை என்வீட்டின் முற்றத்தில் நிறுத்தி
   எல்லோர்க்கும் ஒளிநடனங் காட்டிடவே விருப்பம்;

எல்லாரும் எல்லாமும் பெற்றுலகில் மகிழ்வாய்
   என்றைக்கும் துன்பமிலா திருந்துயர விருப்பம்;
வல்லாரும் மாட்டாரும் இல்லையெனப் புவியில்
   வாழ்வாங்கு மக்களெல்லாம் வாழ்ந்துவர விருப்பம்;

கண்ணசைவில் அதர்மங்கள் கழிந்துபட விருப்பம்;
   கையசைவில் தர்மங்கள் வென்றுவர விருப்பம்;
விண்ணிறங்கித் தேவரலாம் என்வீட்டிற் குவிந்தே
   வேண்டுமேவல் கேட்டுநாளும் பணிசெய்ய விருப்பம்;

விண்மீனைத் தொடுத்தெடுத்தே என்மனையாள் கழுத்தில்
   மின்னுகின்ற பதக்கமெனப் பார்த்திடவே விருப்பம்;
வெண்ணிலவைத் தொட்டிலின்மேல் கட்டிவைத்தே மகனை
   வேடிக்கை பார்க்கவைத்துச் சிரிக்கவைக்க விருப்பம்;

கனவினிலே வந்துசெலுந் தேவதைகள் நனவில்
   கண்முன்னே எழிலாக நடனமிட விருப்பம்;
நினைவினிலே துளீர்க்கின்ற என்னாசை யனைத்தும்
   நடப்பினிலே நடந்தேறி நான்மகிழ விருப்பம்.
            - கல்கி தீபாவளி மலர்--2004 

Saturday, October 12, 2013

gnaanam

            ஞானம்

ஞானி யென்றொரு சொல்படித் தேனவர்
   யாரெனத் தேடி நொந்துநின்றேன்---உயர்
ஞானம் நிறைந்தவர் ஞானிய ரென்கிறார்
   ஞான மென்றால் அதுவென்ன?

பச்சிலை யசைவில் திருவருள் நடனம்
   பார்த்துத் திளைப்ப தொருஞானம் --வீழும்
எச்சிலில் கூட இறைமுகங் கண்டே
   இதயங் களிப்ப தொருஞானம்;

படித்தவர் பாமரர் வேறுபா டின்றிப்
   பாசம் பொழிவ தொருஞானம் --இதயத்
துடிப்பெலா மிறையே! யாரெவ ரென்றிலை
   தொழுங்க ளென்ப தொருஞானம்;

இறையருள் தூதனா யிருந்திடு போதும்
   எளிமையைப் போற்றுத லொருஞானம் --தம்முள்
நிறைந்திடு மாயச் சித்தினை உதறி
   நெகிழ்ந்திடச் செய்வ தொருஞானம்;

இருப்பவர் யாருளம் இருப்பது என்ன?
   என்றறி திறமை ஒருஞானம் --அங்கே
இருப்பவர் தமக்குள் உடன்துயர் துடைத்தல்
   யார்க்கென அறிதல் ஒருஞானம்;

அரியும் சிவனும் வேறிலை ஒன்றென
   அறிந்து தெளிதல் ஒருஞானம் --அந்த
அரிசிவன் பேரால் கலகம் விளைப்பதில்
   அறிவிலை யென்ப தொருஞானம்.

மடமை போக்கி அறிவைப் பெருக்கவே
   மடங்க ளென்ப தொருஞானம் --நாட்டில்
மடங்கள் தனித்தனி யெனினும் வணங்கும்
   பரம்பொரு ளொன்றே எனல்ஞானம்.

இந்த ஞானம் உள்வரப் பெற்றோர்
   எங்குளர்? அவர்தாம் ஞானியரோ --என்றும்
அந்த ஞானி காலடி வீழ்ந்தே
   அறிவுத் தெளிவை அடைவேனா?
             --ஞானக்கிறுக்கன்--2006

Thursday, October 10, 2013

kambavannam

         கம்பவண்ணம்

எந்தவண்ணம் கம்பவண்ணம் என்று கேட்டால்
   ஏதுவண்ணம் நாமுரைப்போம்? படிக்குந் தோறும்
வந்தவண்ண மேயிருக்கும் சுவைகள் பொங்கி
   வழிந்தவண்ண மேயிருக்கும் திறத்தில் மூழ்கிச்
சொந்தவண்ண மேமறந்து கம்பன் காட்டும்
   சுவைவண்ண மாய்மாறித் திளைத்தே ஆடும்
விந்தைவண்ணம் கற்போரின் சிந்தை வண்ணம்;
   மேன்மைவண்ணம் கம்பவண்ணம் போற்று வோமே!

சொல்லிருக்கும் இடத்திலொரு சுவையி ருக்கும்;
   சுவையிருக்கும் சொல்லிலொரு சுகமி ருக்கும்;
வில்லிருக்கும் கையிலொரு விதியி ருக்கும்;
   விதியிருக்கும் வில்லிலொரு கதியி ருக்கும்;
கல்லிருக்கும் பெண்ணிலொரு கதையி ருக்கும்;
   கதையிருக்கும் கல்லிலொரு கனமி ருக்கும்;
சொல்லுக்குள் சொல்லாகச் சுவைகள் வைத்த
   சிற்பியவன் கம்பவண்ணம் சிறந்த வண்ணம்.

மோகவல்லி நடையழகு நடன மாகும்;
   முழுஅழகாய் நளினமுடன் வந்து தோன்றி
மோகமுள்ளில் பூத்துள்ள மலராய் வண்டை
   முனைந்திழுக்க ஆற்றுமுரை தேனே யாகும்;
தாகமெடுத் தோள்நெஞ்சம் பண்பில் பூத்த
   தனியறத்தின் தடாகத்தை நெருங்கி நின்று
தாகமுடன் சிந்துகின்ற உரையைத் தேனாய்த்
   தந்தமகன் கம்பவண்ணம் இன்ப வண்ணம்.

வாலியின்மேல் அம்பைமறைந் தெய்து வம்பாய்
   வாங்குகிறான் சொல்லம்பைச் சரம்ச ரம்மாய்;
கோலமிகும் அந்தஉரை வீச்சில் கம்பன்
   கொடியுயரப் பறக்கிறது; பின்ன ராங்கே
வாலியெனும் சிறியனவே சிந்தி யாதான்
   வதைபட்டும் அறமுதலை வணங்கி மைந்தன்
கோலமிகும் கைபற்றிக் கொடுக்கு மந்தக்
   காட்சியிலே கம்பவண்ணம் அருளின் வண்ணம்.

Tuesday, October 8, 2013

tharaiyil olirum vinmeenkal

   தரையில் ஒளிரும் விண்மீன்கள்

விண்ணைப் பார்த்து வியக்கின்றோம்;
   மனதில் மகிழ்ச்சி அடைகின்றோம்;
மண்ணில் வாழும் அனைவருமே
   மீன்களை இரவில் ரசிக்கின்றோம்;
எண்ணிப் பார்த்தால் மகிழ்ச்சிக்கே
   என்ன காரணம் எனப்புரியும்.
விண்ணின் மீன்கள் சிந்துகின்ற
   வெளிச்சப் பூவே காரணமாம்.

மீன்கள் இல்லா வானத்தை
   மனதில் நினைத்துப் பாருங்கள்!
வானம் கருமிருட் போர்வையென
   வையம் நடுங்கக் காட்சிதரும்.
மீன்கள் தமக்கென ஒளிராமல்
   வானம் பூமி இவைகளுக்காய்
வானில் மின்னிப் பூப்பதுதான்
   மீனின் சிறப்புக் கடிநாதம்.

எத்தனை இளைஞர் இம்மண்ணில்
   ஒளிதரு மீனாய் வாழ்கின்றார்?
எத்தனை மனிதர் சமுதாயம்
   ஒளிபெற விளக்காய்ப் பூக்கின்றார்?
எத்தனை தலைவர் தொண்டருக்காய்
   இனிய ஒளியைத் தருகின்றார்?
அத்தனை பேரும் மண்ணுக்காய்
   ஒளிதரு மீனாய் ஆவாரா?

ஏதோ சோலை யோரத்தில்
   எங்கோ போற்ற ஆளின்றித்
தோதாய்த் தோன்றும் சூழலின்றித்
   துயர இருட்டுக் குகைநடுவில்
ஏதோ ஒருமீன் ஒளிர்வதையே
   உலகம் கண்டு போற்றிடுமா?
தீதே இன்றி அம்மீனின்
   திறத்தை வளர்த்தே ஒளிபெறுமா?

சூரியத் தாக்கில் மீன்களினம்
   சுடரும் ஒளியை இழப்பதுபோல்
வீரிய வறுமைத் தாக்குதலில்
   ஒளியிழப் பவர்கள் ஏராளம்;
யாரெவர் அவர்நிலை கண்டறிவார்?
   யாரெவர் அவர்கட் கொளிதருவார்?
யாரெவர் தந்து போற்றிடினும்
   அவர்கள் மின்னும் மீன்களாவார்.

எத்தனை அழகு பெண்களிடம்?
   எத்தனை ஒளியவர் கண்களிடம்?
அத்தனை அழகும் ஒளிர்கிறதா?
   அவைகள் விண்மீன் ஆகிறதா?
எத்தனை ஒளிகள் சிந்திடினும்
   ஏழைமைக் குளத்துப் பெண்மீனின்
அத்தனை ஒளியும் பெறுதற்கே
   யாரெவ ரிங்கே முன்வருவார்?

தேடித் தேடிப் பாருங்கள்;
   தேடுங் கண்கள் கண்டுணரும்;
நாடி யணைத்தே இளைஞருளம்
   நல்லொளி பெறவழி காட்டுங்கள்!
ஏடுகள் போற்றும் மீன்கூட்டம்
   இந்த மண்ணில் மிளிருவதைத்
தேடுங் கண்ணே கண்டிடலாம்;
   தேடாக் கண்கள் காணாவே!

Sunday, October 6, 2013

puthiya baarathathinaay vaa vaa

 புதிய பாரதத்தினாய் வா! வா!

பாரதி இழுத்த 'பாரத' மென்ன
   பாதியில் நிற்கிறதா?--புதிய
பாரதத் திளைஞர் படையை யழைத்துப்
   பதறிடக் காரணமென்?

அன்றைக் கழைத்தான் பாரதி; நாமோ
   இன்றைக் கழைக்கின்றோம்;--நமக்குப்
பின்னர் பேரன் அழைப்பான்; எந்நாள்
   பாரதம் புதிதாகும்?

இளைஞ ருள்ளார்; அவர்தம் நெஞ்சில்
   எழுச்சிகள் புதியஉள! --அவை
வளைந்து வளர்ந்தே முடத்தெங் காகும்
   மர்மமே புரியவில்லை.

எல்லாம் உள்ளன! எதுவுமே இல்லை!
   என்றவோர் முரண்பாட்டை--இங்கே
எல்லா இளைஞரும் காண்கிறார்--அவர்தம்
   இதயமே என்னசெய்யும்?

பாரத நிலத்தில் விளைத்திட மண்ணே
   பண்பட வேண்டாமா?--மண்ணில்
சீரதை விதைத்துச் சிறப்பினை அறுக்கத்
   திரண்டிட வேண்டாமா?

நல்லதே நாடி நல்லதே செய்யும்
   நல்லவர் படைவரட்டும்;--அவர்தாம்
வல்லவ ராகி வளமைகள் கூட்டும்
   வலிமைகள் பெருக்கட்டும்.

நல்லவை எவையெனத் தெரியா இளைஞரை
   நடப்பிலே காண்கின்றோம்;--அவர்
அல்லவை தம்மை நல்லவை யென்றே
   அணிவதைப் பார்க்கின்றோம்.

விலங்கினை அறுத்தே விடுதலை பெற்றநாம்
   விலங்குவே றணிவதுவா?--மனித
விலங்கெனத் திரிவோர் விலாவினை நொறுக்கியே
   வீழ்த்திட வேண்டாமா?

இளைஞரே எழுக! புதியபா ரதமே
   இங்குமை அழைக்கிறது--நாட்டுக்
களைகளை அழித்தே நலத்தினை விளைக்கும்
   கைகளைக் கேட்கிறது.

