Friday, September 27, 2019


                   ஏன் சிரித்தாய் ?
என்னைப் பார்த்தே ஏன்நீ சிரித்தாய் ?
   ஏளனப் பார்வை ஏன்நீ பார்த்தாய் ?
வண்ணக் கனவை மட்டும் தின்றே
   வாழும் கவிஞன் பாவம் என்றா ?
எண்ணச் சுழலில் நீந்தித் திளைத்தே
   இனிய பாடல் இசைப்பவன் என்றா ?
மண்ணில் வாழும் தகுதி பெறவே
   மல்லுக் கட்டும் மனிதன் என்றா ?

காலை மண்ணில் புதைத்துக் கொண்டே
   கனவில் விண்ணைச் சுற்றுவான் என்றா ?
காலை உணவிற் கிலையே யெனினும்
   கவிதையே உணவாய்க் கொள்ளுவா னென்றா ?
சாலை ஓரத் தரித்திரர் தம்மைத்
   தோளுற அணைத்துக் குலவுவா னென்றா ?
வேலை யென்பதே கவிதை படைப்பது;
    வேறெது மறியா வெள்ளறி வுணர்ந்தா?

என்னதான் எண்ணிநீ சிரித்திட் டாலும்
   என்மனம் கற்பனைச் சிறகி லேதான்
மண்ணையும் விண்ணையும் வலம்வரும் என்பேன்;
   மாறிலை; என்னுளம் கவிதை என்றே
எண்ணும்; செய்யும்; வேறு மாறாம்
   எண்ணம் எனக்கிலை; இன்னல் எனக்கிலை;
கண்ணும் கருத்தும் கவிதையே காணும்
   கனவில் வாழ்கிறேன்; நீசிரித் துக்கொள்.