Saturday, April 13, 2013

ஏதுக்கடி ?

           ஏதுக்கடி?

சுழிப்பில் கனிந்திதழ் நெளிப்பில் சுவைதரு
   சுந்தரத் திருமுக முனக்கிருக்க - மஞ்சட்
குளிப்பில் திளைத்திளம் புளிப்புச் சுவைதரு
   கோமள மாங்கனி ஏதுக்கடி?

துடித்து மொழிபயின் றெடுத்த சுவைதரு
   துவரித ழோரிணை யுனக்கிருக்கக்- கிள்ளை
கடித்துக் குதறிடு வனத்துக் கொடிதரு
   கோவையின் சிறுகனி ஏதுக்கடி?

வெடித்த நகையிடை நடித்து மயக்கிடு
   வெண்ணிறப் பல்வரி யுனக்கிருக்கக்- கொம்பில்
வெடித்துச் சிரித்தெயி றடுத்த வரிசையை
   விளக்கிடு மாதுளை ஏதுக்கடி?

விழிப்பி லுருண்டுவெண் மிதப்பில் தவழ்ந்திடு
   விந்தைக் கருமணி யுனக்கிருக்கக்- கிளையின்
ஒளிப்பில் முதிர்ந்திலை விரிப்பில் பளிச்சிடும்
   ஒண்கரு நாவலும் ஏதுக்கடி?
        -தமிழ்நாடு ஞாயிறுமலர்--11-12-1966