தடைகளை நொறுக்கு! தீயவை யனைத்தும்
   சருகென எரித்துவிடு! --எங்கும்
இடையினில் நில்லாப் பயணமே எடு!வுன்
   இதயத்துள் ஒளியேற்று!

புதியதோர் உலகம் படைத்திடப் புறப்படு!
   போரினில் தோள்தட்டு!--புதிய
விதிகளை எழுதிடு! மேலவர் கீழவர்
   வேற்றுமை நொறுக்கிவிடு!

வையகம் செழித்திடும் வழிவகை கையிலே
   மலர்ந்துள தறிந்திடுநீ! --என்றும்
வையகம் அறத்தினில்! மறத்தினை எறிந்திடு!
   வாழ்வினை நிறைத்திடுநீ!
              ---01-09-08-

Sunday, September 29, 2013

vittu viduthalaiyaaki

     விட்டு விடுதலையாகி.........

விட்டு விடுதலை யாவெனத் திகைக்கிறேன்;
விட்டு விடுவ தெதையெனக் கேட்கிறேன்;

கட்டுப் படாது கட்டறுத் தலைந்ததைக்
கட்டில் வைத்த கட்டை விடுவதா?

ஆசை நெருப்பை அணைத்துக் கலந்த
ஆசைக் குளத்தின் அணைப்பை விடுவதா?

பாச உணர்வின் பரப்பை உணர்த்திய
நேசக் கொடியின் நினைப்பை விடுவதா?

கற்பனைச் சிறகாய்க் கவிதைப் பொருளாய்
நிற்பவ ளவளின் பிணைப்பை விடுவதா?

இன்பம் இதுவென இதய முணர்த்திய
இன்பக் கொள்முதற் களஞ்சியம் விடுவதா?

அன்பை விரிக்கும் அற்புதம் காட்டிய
நண்பர் கூட்டை நறுக்கென விடுவதா?

பல்வகைப் படிப்பைப் பல்வகை யுணர்வைப்
பல்வகை கொடுத்த பள்ளியை விடுவதா?

நல்லவர் அணைப்பை நவில்தொறும் இனிக்கும்
நல்லவர் உரையை நானே விடுவதா?

பாட்டில் இன்பம் பகிர்ந்ததை விடுவதா?
பாட்டா யாகிப் பயின்றதை விடுவதா?

வீட்டை விடுவதா? விட்டுப் பின்னொரு
காட்டை யடைந்து களிப்பிற் கலைவதா?

காட்டையும் விட்டுக் கண்முன் இன்பக்
கூட்டையும் விட்டுநான் கொள்ளை போவதா?

சொர்க்கமே இதுவெனக் காட்டிய வீட்டைப்
பொக்கென விட்டுப் பாவியாய்ப் போவதா?

கட்டில் இருப்பதே சுகமெனக் கொண்டபின்
கட்டென் செய்யும்? விடுதலை என்செயும்?

காற்றுக் குதிரையில் வான்வலம் வரலாம்;
ஆற்றிக் கொள்வது வீட்டணைப் பன்றோ?

துடிப்பும் தவிப்பும் அலைப்பும் நெரிப்பும்
நொடிப்பும் சலிப்பும் நோயாய்ப் பற்ற

அனைத்தும் விட்டு விடுதலை யாகி
நினைத்து மகிழ விடுவது வீடே;

அதைநான் விடுவதா? அதையேன் விடுவது?
வதைநான் படவா? வீட்டைநான் விடவா?

விட்டு விடுதலை யாக மறுக்கிறேன்;
விட்டு விடுவ தேனெனக் கேட்கிறேன்.
   -திருவள்ளுவர் இலக்கிய மன்றம்
        நங்கநல்லூர் --05-09-07

kaviarangam 38

             கவியரங்கம்---38

            தலைமை---கவிஞர் சிவசூரி

   பூவிதழ் தனில மர்ந்து
      பாடிடும் வண்டாய் நல்ல
   பாவினை ஈந்து நிற்கும்
      பைந்தமிழ் வல்ல சூரி
   நாவெலாம் கவிதை நங்கை
      நாட்டிய மேடை யாகும்;
   பாவினில் இனிப்பை வைக்கும்
      பக்குவம் சூரிக் குண்டு.

   அருமையாய்த் தலைமை தாங்கும்
      அவருடை அழைப்பை யேற்றுத்
   தருகிறேன் கவிதை; எந்தத்
      தனிச்சுவை சிறிது மின்றி
   வருகிற கவிதை யேனும்
      மனமகிழ் வுடனே ஏற்றுத்
   தருகிற உமது வாழ்த்தைத்
      தலையிலே தாங்கிக் கொள்வேன்.

           கவிதை என் காதலி

மெல்லக் கவலைகள் என்னைப் பிழிகையில்
      வந்து தழுவிடுவாள்;--எனை
அள்ளிப் பறந்தே அண்ட கோள்களின்
      அதிசயம் காட்டிடுவாள்;

கையசைத் தேஒரு காவியம் படைத்திடக்
      கருப்பொரு ளீந்திடுவாள்;--அவள்
மெய்யசைத் தேஎன் மேனியி லேஓர்
      மின்னலைப் பாய்ச்சிடுவாள்;

சொல்லினி லடங்காச் சுந்தர புரிக்கெனைச்
      சுருட்டி யிழுத்திடுவாள்;--நான்
வில்லினில் தொடுத்த அம்பென அவள்வழி
      விரைந்து பாய்ந்திடுவேன்;

எத்தனை சுகங்கள் எத்தனை நலங்கள்
      எனக்கவள் ஈந்துநிற்பாள்;-- நான்
அத்தனை யும்கவி ஆக்கும் முயற்சியில்
      அலறித் துடித்துநிற்பேன்;

சொல்லுக் குளேஓர் சூத்திரம் அமைத்துச்
      சுவைகள் கொட்டிநிற்பாள்;--அந்தச்
சொல்லைத் தெரிந்துநான் தொட்டிடு போதினில்
      தோளினில் கூத்திடுவாள்;

எந்த நேரமு மென்றிலை என்னையே
      என்னவோ செய்துநிற்பாள்;--அவள்
வந்து தழுவிடுங் கணத்திலே விண்ணொடு
      மண்ணைப் பிணைத்துநிற்பாள்;

சிற்சில நேரமே பற்பல கூவினும்
      செவிதர மறுத்திடுவாள்;--நான்
வற்புறுத் தியேநீ வாடியிங் கென்றிடில்
      மாயமாய் மறைந்திடுவாள்;

அருவி யெனச்சில நேரமே சொற்களை
      அள்ளிச் சொரிந்திடுவாள்;--நான்
உருகி வேண்டினும் சிலபோ தவளே
      ஓடி ஒளிந்திடுவாள்;

காலை மலரிலும் சோலைக் குளிரிலும்
      கண்ணைச் சுழற்றிநிற்பாள்;--வீழும்
மாலைக் கதிரிலும் மல்லிகை மொட்டிலும்
      வாவென அழைத்துநிற்பாள்;

கவிதை யெனஒரு காதலி வந்ததால்
      கவலை மறந்துநிற்பேன்;--இந்தப்
புவியில் எனக்கொரு பொருளை உணர்த்தியே
      பொழுதெலாம் இணைந்திருப்பாள்;

அய்யோ இவள்வர விலையெனில் மண்ணிலே
      அழிந்துமே போயிருப்பேன்;--வாழ்விற்
பொய்யிலை இவளே புத்துயி ரளித்துப்
      பொழுதெலாங் காத்துநிற்பாள்;

இவளணைப் பெனக்கே இருக்கிற வரையிலும்
      எனக்கொரு துன்பமில்லை;--வாழ்வில்
இவளணைப் பொன்றே என்றன் உயிர்நிலை
      இலையெனில் நானுமில்லை.   

Tuesday, September 24, 2013

kuzhanthai

           குழந்தை

பஞ்சுக் காவியம்; பனிமலர் ஓவியம்;
நெஞ்சுக்குள் மாயம் நிகழ்த்துமொரு சூத்திரம்;

கல்லைக் கனியாக்கும் கண்வீச்சு; பொருளற்ற
சொல்லைச் சுழற்றிநமைச் சொக்கவைக்கும் மாமாயம்;

இதழசைந்தால் காணும் இதயங்கள் கூத்தாடும்;
மதலையின் ஒலிக்கூட்டில் மனமயங்கிச் சுற்றிவரும்;

வஞ்சங்கள்; சூழ்ச்சிகள்; வாழ்க்கையின் மேடுபள்ளம்
கொஞ்சமும் தாக்காமல் கூத்தாடும் சிறுபிஞ்சு;

தாய்மை என்னுமொரு தனியுயர்வைப் பெண்ணுக்குத்
தூய்மை யுடனளிக்கும் தனிமகிழ்ச்சிக் கருவூலம்;

இப்படி எத்தனையோ அடுக்கடுக்காய்ப் பாடினாலும்
எப்படி யும்பாடி முடிக்கவொண்ணாப் பெரும்பொருளாம்;

இதுதானே குழந்தை! சமுதாயப் பெருமண்ணில்
அதுதானே மனிதனாய் அவதாரம் எடுக்கிறது;

மனிதனாய் மாறியபின் கண்ணசைவும் காலசைவும்
இனிக்கிறதா? இங்கேதான் ஏதோ இடிக்கிறதே!

அதேஓர் குழந்தையை அப்படியே வளர்க்காமல்
எதையோ திணித்ததனை என்னவோ ஆக்குகிறோம்;

அந்தக் கதையெதற்கு? அணுஅணுவாய் இன்பத்தை
இந்த உலகத்தில் ஈயுமதைப் போற்றுவோமே!

குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான்; அதுவிங்கே
குழந்தை குழந்தையாக இருக்கும் வரையில்தான்;

குழந்தையைப் பாடுவோம்; குழந்தைக்காய்ப் பாடுவோம்;
குழந்தையுள்ளம் கொடுத்திடுவாய்! என்றிறையை வேண்டுவோம். 

Monday, September 23, 2013

seyaay naan maarenaa

            சேயாய் நான் மாறேனா?

கள்ளமிலாச்  சிரிப்புனக்குக்  கட்டியங்கள்  கூறிவர
உள்ளமெலாங் கொள்ளைகொளும் ஊர்வலமே நடத்துகிறாய்
வெள்ளமெனப் பாய்ந்துநெஞ்சை மூழ்கடித்தே மகிழ்ச்சியினை
அள்ளியிங்கே வழங்குமுன்வாய் அசைவெனநான் ஆகேனா?

கன்னத்தின் குழிக்குளென்றன் கருத்தள்ளிப் புதைத்திட்டே
எண்ணத்தில் போதையேற்றி இதயத்துள் சூடேற்றி
வண்ணத்துப் பூச்சியென வானிலெனைப் பறக்கவிடும்
என்னுறவே! உன்றனுடை இதழ்க்கடையாய் மாறேனா?

பார்வையிலே வலைவீசிப் பார்ப்போரை மீனாக்கிக்
கோர்வையுடன் வீழ்த்துகின்ற கொள்ளையின்பக் கண்ணொளியே!
பார்முழுதும் விண்முழுதும் படைத்தாலும் ஒப்பாகாச்
சீர்திகழும் உன்னிருகண் மணிகளென மாறேனா?

நடந்தாலும் இனிக்கிறது; விழுந்தாலும் இனிக்கிறது;
கிடந்தாலும் பாற்கடல்மேற் கிடப்பவனாய் இனிப்பவளே!
தடுமாறி வீழ்ந்தாலும் இனித்திடவே செய்யுமுன்றன்
தடுமாறுங் காலிலுள்ள தண்டையென மாறேனா?

எத்தனையோ துன்பங்கள் அணியணியாய் வந்தாலும்
அத்தனையுந் தீண்டாமல் அழகழகாய்ச் சிரிப்பவளே!
தத்துமொழி யுதிர்க்குமுன்றன் கடைவாயில் துளிர்க்கின்ற
தித்திக்கும் எச்சிலிலே  ஈயாகி மேயேனா?

தீதுநிறை யுலகத்தில் தீதுநிறை யுடல்தாங்கி
தீதுநிறை சுற்றத்தார் சுற்றிவர வாழும்நான்
தீதுதொடாத் தூயநெஞ்சம் தூசுதொடா உன்னுடலில்
ஏதேனும் ஆகிடவே இறையருள மாட்டானா?




