Friday, May 10, 2013

கட்டுப்பாடு


        கட்டுப்பாடு

அப்பாவென் றொருகுழந்தை அருகில் வந்தே
   அடிவயிற்றைக் காட்டிப்பின் ஏதோ சொல்லும்;
இப்பாலோர் சேய்வந்தே இடுப்பில் தொத்தி
   இன்றேயும் பட்டினியா? என்று கேட்கும்;
அப்பாவோ எமைநீயேன் பெற்றா யென்றே
   அறிவறிந்த பிள்ளையவன் அழுவான் நின்றே;
இப்பாலும் அப்பாலும் தாயின் மார்பை
   இழுத்தாலு மேதுமிலா தேகு மொன்று.

'பெற்றுவிட்ட குழந்தைகளின் பசியைப் போக்கிப்
   பேணவழி யில்லார்க்குப் பிள்ளை ஏனோ?
எற்றுக்கோ இந்தவின்பம் வேண்டாம் சீச்சீ!
   இனிப்பிரமச் சரியமிதே நல்ல மார்க்கம்;
இற்றைக்கு முதலாய்நான் மனையாள் பக்கம்
   ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. கட்டுப் பாடே;
வெற்றுக்குப் பெற்றெடுத்தல் தீமை;" என்றே
   வெளித்திண்ணை படுத்திட்டான் வெறுப்பு மிக்கு.

வெறுத்தொதுங்கிப் படுத்திட்ட அன்று சென்று
   வேனிலொடு பருவங்கள் மாறி, வானில்
கறுத்துநிற்கும் மேகமது காரைக் காட்டக்
   கடுகிவிரைந் தோடியதே ஆண்டின் ஒன்று;
வெறுத்துவிட்டுக் கட்டுப்பா டேற்ற நல்லன்
   வெளித்திண்ணை யிருக்கக்கண் டென்ன வென்றேன்;
சிரித்துக்கொண் டவன்சொன்னான்; " ஒருநா ளேதான்
   சேர்ந்திருந்தோம் மனையிலதோ இடுப்பு நோவு."
     
         -----'தமிழ்நாடு  ஞாயிறு மலர்--23--04--67'

Saturday, May 4, 2013

நகையே தொழில்

             நகையே தொழில்

புன்னகை யொன்றினால் என்னுளங் கொன்றிடும்
   பெண்ணவள் செயலினைக் கண்டு--சிந்தை
   பின்னிடத் தயங்கினேன் நின்று--அவள்
கண்ணசை வொன்றென தெண்ணமே கொண்டிடக்
   கன்னிபால் உளத்தினை வைத்தேன்--அந்தக்
   கண்ணினில் இதயமே வைத்தேன்.

குறுநகை தந்தெனைப் பெருமகிழ் வாக்கியே
   குழறிடும் வெறியனாய்ச் செய்தாள்--இன்பக்
   கொப்பரை நெய்யினைப் பெய்தாள்--காதற்
சிறுமுகை பூத்துமே செறிமணம் ஈத்திடச்
   செழுங்கன வதனிடை ஆழ்ந்தேன்--அந்தச்
   செங்கனிச் சுவைபெற வாழ்ந்தேன்.

புலர்ந்திடு போதினில் அலர்ந்திடு பூவினிற்
   பொலிமணம் எவர்க்குமே சொந்தம்--அதைப்
   பெறுபவர் புவியினில் அனந்தம்--அங்ஙன்
மலர்ந்திடு பூநகை அலர்ந்திடக் கவர்ந்திடு
   மங்கையும் பொதுவென அறிந்தேன்--அந்த
   மாய்நகை தொழிலெனத் தெரிந்தேன்.
                ----24-04-60

பாடும் பயனும்

                    பாடும் பயனும்

   கட்டவிழ் கமல நாப்பண்
     கமழ்விரி முல்லை யூடு
   மொட்டவிழ் கொன்றைக் காடு
     முகிழ்த்திடு மல்லி யேனை
   எட்டிய மலர்கள் கூட்டத்
     திடைநுழைந் ததனில் தேனைக்
   கிட்டிய மட்டு மாக்கிக்
     கூட்டுதல் தேனீப் பாடு;

   காட்டிய ஏவ லாக்கிக்
     கையதை மெய்மேற் கட்டிப்
   போட்டசில் லுணவை யுண்டு
     பொழுதெலா மவர்க்கே பாடு
   பட்டுநற் பயன்கள் யாவும்
     பணத்தோ டவர்பாற் சேர
   ஈட்டிய செல்வங் கண்டே
     ஏங்குத லுழைப்போர் செய்கை;

   பட்டவர் பயனைக் காணார்;
     படுதலே அவர்தங் கொள்கை;
   ஈட்டிய தேனில் நன்மை
     ஈக்களே காண்ப தில்லை;
   வாட்டிய உழைப்பி னாக்கம்
     வறியவர் பெறுவ தில்லை;
   கூட்டிய பயனைக் கொள்ளை
     கொடுத்துவிட் டேங்கு வாரே!