Thursday, October 10, 2024

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

                              இன்று புதிதாய்ப் பிறந்தோம்


சென்றதெலாம் சென்றதென எண்ணிக் கொள்வோம்;

   செய்வனவே சிறந்தவையாய்ச் செய்வோம்; நாம்தாம்

அன்றாடம் காணுகின்ற எல்லாம், மக்கள்

   அகமகிழச் செய்கின்ற நிகழ்வாய் மாறி

வென்றிடவே காண்போம் ! அந்த வெற்றி

   விளைநிலமாய் இவ்வுலகை மாற்றி, நன்மை 

என்றைக்கும் நிற்குமொரு மண்ப டைப்போம்;

   இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்றே வாழ்வோம்.


துளிர்க்கின்ற தப்புணர்வை முளைக்கும் போதே

   திருகியெறிந் திடுவோம்நாம்; மனதுக் குள்ளே

தளிர்க்கின்ற நல்லுணர்வுக் குரமே போட்டுத்

   தன்னிகரில் இன்பத்துப் பயிர்வி ளைப்போம்.

வெளிச்சத்தில் மட்டுமல்ல இருட்டுக் குள்ளும்

   விளங்குமொரு பேரின்பம் விளையக் காண்போம்.

தளிர்க்கொடியைக் கொழுகொம்பே அணைக்கக் காண்போம்;

   தாரணியில் இன்றைக்கே பிறந்தோ மென்போம்.


நமைத்தாக்கி நோகடித்த துன்ப மெல்லாம்

   நொடிப்பொழுதில் மறைந்திடவே காண்போம்; இங்கே

நமைச்சுற்றி வாழ்வோர்க ளெல்லாம் தூய்மை

   நலங்கொழிக்கும் சான்றோராய்த் திகழக் காண்போம்;

நமையாள்வோர் நெறிபிறழா ஆட்சி செய்ய

   நல்லோர்கள் துணைநிற்கக் காண்போம்; என்றும்

நமையின்பம் தழுவிடவே காண்போம்; இந்த

   நாட்டினிலே புதிதாகப் பிறந்தோம் என்போம். 

இன்று இனிக்கவில்லை

                        இன்று இனிக்கவில்லை


அன்றைக் கினித்ததெல்லாம் இன்றைக்கும் இனிக்கிறதா ?

என்றைக்கும் இனிக்கும் இனியபொருள் இருக்கிறதா ?


காதலித்து மணந்தவன்நான்; கண்கள் மொழிபேசக்

காதலெனும் காவியத்துக் கதைத்தலைவ னாயிருந்தேன்;


காணாத பொழுதெல்லாம் வீணான பொழுதாக

நான்நொந்து கிடப்பேன்; நிமிடங்கள் யுகமாகும்;


கண்ணில் அவள்தெரிய எண்ணம் சிறகடிக்கும்;

விண்ணில் பறப்போம்; வெண்ணிலவில் சோறுண்போம்;


விண்மீனைக் கோர்த்தெடுத்து மின்னற் கொடிதொடுத்துக்

கண்மணி  யவளுக்குக் கண்ணாரச் சூட்டுவேன்நான்;


பஞ்சுக் கையிரண்டால் பரிவுட னெனையணைத்துக்

கொஞ்சி மகிழ்ந்திடுவாள்; கொஞ்சமும் எனைப்பிரியாள்.


அப்படி யெம்வாழ்க்கை அன்றைக் கினித்தது;

இப்பொழு தப்படியா ? எப்படிச் சொல்லுவேன்நான் ?


பிள்ளைகள் பெற்றாலே இப்பிள்ளை புறம்போக்கா ?

இல்லறச் சுமைவந்தால் இவனென்ன வெளிச்சுமையா ?


என்னவோ கோளாறு; அருகில் நெருங்கினாலே

கண்ணோ சுடுகிறது;  கையோ உதைக்கிறது.


அன்றைக் கினித்ததெல்லாம் இன்றைக் கினிக்கவில்லை;

என்றைக்கும்  இனிக்கும்  இனியபொருள் இருக்கிறதா ?

இறைவனைக் கேட்டேன்

        இறைவனைக் கேட்டேன்.

இறைவனைக் கேட்டேன் பதிலில்லை-இங்கே

இருப்பவர் பதிலும் சரியில்லை


நல்லவர் வாழ்க்கை நலிகிறதே-நாளூம்

நடப்பினில் துன்பம் நிறைகிறதே

அல்லவர் வாழ்க்கை உயர்கிறதே-இந்த

அமைப்பெலாம் உன்றன் செயல்தானா?    (இறை)


வஞ்சகம் கைகொட்டிச் சிரிக்கிறதே-நல்ல

வாய்மையும் தூய்மையும் சரிகிறதே

சஞ்சலம் அறத்தையே சூழ்கிறதே-இந்தச்

சூழலைப் படைத்தவன் நீதானா?           (இறை)


நல்லன செய்யத் துடித்திருப்பான்-அவன்

நலிந்து கிடக்கிறான் அடித்தளத்தில்

அல்லன செய்பவன் மேல்தளத்தில்-இந்த

அடித்தளம் மேல்தளம் சரிதானா ?                   (இறை)


கள்ளியில் முல்லைகள் பூப்பதில்லை-எந்தக்

கானலும் தாகமே தீர்ப்பதில்லை

கள்ளமே அரியணை அமர்கிறதே-இந்தக்

காட்சி அமைப்பெலாம் சரிதானா ?            (இறை)


காக்கை மயிலென ஆவதில்லை-எந்தக்

காலமும் தோகையை விரிப்பதில்லை

சேர்க்கையில் காக்கை சிறக்கிறதே-இந்தச்

செப்பிடு வித்தைகள் சரிதானா ?                (இறை)


நீதியும் நேர்மையும் சாகிறதே-தூய

நெஞ்சங்கள் தீயினில் வேகிறதே

சாதிகள் சிறகினை விரிக்கிறதே-இந்தச்

சந்தையில் அறங்களே விலைபெறுமா?        (இறை)


கீதையை ஏனடா சொல்லிவைத்தாய்?-எந்தக்

கிறுக்கனும் அதன்வழி நடப்பதில்லை

போதையின் நெறிபுகும் மக்களுக்கே-உன்றன்

கீதையின் போதனை சுகம்தருமா?              (இறை)


யாரடா அறநெறி தொடர்ந்திடுவார்? இங்கே

யாரடா நாளுமே இடர்ப்படுவார்?

பாரடா கவுரவர் சிரிப்பதனை-அந்தப்

பாண்டவர் கைகளை நெரிப்பதனை


சங்கெடுத் தூதடா சமர்வரட்டும்-அந்தச்

சமரினில் முடிவொன்று தான்வரட்டும்

இங்கெடுத் தெறியடா சக்கரத்தைத்-தீமை

இலையென அழித்துவிட் டதுவரட்டும்…


இறைவனுக்குகந்தது

                  இறைவனுக்குகந்தது

              --தமிழில் வழிபாடு--


மண்ணுலக ஆசை மயக்கத்தில் தடுமாறி

கண்கெட்ட பின்னேயென் கடைவாசல் வருகின்றீர்;


செய்யும் பாவத்தைத் தொகைதொகையாய்ச் செய்துவிட்டே

உய்யும் வழிநாடி  ஓடியென்முன்  வருகின்றீர்;


நடமாடும் மனிதர்தம் நரிச்செயலில் மிகநொந்து

படமாடும் பரமனென்முன் பணிவாக நிற்கின்றீர்;


விதைத்தவை அறுக்குங்கால் வேதனை தாங்காமல்

வதைநீக்க வேண்டி வாய்திறந்து புலம்புகின்றீர்;


வாருங்கள்; புலம்புங்கள்; வருந்தி உருகுங்கள்;

பாருங்கள் பசிதீரப்  பரமன் திருமுகத்தை;


நீங்கள் வருவதுவும் நின்றே உருகுவதும்

தேங்காய் பழங்கொண்டு வழிபாடு செய்வதுவும்


கண்டு மகிழ்கின்றேன்; கண்ணிலருள் கூட்டிக்

கொண்டணைத்து மகிழ்வித்துக் குளிரக் காத்துள்ளேன்;


உள்ளங் கரைந்தோடி ஒப்பரிய என்பாதங்

கொள்ள வேண்டுமெனில் கனிவுவர வேண்டாமா?


உங்கள் நினைப்பும் உளங்கனிந்த வேண்டுதலும்

தங்கு தடையின்றித் தாவிவர வேண்டாமா?


நினைப்பை வெளிக்காட்ட மொழிதடை யாயிருந்தால்

நினைப்புத்தா னெப்போதென் நேர்முகத்தை எட்டுவது?


தமிழ்நாட்டில் தமிழ்பேசும் நீங்கள் வழிபாட்டைத்

தமிழிலே செய்தால்தான் சிந்தை வெளியாகும்;


தூய திருமேனி; தொண்டிற் கனிந்தவுடல்;

வாய்மை கொப்புளிக்கும் வண்மைத் திருப்பாட்டு;


உழவாரப் படையேந்தி ஒப்பரிய தொண்டுகளை

அழகாகச் செய்தவராம் அப்பர் மொழியென்ன?


நெருப்பறையில் வைத்தே வேகவைத்த காலத்தும்

விருப்புடனே தமிழ்பாடி வெப்பத்தை வென்றாரே!


நீற்றறையைத் தென்றலென நிகழ்த்திக் காட்டியதும்

மாற்றரிய கல்புணையாய் மாகடலைக் கடந்ததுவும்


அண்டிவந்த யானை அப்பரை மிதிக்காமல்

மண்டியிட்டு வணங்கி மறுவழியிற் போனதுவும்


நஞ்சும் அமுதாகி நல்லுயிர் காத்ததுவும்

செஞ்சொல்லா லான தமிழ்ப்பாட்டின் திறந்தானே!


நொந்தஉள்ளம் கடைத்தேற நெஞ்சார வணங்கும்நீர்

செந்தமிழில் வழிபாடு செய்தே உய்யுங்கள்;


என்தோழன் ஆரூரன் எப்போதும் என்னை

அன்போடு அழைத்தே அதிகவேலை வாங்கினானே!


