Friday, August 30, 2013

கோவில்

                          கோவில்

   பெற்றெடுத்த அப்பனையே பிள்ளை சாடும்;
      பிறந்திட்ட உடன்பிறப்பை அதுவே மோதும்;
   நற்றாயைச் சொல்லாலே கொல்லும்; உண்மை
      நண்பரினைக் கூட்டணிகள் சேர்த்துத் தீர்க்கும்;
   உற்றார்கள் சுற்றத்தார் என்ற செய்தி
      ஒன்றுக்கும் இடமின்றித் தீமை மிஞ்சிச்
   செற்றாடுங் காலத்தில் இறைவா! என்று
      சொல்லியழு வதற்கோர் இடம்வேண் டாமா?

   தருமங்கள் அதர்மத்தால் வேகும்; நாளும்
      சத்தியத்தைக் கொன்றாழப் புதைத்து விட்டே
   உருவாகித் தோள்தட்டும் குண்டர் கூட்டம்;
      ஒன்றுக்கும் பயனில்லாச் சருகுக் கூட்டம்
   பெரிதாக வலுவடைந்து நல்லோர் தம்மைப்
      பிணமாக்கி ஆட்டமிடும்; இவ்வா றிங்கே
   உருவான கொடுமையினைக் கண்டு நோவோர்
      ஒப்பாரி வைப்பதற்கோர் இடம்வேண் டாமா?

   மனிதர்கள் மனிதரேதாம்; அவர்க ளோடு
      மகிழ்வாகக் கொள்கின்ற உறவு நல்ல
   இனிப்பாகச் சிலநாள்கள் இருக்கும்; பின்னர்
      இணையில்லாக் கசப்பாகும்; இவ்வா றிங்கே
   மனக்கலப்பே இல்லாமற் கலக்குங் கூட்டம்
      மலிவாகிப் போனநாளில் ஏங்கி யேங்கி
   மனிதரினைக் காட்டாயா? எனப்பு லம்பி
      மன்றாட ஊரிலேஓர் இடம்வேண் டாமா?

   நாடிங்கே சுடுகாடாய் மாறும்; நாளும்
      நற்பண்பு கொலையாகிச் சாகும்; வாழும்
   வீடிங்கே கொலைக்கூட மாகும்; சொன்ன
      வீட்டறங்கள் அறுபட்டு வீழும்; அந்தக்
   காடிங்கே நல்லதெனச் சொல்லும் வண்ணம்
      காட்சியெலாம் கண்முன்னே தோன்றும்; இந்தக்
   கேடெல்லாம் மனம்விட்டுச் சொல்லி நெஞ்சைக்
      கொட்டியழு தோய்வதற்கோர் இடம்வேண் டாமா?

                               அதுதான் கோவில்.

   வீட்டினிலே தாங்காத துன்பம் வந்தால்
      விழுகின்ற இடமதுதான்; நாம்தாம் வாழும்
   நாட்டினிலே அதர்மங்கள் ஆட்டம் போட்டால்
      நாம்நாடும் இடமதுதான்; நமது நெஞ்சக்
   கூட்டினிலே பேய்வாழக் கண்டால் பேயைக்
      கலைப்பதற்குப் போகுமிடம் அதுதான்; இந்த
   நாட்டிற்கே புகலிடமாய் இருப்ப தால்தான்
      நம்முன்னோர் கோவிலினைப் பெரிதாய்க் கண்டார்.

                         காரைக்குடி--10-11-91