Thursday, November 23, 2017

யாருமில்லா மேடையில்

      யாருமில்லா மேடையில்

யாரு மில்லா மேடையி லேநான்
   நாட்டிய மாடுகின்றேன்; -- கேட்க
யாரு மில்லா அவையினி லேநான்
   பாடல் பாடுகின்றேன்.

மலரின் அசைவை அதுதரும் மணத்தை
   நுகர  வாருமென்றேன்; -- அந்த
மலரே வாடி உதிர்ந்திடு வரையில்
   மனிதர் நெருங்கவில்லை.

தென்னையின் கீற்றுச் சலசலப் பொலியின்
   தேனிசை கேளுமென்றேன்; -- அங்கே
தென்னையின் அடியில் நிற்பவர் கூடச்
   சலசலப்  புணரவில்லை.

சாதிக ளெழுப்பும் சச்சர வொலியின்
   சத்தம்  அடக்குமென்றேன்; -- அந்தச்
சாதிகள் இரைச்சல் இன்னிசை யெனவே
   சுவைத்தலை யேகண்டேன்.

ஊழல் எனவொரு புற்றுநோய் நாட்டை
   உருக்குலைக் குதென்றேன்நான்; -- அந்த
ஊழலில் குளித்தே திளைப்பவர் என்குரல்
   உதறிடல் கண்டுநொந்தேன்.

யாரு மில்லா மேடையி லாடும்
   நாட்டியம் என்னபயன் ? – கேட்க
யாரு மில்லா அவையினி லேஎன்
   பாடலால் என்னபயன் ?


          தினமணி—கவிதைமணி—21-11-17