தெருவிலே தூதாகச் சென்றேனே! அவனுள்ளம்

வருந்தாமல் துணைசேர்த்து வாழ்வின்பங் கூட்டினேனே!


எல்லாம் எதற்காக?  இனிமையாய் அவனிடத்தில்

உள்ள தமிழ்கேட்கும் ஒப்பரிய  ஆர்வந்தான்;


அர்ச்சனை பாட்டே!  ஆதலால் என்னைச்

சொற்றமிழ் பாடுகெனச் சுந்தரர்க்குச் சொன்னேனே!


அப்பாட்டைக் கேட்டே அகமகிழ்ந்து திளைத்தேனே!

செப்புங்கள் அப்பாட்டை என்செவி துறக்கலாமா?


தேன்மழையா யென்செவியில் தினம்பொழிந்த பாடலுக்காய்

நான்ஏங்கி நிற்கின்றேன்; நல்லதமிழ் பாடுங்கள்;


இழிபாட்டைப் போக்கவுங்கள் இதயந் திறந்திடுங்கள்;

வழிபாட்டைச் செந்தமிழில் மனமகிழச் செய்திடுங்கள்;


ஆற்றலிலா வொன்றா? அழகில் லாவொன்றா?

போற்றாம லேனிந்தப் பைந்தமிழைப் புறக்கணிப்பீர்?


மறைக்கதவம் தமிழ்ப்பாட்டால் திறந்தேனே! என்செவியாம்

இருகதவம்  தமிழுக்காய் நான்திறக்க மாட்டேனா?


அழகான தமிழ்ப்பாட்டால் வழிபாடு செய்யுங்கள்;

குழைவோடு வணங்குங்கள்; கும்பிட்டே உய்யுங்கள்;


நானப்பன்; நீர்மக்கள்; நம்மிடையே என்றென்றும்

தேனான தமிழ்மொழியே வழிபாட்டில் திகழட்டும்.


எனக்கும் இனிக்கும்; உமக்கும் புரியும்;

மனக்கவலை சருகாக மந்திரத் தமிழெரிக்கும்.


திருமுறைகள் செய்யாத விந்தையினை இவ்வுலகில்

ஒருமுறையும் பிறமொழிதான் செய்யாது; உண்மையிது.


கூடுங்கள் என்முன்னே; கூடித் தமிழ்ப்பாடல்

பாடுங்கள் என்முன்னே; பணிந்து வேண்டுங்கள்;


கூப்புங்கள் கையிரண்டை; கொட்டுங்கள் தமிழ்ப்பாட்டை;

கேட்பதற்  கேங்கும்நான் கேட்டு மகிழ்கின்றேன்.

                 திருப்புத்தூர்--31-05-82 

இளமையின் வழக்கு—கல்வியின் மீது

                   இளமையின் வழக்கு—கல்வியின் மீது

             திருக்கோயிலூர்—02—05—1987

கிழடுகளாய்த் திட்டமிட்டே இளைய வர்க்குக்

     குழிதோண்டி வைக்கின்றார்; வாழ்க்கை தன்னில்

இளமையுடன் இனிமையினைக் கடந்து விட்ட

     எரிச்சலினால் தீமைசெய்ய நினைக்கின் றார்கள்;

அழகென்று கருதியிவர் திட்ட மிட்டே

      அமைத்திருக்கும் கல்விநெறி எமக்கு மோசம்;

இளையவரைப் பழிவாங்க வென்றே மூத்தோர்

     எடுத்திட்ட கொள்ளியென்றே கருது கின்றேன்.


ஆடைபற்றிக் கவலையின்றி, உடம்பில் சேரும்

     அழுக்குபற்றிக் கவலையின்றிக், காடும் மேடும்                                   ஓடியுழைத் திருந்திட்ட ஒருவ னைப்போய்

     உயர்த்துவதாய்ப் படிக்கவைத்தீர்; நடந்த தென்ன?

ஆடைபூணக் கற்றிட்டான்; அழுக்கு நீக்கும்

     அரியகலை கற்றிட்டான்; ஆனால் அந்தோ

ஓடியுழைப் பதைமட்டும் மறந்து விட்டான்;

     ஓடுகிறான்; ஓடுகிறான்; வேலை தேடி.


படித்திட்டால் பட்டமுண்டு; வேலை இல்லை;

     பாரதத்துத் தெருக்களெலாம் வேலை தேடும்

படித்தவர்கள்; தொழிற்கல்வி நிலையுங் கூடப்

     பரிதாப மாகிறது; “ யார்க்கும் காய்ச்சல்

அடிக்கிறதா?” எனவீடு வீடாய்த் தேடி

     அன்றாடம் மருத்துவர்கள் வரப்போ கின்றார்.

“இடிந்தவீடு புதியவீடு பணிகள் உண்டா? “

     எனத்தேடிப் பொறியாளர் வரப்போ கின்றார்.


என்னகல்வி தருகின்றீர்? நாட்டி லிங்கே

     இருக்கின்ற சூழலுக்குள் வெற்றி காண 

என்னசொல்லித் தருகின்றீர்? எம்கண் முன்னே

     எழுத்தறியாப் பேதையெலாம் உயர்ந்து வாழ்வை

வண்ணமுற அனுபவிக்க அவனி டம்போய்

     வாய்பொத்திப் பரிந்துரைகள் கேட்க வைக்கும்

அந்நிலையைத் தருவதன்றிக் கல்வி யிங்கே

     ஆக்கிவைத்த ஆக்கங்கள் என்ன? சொல்வீர்!


உண்மையிலே இளைஞரினை உயர்த்த வேண்டி

     உருவான கல்வியெனில் உலக வாழ்வில்

என்னவகை வெற்றிபெற இயலு மந்த

     இனியகல்வி தனையன்றோ கொடுக்க வேண்டும்;

வண்ணமயில் சோலைக்குள் ஆடு தற்கும்,

     வாத்தினங்கள் நீருக்குள் நீந்து தற்கும்

என்னவகைக் கால்களுள? அதனைப் போல

     இளைஞர்க்கும் அமைப்புகளைத் தரவேண் டாமா?


உண்மைக்கு மதிப்பில்லா உலகில் நீங்கள்

     உண்மைசொல்லித் தரலாமா? கொஞ்சங் கூட

எண்ணத்தில் தூய்மையில்லா உலகில் நீங்கள்

     வாய்மைசொல்லித் தரலாமா? எதிரி லுள்ளோர்

கண்ணுக்குள் வஞ்சமொன்றே வாழும் போது

     கண்ணோட்டம் சொல்லாமா? இன்றை வாழ்வில்

என்னசொல்லித் தந்திட்டால் வெற்றி காண்பான்?

     இளைஞர்க்கே அதையன்றோ தருதல் வேண்டும்!


தில்லுமுல்லுக் கொருபாடம்; பகையை வீழ்த்தும்

     சூழ்ச்சிவகைக் கொருபாடம்; கள்ளச் சந்தை

சொல்லுதற்கே ஒருபாடம்; கணக்கை மாற்றிச்

     சுருட்டுதற்கே ஒருபாடம்; தேர்தல் நின்று

வெல்லுதற்கே ஒருபாடம்; வாக்கை வாங்கும்

     வித்தைகளுக் கொருபாடம்; என்று கல்வி

சொல்லிவைத்தால் இளைஞர்கள் பிழைப்பார்; இன்று

     சொல்லுகின்ற கல்விவகை எதற்கே ஆகும்?


பட்டங்கள் பறக்கிறது; கல்வி தந்த

     பண்பெல்லாம் திகைக்கிறது; நாட்டி லுள்ள

சட்டங்கள் நடிக்கிறது; சிலபேர் கையில்

     சமுதாயம் துடிக்கிறது; இதனை மாற்றத்

தட்டுங்கள்; நொறுக்குங்கள்; சமுதா யத்தில்

     தடமொன்று புதிதாகப் போடும்! என்று

தட்டியெழுப் பிடும்வகையில் கல்வி வேண்டும்;

     தடுமாற வைக்கின்ற கல்வி வேண்டாம்.   

   

இவைகள் பேசினால்--கோபுரம்

     இவைகள் பேசினால்--கோபுரம்


கோயிலில்லா ஊரினிலே யாரும் என்றும்

   குடியிருக்க வேண்டாமென் றறைந்தார் முன்னோர்;

கோயிலுக்கேன் அத்தகைய சிறப்பை ஈந்தார்?

   கோபுரத்துக் கேனந்த உயரம் தந்தார்?

வாய்தவறி வந்தசொல்லா? சொன்ன வர்தாம்

   வழிதவறிச் செல்பவரா? இல்லை; தங்கள்

வாய்திறந்தால் தெய்வத்தின் பேரு திர்க்கும்

   வாய்மையினை உடையவர்தாம் உணர்ந்து சொன்னார்;

          கோபுரம் பேசுகிறது;

உள்ளிருக்கும் முழுமுதலை வணங்கு தற்கே

   உள்நுழையும் போதினிலே கோபு ரம்போல்

உள்ளங்கள் உயரவேண்டும்; சின்னப் புத்தி

   ஒருசிறிதும் கூடாது; தூய்மை சேர்த்துக்

கள்ளமிலா நெஞ்சோடு பணிந்தால் தானே

   கடவுளருள் முழுமையாகப் பெறலாம்; அந்த

நல்லதொரு தத்துவத்தைக் காட்டு தற்கே

   நிமிர்ந்துநிற்பேன் கோபுரம்நான்; அறிந்து கொள்க!


உயர்ந்தவன்நான் அய்யமில்லை; என்மே லேதான்

   உயிரினங்கள் குடியிருக்கும்; பக்க மெல்லாம்

உயிரில்லாச் சிற்பங்கள் சிரிக்கும்; நாளும்

   உயிருள்ள வௌவாலும் புறாவும் வந்தே

அயர்வோடு குடியிருப்ப தன்றி எல்லா

   அசிங்கமுமே செய்துவைக்கும்; சினக்க மாட்டேன்;

மயக்கத்தில் கிடந்தாலும் குப்பை கூளம்

   மட்டின்றிச் சேர்த்தாலும் திட்ட மாட்டேன்.