Monday, September 16, 2013

Re: சவகர்லால் கவிதைகள்

                   பொற்கிழிக் கவிதை
    ( திருப்புத்தூர்த் தமிழ்ச்சங்கம் 15-06-70-ல்
      நடத்திய நேர்முகக் கவிதைப் போட்டியில்
      பொற்கிழி ( 1008 )ப் பரிசு பெற்ற கவிதை )
     
      பொருள்; 'எந்தை இறைவன் இறைவியிடம்
               இம் மன்பதை பற்றி உரையாடல்'

கண்ணுக்குள் ஒளியானைக் காணும் மாந்தர்
   கருத்துக்குள் ளிருப்பானை, எண்ணும் நல்லோர்
எண்ணத்தில் நிறைவானைக் கற்ற வர்தம்
   இதயத்தில் ஒளிர்வானை, ஏழை மக்கள்
வண்ணப்பொன் கற்பனையின் வடிவே யாகி
   வாழ்வோடு விளையாடும் இறைவன் தன்னை,
வண்ணத்துப் பொற்கிளியா ளுமையா ளோடு
   வானத்துப் பனிமலையில் கண்டு வந்தேன்.

காதலொளிர் மடப்பிடியும் உலகுக் கென்றே
   கருணைபொழி பெருங்களிறும் உயர்ந்த கைலை
மீதமர்ந்தே இவ்வுலக மாந்தர் பற்றி
   மொழியாடத் துவங்கிவிட்டார்; நின்று கேட்டேன்;
ஆதலுக்கும் ஆகிவிட்ட பொருள்கள் இங்கே
   ஆடலுக்கும், ஆடிவிட்ட உயிர்கள் மேலே
போதலுக்குங் காரணராம் முக்கண் ணன்தான்
   போதவிழ்ந்த குழலோடு பேசி நின்றான்.

பேசுகின்ற கணவனுரை அமைவாய்க் கேட்டே
   பேரமைதி கொள்ளுகின்ற பண்பே அந்த
வீசுபுகழ் வானவட்கும் இல்லை கண்டேன்;
   மெய்யறிவன் ஏதேதோ சொல்லிட் டாலும்
வீசுகிறாள் வினாக்கணையை; அவனை மெல்ல
   வினாக்கடலுள் மூழ்கடிக்கப் பார்த்தாள்; அந்த
மாசில்லா விடையோன்தான் விடையைச் சொன்னான்.
   மனங்கொண்ட சிலசெய்தி நானும் சொல்வேன்.

உமையவள் கூற்று;

மன்பதையைப் பார்த்திட்டால் மனங்கொ திக்கும்;
   மனக்கோணல் கண்டிட்டால் உளந்தி கைக்கும்;
துன்பநிறை வறிந்திட்டால் துயர்க விக்கும்;
   துடிக்கின்றோர் எண்ணிட்டால் சிந்தை சாகும்;
என்புநிறை இடுகாட்டில் வாழ்கின் றீரே!
   இவ்வுலகும் என்புநிறை இடுகா டேயாம்;
இன்பத்தைக் கண்டறியா மாந்தர்; நேர்மை
   இம்மியுமே காணாதார் நிறைந்த பூமி;

வான்முட்டும் மாளிகைகள் மெத்த வுண்டு;
   வளர்ந்துள்ள அதனடியில் 'அய்யா சாமி!
நான்சாவேன்' என்றலறும் என்பின் கோவை
   நானிலத்தில் மிகஅதிகம்; இந்தத் தாழ்வை
ஏன்படைத்தீர்? இருப்போரும் எதுவு மில்லா
   ஏழைகளும் ஏனிங்கே படைத்தீர்? மக்கள்
ஏனிங்கே உயர்ந்தோர்கள் தாழ்ந்தோ ரென்ற
   இத்துணைவேற் றுமையோடு வாழச் செய்தீர்?

பறக்கின்ற பறவைக்குக் கூடு; காட்டில்
   பாய்ந்துதிரி விலங்குகட்குப் புதர்கள்; வாயைத்
திறக்கின்ற பாம்புக்குப் புற்று; பண்டந்
   திருடுகின்ற எலிகட்கும் வளைகள்; இங்கே
பிறந்திட்ட எவ்வுயிர்க்கும் இடம ளித்தீர்;
   பெரும்பாவம் இவரென்ன செய்தார்? மண்ணில்
பிறந்தார்கள்; அவரிங்கே தங்கு தற்குப்
   பேருக்கும் இடமில்லை. ஏனோ சொல்வீர்?

அவரென்ன பழிசெய்தார்? உயர்ந்து வாழும்
   இவரென்ன நலஞ்செய்தார்? சொல்லப் போனால்
அவர்கள்தாம் நல்லவர்கள்; பழியைச் செய்ய
   ஆற்றலின்றி அமைந்திட்டார்; செல்வ மிக்க
இவர்கள்தாம் பெருக்குவது செல்வம் மட்டோ?
   இல்லையில்லை பாவமுமே பெருக்கு கின்றார்;
இவருக்கேன் பெருவாழ்க்கை? தவிக்கு மந்த
   ஏழைக்கேன் சீர்கேடு? சொல்வீ ரென்றாள்.

சிவன் கூற்று;

செம்மேனி சிரித்திட்டான்; இளஞ்சி ரிப்பு;
   "சிறுவையம் கண்டுவந்து வினவு கின்ற
அம்மா!நீ அறிந்ததெல்லாம் கேட்டாய்; நானே
   அத்தனைக்கும் மூலவனென் றென்னைக் கேட்டாய்;
சும்மாவோ உண்மைக்கோ நீதான் கேட்ட
   செய்தியெலாம் சொல்லுகிறேன்; கேட்பாய்! ஞாலத்
தம்மையேஉன் சிந்தையிலே தைத்த முள்தான்
   அகிலத்துப் பொருட்பேதம்; இலையா? சொல்வாய்!

பசும்புல்லின் பெரும்பரப்பில் மேயச் செல்லும்
   பசுக்களிலே 'வாய்ப்பிடியில்' சிறந்து நிற்கும்
பசுத்தானே புல்லைமிகக் கொள்ளும்; இன்னும்
   பக்கத்துத் துணையாகக் கொம்பி ரண்டை
விசுக்கென்று வீசிநிற்கும் காளை சேர்ந்தால்
   விளைபுல்லின் பரப்பெல்லாம் அவைகட் கன்றோ;
பசுங்கிளியே! இதுதானிந் நிலத்துச் செய்தி;
   பாங்காக அறிந்திடுவாய்! என்றார் தேவர்.

உலகத்தைத் தான்படைத்தேன்; பலவா யங்கே
   உருக்கொண்ட வேற்றுமையைப் படைக்க வில்லை;
கலகலக்கும் செல்வத்தைப் படைத்தேன்; செல்வங்
   கடிதிற்போய்க் குவியஇடம் படைக்க வில்லை;
பலதிறத்தும் பாயறிவைப் படைத்தேன்; தீமை
   படைப்பதற்கென் றவ்வறிவைப் படைக்க வில்லை;
பலவுயிரும் பலவுலகும் வாழ்ந்தால் தானே
   பரமனுக்கும் வாழ்வுண்டு; தெரியா தாசொல்!

எப்படியோ தீமைபல பெருகிப் போச்சே!
   எடுத்தெறிய இயலாமல் வேரி றங்கித்
தப்புகளே மலிந்தனவே! நானே போட்ட
   தனிப்பயிரைக் களைமறைக்கக் கண்டேன்; அந்தோ!
எப்படித்தான் களைநீக்கிப் பயிர்செய் வோமோ?
   ஏங்குகிறேன்; எனக்குந்தான் வந்த தேக்கம்;
இப்படியே விட்டிட்டால் உலகந் தானே
   எப்படியோ அழிந்துவிடும்; என்ன செய்வோம்?

ஆண்டவன்தான் விளையாடல் செய்தா னென்றே
   அறைவார்கள்; இப்போதோ உலகம் பொய்மைத்
தாண்டவத்து மேடையென ஆகி அங்கே
   தனிநடனம் யார்யாரோ ஆடு கின்றார்;
ஆண்டவன்நான்; இப்போது புவியை இங்கே
   ஆள்பவனோ கொடுங்கலிதான்; இதைய ழிக்கத்
தாண்டவத்தை ஆடிடவா? சொல்வா யென்றான்;
   தளிர்க்கோதை 'பொறுத்திடுவீர் பார்ப்போ' மென்றாள்;

உமையவள் கூற்று:

அப்பரடி நடந்தநிலம்; நம்சம் பந்தர்
   அமுதொழுகப் பயின்றநிலம்; வாச கர்தாம்
மெய்ப்புகழை விதைத்தநிலம்; சுந்த ரர்தாம்
   மெய்யின்பம் விளைத்தநிலம்; அடியா ரெல்லாம்
மெய்யுருகி நின்றநிலம்; இந்நி லத்தே
   மேலாகப் புதர்மண்டி நிறையக் கண்டோம்;
மெய்யான புதர்நீக்கிப் பயிரை நல்ல
   மேன்மையொடு வளர்த்திடுவீர்; அழித்தல் வேண்டாம்;

மாலோடே அயனாரும் உன்றன் மூலம்
   முடிவையுமே காணாமல் தோற்றார்; உண்மை;
மாலோடும் இந்நிலத்து மக்கள் நெஞ்சில்
   மண்டிட்டே கீழோடிப் படர்ந்த வஞ்சம்
காலோடு தலையறிய யாரால் கூடும்?
   கண்டிப்பாய்த் தேவருமே தோற்பார்; தூய
பாலோடு நீர்க்கலப்பைப் போல நெஞ்சில்
   பாழாகும் வஞ்சத்தைக் கலந்து வாழ்வார்;

காலாடித் தனத்திற்கே உதவுங் கால்கள்;
   கையாடித் தவறுசெய்ய உதவுங் கைகள்;
மேலோடித் தீமைசெய்ய விழையும் நெஞ்சம்;
   மிக்கோங்கும் பழிகாண முந்துங் கண்கள்;
நாலோடே ஐந்தாகப் பொய்மை பேச
   நாடோறும் முந்திநிற்கும் நாக்கு; பொய்மை
மேலோடும் செய்தியினைக் கேட்கும் காது;
   மேலவனே! ஐம்புலனுக் கிதுதான் வேலை.

அவரெல்லாம் உம்படைப்பே; கையுங் காலும்
   ஆட்டுவதே உம்மால்தான்; மேலும் மேலும்
அவரெல்லாம் பழிக்கடலுள் மூழ்கா வண்ணம்
   ஆடிடுவீர் புதுநடனம்! அவ்வாட் டத்தே
அவர்கட்குப் புதுப்பாடம் சொல்வீர்! சற்றும்
   அவர்கொள்ள வில்லையெனில் பிறகு பார்ப்போம்;
எவர்க்கென்று செய்தாலும் உங்கள் ஆட்டம்
   எல்லாமே காட்டாதீர்; தாங்க மாட்டார்.
            ( வேறு )
என்றுமை சொன்னதை நின்றுமே அறிந்துநான்
   ஏகினேன் என்னிடம் நோக்கியே;
நின்றதைக் கவியிலே சொல்லிட நெஞ்சினில்
   நினைப்பது முந்திட இங்குநான்
என்றனின் புன்மதி இயக்கிடச் சிறுகவி
   ஏட்டினி லேற்றினேன், ஆயினும்
என்னுளம் எண்ணிய பொருளினை முற்றுமே
   எடுத்துரைத் ததாக நினைவிலை;

புன்கவி யென்னினும் பொருந்திய என்னுளம்
   புகுந்துமே சொற்களாய் வந்ததே
என்கவி யென்றது மென்னுளம் மகிழ்ச்சியை
   ஏற்றிட லெங்குமே இயற்கையே;
என்கவி நெஞ்சினில் இறையுமை உரையதை
   ஏறிய வண்ணமே சொல்லிடப்
புன்கவி செய்தனன்; பொறுத்தருள் இறைவனே!
   போற்றினேன் உன்கழல் நெஞ்சிலே.
 




