Thursday, March 28, 2013

அன்பு

             

வீட்டுக்குள் கணந்தோறும் மோதல்; பெண்கள்
   விளையாட்டாய் நாள்தோறும் சாதல்; நெஞ்சக்
கூட்டுக்குள் அன்பில்லாக் கார ணத்தால்
   கொட்டிவிட்ட நெல்லியெனச் சிதறி, ஏதோ
காட்டுக்குள் வாழ்கின்ற விலங்கி னம்போல்
   கடுகடுப்பை முணுமுணுப்பை ஒருமு றைப்பை
வீட்டுக்குள் காட்டுகின்றார்; அங்கே அன்பு
   விளைந்திட்டால் அதுமகிழ்ச்சிக் கூட மாகும்.

தாயொருத்தி பிள்ளையிடம் காட்டு கின்ற
   தனியன்புக் கீடில்லை; தூய அந்தத்
தாயன்பே மருமகளின் மேலும் பாய்ந்தால்
   தனிமகிழ்ச்சி கிட்டாதா? அவளும் இவளைத்
தாயெனவே ஏற்றுள்ளம் பிணைத்துக் கொண்டு
   சரியன்பைப் பரிமாறிக் கொண்டால் அந்தத்
தூயமனை வரலாறு படைத்தி டாதா?
   தனிவளங்கள் தானாகச் சேர்ந்தி டாதா?

தூயஅன்பு வீட்டுக்குள் நிலவு மானால்
   தூசுகளே சேராது; கோணற் புத்தி,
மாயவலை, உள்ளத்தை மறைத்த பேச்சு,
   மயக்கங்கள், தயக்கங்கள் இருக்க மாட்டா;
தூயஅன்பின் சுவைமட்டும் உணர்ந்து விட்டால்
   தொல்லுலகில் வேறுசுவை தேட மாட்டோம்;
நேயமுடன் அன்புவலை விரிப்போம்; அங்கே
   நிகழ்கால உயிரினங்கள் கவர்ந்து வாழ்வோம்.

சமுதாயச் சீர்கேட்டைப் பார்க்கின் றோம்நாம்;
   சரிந்துவிட்ட பண்பாட்டின் கார ணத்தால்
சமுதாயம் வன்முறையால் கிழிபட் டிங்கே
   சாகின்ற கொடுமையினைக் காண்கின் றோம்நாம்;
சமுதாயக் காற்றோடு தூய அன்பைத்
   தவழவிட்டுச் சுவாசித்தோ மானால் இங்கே
திமுதிமெனத் தலைவீழும் செய்தி யெங்கும்
   தெரியாமல் உணர்வொன்றாய் வாழ லாமே!

கண்ணப்பன் தின்றஎச்சில் அமுத மென்றே
   காளத்தி நாதருமே கொண்டா ரன்றோ!
எண்ணத்தில் அன்புமிக்க கங்கை வேடன்
   எடுத்தளித்த மீன்வகைகள் ஏற்றான் ராமன்;
கன்னத்தில் குழிகண்ட சபரி தந்த
   காயெச்சில் நாதனுக்கே இனித்த தன்றோ!
எண்ணித்தான் பாருங்கள்; இறைவ னுக்கே
   இனிப்பதெல்லாம் தூயஅன்பு ஒன்று தானே!

அன்புவலை வீச்சுக்குள் பரம்பொ ருள்தான்
   அகப்பட்டு மகிழுமெனில் மண்மீ துள்ள
என்பொடுதோல் போர்த்தவர்கள் எந்த மட்டு?
   யாரவர்தாம் அன்புக்குள் அகப்ப டாதார்?
எண்ணத்தில் தூயஅன்பு மட்டும் போதும்;
   எண்ணியவை தானாக முடியும் கண்டீர்!
எண்ணத்தில் பொங்கட்டும் அன்பே! அந்த
   இயக்கத்தில் வசப்படட்டும் பிரபஞ் சங்கள்.








           

Sunday, March 17, 2013

கீதை--சாங்கியயோகம்

             கீதை ; சாங்கிய யோகம்

அருச்சுனன் தேரில் அமர்ந்து விட்டான்;
கருத்திலே குழப்பம்; வில்லை எறிந்தான்;

கண்ணன் கூறுகிறான்;

வீரனே! பார்த்தா! வில்லை எடுநீ!
சோர்வினை அகற்று; குழப்பம் தவிர்நீ!

