Monday, October 13, 2014

ச.வ.கவியரங்கம்

             சந்தவசந்தக் கவியரங்கம்

         "எங்கே போய்க்கொண்டிருக்கின்றேன்?
   
        தலைமை;- யோகியார்

   அடடா! இவரொரு யோகியா? கவிதை
      அள்ளிச் சுவைக்கும் போகியரா?--இங்கே
   அடடா! இவர்தம் தலைமையில் கவிதை
      அளித்திட உள்ளம் குதிக்கிறதே!

   நல்ல கவிதைகள் கண்டால் உடனே
      நாட்டுவார் புகழ்ச்சி மண்டபத்தை;--அதில்
   வெல்லுங் கவிஞரைக் கூட்டியே அவர்தம்
      வித்தகம் காட்டி மகிழ்ந்திடுவார்.

   அவரை நினைத்துக் கவிதை வடித்தால்
      ஆயிர மாயது பெருகிடுமே!--அணைக்கும்
   அவர்கை நினைத்தால் மகிழ்வினில் திளைத்தே
      அணுவணு வாயுளம் உருகிடுமே!

   ஏதோ புன்கவி ஒன்றை அவர்முன்
      என்கவி யெனவே படைக்கின்றேன்;--அதில்
   தீதோ நன்றோ சிந்தனை யாய்ச்சில
      செய்திகள் நெய்தே கொடுக்கின்றேன்.
              --------   -------

   எங்கே வந்தேன்? எப்படி வந்தேன்?
      எங்கே போய்க்கொண் டிருக்கின்றேன்?--முன்னர்
   எங்கே இருந்தேன்? எப்படி இருந்தேன்?
      யாரெனக் கதனை உணர்த்திடுவார்?

   நானோர் கவிஞன் என்றன் ஆசை
      எங்கெங் கோவெனை இழுக்கிறது;--அந்த
   வானும் மீனும் வட்ட நிலாவும்
      வாவென் றெனையே அழைக்கிறது.

   கற்பனை வானில் காற்றுக் குதிரையில்
      கடுகி விண்ணைத் தொடுகின்றேன்;--மண்ணில்
   நிற்பன நடப்பன என்னை இழுத்தே
      நடப்பினைக் காட்ட விழுகின்றேன்.

   சுற்றி யிருப்பவை நல்லவை யா?எனைச்
      சூழ்ந்து சிரிப்பவை தூயவையா?--என்னை
   எற்றி உதைக்கிற இடர்கள் பிறர்தாம்
      இட்டவை யா?நான் தொட்டவையா?

   நெஞ்சில் தூய்மை நிரம்பி வழிய
      நாளும் வாழத் துடிக்கின்றேன்;--இங்கே
   வஞ்சமும் சூதும் வந்து மோதிட
      வாழ்க்கையில் கணமும் வெடிக்கின்றேன்.

   நல்லவர் நலிய அல்லவர் வாழும்
      நடப்பினைக் கண்டே திகைக்கின்றேன்;--மண்ணில்
   வல்லவ ரெல்லாம் நல்லவ ரில்லா
      வகைதிறம் கண்டே மலைக்கின்றேன்.

   சிரிப்பவர் தம்மை மனதுளே இருத்திச்
      சிறந்த நண்பராய் மதிக்கின்றேன்;--அவர்
   விரித்தொரு வலையில் எனையே வீழ்த்தி
      மீண்டிடா வகையெனை மிதிக்கின்றார்.

   எங்கே வந்தேன்? எங்கே வாழ்கிறேன்?
      எங்கே போய்க்கொண் டிருக்கின்றேன்?--வாழ்வில்
   எங்கே யிதைநான் நினைக்கிறேன்? ஏதோ
      எந்திரம் போலத் திரிகின்றேன்.

   விடிகிற வானம் தெரிகிற தாவெனக்
      கீழ்வான் பார்த்தே நிற்கின்றேன்;--அது
   தொடுகிற தூரம் போலத் தெரியினும்
      தொடமுடி யாமல் தவிக்கின்றேன்.

   எங்கே வாய்மை எங்கே தூய்மை
      எங்கே செம்மை தெரிகிறதோ--நான்
   அங்கே செல்லத் துடிக்கிறேன்; ஆனால்
      அதுவோ கண்ணில் தெரியவில்லை.