   




 


Saturday, September 14, 2013

with kannadasan

 [ 1972 ல் ஆ.தெக்கூர் மேனிலைப் பள்ளியில் 
            கவிஞர் கண்ணதாசன் தலைமையில் 
              நடந்த கவியரங்கம்.}
                 திறமை
    
தலைப்பிங்கே சரியில்லை என்று சொல்லித்
   தாவிக்கொண் டென்மனைவி அருகில் வந்தாள்;
தலைப்புனக்கும் பிடிக்கலையா? எஞ்சி நின்ற
   தலைப்பிதுதான்; என்னசெய்ய? என்றேன். உங்கள்
தலைவிதியா? யார்யாரோ கழித்துப் போட்ட
   தலைப்பினைஏன் எடுக்கவேண்டும்? என்று சேலைத்
தலைப்பிலுள்ள கிழிசலையே காட்டி நின்றாள்;
   சரிசரியிச் சங்கதியே வேறு; வேறு

கவியரங்கத் தலைப்பெனக்குத் 'திறமை' என்றேன்;
   கடகடெனச் சிரித்திட்டுச் 'சரிதான் இந்தப்
புவியினிலே இல்லாதார்க் கீதல் தானே
   புகழ்மிக்க கொடையாகும்; பொருத்தம்' என்று
செவியினிலே அறைந்தாற்போல் சொன்னாள்; சொன்ன
   சொல்லினிலும் தவறில்லை; திறமை இந்தப்
புவியினிலே எனைத்தவிர மற்ற எல்லாப்
   பொருள்விற்கும் வியாபாரி யிடத்து முண்டு.

கத்திரிக்காய் வாங்கிவரப் போனால் அந்தக்
   கடைக்காரன் என்னிடத்தே அன்பு கொண்டு
கத்திரிக்காய் நான்பொறுக்கித் தருவே னென்று
   கனியாகத் தந்திடுவான்; வீட்டில் சேர்த்தால்
கத்திடுவாள்; நறுக்கிடுவாள்; புழுவாய்க் கொட்டும்;
   'கடையினிலே கத்திரிக்காய் வாங்கக் கூடக்
கற்றிருக்க வில்லையிங்கே திறமை பற்றிக்
   கவிபாடிக் கிழியுமெனப் பாடித் தீர்த்தாள்;

நானென்ன செய்திடுவேன்? திறமை இன்று
   நாட்டினிலே பொதுவுடைமை ஆகிப் போச்சு;
தேனென்ற பேச்சாலே மயக்கி நம்மைத்
   தெளிவாக ஏமாற்றும் திறமை இந்த
மாநிலத்தில் எங்குமுண்டு; நமக்கே அந்த
   மாயத்தில் ஏமாறாத் திறமை வேண்டும்;
மாநிலத்தில் இதுமட்டுந் தானா? எல்லா
   வகையினிலும் திறமையிங்கே வெளிச்சம் போடும்.

அரசியலில் இத்திறமை கொண்டோர் நாட்டை
   ஆளுகின்ற பொறுப்பேற்பார்; நம்மை நோக்கி
வரவிலையே காற்றெனவே ஏங்கி நிற்போர்
   வாழ்க்கையெலாம் ஏக்கத்தில் கழிப்பார்; ஐந்து
வருடத்திற் கொருமுறையோர் புயல டிக்கும்;
   வீதிதொறும் பெருமுழக்காய் இடியி டிக்கும்;
சிறுதூற்றல் சில்லரையாய்க் குடிசைப் பக்கம்
   சிந்திவரும்; தென்றலெனப் பேச்சு வீசும்;
            ( இதெல்லாம் எதற்காக )
வாக்குண்டாம்; மணமுண்டாம்; பெரிய வர்கள்
   வரவுண்டாம்; உரையுண்டாம்; குடிசைக் கெல்லாம்
வாக்கில்லை யெனிலிங்கோ மணமு மில்லை;
   வரவுமில்லை; பைத்தியமா? பயனே யின்றி
வாக்கில்லா மக்களுடன் பேசப்; பின்னர்
   வருகின்ற தேர்தலுமே முடிந்து போனால்
வாக்களித்த பெரியோர்கள் இறைவ னாவார்;
   வாக்காளர் தவங்கிடக்கும் அடியா ராவார்.

             உயர்ந்த திறமை

நம்முன்னோர் திறமையிலே குறைந்தா போனார்?
   நானிலத்தில் நாகரிகம் பரவா முன்பே
நம்முன்னோர் கலைகளிலே நிமிர்ந்து நின்றார்;
   நாலுவகைத் திறமையிலும் உயர்ந்து நின்றார்;
நம்முன்னோர் காலம்பொற் காலம்; எல்லா
   நுண்கலையும் ஈடில்லா தொளிர்ந்த காலம்;
அம்முன்னோர் பெருமையினை அளந்து காட்டி
   அளப்பரிய ஆண்டுகளாய்க் கலைகள் நிற்கும்.

வானெட்டிப் பார்க்கின்ற கோபு ரத்தின்
   வகையெட்டிப் பார்த்திட்டால் வியப்பு மீறும்;
ஏனெட்டி உலகாளும் வாய்ப்பை இந்த
   இனமெட்டிப் பெறவில்லை? என்ற கேள்வி
தானெட்டி மனதிலெழும்; இலக்கி யத்தின்
   திறமெட்டிச் சுவைத்தாலும் அதுவே தோன்றும்;
ஏனெட்டி உயரவில்லை? காலத் தோடே
   இனமெட்டி வளரவில்லை; அவ்வ ளவ்வே.

திறமைகளோ பலவிதமாம்; தீயைப் போலச்
   செய்வதற்கும் அழிப்பதற்கும் துணையாய் நிற்கும்
திறமையினை நாம்வளர்க்க வேண்டும்; அந்தத்
   திறமையினால் பிறரழித்துத் தானே வாழும்
திறமிங்கே தோன்றாமல் இருக்க வேண்டும்;
   தினந்தோறும் உரையாடும் போதும் பேசி
உறவாடுங் காலத்தும் நம்மைக் காக்கும்
   ஒப்பரிய திறமையுரு வாக வேண்டும்.



Thursday, September 5, 2013

இறைவனுக்குகந்தது --தமிழில் வழிபாடு

                 இறைவனுக்குகந்தது
              --தமிழில் வழிபாடு--

மண்ணுலக ஆசை மயக்கத்தில் தடுமாறி
கண்கெட்ட பின்னேயென் கடைவாசல் வருகின்றீர்;

செய்யும் பாவத்தைத் தொகைதொகையாய்ச் செய்துவிட்டே
உய்யும் வழிநாடி  ஓடியென்முன்  வருகின்றீர்;

நடமாடும் மனிதர்தம் நரிச்செயலில் மிகநொந்து
படமாடும் பரமனென்முன் பணிவாக நிற்கின்றீர்;

விதைத்தவை அறுக்குங்கால் வேதனை தாங்காமல்
வதைநீக்க வேண்டி வாய்திறந்து புலம்புகின்றீர்;

வாருங்கள்; புலம்புங்கள்; வருந்தி உருகுங்கள்;
பாருங்கள் பசிதீரப்  பரமன் திருமுகத்தை;

நீங்கள் வருவதுவும் நின்றே உருகுவதும்
தேங்காய் பழங்கொண்டு வழிபாடு செய்வதுவும்

கண்டு மகிழ்கின்றேன்; கண்ணிலருள் கூட்டிக்
கொண்டணைத்து மகிழ்வித்துக் குளிரக் காத்துள்ளேன்;

உள்ளங் கரைந்தோடி ஒப்பரிய என்பாதங்
கொள்ள வேண்டுமெனில் கனிவுவர வேண்டாமா?

உங்கள் நினைப்பும் உளங்கனிந்த வேண்டுதலும்
தங்கு தடையின்றித் தாவிவர வேண்டாமா?

நினைப்பை வெளிக்காட்ட மொழிதடை யாயிருந்தால்
நினைப்புத்தா னெப்போதென் நேர்முகத்தை எட்டுவது?

தமிழ்நாட்டில் தமிழ்பேசும் நீங்கள் வழிபாட்டைத்
தமிழிலே செய்தால்தான் சிந்தை வெளியாகும்;

தூய திருமேனி; தொண்டிற் கனிந்தவுடல்;
வாய்மை கொப்புளிக்கும் வண்மைத் திருப்பாட்டு;

உழவாரப் படையேந்தி ஒப்பரிய தொண்டுகளை
அழகாகச் செய்தவராம் அப்பர் மொழியென்ன?

நெருப்பறையில் வைத்தே வேகவைத்த காலத்தும்
விருப்புடனே தமிழ்பாடி வெப்பத்தை வென்றாரே!

நீற்றறையைத் தென்றலென நிகழ்த்திக் காட்டியதும்
மாற்றரிய கல்புணையாய் மாகடலைக் கடந்ததுவும்

அண்டிவந்த யானை அப்பரை மிதிக்காமல்
மண்டியிட்டு வணங்கி மறுவழியிற் போனதுவும்

நஞ்சும் அமுதாகி நல்லுயிர் காத்ததுவும்
செஞ்சொல்லா லான தமிழ்ப்பாட்டின் திறந்தானே!

நொந்தஉள்ளம் கடைத்தேற நெஞ்சார வணங்கும்நீர்
செந்தமிழில் வழிபாடு செய்தே உய்யுங்கள்;

என்தோழன் ஆரூரன் எப்போதும் என்னை
அன்போடு அழைத்தே அதிகவேலை வாங்கினானே!

தெருவிலே தூதாகச் சென்றேனே! அவனுள்ளம்
வருந்தாமல் துணைசேர்த்து வாழ்வின்பங் கூட்டினேனே!

எல்லாம் எதற்காக?  இனிமையாய் அவனிடத்தில்
உள்ள தமிழ்கேட்கும் ஒப்பரிய  ஆர்வந்தான்;

அர்ச்சனை பாட்டே!  ஆதலால் என்னைச்
சொற்றமிழ் பாடுகெனச் சுந்தரர்க்குச் சொன்னேனே!

அப்பாட்டைக் கேட்டே அகமகிழ்ந்து திளைத்தேனே!
செப்புங்கள் அப்பாட்டை என்செவி துறக்கலாமா?

தேன்மழையா யென்செவியில் தினம்பொழிந்த பாடலுக்காய்
நான்ஏங்கி நிற்கின்றேன்; நல்லதமிழ் பாடுங்கள்;

இழிபாட்டைப் போக்கவுங்கள் இதயந் திறந்திடுங்கள்;
வழிபாட்டைச் செந்தமிழில் மனமகிழச் செய்திடுங்கள்;

ஆற்றலிலா வொன்றா? அழகில் லாவொன்றா?
போற்றாம லேனிந்தப் பைந்தமிழைப் புறக்கணிப்பீர்?

மறைக்கதவம் தமிழ்ப்பாட்டால் திறந்தேனே! என்செவியாம்
இருகதவம்  தமிழுக்காய் நான்திறக்க மாட்டேனா?

அழகான தமிழ்ப்பாட்டால் வழிபாடு செய்யுங்கள்;
குழைவோடு வணங்குங்கள்; கும்பிட்டே உய்யுங்கள்;

நானப்பன்; நீர்மக்கள்; நம்மிடையே என்றென்றும்
தேனான தமிழ்மொழியே வழிபாட்டில் திகழட்டும்.

எனக்கும் இனிக்கும்; உமக்கும் புரியும்;
மனக்கவலை சருகாக மந்திரத் தமிழெரிக்கும்.

திருமுறைகள் செய்யாத விந்தையினை இவ்வுலகில்
ஒருமுறையும் பிறமொழிதான் செய்யாது; உண்மையிது.

கூடுங்கள் என்முன்னே; கூடித் தமிழ்ப்பாடல்
பாடுங்கள் என்முன்னே; பணிந்து வேண்டுங்கள்;

கூப்புங்கள் கையிரண்டை; கொட்டுங்கள் தமிழ்ப்பாட்டை;
கேட்பதற்  கேங்கும்நான் கேட்டு மகிழ்கின்றேன்.
                 திருப்புத்தூர்--31-05-82




Wednesday, September 4, 2013

இவைகள் பேசினால் --அபிஷேக எண்ணெய்

          இவைகள் பேசினால்---
      அபிஷேக எண்ணெய்  (முருகன்)

தொட்டாலே கைமணக்கும் தூய மேனி
   தொடஆசைப் பட்டதுண்டு; நெடுநா ளாகக்
கட்டான ஆறுமுகன் உடலைத் தீண்டும்
   காற்றாக மாறஆசைப் பட்ட துண்டு;
எட்டாத ஆசையென விட்டு விட்டேன்;
   இன்றைக்கிங் கவ்வாசை தீரப் பெற்றேன்;
இட்டமெலாந் தீருமட்டும் தழுவி வீழும்
   எண்ணெயென என்னையேநீர் மாற்றி விட்டீர்.