வான்தொட்டு நிற்கின்ற தோற்றத் தாலே

   மண்தொட்டு வாழ்கின்ற மனிதர் நெஞ்சை

நான்தொட்டுப் பார்க்கின்றேன் அய்யய் யோஅந்

   நாற்றத்தை என்னசொல்வேன்? சாக்க டைக்குள்

தேன்சொட்டை வீழ்த்துதல்போல் 'இறைவா!' என்று

   தன்வாயால் உதிர்க்கின்றார்; இத்து ணையும்

ஏன்கெட்டுப் போனதென்றே எண்ணிப் பார்ப்பேன்;

   எனக்கொன்றும் புரியாமல் நெடிதாய் நிற்பேன்.


சிலசமயம் என்கீழே பலபேர் நின்று

   சதித்திட்டம் தீட்டிடுவார்; பாவம் செய்யக்

கலங்காமல் அவர்பேசும் பேச்சில் என்றன்

   கட்டுடலும் நடுங்கிவிடும்; யாரைத் தீர்க்க

அழகாகத் திட்டமிட்டுப் பேசி னாரோ

   அவர்வருவார்; எல்லோரும் அணைத்துக் கொள்வார்;

உளமொன்று செயலொன்றைக் கண்டே நான்தான்

   உதிர்த்திடுவேன் காரைகளை; வேறென் செய்ய?


நாட்டிலெங்கும் சத்தியத்தைக் காண வில்லை;

   நடப்பிலெங்கும் நேர்மையதே தெரிய வில்லை;

வீட்டிலெங்கும் அன்புக்கோ வேலை யில்லை;

   வெளியிலெங்கும் கருணைக்கோ இடமே யில்லை;

காட்டிலுள்ள விலங்கினங்கள் ஊர்க்குள் வந்து

   காலிரண்டில் நடந்துதிரி வனவே போல

நாட்டுநடப் பிருக்கிறதே! இந்த மண்ணில்

   நானுயர்ந்து நிற்பதற்கே நாணு கின்றேன்.


வாய்திறந்தால் பொய்மையன்றி வருவ தில்லை;

   மனந்திறந்த பேச்சுக்கு வழியே யில்லை;

சேய்பிறந்து வரும்போதே கையை நீட்டிச்

   சில்லரைகள் கேட்கிறது; நீதி எங்கோ

போய்மறைந்து கிடக்கிறது; நேர்மை லஞ்சப்

   புதருக்குள் மறைகிறது; இந்த மண்ணிற்

போயுயர்ந்து நான்மட்டும் நிற்ப தாலே

   புண்ணியந்தான் ஏதுமுண்டா? நாணு கின்றேன்.

             ------ காரைக்குடி 10-11-91  

இவைகள் பேசினால்---ஆலயமணி

  இவைகள் பேசினால்---ஆலயமணி 

   ஆலயமணி பேசுகிறேன்;


நாக்குடையோ னாக நானிருந்த போதிலும்

வாக்கெதுவும் இதுகாறும் வாய்திறந் துதிர்த்ததில்லை;


நாக்கில் வருபவைகள் நல்லன தருபவையாய்ப்

பார்க்காத காரணத்தால் பேச்சொழிந் திருந்தேன்நான்


பேசத் தெரிந்தவர்கள் பேச்செல்லாம் தீமையினை

வீசக் கண்டதல்லால் வேறு விளைச்சலில்லை;


நாவடக்கம் எங்குமில்லை; மாறாகப் பலபேரை

நாஅடக்கம் செய்கிறது; நடைமுறை உண்மையிது;


கேட்டால் செவிகைக்கும் கெட்டழிந்த சொற்கள்தாம்

நாட்டு மேடைகளில் நாட்டிய மிடுகிறது;


நாக்கிருந்தும் பேசாமை நல்லதென நானிருந்தேன்;

வாக்களிக்கச் சொல்லியெனை வம்பி லிழுத்துவிட்டீர்


பேச்சு வந்தவுடன் பெரியோ ரிடம்கேள்வி

வீச்செறி தல்தானே வாடிக்கைச் செயலாகும்;


என்னை உணர்ந்தவன்நான்; மண்ணை உணரவில்லை;

விண்ணை உணர்வமெனில் வெகுதொலைவு; எட்டவில்லை;


ஆறுகாலப் பூசை அன்றாடம் நடக்கிறது;

மாறுதலே இல்லாமல் மணியோசை கேட்கிறது;


என்நாக்கால் எனையேநான் அடித்துக் கொள்கின்றேன்;

மண்ணுளோர் போல மற்றவரை அடிப்பதில்லை;


ஆண்டாண்டு காலமாய் ஆலய மணியோசை

பூண்டுக்கும் புழுவுக்கும் மனிதர்க்கும் கேட்கிறது;


ஆண்டவன் இருப்பதையும் அவன்நம்மைக் காப்பதையும்

ஆண்டவன் பூசை பெறுவதையும் அறிவிப்பேன்;


எங்கே இருந்தாலும் எப்பணி செய்தாலும்

அங்கே இருந்தபடி வழிபடநான் ஒலிசெய்வேன்;


கேட்டவுடன் கைகூப்பி வணங்குவோ ரிருக்கின்றார்;

கேட்டாலும் கேட்காத மானிடரும் இருக்கின்றார்;


ஆண்டவனிடம் கேட்கின்றேன்!

எல்லாமாய் இருப்பவனே! எங்கும் திகழ்பவனே!

எல்லார்க்கும் மூச்சாய் இழையோடித் திரிபவனே!


என்னோசை கேட்டவுடன் உன்வாசல் தனைநாடி

மண்மீதில் பக்தியுள்ள மாந்தர் வருகின்றார்;


வருகின்ற மக்களைநான் படிக்கின்றேன்; அவர்க்குநலம்

தருகின்ற நீயவரின் தராதரம் பார்த்தாயா?


வேற்றுமைகள் கண்டுநெஞ்சம் வேகிறது; துன்பத்திற்(கு)

ஆற்றாமல் நாவசைப்பேன்; ஆலய மணியொலிக்கும்;


அய்யா எனக்கதறும் அவரை உதைத்துவிட்டுப்

பய்யவே வந்துசெய்வார் பாலாபி ஷேகங்கள்;


செல்வத்தாற் குளிப்பாட்டிச் செல்வாக்கால் விசிறிவிட்டுன்

நல்லருளை நாடிப் பலபேர் வருகின்றார்;


பட்டாடை மேனிப் பளபளப்பில் உன்பார்வை

கெட்டா போய்விடும்? கண்திறந்து பார்த்தாயா?


நடக்கும் நாடகங்கள் என்னெஞ்சைக் குத்திடவே

இடிப்பேன்நான் இருபக்கம்; அதுதான் மணியோசை;


கோயில் நாடிவரும் அடியவர்காள்! இறையருளின் 

வாயில் எதுவென்று மனத்தளவில் அறிவீரா?


மணியோசை கேட்டதும்கை கூப்புகிறீர்; எளியவர்கள்

மனவோசை அறியாமல் மாதேவன் அருள்வருமா?


வஞ்சத்தை விதைத்துவிட்டு அறுவடை காணுங்கால்

கெஞ்சி  யழுதாலும் கடைத்தேற வழிவருமா?


நாள்தோறும் கெட்ட வழிநடந்து மேல்போகும்

நாள்வருங் காலத்தில் நைந்தழுதால் நலம்வருமா?


உலகத்தைக் கண்டுங்கள் உளக்கோணல் தாங்காமல்

பலவகையில் கதறுமென் மனவோசை மணியோசை.!

இவைகள் பேசினால்---தீபம்

 


                          இவைகள் பேசினால்---தீபம்


திருக்கோயிற் கருவறைக்குள் தெய்வத்தோ டுறவாடி

இருக்கும்  தீபம்நான்; இதயத்தைக் காட்டுகிறேன்;


எனக்கும் வாயுண்டு; வயிறுண்டு; ஏற்றுங்கால்

கணக்காக எரிகின்ற சுடராகும் நாக்குண்டு;


என்வயிற்றில் எண்ணெயூற்றி இடுதிரியை வைத்துத்

தன்குறைகள் தீர்க்க என்முகத்தில் நெருப்புவைப்பார்


தீபம்நான் சிரிக்கின்றேன்; திரித்திரியாய் எரிகின்றேன்;

பாவம் என்னுணர்வைப் பாரில்யார் பார்க்கின்றார்?


இருட்டுக் குடியிருக்கும் இடத்தில் வேறெந்தப்

பொருட்டும் இறைவன் புலப்படவே மாட்டான்;


திருக்கோயிற் கருவறையின் தெய்வத்தை வணங்குங்கால்

இருக்கின்ற இருட்டைப் போக்கவே நானெரிவேன்;


நானளித்த ஒளியால் நல்லறையின் இருட்டுப்

போனதென்ன வோஉண்மை; பக்தர் நிலையென்ன?


இதயமே இன்றித்தான் பலபேர் வருகின்றார்;

இதயமெலாம் இருட்டாக மீதிப்பேர் வருகின்றார்;


அய்யோ எனஅலறி என்நாவை ஆட்டுகின்றேன்;

பய்யவே காற்றில்நான் ஆடுவதாய் நினைக்கின்றார்;


கோயிலுக் குள்ளேனும் குப்பைகளை அகற்றிவிட்டுத்

தூய்மை யுளத்தோடு தொழுதல் கூடாதா?


உள்ளத்துக் குப்பைகளை ஒன்றாகக் கொண்டுவந்து

கள்ளத் துடன்தொழுதால் கடவுள் மகிழ்வாரா?


தீபம்நான் சிரிக்கின்றேன்; திரித்திரியாய் எரிகின்றேன்;

பாவம் என்னுணர்வைப் பாரில்யார் பார்க்கின்றார்?


