Saturday, November 17, 2012

மைத்துனி

                                  உறவுகள்---'மைத்துனி'
                  ( கவிதை உறவு--ஆண்டுவிழா-18-05-09 )
                     -தலைமை;- கவிஞர் முத்துலிங்கம்--

மைத்துனிகள் என்றாலே மனசிலோர் கிளுகிளுப்பு;
எத்துணையோ உணர்வுவகை எழுந்து தலைகாட்டும்;

மாமியார் வீட்டிற்கு விருந்தென நான்சென்றால்
மாமியொடு என்மனைவி பொழுதெல்லாம் பேசிநிற்பாள்;

கிடைப்பதை உண்டுவிட்டுக் கூரைபார்த்துக் கிடப்பவனை
இடைவந்து சீண்டி, என்னென்ன வோகிண்டிப்,

பேச்சுத் துணையாகி விளையாட்டுக் கையாகி
மூச்செல்லாம் உயிர்மூச்சாய் ஆக்குபவள் மைத்துனிதான்;

கல்லூரி மங்கையவ ளென்பதனால் எம்பேச்சு
உள்ளபடி யேநல்ல சுவைநிறைந்த பேச்சாகும்;

என்துணையோ உள்ளிருந்தே 'என்னடி அரட்டை?'
உன்வாயைக் கொஞ்சம் அடக்கிக்கொள்'  என்றிடுவாள்.

அவளும் பேசமாட்டாள்; அருகமர்ந்து  பேசும்
இவளையும் பேச விடமாட்டாள்;ஆகவேதான்

பெண்ணையே அழகான பேயென்பார் போலும்;
என்னவோ போங்கள்; மைத்துனி மைத்துனிதான்;

இன்னொரு மைத்துனி; இவளோ படுசுட்டி;
என்னையவள் படுத்தும் பாடு இருக்கிறதே!

தாங்காத தொந்தரவா யிருந்தாலும் அதற்குள்ளே
நீங்காத இன்பஅலை வீசிடவே செய்கிறது;

ஓடி வருவாள்; ஒருதுள்ளுத் துள்ளியென்னை
நாடிவந்தே மடியில் நறுக்கென்றே அமர்ந்திடுவாள்;

கழுத்தில் கைபோட்டு முகத்தை இழுத்தணைத்துக்
களுக்கென்று கன்னத்தில் முத்தம் இட்டுவைப்பாள்;

மகிழ்ச்சிக் கரையுடைத்தே மனதில் நீங்காத
நெகிழ்ச்சிதரும் அவள்வயது; திகைக்காதீர்! வெறும்நான்கே;

இப்படி மகிழ்ச்சிதரும் மைத்துனிகள் இல்லையென்றால்
எப்படிநான்  மாமியார்  வீட்டில்  இருப்பதுவாம்?

அத்தான் எனஅழைத்தே கொஞ்சுவதும், எனக்கெனவே
மெத்தஅக் கரையோடு போட்டதா யெடுத்துவந்தே

உப்பிட்ட  தேநீரை   உள்மகிழ   நீட்டுவதும்,
சப்பிமுகம்  சுழிப்பதனைக் கைகொட்டி ரசிப்பதுவும்,

அக்கா!  உன்கணவர் அழகைப்பார்!  என்றவர்கள்
அக்காளை அழைப்பதுவும், அனைத்தும் சுவைதானே!

வீடுவந்த பின்பும்  நீங்காத  நினைவாகி
ஏடுதிருப் புவதைப்போ லினிப்பவை அவைதானே!

கட்டியவள் முறைப்பையும், கனைப்பையும், சுளிப்பையும்
கட்டிவந்த நாள்முதலாய்க்  கண்டுவரும் என்போன்றோர்

கண்மூடி எண்ணிக்  களிப்பதெலாம்  மைத்துனிகள்
எண்ணமுடி யாச்சேட்டை ஈந்த  சுவைதானே!

ஆதலினால் இளைஞர்காள்!  எதெதெற்கோ ஆசைப்பட்டு
மாதவள் தனியாளை மணங்கொள்ள  முயலாதீர்!

மைத்துனி இலாவீடு  மகிழ்ச்சியே  இலாவீடு;
மைத்துனிகள் வாழ்கவென மனங்களித்தே ஆடிடுவோம்.

