Thursday, October 10, 2024

இவைகள் பேசினால்---தீபம்

 


                          இவைகள் பேசினால்---தீபம்


திருக்கோயிற் கருவறைக்குள் தெய்வத்தோ டுறவாடி

இருக்கும்  தீபம்நான்; இதயத்தைக் காட்டுகிறேன்;


எனக்கும் வாயுண்டு; வயிறுண்டு; ஏற்றுங்கால்

கணக்காக எரிகின்ற சுடராகும் நாக்குண்டு;


என்வயிற்றில் எண்ணெயூற்றி இடுதிரியை வைத்துத்

தன்குறைகள் தீர்க்க என்முகத்தில் நெருப்புவைப்பார்


தீபம்நான் சிரிக்கின்றேன்; திரித்திரியாய் எரிகின்றேன்;

பாவம் என்னுணர்வைப் பாரில்யார் பார்க்கின்றார்?


இருட்டுக் குடியிருக்கும் இடத்தில் வேறெந்தப்

பொருட்டும் இறைவன் புலப்படவே மாட்டான்;


திருக்கோயிற் கருவறையின் தெய்வத்தை வணங்குங்கால்

இருக்கின்ற இருட்டைப் போக்கவே நானெரிவேன்;


நானளித்த ஒளியால் நல்லறையின் இருட்டுப்

போனதென்ன வோஉண்மை; பக்தர் நிலையென்ன?


இதயமே இன்றித்தான் பலபேர் வருகின்றார்;

இதயமெலாம் இருட்டாக மீதிப்பேர் வருகின்றார்;


அய்யோ எனஅலறி என்நாவை ஆட்டுகின்றேன்;

பய்யவே காற்றில்நான் ஆடுவதாய் நினைக்கின்றார்;


கோயிலுக் குள்ளேனும் குப்பைகளை அகற்றிவிட்டுத்

தூய்மை யுளத்தோடு தொழுதல் கூடாதா?


உள்ளத்துக் குப்பைகளை ஒன்றாகக் கொண்டுவந்து

கள்ளத் துடன்தொழுதால் கடவுள் மகிழ்வாரா?


தீபம்நான் சிரிக்கின்றேன்; திரித்திரியாய் எரிகின்றேன்;

பாவம் என்னுணர்வைப் பாரில்யார் பார்க்கின்றார்?


எனக்குள்ளும் சாதிவகுப் பிருக்கிறது; அதனாலே

பிணக்குகள் வருவதில்லை; போராட்டம் நடப்பதில்லை;


குத்துவிளக் காய்நிற்பேன்; கோலஎழிற் சரவிளக்காய்ச்

சத்தமின்றித் தொங்கிடுவேன்; சின்னத் தீபமாவேன்;


பஞ்சமுக விளக்காவேன்; பரமனையே நோக்கிநின்று

அஞ்சுபுலன் தனையடக்கி யாள்கவெனக் காட்டிநிற்பேன்;


முகம்பலவே கொண்டும்நான் ஒருமுகமே காட்டுகின்றேன்;

முகமொன்றைக் கொண்டவரோ பலமுகங்கள் காட்டுகின்றார்;

             (வேறு)

இறைவனொடு மிகஅருகில் நாளும் உள்ள

   என்னெஞ்சம் அவனிடமோர் வரமே கேட்கும்;

குறைநெஞ்சம்; கொள்ளிமனம்; கெடுதல் செய்யக்

   குதிக்கின்ற பாவியுள்ளம்; இவற்றை யிங்கே

இறைவன்முன் பலரறியச் சுட்டிக் காட்ட

   எனக்காற்றல் தரச்சொல்லி வேண்டு வேன்நான்;

தரங்கெட்ட பாவிகளின் கையால் என்றன்

   திரியெரிதல் என்னாலே தாங்க வில்லை;


கோயிலுக்குள் மந்திரத்தைச் சொல்லு கின்ற

   குருக்களுளங் கூடஅங்கே இணைவ தில்லை;

வாயசைந்து மந்திரங்கள் சிந்தும்; அந்த

   மனிதரவர் சிந்தனையோ வெளியே மேயும்;

வாயிங்கே எனஅழைத்தே நாவ சைப்பேன்;

   வழிபாட்டில் என்னசைவை யார்தான் பார்ப்பார்?

தீயணைந்து போகாமல் எண்ணெ யோடு

   திரிசேர்ப்பார்; என்னுள்ளங் காண மாட்டார்;


என்வயிற்றில் எண்ணெயினைத் தாங்கிக் கொள்வேன்;

   இடுதிரியை நாவாக நீட்டி வைத்தே

என்நாவின் நுனியினிலே தீயை வைக்க

   எரிகின்றேன்; என்வயிறோ எரிவ தில்லை;

என்கண்முன் சிலபேர்கள் வந்து நிற்பார்;

   இனிமையொடு திரியாகும் நாவு கொஞ்சும்;

எண்ணெயின்றி அவர்வயிறோ எரியும்; நாட்டில்

   இந்தவொரு கண்றாவிக் கென்ன செய்வேன்?

              -திருக்கோயிலூர்---01-05-82

No comments:

Post a Comment