Thursday, October 10, 2024

இன்று இனிக்கவில்லை

                        இன்று இனிக்கவில்லை


அன்றைக் கினித்ததெல்லாம் இன்றைக்கும் இனிக்கிறதா ?

என்றைக்கும் இனிக்கும் இனியபொருள் இருக்கிறதா ?


காதலித்து மணந்தவன்நான்; கண்கள் மொழிபேசக்

காதலெனும் காவியத்துக் கதைத்தலைவ னாயிருந்தேன்;


காணாத பொழுதெல்லாம் வீணான பொழுதாக

நான்நொந்து கிடப்பேன்; நிமிடங்கள் யுகமாகும்;


கண்ணில் அவள்தெரிய எண்ணம் சிறகடிக்கும்;

விண்ணில் பறப்போம்; வெண்ணிலவில் சோறுண்போம்;


விண்மீனைக் கோர்த்தெடுத்து மின்னற் கொடிதொடுத்துக்

கண்மணி  யவளுக்குக் கண்ணாரச் சூட்டுவேன்நான்;


பஞ்சுக் கையிரண்டால் பரிவுட னெனையணைத்துக்

கொஞ்சி மகிழ்ந்திடுவாள்; கொஞ்சமும் எனைப்பிரியாள்.


அப்படி யெம்வாழ்க்கை அன்றைக் கினித்தது;

இப்பொழு தப்படியா ? எப்படிச் சொல்லுவேன்நான் ?


பிள்ளைகள் பெற்றாலே இப்பிள்ளை புறம்போக்கா ?

இல்லறச் சுமைவந்தால் இவனென்ன வெளிச்சுமையா ?


என்னவோ கோளாறு; அருகில் நெருங்கினாலே

கண்ணோ சுடுகிறது;  கையோ உதைக்கிறது.


அன்றைக் கினித்ததெல்லாம் இன்றைக் கினிக்கவில்லை;

என்றைக்கும்  இனிக்கும்  இனியபொருள் இருக்கிறதா ?

No comments:

Post a Comment