இளைஞர்களே!    ஓர் அறிவுரை;

கோவிலில்லா ஊரில்  குடியிருக்க வேண்டாம்;
மைத்துனி இலாவீட்டில் பெண்ணெடுக்க வேண்டாம்.

,

Saturday, November 10, 2012

தேசத்தைப் பாடுவோம்

                             தேசத்தைப் பாடுவோம்

இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்
           என்றிருந்த கொடுமை தீர்ந்தே
   எல்லோரும் மன்னரென ஆகிவிட்டோம்; குதிகுதித்தே
           இங்காட்டம் போட்டு நின்றோம்;
நம்மவர்க ளாட்சியிலே நன்மையெனப் பலகோடி
           நாடிவரும் என்றி ருந்தோம்;
   நன்மைகளை விடத்தீமை நாள்தோறும் பெருகிவரும்
           நடப்பினையே காணு கின்றோம்;
நம்மவர்கள் குரங்காகிப் பூமாலை பிய்த்தெறிந்தே
           நர்த்தனங்கள் புரியக் கண்டோம்;
   நாட்டினிலே அதர்மங்கள் தலைதூக்கத் தர்மங்கள்
           நடுங்கிப்போ யொடுங்கக் கண்டோம்;
சிம்மமெனக் கருதியவர் சிறுநரியாய் நாட்டுக்குள்
           சிறுசெயல்கள் செய்யக் கண்டோம்;
   சீறிவருந் துன்பங்கள் சிதைந்தோடச் செய்திட்டே
           தேசத்தைப் பாடு வோமே!

ஆடியது பார்த்துநாளும் அடங்கியது போதுமிங்கே
           அச்சங்கள் போக்கி நிற்போம்;
   ஆரடாஅ!  நீயென்றே அதர்மங்கள் புரிவோரை
            அதட்டியே ஒடுக்கி வைப்போம்;
கூடிவரும் நன்மையெனக் கோடிமுறை கும்பிட்டும்
             கூடிவர வில்லை நன்மை;
   கொழுத்தசிறு நரியெல்லாம் தடியாட்சி நடத்திட்டே
             கோலோச்சி வெற்றி காண்பார்;
இடிவீழ்ந்த கதையாக இடுப்பொடிந்து கீழ்வீழ்ந்தே
              இந்தியன்நாம் கிடக்க லாமா?
   எழுந்துநின்று தூய்மைப்போர் முழக்கங்கள் செய்திடுவோம்;
              எடுத்தெறிவோம் ஊழல் தம்மை;
குடியாட்சி குடிமக்கள் தமக்கேயென் றாக்கிவிட்டே
              கொள்கையிலே ஊறி நிற்போம்;
   குலவுமிருள் தனையோட்டி விடிவெள்ளி கொணர்ந்திங்கே
               தேசத்தைப் பாடு வோமே!

ஆத்திரத்தில் நெருப்பள்ளிக் கொட்டுகிறேன் என்றென்னை
               அவசரத்தில் திட்டி டாதீர் !
   அமைதியுறப் பார்த்தாலும் அதுதானே தெரிகிறது;
               அப்புறம்நான் என்ன செய்வேன் ?
தீத்திறத்தில் முதிர்ந்தோரே வென்றுவரக் கண்டுதினம்
                சிந்தைநொந்து வாடு கின்றேன்;
   செம்மைநெஞ்சங் கொண்டவர்கள் அரசியலைப் புறக்கணித்துச்
                செயலற்றே ஒதுங்கக் கண்டேன்;
நாத்திறத்தில் கொடியோச்சும் நல்லவர்கள் ஏனிந்த
                 நாட்டுநலம் புறக்க ணிப்பார்?
   நன்மையெலாம் ஒன்றாகி நிமிர்ந்துவந்தால் தீமையெலாம்
                 நாடுவிட்டே ஓடி டாதா?
தீத்தொழிலே ஆளவிட்டுத் தினமும்நாம் அழுதுநின்றால்
                 செயல்வீரம் பழுதா காதா?
   செம்மைமனங் கொண்டோரே! திரண்டிங்கே எழுந்திடுவீர்!
                  தேசத்தைப் பாடு வோமே!+

    