எனக்குள்ளும் சாதிவகுப் பிருக்கிறது; அதனாலே

பிணக்குகள் வருவதில்லை; போராட்டம் நடப்பதில்லை;


குத்துவிளக் காய்நிற்பேன்; கோலஎழிற் சரவிளக்காய்ச்

சத்தமின்றித் தொங்கிடுவேன்; சின்னத் தீபமாவேன்;


பஞ்சமுக விளக்காவேன்; பரமனையே நோக்கிநின்று

அஞ்சுபுலன் தனையடக்கி யாள்கவெனக் காட்டிநிற்பேன்;


முகம்பலவே கொண்டும்நான் ஒருமுகமே காட்டுகின்றேன்;

முகமொன்றைக் கொண்டவரோ பலமுகங்கள் காட்டுகின்றார்;

             (வேறு)

இறைவனொடு மிகஅருகில் நாளும் உள்ள

   என்னெஞ்சம் அவனிடமோர் வரமே கேட்கும்;

குறைநெஞ்சம்; கொள்ளிமனம்; கெடுதல் செய்யக்

   குதிக்கின்ற பாவியுள்ளம்; இவற்றை யிங்கே

இறைவன்முன் பலரறியச் சுட்டிக் காட்ட

   எனக்காற்றல் தரச்சொல்லி வேண்டு வேன்நான்;

தரங்கெட்ட பாவிகளின் கையால் என்றன்

   திரியெரிதல் என்னாலே தாங்க வில்லை;


கோயிலுக்குள் மந்திரத்தைச் சொல்லு கின்ற

   குருக்களுளங் கூடஅங்கே இணைவ தில்லை;

வாயசைந்து மந்திரங்கள் சிந்தும்; அந்த

   மனிதரவர் சிந்தனையோ வெளியே மேயும்;

வாயிங்கே எனஅழைத்தே நாவ சைப்பேன்;

   வழிபாட்டில் என்னசைவை யார்தான் பார்ப்பார்?

தீயணைந்து போகாமல் எண்ணெ யோடு

   திரிசேர்ப்பார்; என்னுள்ளங் காண மாட்டார்;


என்வயிற்றில் எண்ணெயினைத் தாங்கிக் கொள்வேன்;

   இடுதிரியை நாவாக நீட்டி வைத்தே

என்நாவின் நுனியினிலே தீயை வைக்க

   எரிகின்றேன்; என்வயிறோ எரிவ தில்லை;

என்கண்முன் சிலபேர்கள் வந்து நிற்பார்;

   இனிமையொடு திரியாகும் நாவு கொஞ்சும்;

எண்ணெயின்றி அவர்வயிறோ எரியும்; நாட்டில்

   இந்தவொரு கண்றாவிக் கென்ன செய்வேன்?

              -திருக்கோயிலூர்---01-05-82

இவைகள் பேசினால் --சிங்கவாகனம்

 இவைகள் பேசினால் --சிங்கவாகனம்

                    இவைகள் பேசினால்--

        சிங்கவாகனம் பராசக்தியிடம்


தாயே! பராசக்தி! தனிக்கருணை மாமழையே!

வாய்திறந் தழுவோரை வாரி யணைப்பவளே!


பெற்றவளும் நீதானே! பிள்ளைகள்யாம் பெருந்துன்பம்

உற்றக்கால் எமைத்தாங்கி உதவுவதும் நீதானே!


யாராட்சி பீடத்தில் அமர்ந்தாலும் உன்னுடைய

சீராட்சித் திறந்தானே செகமெல்லாம் காக்கிறது;


உன்னுடைய கண்மேகம் அருள்பொழிய வில்லையெனில்

மண்ணில்  உயிரெல்லாம்  வாடிக்  கருகாதா?


மண்ணைத் தாங்குகின்ற மாகாளி! பராசக்தி!

உன்னைத் தாங்குவதால் உயர்வுபெற்ற சிங்கம்நான்;


வீரத் திருக்கோலம் தாயேநீ எடுக்குங்கால்

சீரோ டுனைத்தாங்கிச் சிறப்போடு திகழ்பவன்நான்;


பாவத்தைச் சுமக்கின்ற பஞ்சைகளின் மத்தியிலே

தேவியைச் சுமப்பதனால் செம்மாந்து திரிபவன்நான்;


குள்ளநரி ஓநாய்கள் கொல்லும் புலிக்கூட்டம்

கள்ளமிலா மானினங்கள் எல்லாமென் காட்டிலுண்டு;


காட்டுக்குள் பேரரசைக் கட்டுக்குள் ஆண்டவன்நான்;

நாட்டுக்குள் உனைத்தாங்கி நாற்றிசையும் சுற்றுகிறேன்;


புதரை வீடாக்கி விலங்கினந்தான் வாழ்கிறது;

புதராக்கி வீட்டை மனிதஇனம் சாகிறது;


அன்றாடம் வருகின்ற அடியவர் செயலெல்லாம்

உன்கீழே இருக்கும்நான் ஒழிவின்றிக் காண்கின்றேன்;


சிங்கம்நான் என்நோக்கில் திசையெல்லாம் பார்க்கின்றேன்;

அசிங்கங்கள் தாமே அகமெல்லாம் தெரிகிறது;


நரிகண்டேன்; புலிகண்டேன்; நாய்கண்டேன்; உன்முன்னே

வருகின்ற கூட்டத்தில் மனிதரைத்தான் காணவில்லை;


தனக்கொருகண் போனாலும் சரிதான்; அடுத்தவன்

தனக்கிருகண் போகட்டும் என்பவர்தாம் ஏராளம்;


குப்பை நெஞ்சங்கள்; கோணல் நினைப்புகள்;

அப்பனுக்கும் அம்மைக்கும் அபிஷேகம் குறைவில்லை;


உள்ளத்தில் வஞ்சம்; உதட்டசைவில் தேவியின்பேர்;

கள்ளத் தொழுகையிலே சக்தியா மயங்கிடுவாய்?


ஏமாற்ற நினைத்தே ஏமாறி நெஞ்சத்தைத்

தாமாற்ற நினைக்காமல் தடுமாற்றம் கொள்கின்றார்;


சிங்கம்நான் சிரிக்கின்றேன்; தேவியே! உன்கீழென்

அங்கங்க ளிருப்பதனால் அமைதியுட னிருக்கின்றேன்;


தப்புத் தாளம் சங்கீத மாகிறது;

தப்பாத தாளம் எங்கேயோ புதைகிறது;


தனியாக நேர்மை ஆவர்த்தனம் புரிகிறது;

இனிமை யுடன்கேட்க ஆளின்றிப் போகிறது;


நேர்மை வழிசென்ற பயணம் முறிகிறது;

நேர்மை யற்றவழிப் பயணம் தொடர்கிறது;


வஞ்சத்தை விதைக்கின்றார்; வளமைபயி ராகிறது;

நெஞ்சத்தை விற்கின்றார்; நல்லவிலை போகிறது;


வஞ்சத்தைப் பயிராக்கி வன்கொடுமை விளைத்தவர்கள்

மிஞ்சியதைக் காசாக்கி உண்டியலில் கொட்டுகின்றார்;


கொட்டி உண்டியலில் பணத்தைக் குவித்துவிட்டாற்

பட்டுப்போம் பாவமெனப் பாவம் நினைக்கின்றார்;


தள்ளும் படியளவே அவர்செய்த பாவங்கள்

தள்ளுபடி யாகுமென நம்பித் தள்ளுகின்றார்;


சிங்கம்நான் சிரிக்கின்றேன்; தேவியே! உன்கீழென்

அங்கங்க ளிருப்பதனால் அமைதியா யிருக்கின்றேன்.

               --  --

                     சிவகாசி--16--07--82 


இவைகள் பேசினால்----திருநீறு

        இவைகள் பேசினால்----திருநீறு

திருநீறு பேசுகின்றேன்; தெளிவாகச் சொன்னால்வெண்

சிறுபொடியன் பேசுகின்றேன்; சிந்தை திறக்கின்றேன்;

என்னைப் பூசுகின்றார்; இறைவனிடம் பேசுகின்றார்;

கண்ணைக் குவிக்கின்றார்; காரியமெல் லாம்சரிதான்

நெற்றியை வெளுப்பாக்கத் திருநீறு பூசியவர்

சற்றேனும் உள்ளத்தை வெளுப்பாக்க வேண்டாமா?

நெற்றியி லுள்ளநான் நெஞ்சினுக் குள்பார்த்தால்

பற்றி எரிகிறது; பாவந்தான் தெரிகிறது;

சாண மெனப்பிறந்து சுடுநெருப்பில் தவம்செய்து

மோன வழிகாட்டும் திருநீறாய் உயர்ந்தவன்நான்;

மந்திர மாவேன்; மாமருந்தும் நானாவேன்;

சுந்தர மாவேன்; தோற்றப் பொலிவாவேன்;

பொன்வைத்துக் காலடியில் பொருள்குவித்து நின்றாலும்

என்னைத்தான் அதற்கீடாய்ப் பிரசாத மெனவீவார்;

தொட்டெடுத்து என்னைத் துளித்துளியாய் வீசுங்கால்

நட்டுவனா ராகஅந்தக் குருக்களும் மாறுகின்றார்;

என்னை யிவர்போடக் காசை யவர்போடப்

பண்டமாற்று நடக்கிறது; பக்திமாற்றுக் காணவில்லை;

மறுபடியும் வேக மனம்விரைந்து துடிக்கிறது;

பிறந்தஇடப் பெருமை பளிச்செனத் தெரிகிறது;

நீர்கழித்த பொருளை நல்லுணவாய்க் கொண்டுதினம்

நீர்கொழுக்கப் பாலீயும் நற்பசுவே பிறந்தஇடம்;

பசுக்கழித்த பொருள்நான்; பக்குவமாய் வெந்தபின்னே

விசுக்கென்று நீரணியும் வெண்ணீறா யாகிவிட்டேன்;

என்னை அணியும்நீர் என்தாயின் பெரும்பண்பு

தன்னை உணர்ந்தால் தாரணி உயராதா?

