Thursday, October 10, 2024

இறைவனைக் கேட்டேன்

        இறைவனைக் கேட்டேன்.

இறைவனைக் கேட்டேன் பதிலில்லை-இங்கே

இருப்பவர் பதிலும் சரியில்லை


நல்லவர் வாழ்க்கை நலிகிறதே-நாளூம்

நடப்பினில் துன்பம் நிறைகிறதே

அல்லவர் வாழ்க்கை உயர்கிறதே-இந்த

அமைப்பெலாம் உன்றன் செயல்தானா?    (இறை)


வஞ்சகம் கைகொட்டிச் சிரிக்கிறதே-நல்ல

வாய்மையும் தூய்மையும் சரிகிறதே

சஞ்சலம் அறத்தையே சூழ்கிறதே-இந்தச்

சூழலைப் படைத்தவன் நீதானா?           (இறை)


நல்லன செய்யத் துடித்திருப்பான்-அவன்

நலிந்து கிடக்கிறான் அடித்தளத்தில்

அல்லன செய்பவன் மேல்தளத்தில்-இந்த

அடித்தளம் மேல்தளம் சரிதானா ?                   (இறை)


கள்ளியில் முல்லைகள் பூப்பதில்லை-எந்தக்

கானலும் தாகமே தீர்ப்பதில்லை

கள்ளமே அரியணை அமர்கிறதே-இந்தக்

காட்சி அமைப்பெலாம் சரிதானா ?            (இறை)


காக்கை மயிலென ஆவதில்லை-எந்தக்

காலமும் தோகையை விரிப்பதில்லை

சேர்க்கையில் காக்கை சிறக்கிறதே-இந்தச்

செப்பிடு வித்தைகள் சரிதானா ?                (இறை)


நீதியும் நேர்மையும் சாகிறதே-தூய

நெஞ்சங்கள் தீயினில் வேகிறதே

சாதிகள் சிறகினை விரிக்கிறதே-இந்தச்

சந்தையில் அறங்களே விலைபெறுமா?        (இறை)


கீதையை ஏனடா சொல்லிவைத்தாய்?-எந்தக்

கிறுக்கனும் அதன்வழி நடப்பதில்லை

போதையின் நெறிபுகும் மக்களுக்கே-உன்றன்

கீதையின் போதனை சுகம்தருமா?              (இறை)


யாரடா அறநெறி தொடர்ந்திடுவார்? இங்கே

யாரடா நாளுமே இடர்ப்படுவார்?

பாரடா கவுரவர் சிரிப்பதனை-அந்தப்

பாண்டவர் கைகளை நெரிப்பதனை


சங்கெடுத் தூதடா சமர்வரட்டும்-அந்தச்

சமரினில் முடிவொன்று தான்வரட்டும்

இங்கெடுத் தெறியடா சக்கரத்தைத்-தீமை

இலையென அழித்துவிட் டதுவரட்டும்…


No comments:

Post a Comment