   போக முடிவில் அதுவரு மா?யிலை
      யோக நிறைவில் அதுவருமா?---இல்லை
   போகமும் யோகமும் கூடிய நெறியில்
      போயின் அதுதான் எனைத்தொடுமா?

   எங்கே போய்க்கொண் டிருக்கிறே னென்பதே
      இன்னும் எனக்குப் புரியவில்லை;--மண்ணில்
   இங்கே வாழ்கிறேன்; அதுநல் வாழ்வா?
      என்பதும் எனக்குத் தெரியவில்லை.


   

Friday, October 3, 2014

மகனே!

               சிவகாசி--14-08-88
        கவிதைப் பட்டிமன்றம்
     ( பெற்றோர் பால் கொண்ட பிரியத்தைக்
       கடைசிவரை காப்பாற்றுபவர் மகனா? மகளா? )
           "மகனே"--அணித்தலைமை
       நடுவர்:- இளங்கம்பன்

   எனக்கிரண்டு மக்கள்; ஆணொன்று; பெண்ணொன்று;
   எனக்காசை அதன்மேலும்; அரசாங்கம் விடவில்லை.

   கண்ணிரண்டைக் காப்பதுபோல் கண்மணிகள் காத்தேன்நான்;
   பின்னவர்க்கு வாழ்க்கை பின்னமிலா தமைத்துவிட்டேன்.

   என்வீட்டில் விளக்கேற்ற மருமகள் வந்துவிட்டாள்;
   இன்னொரு வீட்டிலேற்ற என்மகள் போய்விட்டாள்.

   கண்ணிரண் டென்றேனே இப்பொழுது தானெனக்குக்
   கண்ணிரண்டின் வேறுபாடு கணக்காகப் புரிகிறது.

   கண்ணைப்போற் காத்தாலும் கருத்தெல்லாம் கொடுத்தாலும்
   என்றைக்கும் மகளென்பாள் வேறில்லம் செல்பவள்தான்.

   எந்தமக ளுமிங்கேயே இருப்பதாகச் சொல்வதில்லை;
   அந்தமகள் சொன்னாலும் அதைநாம் ஏற்பதில்லை.

   நாற்றங்கால் நாற்று நல்விளைச்சல் தருதற்குப்
   பாத்திவிட்டு வயல்நாடிப் பண்போடு செல்கிறது;

   ஏழிசையும் தன்னுள் இருத்திவைத்த வீணையின்று
   ஏழிசையை மீட்டும் எழிற்கையை அடைகிறது;

   கடலில் பிறந்தமுத்து கட்டழகுக் கணவன்
   உடலில் தவழ்வதற்கே ஓடிப்போய்ச் சேர்கிறது.

   இதுதான் சிறப்பென் றெல்லோரும் போற்றுவதால்
   அதுதான் தொடர்கிறது; ஆருமதை வெறுப்பதில்லை.

   அப்படித்தான் என்மகளும் அவள்வீடு சென்றுவிட்டாள்;
   எப்படியெல் லாம்வளர்த்தேன்? என்றெண்ணி நான்பார்ப்பேன்.

   அவளுலகம் தனியுலகம்; அவளாட்சி திகழுலகம்;
   அவள்சுற்றம் இப்போது தனிச்சுற்றம்; புதுச்சுற்றம்.

   ஒருநாள் மகள்வந்தாள்; ஓடிப்போய் வரவேற்றுத்
   திருநாள் வந்ததுபோல் கொண்டாடித் தீர்த்தேன்நான்.

   மறுநாளே புறப்பட்டாள்; வாட்டமுடன் "மகளேநீ
   இருப்பாய் சிலநாட்கள்; என்னுள்ளம் மகிழுமென்றேன்.

   அதற்கவள் என்னசொன்னாள் அறிவீரா? "அப்பாநான்
   இதற்குமேல் முடியாது; என்வீட்டில் பலவேலை".

   என்றாள்; நானவளை ஏக்க முடன்பார்த்தேன்.
   அன்றிருந்த அவள்தானா? இல்லையிது ரசவாதம்.

   என்னுடன் உணவுண்ணும் நேரத்தும் அவள்கணவன்
   உண்பானா? மாட்டானா? என்றே கலங்குகிறாள்.

   வாய்திறந்தால் கணவன் புகழே வருகிறது;
   வாய்மூடி னாலுமவள் மனமதையே நினைக்கிறது.