வள்ளிமகள் காதலுக்காய் மரமாய் நின்றான்;
   மான்தேடும் வேட்டுவனாய் அலைந்து நொந்தான்;
உள்ளத்தில் ஊற்றெடுக்கும் இளமை மூடி
   ஒருவிருத்த னாய்வடிவம் பூண்டு சென்றான்;
வள்ளிமகள் தழுவலிலே குழைந்த மேனி
   வழிகின்ற எண்ணெயென்றன் தழுவல் தன்னில்
உள்ளபடி மகிழ்ந்திடுமா? தெரிய வில்லை;
   ஒப்பரிய வகையினிலே நான்ம கிழ்ந்தேன்.

அழுக்கடையாத் திருமேனி தன்னைக் கூட
   அன்றாடங் குளிப்பாட்டுந் தத்து வத்தை
அழுக்கடையும் சிறுமேனி மனிதர் இங்கே
   அறிந்ததாகத் தெரியவில்லை; அறிந்தார் தாமும்
அழுக்கழிக்கும் விளம்பரத்துப் பொருளால் மேனி
   அலசிவிட்டு வருவாரே யல்லால் நெஞ்சின்
அழுக்கினையே போக்கிவிட்டுக் கோயில் நாடும்
   அறிவுணர்ச்சி பெற்றவராய்த் தோன்ற வில்லை.

பளபளக்கும் பட்டாடை மறைப்புக் குள்தான்
   பஞ்சமகா பாதகங்கள் குடியி ருக்கும்;
சலசலக்கும் சிறுபேச்சின் மத்தி யில்தான்
   சண்டாளத் திட்டங்கள் உருவெ டுக்கும்;
கலகலப்பாய்ச் சிரிக்கின்ற சிரிப்புக் குள்தான்
   கட்டாரி போல்வஞ்சம் மறைந்தி ருக்கும்;
நிலைகலங்கி நெஞ்சத்தை மேய விட்டு
   நேயன்முன் நிற்பதனால் பயனும் உண்டா?

வள்ளியுடன் இருந்தாலும் அவனுக் கென்ன
   வஞ்சகங்கள் புரியாதா? இன்பங் கொஞ்சும்
உள்ளமுடன் இருந்தாலும் அவனுக் கென்ன
   உள்ளங்கள் தெரியாதா? வேலின் கூர்மை
உள்ளபடி அறிந்திருந்தும் வேலன் முன்னே
   உள்ளொன்று புறமொன்றாய் நிற்கின் றாரே
வள்ளியுட னிருப்பதனால் தீமை தன்னை
   மன்னிப்பான் வள்ளலவன் எனும்நி னைப்பா?

சந்தையிலே தரங்கெட்டு நாறிப் போன
   சரக்காகி மனம்நொந்து போன நான்தான்
எந்தைபிரான் இளையமகன் மேனி தன்னில்
   இறங்கிவிளை யாடுகின்ற பொருளாய் வந்து
இந்தவொரு பிறப்பெடுத்த பயனைப் பெற்றேன்;
   எண்ணெய்நான் அவன்குளிக்கக் குளிர்ச்சி பெற்றேன்;
கந்தனவன் கேசாதி பாதம் தொட்டுக்
   கடைத்தேறி விட்டேன்நான்; மனம்நி றைந்தேன்.
                 தேவகோட்டை--14-11-85
   

Monday, September 2, 2013

I இவைகள் பேசினால் --சிங்கவாகனம்

                    இவைகள் பேசினால்--
        சிங்கவாகனம் பராசக்தியிடம்

தாயே! பராசக்தி! தனிக்கருணை மாமழையே!
வாய்திறந் தழுவோரை வாரி யணைப்பவளே!

பெற்றவளும் நீதானே! பிள்ளைகள்யாம் பெருந்துன்பம்
உற்றக்கால் எமைத்தாங்கி உதவுவதும் நீதானே!

யாராட்சி பீடத்தில் அமர்ந்தாலும் உன்னுடைய
சீராட்சித் திறந்தானே செகமெல்லாம் காக்கிறது;

உன்னுடைய கண்மேகம் அருள்பொழிய வில்லையெனில்
மண்ணில்  உயிரெல்லாம்  வாடிக்  கருகாதா?

மண்ணைத் தாங்குகின்ற மாகாளி! பராசக்தி!
உன்னைத் தாங்குவதால் உயர்வுபெற்ற சிங்கம்நான்;

வீரத் திருக்கோலம் தாயேநீ எடுக்குங்கால்
சீரோ டுனைத்தாங்கிச் சிறப்போடு திகழ்பவன்நான்;

பாவத்தைச் சுமக்கின்ற பஞ்சைகளின் மத்தியிலே
தேவியைச் சுமப்பதனால் செம்மாந்து திரிபவன்நான்;

குள்ளநரி ஓநாய்கள் கொல்லும் புலிக்கூட்டம்
கள்ளமிலா மானினங்கள் எல்லாமென் காட்டிலுண்டு;

காட்டுக்குள் பேரரசைக் கட்டுக்குள் ஆண்டவன்நான்;
நாட்டுக்குள் உனைத்தாங்கி நாற்றிசையும் சுற்றுகிறேன்;

புதரை வீடாக்கி விலங்கினந்தான் வாழ்கிறது;
புதராக்கி வீட்டை மனிதஇனம் சாகிறது;

அன்றாடம் வருகின்ற அடியவர் செயலெல்லாம்
உன்கீழே இருக்கும்நான் ஒழிவின்றிக் காண்கின்றேன்;

சிங்கம்நான் என்நோக்கில் திசையெல்லாம் பார்க்கின்றேன்;
அசிங்கங்கள் தாமே அகமெல்லாம் தெரிகிறது;

நரிகண்டேன்; புலிகண்டேன்; நாய்கண்டேன்; உன்முன்னே
வருகின்ற கூட்டத்தில் மனிதரைத்தான் காணவில்லை;

தனக்கொருகண் போனாலும் சரிதான்; அடுத்தவன்
தனக்கிருகண் போகட்டும் என்பவர்தாம் ஏராளம்;

குப்பை நெஞ்சங்கள்; கோணல் நினைப்புகள்;
அப்பனுக்கும் அம்மைக்கும் அபிஷேகம் குறைவில்லை;

உள்ளத்தில் வஞ்சம்; உதட்டசைவில் தேவியின்பேர்;
கள்ளத் தொழுகையிலே சக்தியா மயங்கிடுவாய்?

ஏமாற்ற நினைத்தே ஏமாறி நெஞ்சத்தைத்
தாமாற்ற நினைக்காமல் தடுமாற்றம் கொள்கின்றார்;

சிங்கம்நான் சிரிக்கின்றேன்; தேவியே! உன்கீழென்
அங்கங்க ளிருப்பதனால் அமைதியுட னிருக்கின்றேன்;

தப்புத் தாளம் சங்கீத மாகிறது;
தப்பாத தாளம் எங்கேயோ புதைகிறது;

தனியாக நேர்மை ஆவர்த்தனம் புரிகிறது;
இனிமை யுடன்கேட்க ஆளின்றிப் போகிறது;

நேர்மை வழிசென்ற பயணம் முறிகிறது;
நேர்மை யற்றவழிப் பயணம் தொடர்கிறது;

வஞ்சத்தை விதைக்கின்றார்; வளமைபயி ராகிறது;
நெஞ்சத்தை விற்கின்றார்; நல்லவிலை போகிறது;

வஞ்சத்தைப் பயிராக்கி வன்கொடுமை விளைத்தவர்கள்
மிஞ்சியதைக் காசாக்கி உண்டியலில் கொட்டுகின்றார்;

கொட்டி உண்டியலில் பணத்தைக் குவித்துவிட்டாற்
பட்டுப்போம் பாவமெனப் பாவம் நினைக்கின்றார்;

தள்ளும் படியளவே அவர்செய்த பாவங்கள்
தள்ளுபடி யாகுமென நம்பித் தள்ளுகின்றார்;

சிங்கம்நான் சிரிக்கின்றேன்; தேவியே! உன்கீழென்
அங்கங்க ளிருப்பதனால் அமைதியா யிருக்கின்றேன்.
               --  --
                     சிவகாசி--16--07--82  


Friday, August 30, 2013

கோவில்

                          கோவில்

   பெற்றெடுத்த அப்பனையே பிள்ளை சாடும்;
      பிறந்திட்ட உடன்பிறப்பை அதுவே மோதும்;
   நற்றாயைச் சொல்லாலே கொல்லும்; உண்மை
      நண்பரினைக் கூட்டணிகள் சேர்த்துத் தீர்க்கும்;
   உற்றார்கள் சுற்றத்தார் என்ற செய்தி
      ஒன்றுக்கும் இடமின்றித் தீமை மிஞ்சிச்
   செற்றாடுங் காலத்தில் இறைவா! என்று
      சொல்லியழு வதற்கோர் இடம்வேண் டாமா?

   தருமங்கள் அதர்மத்தால் வேகும்; நாளும்
      சத்தியத்தைக் கொன்றாழப் புதைத்து விட்டே
   உருவாகித் தோள்தட்டும் குண்டர் கூட்டம்;
      ஒன்றுக்கும் பயனில்லாச் சருகுக் கூட்டம்
   பெரிதாக வலுவடைந்து நல்லோர் தம்மைப்
      பிணமாக்கி ஆட்டமிடும்; இவ்வா றிங்கே
   உருவான கொடுமையினைக் கண்டு நோவோர்
      ஒப்பாரி வைப்பதற்கோர் இடம்வேண் டாமா?

   மனிதர்கள் மனிதரேதாம்; அவர்க ளோடு
      மகிழ்வாகக் கொள்கின்ற உறவு நல்ல
   இனிப்பாகச் சிலநாள்கள் இருக்கும்; பின்னர்
      இணையில்லாக் கசப்பாகும்; இவ்வா றிங்கே
   மனக்கலப்பே இல்லாமற் கலக்குங் கூட்டம்
      மலிவாகிப் போனநாளில் ஏங்கி யேங்கி
   மனிதரினைக் காட்டாயா? எனப்பு லம்பி
      மன்றாட ஊரிலேஓர் இடம்வேண் டாமா?

   நாடிங்கே சுடுகாடாய் மாறும்; நாளும்
      நற்பண்பு கொலையாகிச் சாகும்; வாழும்
   வீடிங்கே கொலைக்கூட மாகும்; சொன்ன
      வீட்டறங்கள் அறுபட்டு வீழும்; அந்தக்
   காடிங்கே நல்லதெனச் சொல்லும் வண்ணம்
      காட்சியெலாம் கண்முன்னே தோன்றும்; இந்தக்
   கேடெல்லாம் மனம்விட்டுச் சொல்லி நெஞ்சைக்
      கொட்டியழு தோய்வதற்கோர் இடம்வேண் டாமா?

                               அதுதான் கோவில்.

   வீட்டினிலே தாங்காத துன்பம் வந்தால்
      விழுகின்ற இடமதுதான்; நாம்தாம் வாழும்
   நாட்டினிலே அதர்மங்கள் ஆட்டம் போட்டால்
      நாம்நாடும் இடமதுதான்; நமது நெஞ்சக்
   கூட்டினிலே பேய்வாழக் கண்டால் பேயைக்
      கலைப்பதற்குப் போகுமிடம் அதுதான்; இந்த
   நாட்டிற்கே புகலிடமாய் இருப்ப தால்தான்
      நம்முன்னோர் கோவிலினைப் பெரிதாய்க் கண்டார்.

                         காரைக்குடி--10-11-91
     
    

Friday, May 10, 2013

கட்டுப்பாடு


        கட்டுப்பாடு

அப்பாவென் றொருகுழந்தை அருகில் வந்தே
   அடிவயிற்றைக் காட்டிப்பின் ஏதோ சொல்லும்;
இப்பாலோர் சேய்வந்தே இடுப்பில் தொத்தி
   இன்றேயும் பட்டினியா? என்று கேட்கும்;
அப்பாவோ எமைநீயேன் பெற்றா யென்றே
   அறிவறிந்த பிள்ளையவன் அழுவான் நின்றே;
இப்பாலும் அப்பாலும் தாயின் மார்பை
   இழுத்தாலு மேதுமிலா தேகு மொன்று.