உமக்கோ விருப்பமில்லை; இருந்தாலும் நேரமில்லை;

நமக்கென்ன வென்றே நானும் கிடக்கின்றேன்;

இல்லாத இடமில்லை; இயங்காத துறையில்லை;

நல்லார்கள் பொல்லார்கள் வேறுபா டெனக்கில்லை;

புருவ நெரிப்பினிலே புரிந்துவிடும் மனமென்றே

புருவத்தின் மேற்பட்டை அடிப்பார் சிலபேர்கள்;

நல்லவர்கள் விதிவிலக்கு; நானவரைச் சொல்லவில்லை;

பொல்லாதார் வேடம் புனைவதையே சொல்லுகிறேன்;

வேடங்கள் போடுங்கள்; வித்தைகள் காட்டுங்கள்;

மூடி மறைத்தொழுக நான்தா னாகிடைத்தேன்?

என்னை எடுத்தணிந்து ஏதேதோ செய்துநெஞ்சைப்

புண்ணாக்கிப் போடாதீர்! பாவமெனை விட்டிடுங்கள் !

மருத்துவர்க்கும் எட்டாமல் மாயவித்தை காட்டுகின்ற

பெருநோய்கள் என்பூச்சில் பறந்தோடி மறைந்ததுண்டு;

வேலுக்கு முன்னே வெம்பிணிகள் நின்றிடுமா?

வேலின் நெற்றியினில் விளங்குபவன் நான்தானே!

பரமன் பார்வையிலே பாவங்கள் தொலையாதா!

பரமன் நுதலேறிப் பொலிபவன் நான்தானே!

சூலைநோய் ஒழித்துத் திருநாவுக் கரசரையிப்

பாலழைத்துத் தந்து பணிசெய்தோன் நான்தானே

என்னைக் குழைத்தே எழில்மேனி பூசிடும்நீர்

நன்றாய் இதயத்தை வெளுப்பாக்கிப் பழகுங்கள்!

பூசுவது வெண்ணீறு; பேசுவது பாவமெனப்

பேசுகின்ற பேச்சைப் பாரினிலே ஓட்டுங்கள்!

வெண்ணீறு நெற்றியில் பொலியட்டும்! நல்ல

பண்பாடு நெஞ்சத்திற் பழுத்து முதிரட்டும்!

திருநீற்றைக் குழைக்குங்கால் சிந்தை குழையட்டும்!

இருப்போரின் நெஞ்சம் இல்லாதார்க் கிரங்கட்டும்!

நல்லனவே எண்ணட்டும்! நாளும் முடிந்தவரை

நல்லனவே செய்ய நெஞ்சங்கள் முந்தட்டும்!

----- ----

--அலவாக்கோட்டை--10--09--81


இவைகள் பேசினால் -- அபிஷேக எண்ணெய் (முருகன்)

                         இவைகள் பேசினால்---

      அபிஷேக எண்ணெய்  (முருகன்)


தொட்டாலே கைமணக்கும் தூய மேனி

   தொடஆசைப் பட்டதுண்டு; நெடுநா ளாகக்

கட்டான ஆறுமுகன் உடலைத் தீண்டும்

   காற்றாக மாறஆசைப் பட்ட துண்டு;

எட்டாத ஆசையென விட்டு விட்டேன்;

   இன்றைக்கிங் கவ்வாசை தீரப் பெற்றேன்;

இட்டமெலாந் தீருமட்டும் தழுவி வீழும்

   எண்ணெயென என்னையேநீர் மாற்றி விட்டீர்.


வள்ளிமகள் காதலுக்காய் மரமாய் நின்றான்;

   மான்தேடும் வேட்டுவனாய் அலைந்து நொந்தான்;

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் இளமை மூடி

   ஒருவிருத்த னாய்வடிவம் பூண்டு சென்றான்;

வள்ளிமகள் தழுவலிலே குழைந்த மேனி

   வழிகின்ற எண்ணெயென்றன் தழுவல் தன்னில்

உள்ளபடி மகிழ்ந்திடுமா? தெரிய வில்லை;

   ஒப்பரிய வகையினிலே நான்ம கிழ்ந்தேன்.


அழுக்கடையாத் திருமேனி தன்னைக் கூட

   அன்றாடங் குளிப்பாட்டுந் தத்து வத்தை

அழுக்கடையும் சிறுமேனி மனிதர் இங்கே

   அறிந்ததாகத் தெரியவில்லை; அறிந்தார் தாமும்

அழுக்கழிக்கும் விளம்பரத்துப் பொருளால் மேனி

   அலசிவிட்டு வருவாரே யல்லால் நெஞ்சின்

அழுக்கினையே போக்கிவிட்டுக் கோயில் நாடும்

   அறிவுணர்ச்சி பெற்றவராய்த் தோன்ற வில்லை.


பளபளக்கும் பட்டாடை மறைப்புக் குள்தான்

   பஞ்சமகா பாதகங்கள் குடியி ருக்கும்;

சலசலக்கும் சிறுபேச்சின் மத்தி யில்தான்

   சண்டாளத் திட்டங்கள் உருவெ டுக்கும்;

கலகலப்பாய்ச் சிரிக்கின்ற சிரிப்புக் குள்தான்

   கட்டாரி போல்வஞ்சம் மறைந்தி ருக்கும்;

நிலைகலங்கி நெஞ்சத்தை மேய விட்டு

   நேயன்முன் நிற்பதனால் பயனும் உண்டா?


வள்ளியுடன் இருந்தாலும் அவனுக் கென்ன

   வஞ்சகங்கள் புரியாதா? இன்பங் கொஞ்சும்

உள்ளமுடன் இருந்தாலும் அவனுக் கென்ன

   உள்ளங்கள் தெரியாதா? வேலின் கூர்மை

உள்ளபடி அறிந்திருந்தும் வேலன் முன்னே

   உள்ளொன்று புறமொன்றாய் நிற்கின் றாரே

வள்ளியுட னிருப்பதனால் தீமை தன்னை

   மன்னிப்பான் வள்ளலவன் எனும்நி னைப்பா?


சந்தையிலே தரங்கெட்டு நாறிப் போன

   சரக்காகி மனம்நொந்து போன நான்தான்

எந்தைபிரான் இளையமகன் மேனி தன்னில்

   இறங்கிவிளை யாடுகின்ற பொருளாய் வந்து

இந்தவொரு பிறப்பெடுத்த பயனைப் பெற்றேன்;

   எண்ணெய்நான் அவன்குளிக்கக் குளிர்ச்சி பெற்றேன்;

கந்தனவன் கேசாதி பாதம் தொட்டுக்

   கடைத்தேறி விட்டேன்நான்; மனம்நி றைந்தேன்

Friday, October 13, 2023

இரு நோக்கு

அய்யோ பாவம்! அவன்பாடு பெரும்பாடு.

மெய்யோ இளைக்கிறது; மனமோ தவிக்கிறது.

துள்ளித் திரிகாளை தோற்றப் பொலிவிழந்து

உள்ளத்துப் பெருஞ்சுமையால் ஒடிந்து நைகிறான்.

கண்ணுறங்க மறுக்கிறது; கனவுகளோ வண்ணமயம்;

எண்ணம்நோய்ப் பட்டதுபோல் இதயமெலாம் பெருங்குழப்பம்.

என்ன நடந்தது ?

ஒன்றுமில்லை; அவளையவன் கண்டான்; கருத்திழந்தான்;

கண்கள் ஒன்றையொன்று கவ்விக் கலந்தன.

சென்றாள்; ஆனால் மனம்விட்டுச் செல்லவில்லை.

நின்று நிதானமாய் உள்ளிருந்து வதைக்கிறாள்.

நோயாளி இவனானான்; நோயை அவள்தந்தாள்.

நோயின் கொடுமையைத் தீர்க்கும் மருந்தென்ன ?

இப்போது தான்நமக் கொன்று புரிகிறது.

எப்போதோ கேட்டோமே  முள்ளெடுக்கும் வழியினை.!

முள்ளை எடுக்கவொரு முள்தான் தேவையெனில்

கள்ளி யவள்பார்வை கட்டாயம் தேவைதானே !

ஆனால் இங்கோ ஒருபுதுமை; அவள்பார்வை

தேனா ? தேளா ? நோய்தந்த ததுதானே !

ஒருநோக்கு நோய்தரும்; இன்னொரு வகைப்பட்ட

மறுநோக்கோ மருந்தாகி நோயினைத் தீர்த்துநிற்கும்.

இந்த இருவகை நோக்கும் அவளுக்கே

சொந்த மெனச்சொல்லி மகிழ்வை ஊட்டுகிறான்.


“ இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு

  நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.”

         --குறிப்பறிதல்--1091   

ஆறு

விண்ணகத்துப் பெண்குழந்தை; மேக மென்னும்

  மெல்லியலாள் கருவளர்ந்து மேள தாளம்

மண்ணகத்தை அதிர்விக்கப் பிறந்த வள்நான்;

  மலைமங்கை மேலாடை யென்ன வீழ்ந்து

மண்ணகத்தைத் தொட்டபின்னே குதியாய்ச் சென்று

  மடுமேடு காடெல்லாம் திரிப வள்நான்;

மண்ணெல்லாம் நான்தொட்டால் சிரிக்கும்; நல்ல

  மாணிக்கப் பயிர்விளையும்; கொழிக்கும் செல்வம்


அணை;கட்டும் என்றுநானாய்ச் சொன்ன தில்லை

  அடக்கமுள்ள பெண்மகள்நான் ஆத லாலே;

அணைக்கட்டு வேலையங்கே முடிந்த தென்றால்

  ஆசையுடன் பசுமையினை ஈன்று நிற்பேன்;

நினைவெல்லாம் என்தலைவன் கடலை நாடி;

  நீள்பூமி தவழ்ந்தங்கே கிடைப்ப தெல்லாம்

நினைவோடு தலைவன்கா லடியில் சேர்ப்பேன்;

  நிம்மதியாய் அவன்மடியில் தலையைச் சாய்ப்பேன்;


நாகரிகம் நான்பெற்ற குழந்தை; நல்ல

  நகரங்கள் நான்சேர்த்த சேர்க்கை; எங்கும்

போகவரப் படகுகளே செல்ல யாரும்

  போடாத பெருஞ்சாலை யாவேன்; மாலை

மோகநெருப் புள்ளத்தே எரியக் காதல்

  வேதனையில் தவிப்போர்க்கே இதம ளிப்பேன்;

மோகத்தைக் கொன்றுவிட முனையும் யோகி

  முயற்சிக்கும் இடமளித்தே மகிழ்ந்து நிற்பேன்;


காராக விண்தவழ்வேன்; குளிர்ச்சி மோதிக்

  கனமழையாய் மண்வருவேன்; அருவி யென்னும்

பேராக மலைதவழ்வேன்; இடங்கள் தோறும்

  பெருங்குளமாய் நிலங்கிடப்பேன்; சிலபக் கத்தில்

பேராத பாறையெல்லாம் துளைத்த பின்னர்

  பாதாளத் துள்ளிருந்தே எட்டிப் பார்ப்பேன்;

ஆறாக நான்நடப்பேன்; கடலைச் சேர்வேன்;

  அவதாரம் பலவேதான்; மூர்த்தி ஒன்றே!