   இந்த வேறுபாட்டில் நான்கவலை கொள்வதில்லை.
   அந்தவேற் றுமைதானே பெண்மையின் தனிச்சிறப்பு;

   செம்புலப் பெயல்நீர் போலக் கலந்துவிட்ட
   அன்புவாழ்க்கை கண்டுள்ளம் ஆனந்தம் அடைகிறது.

   ஆனாலும் அந்த ஆனந்தப் பண்ணுக்குள்
   போனமகள் பற்றியவோர் சோகராகம் இழைகிறது.

   தங்கத் தேர்போலத் தவழ்ந்து வருமழகில்
   அங்கம் பூரித்தேன்; தேர்வீதி வேறாச்சே!

   வெள்ளிக் கொலுசணிந்து விளையாடுங் கோலத்தில்
   உள்ளம் பறிகொடுத்தேன்; ஆடுகளம் வேறாச்சே!

   கைவீசச் சொல்லியவள் கைவிரல் அசைவினிலே
   மெய்வீசி மகிழ்ந்தேன்நான்; வீசுமிடம் வேறாச்சே!

   போன இடத்தில் பிரியத்தைக் காட்டுவதே
   போனவட்கும் நன்மை; பெற்றவர்க்கும் நற்பெருமை.

   மகன்கதை அப்படியா? விழுந்தாலும் எழுந்தாலும்
   மகன்கை யதுதானே வாழ்க்கையின் ஊன்றுகோல்.

   தன்பெற்றோர் தன்வீடு என்றுணரும் பற்றுள்ளம்
   என்றைக்கும் மாறாது; இனியஉற வதுதானே!

   துள்ளிக் குதித்தமகன் துடிப்பொடுங்கிப் பெருஞ்சுமையை
   உள்ளத்தில் சுமக்கும் ஓவியத்தைப் பார்க்கின்றேன்.

   மருமகளைப் புண்படுத்தி மகிழுவ தாயெண்ணி
   ஒருமகனைத் திருமகனை உருக்குலையச் செய்கின்றாள்;

   அவளுக்குப் பரிவாக அவனோர் வார்த்தைசொன்னால்
   இவளுக்குப் பெருநெருப்பு இதயத்தில் மூள்கிறது.

   சொல்லை நெருப்பாக்கிச் சூடு போடுகின்றாள்;
   நல்லமகன் அதைவாங்கி நடக்கிறான் மெதுவாக;

   தாயைப் பார்ப்பானா? தாரத்தைப் பார்ப்பானா?
   சேயைப் பிடித்தசனி சென்மச் சனியாச்சு.

   மகன்பாடு பெரும்பாடு; மத்தளம் படும்பாடு.
   மகன்பாவம் அத்தனையும் மனசுக்குள் சுமக்கின்றான்.

   எல்லாச் சுமைகளையும் தாங்கும் சுமைதாங்கி;
   எல்லா இடிகளையும் வாங்கும் இடிதாங்கி.

   அத்தனையும் தாங்கி அளவற்ற பிரியத்தை
   மொத்தமெனப் பெற்றோர்பால் காட்டுபவன் மகனேதான்.

   தன்னை நம்பிவந்த தளிருக்கும் வாழ்வுவேண்டும்;
   அன்னை குரலுக்கும் ஆறுதல் தரவேண்டும்;

   ஒருகயிறு இருபுறமும் முறுக்கப் படுகிறது;
   முறுக்கு பெரிதானால் கயிறறுந்து போகாதா?

   என்றைக்கும் பெற்றோர்பால் கொண்ட பிரியத்தைக்
   குன்றாமல் காப்பவன் குடும்பத்து மகனேதான்.

   பிறந்தமண்ணில் காலூன்றிப் பெரும்பிரியம் காட்டுபவன்
   பிறந்த மகன்தான்;  போன மகளில்லை

   தாய்க்கும் மனைவிக்கும் தந்தைக்கும் தன்னுடைய
   சேய்க்கும் பிரியத்தைத் தினம்செலுத்து கிறானவன்தான்.

   மகன்கொண்ட பிரியமென்றும் மாறாது; மாறாது.
   மகனவன் மாறிவிட்டால் மகனில்லை; தந்தையில்லை.

   என்றுசொல்லி வாதத்தை இங்குவைத்து எல்லோர்க்கும்
   நன்றிசொல்லி முடிக்கின்றேன். நன்றி; வணக்கம்.