மறப்போர் வீரன் போர்க்களந் தன்னில்
மறந்தும் உளச்சோர் வடைதல் தகாது;

அருச்சுனன் கூறுகிறான்;

யாரைக் கொல்லநான் வில்லை எடுக்க?
யாரின் மேலென் அம்பை விடுக்க?
துரோணர், பீஷ்மர் யாரவர்? என்றன்
சீருயர் வதனில் மகிழ்ந்தவ ரன்றோ!
எப்படி அவர்தமை நானே கொல்வது?
இப்படி ஒருகளம் அமையவும் வேண்டுமோ?

கண்ணன் கூறுகிறான்;

பார்த்தா! அவரைப் பார்த்தா கலக்கம்?
சீர்த்த தன்றுநின் சிந்தைக் குழப்பம்;
போர்க்கள வீரன் கடமை போர்செயல்;
போர்செயுங் கடமையுன் பிறப்பில் வந்தது;
பின்வாங் குதலோ தடுமா றுதலோ
உன்புக ழுக்கே அழியா இழுக்கு;
கொல்வதா இவரையெனக் குழம்புகின் றாயே
கொல்வது யாரைக் கொஞ்சம் சிந்தி!
எதிரே நிற்கும் உடலையா? அன்றி
எதிரில் நிற்போர் ஆன்மா தனையா?
எதைநீ கொல்வாய்? யோசித் துப்பார்;
அதைநீ உணர்ந்தால் குழப்பம் நீங்கும்;
ஆன்மா என்றும் அழிவிலா ஒன்று;
ஆன்மா அழித்தல் யார்க்கும் இயலா;
உடலை யாநீ அழிப்பாய்? அந்த
உடலின் இயல்பே பிறந்து சாவது;
குழந்தைமை செத்து இளமை பிறக்கும்;
இளமை செத்து முதுமை பிறக்கும்;
குழந்தைமை இளமை முதுமை என்றே
அழகிய உடல்கள் கழற்றி எறிந்தே
வேறோர் உடலை ஏற்றே ஆன்மா
சீராய் வாழும்; இதுவே உண்மை;
இருப்பவை என்றும் இருப்பவை யாகும்;
இருப்பில் லாதன இருப்பதே இல்லை;
எதையும் அழிக்க எதையும் படைக்க
எதனா லேனும் உன்னால் இயலா;
செய்கநீ! செய்கநீ! சிந்தையி லென்றும்
செயற்பயன் பற்றிச் சிறிதுமெண் ணாதே!
கடமையில் தானதி கார முண்டு;
கடமைப் பலனில் அதிகார மில்லை;
பின்னர் ஏன்நீ தயங்கு கின்றாய்?
நன்றாய் ஆன்ம ஞானம் பெறுவாய்!
முக்குணங் கடந்தே இருநிலை வென்று
எக்குணச் சார்பும் இன்றி இயங்கு;
தன்னுளே தானாய்த் தனக்குள் நிறைந்தே
என்றும் நிலைக்கும் அறிவைப் பெறுவாய்;
நற்செயல் தீச்செயல் இரண்டும் துறப்பாய்;
எச்செயல் தனிலும் சிறத்தலே யோகம்;
புலன்களை உணர்ச்சி தாக்கி விடாமல்
புலன்களை ஆமைபோல் உள்ளே இழுப்பாய்!
ஐம்புலன் மனத்தை அலையச் செய்யும்;
அம்மனம் அறிவைப் பாறையில் மோதும்;
ஆசைகள் உனக்குளே அடக்கமா கட்டும்!
ஆசைகள் புதைத்தே அமைதியைப் பற்று;
அலையா நிலையே பிரம்ம நிலையாம்;
அலையா ததைநீ அடைவாய்; சிறப்பாய்;
செயலற் றெதுவும் இருப்பதே இல்லை;
செயல்புரி யாமல் பிரபஞ்ச மில்லை;
தெளிந்த அறிவுடன் செயலற் றிருப்பதும்
தெளிந்தொரு செயலைச் செய்வது போல்தான்;
செய்கநீ! செய்கநீ! சிந்தையி லென்றும்
செயற்பயன் பற்றிச் சிறிதுமெண் ணாதே!

          -வில்லிவாக்கம்-07-11-2006