நதியென்றே போற்றிடுவார்; மக்கள் வாழ்வை

  நான்நடத்துங் காரணத்தால் என்னை நாட்டின்

விதியென்றுங் கூறிடுவார்; நான்தான் மண்ணில்

  வெறிகொண்டே விளையாடத் துவங்கி விட்டால்

கதியில்லை மக்கட்கே; என்றன் கோபக்

  கடுமையினைத் தாங்காமல் "ஆறு" என்பார்;

இதுபோதும் என்றேநான் ஆற்றிக் கொள்வேன்

  இந்தவினை வடக்கிற்கே ஏக போகம்;  ;


ஆராரோ ( பெண்குழந்தைக்கு )

                           


   ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ


ஆசையிளங் கிளிமொழியே ! அற்புதமே! கையாட்டிப்

பேசுகின்ற  சிற்பமே!என்  பேரழகே!  தாலேலோ!


மண்ணில்நீ பிறந்ததுமே என்மனதில் இறக்கைகட்டி

விண்ணில்நான் பறந்துநின்றேன்; வெண்ணிலவின் தலைமிதித்தேன்;


பொற்பாவை போலழகுப் பொலிவுடன்நீ வளர்கையிலே

அற்பமனச் சமுதாய அலங்கோலம்  உறுத்திடுதே!


நீமலர்ந்து மணக்குங்கால் என்மனதில் ஏதேதோ

தீமலர்ந்து சிந்தையினைச் சுட்டெரித்து நிற்கிறதே!


நடையழகு பண்பழகு பார்க்காமல் சீதனத்தின்

எடையழகு பார்க்குமந்த இளைஞர்க்கே அஞ்சிடுதே!


வேலியே பயிரைமேயும் வெங்கொடுமைச் சூழலிலே

தாலிக்குக் காப்பில்லை; தங்கமேநான் நடுங்குகிறேன்.


சீராட்டித் தாலாட்டிச் செல்வமுனைக் கொஞ்சுங்கால்

போராட்ட நினைப்புநெஞ்சை முள்ளாய்க் கிழிக்கிறதே!


பாலியலின் கொடுமையினால் பாதிக்கப் படுகின்ற

வேல்விழியின் விதியெண்ணி மனம்நடுங்கி அழுகிறதே!


முள்மீது விழுந்தாலும் முள்ளிதன்மேல் விழுந்தாலும்

உள்ளபடி சேலைதானே உருச்சிதைந்து கிழிகிறது.


உனையெண்ணி மகிழ்வேனா? ஊரெண்ணி நடுங்குவேனா?

வினையெண்ணி உனைவீணே வீதிவழி விடுவேனா?


கண்ணேஎன் கண்மணியே! கவலையின்றிக் கண்ணுறங்கு!

கண்ணுறங்க மாட்டாமல் கலங்கஎன்னை விட்டுவிடு!

ஆராரோ உனைக்காப்பார்? ஆராரோ கைப்பிடிப்பார்?

ஆராரோ துணைவருவார்? ஆராரோ ஆரிரரோ!

அன்பு

வீட்டுக்குள்  கணந்தோறும்  மோதல்;  பெண்கள்

   விளையாட்டாய்  நாள்தோறும்  சாதல்;  நெஞ்சக்

கூட்டுக்குள்  அன்பில்லாக்  கார  ணத்தால்

   கொட்டிவிட்ட நெல்லியெனச் சிதறி, ஏதோ

காட்டுக்குள்  வாழ்கின்ற  விலங்கி  னம்போல்

   கடுகடுப்பை  முணுமுணுப்பை   ஒருமு  றைப்பை

வீட்டுக்குள்  காட்டுகின்றார்;  அங்கே  அன்பு

   விளைந்திட்டால்  அதுமகிழ்ச்சிக்  கூட  மாகும்.


தாயொருத்தி  பிள்ளையிடம்  காட்டு  கின்ற

   தனியன்புக்  கீடில்லை;  தூய   அந்தத்

தாயன்பே  மருமகளின்  மேலும்  பாய்ந்தால்

   தனிமகிழ்ச்சி  கிட்டாதா?   அவளும்   இவளைத்

தாயெனவே  ஏற்றுள்ளம்   பிணைத்துக்   கொண்டு

   சரியன்பைப்   பரிமாறிக்   கொண்டால்   அந்தத்

தூயமனை  வரலாறு   படைத்தி  டாதா?

   தனிவளங்கள்  தானாகச்  சேர்ந்தி  டாதா?


தூயஅன்பு   வீட்டுக்குள்  நிலவு  மானால்

   தூசுகளே சேராது; கோணற்  புத்தி,

மாயவலை, உள்ளத்தை  மறைத்த  பேச்சு,

   மயக்கங்கள்,  தயக்கங்கள்  இருக்க  மாட்டா;

தூயஅன்பின்  சுவைமட்டும்  உணர்ந்து  விட்டால்

   தொல்லுலகில்  வேறுசுவை   தேட  மாட்டோம்;

நேயமுடன்  அன்புவலை   விரிப்போம்;   அங்கே

   நிகழ்கால   உயிரினங்கள்  கவர்ந்து  வாழ்வோம்.


சமுதாயச்  சீர்கேட்டைப்  பார்க்கின்   றோம்நாம்;

   சரிந்துவிட்ட   பண்பாட்டின்    கார   ணத்தால்

சமுதாயம்  வன்முறையால்  கிழிபட்   டிங்கே

   சாகின்ற  கொடுமையினைக்   காண்கின்  றோம்நாம்;

சமுதாயக்   காற்றோடு   தூய   அன்பைத்

   தவழவிட்டுச்   சுவாசித்தோ  மானால்   இங்கே

திமுதிமெனத்  தலைவீழும்   செய்தி    யெங்கும்

   தெரியாமல்   உணர்வொன்றாய்   வாழ     லாமே!


கண்ணப்பன்   தின்றஎச்சில்  அமுத   மென்றே

   காளத்தி    நாதருமே    கொண்டா    ரன்றோ!

எண்ணத்தில்   அன்புமிக்க   கங்கை   வேடன்

   எடுத்தளித்த   மீன்வகைகள்   ஏற்றான்      ராமன்;

கன்னத்தில்  குழிகண்ட   சபரி    தந்த

   காயெச்சில்    நாதனுக்கே   இனித்த    தன்றோ!

எண்ணித்தான்   பாருங்கள்;      இறைவ       னுக்கே

   இனிப்பதெல்லாம்   தூயஅன்பாம்      ஒன்று     தானே!


அன்புவலை   வீச்சுக்குள்    பரம்பொ  ருள்தான்

   அகப்பட்டு   மகிழுமெனில்   மண்மீ    துள்ள

என்பொடுதோல்  போர்த்தவர்கள்   எந்த   மட்டு?

   யாரவர்தாம்  அன்புக்குள்    அகப்ப   டாதார்?

எண்ணத்தில்   தூயஅன்பு   மட்டும்   போதும்;

   எண்ணியவை    தானாக     முடியும்    கண்டீர்!

எண்ணத்தில்   பொங்கட்டும்   அன்பே!     அந்த

   இயக்கத்தில்   வசப்படட்டும்   பிரபஞ்   சங்கள்.


அறுமுகன் வருகை

 சிந்திக்கும் நெஞ்சத்துள் தித்திக்கத் தித்திக்கத்

   திகழ்கின்ற மலைக்கொழுந்தே!

 சிந்தனையி லுனையன்றிச் சிறக்கின்ற வேறுபொருள்

   தினமும்நான் உணர்வதில்லை;

நிந்திக்கும் பெருங்கூட்ட நெருக்கடியில் வாழ்கின்றேன்;

   நித்தமுமே வாடுகின்றேன்;

 நினைப்புக்கும் செயலுக்கும் யாதுமொரு தொடர்பில்லா

   நேயரையே கூடுகின்றேன்;

வந்திக்கும் நிறைபொருளா யிளையவனே! உனையேநான்

   வாழ்நாளில் தேடுகின்றேன்;

 வாடுகிற கணந்தோறும் மலருகிற உன்மேனி

   வடிவழகைப் பாடுகின்றேன்;

செந்தமிழின் பாட்டிலொரு சுவைக்கூட்டாய்த் திகழுகின்ற

   சேயவனே! வருகவேநீ!

 திகழ்குன்றக் குடிமலையில் சிறப்பாக விளையாடித்

   திரிகுமர! வருகவேநீ!


