Thursday, October 10, 2024

இவைகள் பேசினால்--கோபுரம்

     இவைகள் பேசினால்--கோபுரம்


கோயிலில்லா ஊரினிலே யாரும் என்றும்

   குடியிருக்க வேண்டாமென் றறைந்தார் முன்னோர்;

கோயிலுக்கேன் அத்தகைய சிறப்பை ஈந்தார்?

   கோபுரத்துக் கேனந்த உயரம் தந்தார்?

வாய்தவறி வந்தசொல்லா? சொன்ன வர்தாம்

   வழிதவறிச் செல்பவரா? இல்லை; தங்கள்

வாய்திறந்தால் தெய்வத்தின் பேரு திர்க்கும்

   வாய்மையினை உடையவர்தாம் உணர்ந்து சொன்னார்;

          கோபுரம் பேசுகிறது;

உள்ளிருக்கும் முழுமுதலை வணங்கு தற்கே

   உள்நுழையும் போதினிலே கோபு ரம்போல்

உள்ளங்கள் உயரவேண்டும்; சின்னப் புத்தி

   ஒருசிறிதும் கூடாது; தூய்மை சேர்த்துக்

கள்ளமிலா நெஞ்சோடு பணிந்தால் தானே

   கடவுளருள் முழுமையாகப் பெறலாம்; அந்த

நல்லதொரு தத்துவத்தைக் காட்டு தற்கே

   நிமிர்ந்துநிற்பேன் கோபுரம்நான்; அறிந்து கொள்க!


உயர்ந்தவன்நான் அய்யமில்லை; என்மே லேதான்

   உயிரினங்கள் குடியிருக்கும்; பக்க மெல்லாம்

உயிரில்லாச் சிற்பங்கள் சிரிக்கும்; நாளும்

   உயிருள்ள வௌவாலும் புறாவும் வந்தே

அயர்வோடு குடியிருப்ப தன்றி எல்லா

   அசிங்கமுமே செய்துவைக்கும்; சினக்க மாட்டேன்;

மயக்கத்தில் கிடந்தாலும் குப்பை கூளம்

   மட்டின்றிச் சேர்த்தாலும் திட்ட மாட்டேன்.


வான்தொட்டு நிற்கின்ற தோற்றத் தாலே

   மண்தொட்டு வாழ்கின்ற மனிதர் நெஞ்சை

நான்தொட்டுப் பார்க்கின்றேன் அய்யய் யோஅந்

   நாற்றத்தை என்னசொல்வேன்? சாக்க டைக்குள்

தேன்சொட்டை வீழ்த்துதல்போல் 'இறைவா!' என்று

   தன்வாயால் உதிர்க்கின்றார்; இத்து ணையும்

ஏன்கெட்டுப் போனதென்றே எண்ணிப் பார்ப்பேன்;

   எனக்கொன்றும் புரியாமல் நெடிதாய் நிற்பேன்.


சிலசமயம் என்கீழே பலபேர் நின்று

   சதித்திட்டம் தீட்டிடுவார்; பாவம் செய்யக்

கலங்காமல் அவர்பேசும் பேச்சில் என்றன்

   கட்டுடலும் நடுங்கிவிடும்; யாரைத் தீர்க்க

அழகாகத் திட்டமிட்டுப் பேசி னாரோ

   அவர்வருவார்; எல்லோரும் அணைத்துக் கொள்வார்;

உளமொன்று செயலொன்றைக் கண்டே நான்தான்

   உதிர்த்திடுவேன் காரைகளை; வேறென் செய்ய?


நாட்டிலெங்கும் சத்தியத்தைக் காண வில்லை;

   நடப்பிலெங்கும் நேர்மையதே தெரிய வில்லை;

வீட்டிலெங்கும் அன்புக்கோ வேலை யில்லை;

   வெளியிலெங்கும் கருணைக்கோ இடமே யில்லை;

காட்டிலுள்ள விலங்கினங்கள் ஊர்க்குள் வந்து

   காலிரண்டில் நடந்துதிரி வனவே போல

நாட்டுநடப் பிருக்கிறதே! இந்த மண்ணில்

   நானுயர்ந்து நிற்பதற்கே நாணு கின்றேன்.


வாய்திறந்தால் பொய்மையன்றி வருவ தில்லை;

   மனந்திறந்த பேச்சுக்கு வழியே யில்லை;

சேய்பிறந்து வரும்போதே கையை நீட்டிச்

   சில்லரைகள் கேட்கிறது; நீதி எங்கோ

போய்மறைந்து கிடக்கிறது; நேர்மை லஞ்சப்

   புதருக்குள் மறைகிறது; இந்த மண்ணிற்

போயுயர்ந்து நான்மட்டும் நிற்ப தாலே

   புண்ணியந்தான் ஏதுமுண்டா? நாணு கின்றேன்.

             ------ காரைக்குடி 10-11-91  

No comments:

Post a Comment