'பெற்றுவிட்ட குழந்தைகளின் பசியைப் போக்கிப்
   பேணவழி யில்லார்க்குப் பிள்ளை ஏனோ?
எற்றுக்கோ இந்தவின்பம் வேண்டாம் சீச்சீ!
   இனிப்பிரமச் சரியமிதே நல்ல மார்க்கம்;
இற்றைக்கு முதலாய்நான் மனையாள் பக்கம்
   ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. கட்டுப் பாடே;
வெற்றுக்குப் பெற்றெடுத்தல் தீமை;" என்றே
   வெளித்திண்ணை படுத்திட்டான் வெறுப்பு மிக்கு.

வெறுத்தொதுங்கிப் படுத்திட்ட அன்று சென்று
   வேனிலொடு பருவங்கள் மாறி, வானில்
கறுத்துநிற்கும் மேகமது காரைக் காட்டக்
   கடுகிவிரைந் தோடியதே ஆண்டின் ஒன்று;
வெறுத்துவிட்டுக் கட்டுப்பா டேற்ற நல்லன்
   வெளித்திண்ணை யிருக்கக்கண் டென்ன வென்றேன்;
சிரித்துக்கொண் டவன்சொன்னான்; " ஒருநா ளேதான்
   சேர்ந்திருந்தோம் மனையிலதோ இடுப்பு நோவு."
     
         -----'தமிழ்நாடு  ஞாயிறு மலர்--23--04--67'

Saturday, May 4, 2013

நகையே தொழில்

             நகையே தொழில்

புன்னகை யொன்றினால் என்னுளங் கொன்றிடும்
   பெண்ணவள் செயலினைக் கண்டு--சிந்தை
   பின்னிடத் தயங்கினேன் நின்று--அவள்
கண்ணசை வொன்றென தெண்ணமே கொண்டிடக்
   கன்னிபால் உளத்தினை வைத்தேன்--அந்தக்
   கண்ணினில் இதயமே வைத்தேன்.

குறுநகை தந்தெனைப் பெருமகிழ் வாக்கியே
   குழறிடும் வெறியனாய்ச் செய்தாள்--இன்பக்
   கொப்பரை நெய்யினைப் பெய்தாள்--காதற்
சிறுமுகை பூத்துமே செறிமணம் ஈத்திடச்
   செழுங்கன வதனிடை ஆழ்ந்தேன்--அந்தச்
   செங்கனிச் சுவைபெற வாழ்ந்தேன்.

புலர்ந்திடு போதினில் அலர்ந்திடு பூவினிற்
   பொலிமணம் எவர்க்குமே சொந்தம்--அதைப்
   பெறுபவர் புவியினில் அனந்தம்--அங்ஙன்
மலர்ந்திடு பூநகை அலர்ந்திடக் கவர்ந்திடு
   மங்கையும் பொதுவென அறிந்தேன்--அந்த
   மாய்நகை தொழிலெனத் தெரிந்தேன்.
                ----24-04-60

பாடும் பயனும்

                    பாடும் பயனும்

   கட்டவிழ் கமல நாப்பண்
     கமழ்விரி முல்லை யூடு
   மொட்டவிழ் கொன்றைக் காடு
     முகிழ்த்திடு மல்லி யேனை
   எட்டிய மலர்கள் கூட்டத்
     திடைநுழைந் ததனில் தேனைக்
   கிட்டிய மட்டு மாக்கிக்
     கூட்டுதல் தேனீப் பாடு;

   காட்டிய ஏவ லாக்கிக்
     கையதை மெய்மேற் கட்டிப்
   போட்டசில் லுணவை யுண்டு
     பொழுதெலா மவர்க்கே பாடு
   பட்டுநற் பயன்கள் யாவும்
     பணத்தோ டவர்பாற் சேர
   ஈட்டிய செல்வங் கண்டே
     ஏங்குத லுழைப்போர் செய்கை;

   பட்டவர் பயனைக் காணார்;
     படுதலே அவர்தங் கொள்கை;
   ஈட்டிய தேனில் நன்மை
     ஈக்களே காண்ப தில்லை;
   வாட்டிய உழைப்பி னாக்கம்
     வறியவர் பெறுவ தில்லை;
   கூட்டிய பயனைக் கொள்ளை
     கொடுத்துவிட் டேங்கு வாரே!

Saturday, April 13, 2013

ஏதுக்கடி ?

           ஏதுக்கடி?

சுழிப்பில் கனிந்திதழ் நெளிப்பில் சுவைதரு
   சுந்தரத் திருமுக முனக்கிருக்க - மஞ்சட்
குளிப்பில் திளைத்திளம் புளிப்புச் சுவைதரு
   கோமள மாங்கனி ஏதுக்கடி?

துடித்து மொழிபயின் றெடுத்த சுவைதரு
   துவரித ழோரிணை யுனக்கிருக்கக்- கிள்ளை
கடித்துக் குதறிடு வனத்துக் கொடிதரு
   கோவையின் சிறுகனி ஏதுக்கடி?

வெடித்த நகையிடை நடித்து மயக்கிடு
   வெண்ணிறப் பல்வரி யுனக்கிருக்கக்- கொம்பில்
வெடித்துச் சிரித்தெயி றடுத்த வரிசையை
   விளக்கிடு மாதுளை ஏதுக்கடி?

விழிப்பி லுருண்டுவெண் மிதப்பில் தவழ்ந்திடு
   விந்தைக் கருமணி யுனக்கிருக்கக்- கிளையின்
ஒளிப்பில் முதிர்ந்திலை விரிப்பில் பளிச்சிடும்
   ஒண்கரு நாவலும் ஏதுக்கடி?
        -தமிழ்நாடு ஞாயிறுமலர்--11-12-1966  

Thursday, March 28, 2013

அன்பு

             

வீட்டுக்குள் கணந்தோறும் மோதல்; பெண்கள்
   விளையாட்டாய் நாள்தோறும் சாதல்; நெஞ்சக்
கூட்டுக்குள் அன்பில்லாக் கார ணத்தால்
   கொட்டிவிட்ட நெல்லியெனச் சிதறி, ஏதோ
காட்டுக்குள் வாழ்கின்ற விலங்கி னம்போல்
   கடுகடுப்பை முணுமுணுப்பை ஒருமு றைப்பை
வீட்டுக்குள் காட்டுகின்றார்; அங்கே அன்பு
   விளைந்திட்டால் அதுமகிழ்ச்சிக் கூட மாகும்.

தாயொருத்தி பிள்ளையிடம் காட்டு கின்ற
   தனியன்புக் கீடில்லை; தூய அந்தத்
தாயன்பே மருமகளின் மேலும் பாய்ந்தால்
   தனிமகிழ்ச்சி கிட்டாதா? அவளும் இவளைத்
தாயெனவே ஏற்றுள்ளம் பிணைத்துக் கொண்டு
   சரியன்பைப் பரிமாறிக் கொண்டால் அந்தத்
தூயமனை வரலாறு படைத்தி டாதா?
   தனிவளங்கள் தானாகச் சேர்ந்தி டாதா?

தூயஅன்பு வீட்டுக்குள் நிலவு மானால்
   தூசுகளே சேராது; கோணற் புத்தி,
மாயவலை, உள்ளத்தை மறைத்த பேச்சு,
   மயக்கங்கள், தயக்கங்கள் இருக்க மாட்டா;
தூயஅன்பின் சுவைமட்டும் உணர்ந்து விட்டால்
   தொல்லுலகில் வேறுசுவை தேட மாட்டோம்;
நேயமுடன் அன்புவலை விரிப்போம்; அங்கே
   நிகழ்கால உயிரினங்கள் கவர்ந்து வாழ்வோம்.

சமுதாயச் சீர்கேட்டைப் பார்க்கின் றோம்நாம்;
   சரிந்துவிட்ட பண்பாட்டின் கார ணத்தால்
சமுதாயம் வன்முறையால் கிழிபட் டிங்கே
   சாகின்ற கொடுமையினைக் காண்கின் றோம்நாம்;
சமுதாயக் காற்றோடு தூய அன்பைத்
   தவழவிட்டுச் சுவாசித்தோ மானால் இங்கே
திமுதிமெனத் தலைவீழும் செய்தி யெங்கும்
   தெரியாமல் உணர்வொன்றாய் வாழ லாமே!

கண்ணப்பன் தின்றஎச்சில் அமுத மென்றே
   காளத்தி நாதருமே கொண்டா ரன்றோ!
எண்ணத்தில் அன்புமிக்க கங்கை வேடன்
   எடுத்தளித்த மீன்வகைகள் ஏற்றான் ராமன்;
கன்னத்தில் குழிகண்ட சபரி தந்த
   காயெச்சில் நாதனுக்கே இனித்த தன்றோ!
எண்ணித்தான் பாருங்கள்; இறைவ னுக்கே
   இனிப்பதெல்லாம் தூயஅன்பு ஒன்று தானே!

அன்புவலை வீச்சுக்குள் பரம்பொ ருள்தான்
   அகப்பட்டு மகிழுமெனில் மண்மீ துள்ள
என்பொடுதோல் போர்த்தவர்கள் எந்த மட்டு?
   யாரவர்தாம் அன்புக்குள் அகப்ப டாதார்?
எண்ணத்தில் தூயஅன்பு மட்டும் போதும்;
   எண்ணியவை தானாக முடியும் கண்டீர்!
எண்ணத்தில் பொங்கட்டும் அன்பே! அந்த
   இயக்கத்தில் வசப்படட்டும் பிரபஞ் சங்கள்.








           

Sunday, March 17, 2013

கீதை--சாங்கியயோகம்

             கீதை ; சாங்கிய யோகம்

அருச்சுனன் தேரில் அமர்ந்து விட்டான்;
கருத்திலே குழப்பம்; வில்லை எறிந்தான்;

கண்ணன் கூறுகிறான்;

வீரனே! பார்த்தா! வில்லை எடுநீ!
சோர்வினை அகற்று; குழப்பம் தவிர்நீ!

மறப்போர் வீரன் போர்க்களந் தன்னில்
மறந்தும் உளச்சோர் வடைதல் தகாது;

அருச்சுனன் கூறுகிறான்;

யாரைக் கொல்லநான் வில்லை எடுக்க?
யாரின் மேலென் அம்பை விடுக்க?
துரோணர், பீஷ்மர் யாரவர்? என்றன்
சீருயர் வதனில் மகிழ்ந்தவ ரன்றோ!
எப்படி அவர்தமை நானே கொல்வது?
இப்படி ஒருகளம் அமையவும் வேண்டுமோ?