துன்பங்கள் கணந்தோறும் எனைவந்து தாக்கியேஎன்

   சிந்தையைக் கலக்கிநிற்கும்;

 தொலையாத இடர்பலவும் அலையாக வீசியெனைத்

   துரும்பாக அலைக்கழிக்கும்;

இன்பத்தின் நிழல்கூட எனைவந்து தொடுவதில்லை

   எனையேனோ புறக்கணிக்கும்;

 இதயத்தில் பலவான பொல்லாத பேய்க்கூட்டம்

   எப்போதும் ஆர்ப்பரிக்கும்;

கண்பாவச் செயல்காணும்; கைபாவச் செயல்செய்யும்;

   கால்பாவ வழிநடக்கும்;

 காதுகளும் பாவத்தின் குரல்கேட்டே மகிழ்ந்திருக்கும்;

   கடும்பாவம் எனைநடத்தும்;

மென்பாவை வள்ளிமயில் விளையாடு தோளழகா!

   முருகான வாவருக!

 முந்துகிற புகழ்கண்ட குன்றத்தின் மேலமர்ந்த

   முத்தான வாவருக!


நாள்தோறும் எனைநாடும் நண்பர்தம் கூட்டத்தில்

   நாடகமே காணுகின்றேன்;

 நெஞ்சிலொரு நினைப்பாகி நாவிலொரு சொல்லாகி

   நடக்கின்றார் நாணுகின்றேன்;

தோள்தழுவி உறவாடும் தோழனேஎன் பின்னிருந்து

   தொல்லைதர வாடுகின்றேன்;

 தூய்மையொடு வாய்மையின் தடங்கூடத் தெரியவில்லை

   தொலைதூரம் தேடுகின்றேன்;

நாள்பலவும் கழிகிறது; நெஞ்சமோஉள் அழுகிறது;

   நல்லகதி வேண்டுகின்றேன்;

 நாட்டிலது கிடைக்குமெனும் நம்பிக்கை எனக்கில்லை;

   நெஞ்சுறுதி தளருகின்றேன்;

வேல்தாங்கி வந்தென்றன் வேதனைகள் ஒழித்திடவே

   வேலவனே! வருகவேநீ!

 மயில்தாங்கி நடந்துவர வளைதாங்கு மயிலோடு

   மால்மருக னேவருகவே!


அறியாமை தனில்மூழ்கிக் கிடக்கின்றார் பாமரர்கள்;

   அவர்கள்தம் தலையிலேயே

 அருமையுடன் மிளகாயை அரைக்கின்றார்; தலைகொடுத்தோர்

   அகமகிழ்ந்து திளைக்கின்றார்;

தெரியாமல் கேட்கின்றேன்; தலையெரிச்சல் தெரியாத

   திறமென்ன திறமதுவோ!

 தெரிந்தாலும் சரியென்று கும்பிட்டுப் பணிசெய்யும்

   செயலென்ன செயலதுவோ!

அறிவுறுத்த முயல்பவரை அச்சுறுத்த முயல்கின்றார்;

   அடிப்பதற்கும் அஞ்சவில்லை;

 அறுமுகனே! சூரரினை அழிக்கவேநீ முனைந்துவந்தால்

   அடியவரே எதிர்ப்படுவார்;

புரியாத நல்லமனப் போக்குகளே புரிந்துசெயப்

   பொன்மயிலு டன்வருக!

 புகழேறு குடியதனில் மலையேறி நிற்கின்ற

   புண்ணியனே வருகவேநீ!


பொல்லாத மனமென்னைப் பாடாகப் படுத்திநாளும்

   போகாத இடம்செலுத்தும்;

 புரியாத அறிவென்னைப் பெருங்குழப்பந் தனிலாழ்த்திப்

   பொல்லாங்கில் மூழ்குவிக்கும்;

இல்லாத ஆசையெல்லாம் என்னென்ன வோஎழுந்தே

   என்னெஞ்சில் புயலெழுப்பும்;

 என்றைக்கும் நனவாகாக் கனவுகளே என்வாழ்வின்

   ஏக்கமென நிறைந்திருக்கும்;

செல்லாத நெறிசெலுத்தும் சபலங்கள் தேரேறித்

   திசையெல்லாம் ஓடிநிற்கும்;

 செய்வதொன்றும் புரியாமல் திசைவழிகள் தெரியாமல்

   திண்டாடி வீழ்ந்துநிற்பேன்;

கல்லாத எனக்குவழி காட்டிடவே மயிலேறிக்

   காற்றாக வருகவேநீ!

 கலைநிலவு குடியதனில் மலைநிலவி யுயர்ந்துள்ள

   கலைமணியே வருகவேநீ!


பொருள்செய்யும் வழியறியா திவ்வுலகில் நாள்தோறும்

   புண்பட்டு வாடுகின்றேன்;

 பொழுதொன்றும் பொருளின்றிப் போகாத தையுணர்ந்தே

   புலம்பியேநான் ஓடுகின்றேன்;

பொருளுக்கும் நான்கற்ற கல்விக்கும் சற்றுமொரு

   பொருத்தமுமே காணவில்லை;

 பொருள்கூடாக் கற்றவரைப் பூனையுமே மதிப்பதில்லை;

   புவியினிலோர் உயர்வுமில்லை;

மருள்போகக் கற்றவனைப் பொருள்சேர்க்கக் கற்குமொரு

   வழிகாட்டி அருளவேண்டும்;

 வாராத இடரேதும் வந்தாலே நீவந்து

   வாரியணைத் தெடுக்கவேண்டும்;

அருள்தோகை விரித்தமயில் அழகுவள்ளி யுடனாக

   அப்பப்ப! வருகவேநீ!

 அருங்குன்றக் குடியிலுயர் பெருங்குன்றி லாடுகின்ற

   அழகழகா! வருகவேநீ!


எத்தனையோ துன்பங்கள்; எத்தனையோ துயரங்கள்;

   எத்தனையோ மனஉளைச்சல்;

 எத்தனையோ பேராசை; எத்தனையோ மனஓசை;

   எத்தனையோ நெஞ்செரிச்சல்;

எத்தனையோ மனவீழ்ச்சி; எத்தனையோ மனத்தளர்ச்சி;

   எத்தனையோ பேரிகழ்ச்சி

 எத்தனையோ நடிப்பலைகள்; எத்தனையோ இடிப்பலைகள்;

   எத்தனையோ துடிப்பலைகள்;

இத்தனையும் நான்தாங்கி இவ்வுலகில் வாழ்ந்திடஎன்

   இதயத்தில் வலிமையில்லை;

 எனைக்கூட்டி யணைத்தெனக்கோர் வழிகாட்டி நடத்தியெனக்

   கென்றும்நீ அருளவேண்டும்.

இத்தரையில் வந்துகுற வள்ளிமயில் மணந்தவனே!

   எழில்முருக னேவருக!

 எழிலான குடிதன்னில் உயர்வான மலைவாழும்

   இளையவனே! வருகவேநீ!;

அழகென்னும் தெய்வம்

பூத்திருக்கும் மலரசைவில், கீழை வானில்

   புலர்ந்திருக்கும் கதிரொளியில், மாலை வாசல்

காத்திருக்கும் கண்ணசைவில், தலையைத் தூக்கிக்

   கவிழ்ந்திருக்கும் சேயசைவில், நீர்க்கு டத்தைச்

சேர்த்திருக்கும் இடுப்பசைவில், தெறித்த நீரில்

   திளைத்திருக்கும் உடலசைவில், கவிதை சிந்தி

ஆர்த்திருக்கும் பெண்ணசைவில் மனங்கொ டுத்தேன்;

   அழகென்னும் தெய்வத்தின் அடிமை யானேன்.


காலையிளங் கதிரவனை எழுப்பும் சேவற்

   கரகரத்த குரலினிலே அழகைக் கண்டேன்.

சோலையிளந் தளிரினையே ஆட்டி வைக்கும்

   சுகமான தென்றலிலே அழகைக் கண்டேன்.

காளையினத் திமிர்நடையில், அதைந டத்தும்

   கட்டுறுதித் தோளசைவில், அழகைக் கண்டேன்.

மாலைவரும் புள்ளினத்தின் வரிசை தன்னில்

   மயக்குகிற அழகென்னும் தெய்வம் கண்டேன்.


மலைமீது கொஞ்சுமிளம் பசுமை; அங்கே

   மலர்மாலை எனவீழும் அருவி, ஓடி

மலையளக்கும் மான்கூட்ட அருமை, ஆளை

   மயக்குகிற காட்டுமர இசைகள், என்றே

மலையெல்லாம் அழகுகொஞ்சி நிற்ப தால்தான்

   மனமகிழத் தமிழ்முருகன் மலையைக் கொண்டான்.

மலைகண்டு குடிகொண்டு வாழு மந்த

   மலைக்கொழுந்தில் அழகென்னும் முழுமை கண்டேன்.


தெய்வத்தைக் காணவெனில் தூய்மை கொஞ்சித்

   திகழ்கின்ற மனம்வேண்டும்; அதுபோ லத்தான்

தெய்வமெனும் அழகினையே காண வேண்டின்

   செப்பமுற்ற கவிதைமனம் வேண்டும்; அந்தத்

தெய்வத்தைக் கண்டுணரப் பழகி விட்டால்

   தெருவெல்லாம் அழகுநடம் மிளிரும்; அந்தத்

தெய்வமனம் கவிதையுளங் கொண்ட வன்நான்

   தெய்வமெனும் அழகிற்கே அடிமை யானேன். 

அழகு

எதுஅழகு ?  எப்படி?  இப்படிப்  பார்க்கலாமா?

எதிலழ  கில்லை?   ஏனழ  கங்கில்லை ?


அழகு நிலவுவது எதிலே ? சேர்க்கையில்

அழகெனப் படுவது பொருளிலா ? பார்வையிலா ?


காக்கை கருப்புத்தான்; காக்கைக் கதுவெறுப்பா?

சேர்க்கையில் அவைசிரித்துச் சிலிர்ப்பதில் அழகிலையா?


மண்ணை இருட்டாக்கும் வான்மேகக் கருங்கூட்டம்

எண்ணத்தை மயக்கும் இனிய அழகிலையா ?


வண்ணத்தி லாஅழகு ? இல்லை; பார்க்கும்நம்

எண்ணத்தில் எதுவினிக்கும் அதிலே அழகிருக்கும்.


பூத்துச் சிரிக்கின்ற புதுமலர் தானழகா ?

