Thursday, October 10, 2024

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

                              இன்று புதிதாய்ப் பிறந்தோம்


சென்றதெலாம் சென்றதென எண்ணிக் கொள்வோம்;

   செய்வனவே சிறந்தவையாய்ச் செய்வோம்; நாம்தாம்

அன்றாடம் காணுகின்ற எல்லாம், மக்கள்

   அகமகிழச் செய்கின்ற நிகழ்வாய் மாறி

வென்றிடவே காண்போம் ! அந்த வெற்றி

   விளைநிலமாய் இவ்வுலகை மாற்றி, நன்மை 

என்றைக்கும் நிற்குமொரு மண்ப டைப்போம்;

   இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்றே வாழ்வோம்.


துளிர்க்கின்ற தப்புணர்வை முளைக்கும் போதே

   திருகியெறிந் திடுவோம்நாம்; மனதுக் குள்ளே

தளிர்க்கின்ற நல்லுணர்வுக் குரமே போட்டுத்

   தன்னிகரில் இன்பத்துப் பயிர்வி ளைப்போம்.

வெளிச்சத்தில் மட்டுமல்ல இருட்டுக் குள்ளும்

   விளங்குமொரு பேரின்பம் விளையக் காண்போம்.

தளிர்க்கொடியைக் கொழுகொம்பே அணைக்கக் காண்போம்;

   தாரணியில் இன்றைக்கே பிறந்தோ மென்போம்.


நமைத்தாக்கி நோகடித்த துன்ப மெல்லாம்

   நொடிப்பொழுதில் மறைந்திடவே காண்போம்; இங்கே

நமைச்சுற்றி வாழ்வோர்க ளெல்லாம் தூய்மை

   நலங்கொழிக்கும் சான்றோராய்த் திகழக் காண்போம்;

நமையாள்வோர் நெறிபிறழா ஆட்சி செய்ய

   நல்லோர்கள் துணைநிற்கக் காண்போம்; என்றும்

நமையின்பம் தழுவிடவே காண்போம்; இந்த

   நாட்டினிலே புதிதாகப் பிறந்தோம் என்போம். 

No comments:

Post a Comment