கண்ணன் கூறுகிறான்;

பார்த்தா! அவரைப் பார்த்தா கலக்கம்?
சீர்த்த தன்றுநின் சிந்தைக் குழப்பம்;
போர்க்கள வீரன் கடமை போர்செயல்;
போர்செயுங் கடமையுன் பிறப்பில் வந்தது;
பின்வாங் குதலோ தடுமா றுதலோ
உன்புக ழுக்கே அழியா இழுக்கு;
கொல்வதா இவரையெனக் குழம்புகின் றாயே
கொல்வது யாரைக் கொஞ்சம் சிந்தி!
எதிரே நிற்கும் உடலையா? அன்றி
எதிரில் நிற்போர் ஆன்மா தனையா?
எதைநீ கொல்வாய்? யோசித் துப்பார்;
அதைநீ உணர்ந்தால் குழப்பம் நீங்கும்;
ஆன்மா என்றும் அழிவிலா ஒன்று;
ஆன்மா அழித்தல் யார்க்கும் இயலா;
உடலை யாநீ அழிப்பாய்? அந்த
உடலின் இயல்பே பிறந்து சாவது;
குழந்தைமை செத்து இளமை பிறக்கும்;
இளமை செத்து முதுமை பிறக்கும்;
குழந்தைமை இளமை முதுமை என்றே
அழகிய உடல்கள் கழற்றி எறிந்தே
வேறோர் உடலை ஏற்றே ஆன்மா
சீராய் வாழும்; இதுவே உண்மை;
இருப்பவை என்றும் இருப்பவை யாகும்;
இருப்பில் லாதன இருப்பதே இல்லை;
எதையும் அழிக்க எதையும் படைக்க
எதனா லேனும் உன்னால் இயலா;
செய்கநீ! செய்கநீ! சிந்தையி லென்றும்
செயற்பயன் பற்றிச் சிறிதுமெண் ணாதே!
கடமையில் தானதி கார முண்டு;
கடமைப் பலனில் அதிகார மில்லை;
பின்னர் ஏன்நீ தயங்கு கின்றாய்?
நன்றாய் ஆன்ம ஞானம் பெறுவாய்!
முக்குணங் கடந்தே இருநிலை வென்று
எக்குணச் சார்பும் இன்றி இயங்கு;
தன்னுளே தானாய்த் தனக்குள் நிறைந்தே
என்றும் நிலைக்கும் அறிவைப் பெறுவாய்;
நற்செயல் தீச்செயல் இரண்டும் துறப்பாய்;
எச்செயல் தனிலும் சிறத்தலே யோகம்;
புலன்களை உணர்ச்சி தாக்கி விடாமல்
புலன்களை ஆமைபோல் உள்ளே இழுப்பாய்!
ஐம்புலன் மனத்தை அலையச் செய்யும்;
அம்மனம் அறிவைப் பாறையில் மோதும்;
ஆசைகள் உனக்குளே அடக்கமா கட்டும்!
ஆசைகள் புதைத்தே அமைதியைப் பற்று;
அலையா நிலையே பிரம்ம நிலையாம்;
அலையா ததைநீ அடைவாய்; சிறப்பாய்;
செயலற் றெதுவும் இருப்பதே இல்லை;
செயல்புரி யாமல் பிரபஞ்ச மில்லை;
தெளிந்த அறிவுடன் செயலற் றிருப்பதும்
தெளிந்தொரு செயலைச் செய்வது போல்தான்;
செய்கநீ! செய்கநீ! சிந்தையி லென்றும்
செயற்பயன் பற்றிச் சிறிதுமெண் ணாதே!

          -வில்லிவாக்கம்-07-11-2006

Wednesday, January 23, 2013

சொல்லின் செல்வன்

       சொல்லின் செல்வன்

சொல்லின் செல்வ னானவன்;
   சூட்சு மங்க ளுணர்ந்தவன்;
வில்லின் வீரன் இராமனை
   வியக்க வைத்த தூயவன்;
கல்லின் வலிய மேனியான்;
   கடலைத் தாண்டும் வலியினான்;
சொல்லிப் பாட அனுமனே
   தூய நன்மை அருளுவான்;

அஞ்ச னைக்குப் பிறந்தவன்;
   அஞ்சி லொன்றைத் தாண்டியே
அஞ்சி லொன்றை வைத்துமே
   அச்சம் வென்ற விறலவன்;
செஞ்சொற் கிள்ளை சீதையின்
   சிந்தை நோயைத் தீர்த்தவன்;
நெஞ்சில் அவனைப் போற்றியே
   நித்தம் நன்மை எய்துவோம்.

வேத கீதன் நாமமே
   வாயில் வந்த போதிலே
நாத போதம் யாவுமே
   நம்மை வந்து சேருமே!
சீதை நாதன் தூதனைச்
   சிந்தை யேற்றிப் போற்றினால்
யாதும் தீமை யின்றியே
   என்றும் நன்மை யோங்குமே!

நன்மை வந்து சேருமே!
   நாளும் செல்வங் கூடுமே!
தின்மை ஒழிந்து தீயுமே!
   சஞ்ச லங்கள் பொசுங்குமே!
இன்மை யென்ப தின்றியே
   எதுவும் நிறைந்து திகழுமே!
செம்மைத் தூதன் அனுமனின்
   தூய அடிகள் போற்றுவோம்.
        (வேறு)
சொல்லாலே இராமபிரான் உளங்க வர்ந்த
   தூயானைத், தேவர்தம் துயர்கள் தீர்க்க
வில்லெடுத்த நெடியோனின் தொண்ட னாகி
   விறலரக்கர் தமையழித்த வென்றி யானை,
அல்லெடுத்த வனத்திற்குள் தவமி ருந்தாள்
   அல்லலினைத் தீர்த்திட்ட அழகன் தன்னைச்
சொல்லொண்ணாத் துயரத்துள் இராமன் மூழ்கச்
   சிரஞ்சீவி கொணர்ந்தானை வணங்குவோமே!

வேதத்தின் கரைகண்ட வித்தை யானை
   வீரத்தின் எல்லைகண்ட விறல்வல் லானை
நாதத்தின் முதற்பொருளாய்த் திகழ்கின் றானை
   நல்லொழுக்கம் தலைநின்ற மாணி யானைக்
காதத்தைக் கடந்தொளிரும் கால்வல் லானைக்
   காற்றுக்குப் பிறந்தானைத் தேவ ருக்கும்
தீதகற்றத் தென்னிலங்கை தீவைத் தானைச்
   சித்துவல்ல மறையானை வணங்கு வோமே! 

Monday, January 14, 2013

கோபுரம்

                    இவைகள் பேசினால்--கோபுரம்

கோயிலில்லா ஊரினிலே யாரும் என்றும்
   குடியிருக்க வேண்டாமென் றறைந்தார் முன்னோர்;
கோயிலுக்கேன் அத்தகைய சிறப்பை ஈந்தார்?
   கோபுரத்துக் கேனந்த உயரம் தந்தார்?
வாய்தவறி வந்தசொல்லா? சொன்ன வர்தாம்
   வழிதவறிச் செல்பவரா? இல்லை; தங்கள்
வாய்திறந்தால் தெய்வத்தின் பேரு திர்க்கும்
   வாய்மையினை உடையவர்தாம் உணர்ந்து சொன்னார்;
          கோபுரம் பேசுகிறது;
உள்ளிருக்கும் முழுமுதலை வணங்கு தற்கே
   உள்நுழையும் போதினிலே கோபு ரம்போல்
உள்ளங்கள் உயரவேண்டும்; சின்னப் புத்தி
   ஒருசிறிதும் கூடாது; தூய்மை சேர்த்துக்
கள்ளமிலா நெஞ்சோடு பணிந்தால் தானே
   கடவுளருள் முழுமையாகப் பெறலாம்; அந்த
நல்லதொரு தத்துவத்தைக் காட்டு தற்கே
   நிமிர்ந்துநிற்பேன் கோபுரம்நான்; அறிந்து கொள்க!

உயர்ந்தவன்நான் அய்யமில்லை; என்மே லேதான்
   உயிரினங்கள் குடியிருக்கும்; பக்க மெல்லாம்
உயிரில்லாச் சிற்பங்கள் சிரிக்கும்; நாளும்
   உயிருள்ள வௌவாலும் புறாவும் வந்தே
அயர்வோடு குடியிருப்ப தன்றி எல்லா
   அசிங்கமுமே செய்துவைக்கும்; சினக்க மாட்டேன்;
மயக்கத்தில் கிடந்தாலும் குப்பை கூளம்
   மட்டின்றிச் சேர்த்தாலும் திட்ட மாட்டேன்.

வான்தொட்டு நிற்கின்ற தோற்றத் தாலே
   மண்தொட்டு வாழ்கின்ற மனிதர் நெஞ்சை
நான்தொட்டுப் பார்க்கின்றேன் அய்யய் யோஅந்
   நாற்றத்தை என்னசொல்வேன்? சாக்க டைக்குள்
தேன்சொட்டை வீழ்த்துதல்போல் 'இறைவா!' என்று
   தன்வாயால் உதிர்க்கின்றார்; இத்து ணையும்
ஏன்கெட்டுப் போனதென்றே எண்ணிப் பார்ப்பேன்;
   எனக்கொன்றும் புரியாமல் நெடிதாய் நிற்பேன்.

சிலசமயம் என்கீழே பலபேர் நின்று
   சதித்திட்டம் தீட்டிடுவார்; பாவம் செய்யக்
கலங்காமல் அவர்பேசும் பேச்சில் என்றன்
   கட்டுடலும் நடுங்கிவிடும்; யாரைத் தீர்க்க
அழகாகத் திட்டமிட்டுப் பேசி னாரோ
   அவர்வருவார்; எல்லோரும் அணைத்துக் கொள்வார்;
உளமொன்று செயலொன்றைக் கண்டே நான்தான்
   உதிர்த்திடுவேன் காரைகளை; வேறென் செய்ய?

நாட்டிலெங்கும் சத்தியத்தைக் காண வில்லை;
   நடப்பிலெங்கும் நேர்மையதே தெரிய வில்லை;
வீட்டிலெங்கும் அன்புக்கோ வேலை யில்லை;
   வெளியிலெங்கும் கருணைக்கோ இடமே யில்லை;
காட்டிலுள்ள விலங்கினங்கள் ஊர்க்குள் வந்து
   காலிரண்டில் நடந்துதிரி வனவே போல
நாட்டுநடப் பிருக்கிறதே! இந்த மண்ணில்
   நானுயர்ந்து நிற்பதற்கே நாணு கின்றேன்.

வாய்திறந்தால் பொய்மையன்றி வருவ தில்லை;
   மனந்திறந்த பேச்சுக்கு வழியே யில்லை;
சேய்பிறந்து வரும்போதே கையை நீட்டிச்
   சில்லரைகள் கேட்கிறது; நீதி எங்கோ
போய்மறைந்து கிடக்கிறது; நேர்மை லஞ்சப்
   புதருக்குள் மறைகிறது; இந்த மண்ணிற்
போயுயர்ந்து நான்மட்டும் நிற்ப தாலே
   புண்ணியந்தான் ஏதுமுண்டா? நாணு கின்றேன்.
             ------ காரைக்குடி 10-11-91  




Wednesday, January 9, 2013

தீபம்

                          இவைகள் பேசினால்---தீபம்

திருக்கோயிற் கருவறைக்குள் தெய்வத்தோ டுறவாடி
இருக்கும்  தீபம்நான்; இதயத்தைக் காட்டுகிறேன்;

எனக்கும் வாயுண்டு; வயிறுண்டு; ஏற்றுங்கால்
கணக்காக எரிகின்ற சுடராகும் நாக்குண்டு;

என்வயிற்றில் எண்ணெயூற்றி இடுதிரியை வைத்துத்
தன்குறைகள் தீர்க்க என்முகத்தில் நெருப்புவைப்பார்

தீபம்நான் சிரிக்கின்றேன்; திரித்திரியாய் எரிகின்றேன்;
பாவம் என்னுணுணர்வைப் பாரில்யார் பார்க்கின்றார்?

இருட்டுக் குடியிருக்கும் இடத்தில் வேறெந்தப்
பொருட்டும் இறைவன் புலப்படவே மாட்டான்;

திருக்கோயிற் கருவறையின் தெய்வத்தை வணங்குங்கால்
இருக்கின்ற இருட்டைப் போக்கவே நானெரிவேன்;

நானளித்த ஒளியால் நல்லறையின் இருட்டுப்
போனதென்ன வோஉண்மை; பக்தர் நிலையென்ன?

இதயமே இன்றித்தான் பலபேர் வருகின்றார்;
இதயமெலாம் இருட்டாகப் மீதிப்பேர் வருகின்றார்;

அய்யோ எனஅலறி என்நாவை ஆட்டுகின்றேன்;
பய்யவே காற்றில்நான் ஆடுவதாய் நினைக்கின்றார்;

கோயிலுக் குள்ளேனும் குப்பைகளை அகற்றிவிட்டுத்
தூய்மை யுளத்தோடு தொழுதல் கூடாதா?

உள்ளத்துக் குப்பைகளை ஒன்றாகக் கொண்டுவந்து
கள்ளத் துடன்தொழுதால் கடவுள் மகிழ்வாரா?

தீபம்நான் சிரிக்கின்றேன்; திரித்திரியாய் எரிகின்றேன்;
பாவம் என்னுணர்வைப் பாரில்யார் பார்க்கின்றார்?