காற்றில் உதிர்கின்ற மலரிதழில் அழகிலையா ?


நெடிதோங்கி நிமிர்ந்தாடும் நெடுமரம் தானழகா ?

ஒடிந்தே அசைகின்ற சிறுகொம்பில் அழகிலையா ?


மான்களின் கண்மருட்சி அழகுதான்; ஆனாலும்

கான்திரியும் கொடும்புலியின் முறைப்பும் அழகுதானே !


எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?

அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.


நிமிர்ந்தவையா? வளைந்தவையா? எதற்குமே அடங்காமல்

திமிர்ந்தவையா? திரிபவையா? திருடி வாழ்பவையா?


எதுவாக இருந்தாலும் அதுவாக அதுவிருந்தால்

எதுபோழ்தும் அதுவழகு; இதயங்கள் கொளலழகு.


கண்ணழகு; மூக்கழகு; காணும் முகவழகு;

முன்னழகு; பின்னழகு; இவைக்கெது அளவுகோல் ?


இடையழகு எதிலிருக்கும் ? இல்லாம லிருப்பதிலா ?

நடையசைவில் ஒடிந்துவிடும் கொடியிடையின் அசைவினிலா ?


ஒருவனுக்கு வானவில் வண்ணம் பேரழகு;

ஒருவனுக் கவ்வில்லின் வளைவு பேரழகு;


வண்ணமா ? வளைவா? எதிலே அழகிருக்கும் ?

எண்ணத்தி லெதுபதியும்? அதிலே அழகிருக்கும்.


கொடியிடையின் அசைவுநடம் அழகுதான்; ஆனாலும்                        துடிப்படங்கித் தடுமாறும் தளர்நடையில் அழகிலையா ?


இளஞ்சேயின் சிறுமழலை அழகுதான்; ஆனாலும்

நலஞ்சிதைந்த முதியோர்தம் நடுக்கம் அழகிலையா?


பனிமொழியின் இதழ்சுரக்கும் நீர்நலந்தான்; ஆனாலும்

கனிந்தகிழத் திதழொழுகும் கடைவாய்நீர் அழகிலையா ?


எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?

அங்கங்கே காண்பதிலே அகம்தழுவின் அழகுவரும்.


காலைக் கதிரொளியின் களிநடனம் தானழகா ?

மாலைக் கருக்கிருட்டின் மைநடனம் அழகிலையா ?


இருளோட்டும் கதிரோனின் எழிற்பயணம் தானழகா ?

மருளூட்டும் இருள்வானச் சுடர்மீன்கள் அழகிலையா?


இருட்டில் அழகிலையா ? இளஞ்சோடி சொல்லட்டும்.

இருட்டறையில் குருட்டாட்ட இயக்கம் அழகிலையா ?


சிங்கத்தின் கம்பீரம் அழகுதான்; ஆனாலும்

அங்கிருக்கும் குள்ளநரித் தந்திரமும் அழகுதானே !


கொல்லேற்றின் திமிலசைவு அழகுதான்; ஆனாலும்

நல்லதொரு தாய்ப்பசுவின் மடியசைவும் அழகுதானே ?


எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?

அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

                  

                  நங்கநல்லூர்---20-02-2000     


அவன் கணக்கும் இவன் கணக்கும்

 அவன் கணக்கும் இவன் கணக்கும்

 (கலைமகள் மார்ச் 2000-கி வா. ஜ.நினைவு  மரபுக் கவிதைப் பரிசு )


இறைவனொரு கணக்கினையே போட்டு மாந்தர்

   இனத்தினையே படைத்திட்டால் அந்த மாந்தன்

மறைவாகப் பலகணக்குப் போட்டு மேலோன்

   மனக்கணக்கைத் தலைகீழாய் மாற்றி அந்த

இறைவனையே குழப்பிவிட்டு மீன்பி டிப்பான்;

   இந்தமண்ணை விருப்பம்போல் ஆட்டி வைப்பான்;

இறைவனுக்கே விதியெழுதும் அவனா? எல்லாம்

   இயக்குகின்ற இறையவனா? யார்தான் மேலோன்?


மனிதஇனம் அவன்படைத்தான்; சாதி யென்னும்

   ' மனக்கொல்லி'  இவன்படைத்தான்; சிந்திக் கின்ற

மனங்களையே அவன்படைத்தான்; தமக்குள் மோதும்

   மதங்களையே இவன்படைத்தான்; பொங்கும் செல்வ

இனங்களையே அவன்படைத்தான்; ஏற்றத் தாழ்வாம்

   இதயநோயை இவன்படைத்தான்; இவன்ப டைப்பால்

மனமயங்கிக் கிறுகிறுப்பான் இறையே என்றால்

   வல்லானின் வாய்க்காலுக் கணைகள் ஏது?


நல்லறத்தை ஒழுக்கத்தைக் கழித்து விட்டோம்;

   நாள்தோறும் போகாத பாதை யில்போய்

அல்லறத்தைத் தீமையினைப் பெருக்கி விட்டோம்;

   அடிதடியும் அடாவடியும் கைக்கொண் டால்தான்

நல்லதெனும் ஒருவழியை வகுத்து விட்டோம்;

   நாசங்கள் மோசங்கள் கூட்டி விட்டோம்;

சொல்லுங்கள் காலமெனும் புத்த கத்தில்

   சுகமான கணக்காநாம் போடு கின்றோம்?


பொய்முகங்கள் வணங்கப்பட் டுயரும் போது,

   பொழுதெல்லாம் தவறுகளில் குளித்து நிற்போர்

பொய்முழக்கம் வேதமென ஆகும் போது,

   பொல்லாங்கின் கொடியுயரப் பறக்கும் போது,

மெய்மையிங்கு குத்துப்பட் டலறும்போது,

   மேலோர்கள் மிதிபட்டுச் சாகும் போது,

மெய்யாக வாய்மையினைப் போற்றி வாழும்

   மனக்கணக்கின் விடைசரியாய் வருமா? சொல்வீர்!


சத்தியத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டுத்

   தர்மத்தின் குரல்வளையை நெரித்து விட்டு,

நித்தமுமே நேர்மையினைச் சிறையில் தள்ளி,

   நெஞ்சாரப் பொய்மைக்கே மாலை யிட்டுச்,

சத்தமிட்டே அதர்மத்தை மேடை யேற்றிச்,

   சிரிக்கின்ற குடியரசில் உண்மை யாகச்

சத்தியந்தான் வாழ்கிறதா? இவ்வி னாத்தான்

   சத்தியமாய் நெஞ்சுகளைக் கீறி நிற்கும்.


மனிதாபி மானத்தைக் காண வில்லை;

   மனத்தினிலே நல்லெண்ணம் பூப்ப தில்லை;

இனிதான சொற்களிங்கு வீழ்வ தில்லை;

   இடர்துடைக்கக் கைகளிங்கு நீள்வ தில்லை;

கனிவான நெஞ்சங்கள் தோண வில்லை;

   கண்களிலே தூயசுடர் ஒளிர்வ தில்லை;

இனியஉள்ளம் நல்லசெயல் எங்கு மில்லை;

   இந்தமண்ணில் மகாத்மாக்கள் தோன்று வாரா?


சாதிக்குச் சங்கங்கள் உண்டே யன்றிச்

   சாதிக்கச் சங்கங்கள் இல்லை; வீணே

மோதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றி

   முனைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; உள்ளம்

பேதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றிப்

   பிணைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; இங்கே

சாதிக்கும் சங்கங்கள் சங்க மித்துச்

   சரியான விடைவருமா? அவன்க ணக்கில்!


அவளே மருந்து

  உண்ணவும் உறங்கவும் முடியவில்லை; --என்றன்

   உடலும் உருகுது தாங்கவில்லை;

எண்ணமும் செயலுமே முடங்கிவிட-- என்றன்

   இயக்கமும் தடைப்பட நோய்ப்பட்டேன்.


நெஞ்சுளே ஏதோ உடைகிறது; - என்

   நினைப்பதும் நொறுங்கிச் சிதைகிறது;

பஞ்சென உள்ளம் பறக்கிறது -- எங்கோ

   போய்ப்போய் மீண்டும் வருகிறது.


கண்ணிலே ஒளியும் குறைகிறது; - காணும்

   காட்சிகள் குழம்பித் தெரிகிறது;

கண்ணுளே ஊசி புகுந்ததுபோல் - ஏதோ

   கொடிய வலியுடன் வதைக்கிறது.


பெற்றவள் பார்த்துப் புலம்புகிறாள் - எங்கோ

   பெரிய வைத்தியன் தேடுகிறாள்;

உற்றவ ரெல்லாம் எனைப்பார்த்தே - இங்கே

   உருகி உருகிப் பேசுகிறார்.


வாதமா? பித்தமா? சிலேத்துமமா? -இந்த

   நாடிகள் நாட்டியம் பிடிபடுதா?

வேதனை நான்பட மற்றவர்கள் - என்னை

   வேடிக்கைப் பொருளெனப் பார்த்துநின்றார்.


எத்தனை மருந்துகள் விழுங்கிடினும் -அவள்

   எனைவிழுங் கியநிலை தீர்ந்திடுமா?

எத்தனை மருந்துகள் பூசிடினும் -அவளை

   எண்ணிய கொப்புளம் மறைந்திடுமா?


என்னவ ளிங்கே வரவேண்டும்; -மயில்

   இறகென நீவியே தரவேண்டும்;

என்னவள் தந்தஅந் நோயினுக்கே -அந்த

   இளையவ ளேபிற மருந்தில்லை.


நோய்களைத் தீர்த்திடும் மருந்துவகை; - அந்த

   நோயெலாம் உலகில் வேறுவகை;

நோயிதைத் தீர்க்க மருந்தில்லை - இந்த

   நோய்தந்த அவளே நோய்மருந்து.


பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை

தன்னோய்க்குத் தானே மருந்து.

          புணர்ச்சிமகிழ்தல்--1102

  திருவள்ளுவர் இலக்கியமன்றம்

    நங்கநல்லூர்--08-07-06