எனக்குள்ளும் சாதிவகுப் பிருக்கிறது; அதனாலே
பிணக்குகள் வருவதில்லை; போராட்டம் நடப்பதில்லை;

குத்துவிளக் காய்நிற்பேன்; கோலஎழிற் சரவிளக்காய்ச்
சத்தமின்றித் தொங்கிடுவேன்; சின்னத் தீபமாவேன்;

பஞ்சமுக விளக்காவேன்; பரமனையே நோக்கிநின்று
அஞ்சுபுலன் தனையடக்கி யாள்கவெனக் காட்டிநிற்பேன்;

முகம்பலவே கொண்டும்நான் ஒருமுகமே காட்டுகின்றேன்;
முகமொன்றைக் கொண்டவரோ பலமுகங்கள் காட்டுகின்றார்;
             (வேறு)
இறைவனொடு மிகஅருகில் நாளும் உள்ள
   என்னெஞ்சம் அவனிடமோர் வரமே கேட்கும்;
குறைநெஞ்சம்; கொள்ளிமனம்; கெடுதல் செய்யக்
   குதிக்கின்ற பாவியுள்ளம்; இவற்றை யிங்கே
இறைவன்முன் பலரறியச் சுட்டிக் காட்ட
   எனக்காற்றல் தரச்சொல்லி வேண்டு வேன்நான்;
தரங்கெட்ட பாவிகளின் கையால் என்றன்
   திரியெரிதல் என்னாலே தாங்க வில்லை;

கோயிலுக்குள் மந்திரத்தைச் சொல்லு கின்ற
   குருக்களுளங் கூடஅங்கே இணைவ தில்லை;
வாயசைந்து மந்திரங்கள் சிந்தும்; அந்த
   மனிதரவர் சிந்தனையோ வெளியே மேயும்;
வாயிங்கே எனஅழைத்தே நாவ சைப்பேன்;
   வழிபாட்டில் என்னசைவை யார்தான் பார்ப்பார்?
தீயணைந்து போகாமல் எண்ணெ யோடு
   திரிசேர்ப்பார்; என்னுள்ளங் காண மாட்டார்;

என்வயிற்றில் எண்ணெயினைத் தாங்கிக் கொள்வேன்;
   இடுதிரியை நாவாக நீட்டி வைத்தே
என்நாவின் நுனியினிலே தீயை வைக்க
   எரிகின்றேன்; என்வயிறோ எரிவ தில்லை;
என்கண்முன் சிலபேர்கள் வந்து நிற்பார்;
   இனிமையொடு திரியாகும் நாவு கொஞ்சும்;
எண்ணெயின்றி அவர்வயிறோ எரியும்; நாட்டில்
   இந்தவொரு கண்றாவிக் கென்ன செய்வேன்?
              -திருக்கோயிலூர்---01-05-82

ஆலயமணி

                   இவைகள் பேசினால்---ஆலயமணி

ஆலயமணி பேசுகிறேன்;
;
நாக்குடையோ னாக நானிருந்த போதிலும்
வாக்கெதுவும் இதுகாறும் வாய்திறந் துதிர்த்ததில்லை;

நாக்கில் வருபவைகள் நல்லன தருபவையாய்ப்
பார்க்காத காரணத்தால் பேச்சொழிந் திருந்தேன்நான்

பேசத் தெரிந்தவர்கள் பேச்செல்லாம் தீமையினை
வீசக் கண்டதல்லால் வேறு விளைச்சலில்லை;

நாவடக்கம் எங்குமில்லை; மாறாகப் பலபேரை
நாஅடக்கம் செய்கிறது; நடைமுறை உண்மையிது;

கேட்டால் செவிகைக்கும் கெட்டழிந்த சொற்கள்தாம்
நாட்டு மேடைகளில் நாட்டிய மிடுகிறது;

நாக்கிருந்தும் பேசாமை நல்லதென நானிருந்தேன்;
வாக்களிக்கச் சொல்லியெனை வம்பி லிழுத்துவிட்டீர்

பேச்சு வந்தவுடன் பெரியோ ரிடம்கேள்வி
வீச்செறி தல்தானே வாடிக்கைச் செயலாகும்;

என்னை உணர்ந்தவன்நான்; மண்ணை உணரவில்லை;
விண்ணை உணர்வமெனில் வெகுதொலைவு; எட்டவில்லை;

ஆறுகாலப் பூசை அன்றாடம் நடக்கிறது;
மாறுதலே இல்லாமல் மணியோசை கேட்கிறது;

என்நாக்கால் எனையேநான் அடித்துக் கொள்கின்றேன்;
மண்ணுளோர் போல மற்றவரை அடிப்பதில்லை;

ஆண்டாண்டு காலமாய் ஆலய மணியோசை
பூண்டுக்கும் புழுவுக்கும் மனிதர்க்கும் கேட்கிறது;

ஆண்டவன் இருப்பதையும் அவன்நம்மைக் காப்பதையும்
ஆண்டவன் பூசை பெறுவதையும் அறிவிப்பேன்;

எங்கே இருந்தாலும் எப்பணி செய்தாலும்
அங்கே இருந்தபடி வழிபடநான் ஒலிசெய்வேன்;

கேட்டவுடன் கைகூப்பி வணங்குவோ ரிருக்கின்றார்;
கேட்டாலும் கேட்காத மானிடரும் இருக்கின்றார்;

ஆண்டவனிடம் கேட்கின்றேன்!
எல்லாமாய் இருப்பவனே! எங்கும் திகழ்பவனே!
எல்லார்க்கும் மூச்சாய் இழையோடித் திரிபவனே!

என்னோசை கேட்டவுடன் உன்வாசல் தனைநாடி
மண்மீதில் பக்தியுள்ள மாந்தர் வருகின்றார்;

வருகின்ற மக்களைநான் படிக்கின்றேன்; அவர்க்குநலம்
தருகின்ற நீயவரின் தராதரம் பார்த்தாயா?

வேற்றுமைகள் கண்டுநெஞ்சம் வேகிறது; துன்பத்திற்(கு)
ஆற்றாமல் நாவசைப்பேன்; ஆலய மணியொலிக்கும்;

அய்யா எனக்கதறும் அவரை உதைத்துவிட்டுப்
பய்யவே வந்துசெய்வார் பாலாபி ஷேகங்கள்;

செல்வத்தாற் குளிப்பாட்டிச் செல்வாக்கால் விசிறிவிட்டுன்
நல்லருளை நாடிப் பலபேர் வருகின்றார்;

பட்டாடை மேனிப் பளபளப்பில் உன்பார்வை
கெட்டா போய்விடும்? கண்திறந்து பார்த்தாயா?

நடக்கும் நாடகங்கள் என்னெஞ்சைக் குத்திடவே
இடிப்பேன்நான் இருபக்கம்; அதுதான் மணியோசை;

கோயில் நாடிவரும் அடியவர்காள்! இறையருளின்
வாயில் எதுவென்று மனத்தளவில் அறிவீரா?

மணியோசை கேட்டதும்கை கூப்புகிறீர்; எளியவர்கள்
மனவோசை அறியாமல் மாதேவன் அருள்வருமா?

வஞ்சத்தை விதைத்துவிட்டு அறுவடை காணுங்கால்
கெஞ்சி  யழுதாலும் கடைத்தேற வழிவருமா?

நாள்தோறும் கெட்ட வழிநடந்து மேல்போகும்
நாள்வருங் காலத்தில் நைந்தழுதால் நலம்வருமா?

உலகத்தைக் கண்டுங்கள் உளக்கோணல் தாங்காமல்
பலவகையில் கதறுமென் மனவோசை மணியோசை.
;



Friday, January 4, 2013

திருநீறு

                         இவைகள் பேசினால்----திருநீறு

திருநீறு பேசுகின்றேன்; தெளிவாகச் சொன்னால்வெண்
சிறுபொடியன் பேசுகின்றேன்; சிந்தை திறக்கின்றேன்;

என்னைப் பூசுகின்றார்; இறைவனிடம் பேசுகின்றார்;
கண்ணைக் குவிக்கின்றார்; காரியமெல் லாம்சரிதான்;

நெற்றியை வெளுப்பாக்கத் திருநீறு பூசியவர்
சற்றேனும் உள்ளத்தை வெளுப்பாக்க வேண்டாமா?

நெற்றியி லுள்ளநான் நெஞ்சினுக் குள்பார்த்தால்
பற்றி எரிகிறது; பாவந்தான் தெரிகிறது;

சாண மெனப்பிறந்து சுடுநெருப்பில் தவம்செய்து
மோன வழிகாட்டும் திருநீறாய் உயர்ந்தவன்நான்;

மந்திர மாவேன்; மாமருந்தும் நானாவேன்;
சுந்தர மாவேன்; தோற்றப் பொலிவாவேன்;

பொன்வைத்துக் காலடியில் பொருள்குவித்து நின்றாலும்
என்னைத்தான் அதற்கீடாய்ப் பிரசாத மெனவீவார்;

தொட்டெடுத்து என்னைத் துளித்துளியாய் வீசுங்கால்
நட்டுவனா ராகஅந்தக் குருக்களும் மாறுகின்றார்;

என்னை யிவர்போடக் காசை யவர்போடப்
பண்டமாற்று நடக்கிறது; பக்திமாற்றுக் காணவில்லை;

மறுபடியும் வேக மனம்விரைந்து துடிக்கிறது;
பிறந்தஇடப் பெருமை பளிச்செனத் தெரிகிறது;

நீர்கழித்த பொருளை நல்லுணவாய்க் கொண்டுதினம்
நீர்கொழுக்கப் பாலீயும் நற்பசுவே பிறந்தஇடம்;

பசுக்கழித்த பொருள்நான்; பக்குவமாய் வெந்தபின்னே
விசுக்கென்று நீரணியும் வெண்ணீறா யாகிவிட்டேன்;

என்னை அணியும்நீர் என்தாயின் பெரும்பண்பு
தன்னை உணர்ந்தால் தாரணி உயராதா?

உமக்கோ விருப்பமில்லை; இருந்தாலும் நேரமில்லை;
நமக்கென்ன வென்றே நானும் கிடக்கின்றேன்;

இல்லாத இடமில்லை; இயங்காத துறையில்லை;
நல்லார்கள் பொல்லார்கள் வேறுபா டெனக்கில்லை;

புருவ நெரிப்பினிலே புரிந்துவிடும் மனமென்றே
புருவத்தின் மேற்பட்டை அடிப்பார் சிலபேர்கள்;

நல்லவர்கள் விதிவிலக்கு; நானவரைச் சொல்லவில்லை;
பொல்லாதார் வேடம் புனைவதையே சொல்லுகிறேன்;

வேடங்கள் போடுங்கள்; வித்தைகள் காட்டுங்கள்;
மூடி மறைத்தொழுக நான்தா னாகிடைத்தேன்?

என்னை எடுத்தணிந்து ஏதேதோ செய்துநெஞ்சைப்
புண்ணாக்கிப் போடாதீர்! பாவமெனை விட்டிடுங்கள்!

மருத்துவர்க்கும் எட்டாமல் மாயவித்தை காட்டுகின்ற
பெருநோய்கள் என்பூச்சில் பறந்தோடி மறைந்ததுண்டு;

வேலுக்கு முன்னே வெம்பிணிகள் நின்றிடுமா?
வேலின் நெற்றியினில் விளங்குபவன் நான்தானே!

பரமன் பார்வையிலே பாவங்கள் தொலையாதா!
பரமன் நுதலேறிப் பொலிபவன் நான்தானே!

சூலைநோய் ஒழித்துத் திருநாவுக் கரசரையிப்
பாலழைத்துத் தந்து பணிசெய்தோன் நான்தானே

என்னைக் குழைத்தே எழில்மேனி பூசிடும்நீர்
நன்றாய் இதயத்தை வெளுப்பாக்கிப் பழகுங்கள்

பூசுவது வெண்ணீறு; பேசுவது பாவமெனப்
பேசுகின்ற பேச்சைப் பாரினிலே ஓட்டுங்கள்!

வெண்ணீறு நெற்றியில் பொலியட்டும்! நல்ல
பண்பாடு நெஞ்சத்திற் பழுத்து முதிரட்டும்!

திருநீற்றைக் குழைக்குங்கால் சிந்தை குழையட்டும்!
இருப்போரின் நெஞ்சம் இல்லாதார்க் கிரங்கட்டும்!

நல்லனவே எண்ணட்டும்! நாளும் முடிந்தவரை
நல்லனவே செய்ய நெஞ்சங்கள் முந்தட்டும்!
       -----           ----
           --அலவாக்கோட்டை--10--09--81