Thursday, November 8, 2012

அவன் கணக்கும் இவன் கணக்கும்

               இவன் கணக்கும்--அவன் கணக்கும்
         (கலைமகள் மார்ச் 2000-கி வா. ஜ.நினைவு
             மரபுக் கவிதைப் பரிசு )

இறைவனொரு கணக்கினையே போட்டு மாந்தர்
   இனத்தினையே படைத்திட்டால் அந்த மாந்தன்
மறைவாகப் பலகணக்குப் போட்டு மேலோன்
   மனக்கணக்கைத் தலைகீழாய் மாற்றி அந்த
இறைவனையே குழப்பிவிட்டு மீன்பி டிப்பான்;
   இந்தமண்ணை விருப்பம்போல் ஆட்டி வைப்பான்;
இறைவனுக்கே விதியெழுதும் அவனா? எல்லாம்
   இயக்குகின்ற இறையவனா? யார்தான் மேலோன்?

மனிதஇனம் அவன்படைத்தான்; சாதி யென்னும்
   ' மனக்கொல்லி'  இவன்படைத்தான்; சிந்திக் கின்ற
மனங்களையே அவன்படைத்தான்; தமக்குள் மோதும்
   மதங்களையே இவன்படைத்தான்; பொங்கும் செல்வ
இனங்களையே அவன்படைத்தான்; ஏற்றத் தாழ்வாம்
   இதயநோயை இவன்படைத்தான்; இவன்ப டைப்பால்
மனமயங்கிக் கிறுகிறுப்பான் இறையே என்றால்
   வல்லானின் வாய்க்காலுக் கணைகள் ஏது?

நல்லறத்தை ஒழுக்கத்தைக் கழித்து விட்டோம்;
   நாள்தோறும் போகாத பாதை யில்போய்
அல்லறத்தைத் தீமையினைப் பெருக்கி விட்டோம்;
   அடிதடியும் அடாவடியும் கைக்கொண் டால்தான்
நல்லதெனும் ஒருவழியை வகுத்து விட்டோம்;
   நாசங்கள் மோசங்கள் கூட்டி விட்டோம்;
சொல்லுங்கள் காலமெனும் புத்த கத்தில்
   சுகமான கணக்காநாம் போடு கின்றோம்?

பொய்முகங்கள் வணங்கப்பட் டுயரும் போது,
   பொழுதெல்லாம் தவறுகளில் குளித்து நிற்போர்
பொய்முழக்கம் வேதமென ஆகும் போது,
   பொல்லாங்கின் கொடியுயரப் பறக்கும் போது,
மெய்மையிங்கு குத்துப்பட் டலறும்போது,
   மேலோர்கள் மிதிபட்டுச் சாகும் போது,
மெய்யாக வாய்மையினைப் போற்றி வாழும்
   மனக்கணக்கின் விடைசரியாய் வருமா? சொல்வீர்!

சத்தியத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டுத்
   தர்மத்தின் குரல்வளையை நெரித்து விட்டு,
நித்தமுமே நேர்மையினைச் சிறையில் தள்ளி,
   நெஞ்சாரப் பொய்மைக்கே மாலை யிட்டுச்,
சத்தமிட்டே அதர்மத்தை மேடை யேற்றிச்,
   சிரிக்கின்ற குடியரசில் உண்மை யாகச்
சத்தியந்தான் வாழ்கிறதா? இவ்வி னாத்தான்
   சத்தியமாய் நெஞ்சுகளைக் கீறி நிற்கும்.

மனிதாபி மானத்தைக் காண வில்லை;
   மனத்தினிலே நல்லெண்ணம் பூப்ப தில்லை;
இனிதான சொற்களிங்கு வீழ்வ தில்லை;
   இடர்துடைக்கக் கைகளிங்கு நீள்வ தில்லை;
கனிவான நெஞ்சங்கள் தோண வில்லை;
   கண்களிலே தூயசுடர் ஒளிர்வ தில்லை;
இனியஉள்ளம் நல்லசெயல் எங்கு மில்லை;
   இந்தமண்ணில் மகாத்மாக்கள் தோன்று வாரா?

சாதிக்குச் சங்கங்கள் உண்டே யன்றிச்
   சாதிக்கச் சங்கங்கள் இல்லை; வீணே
மோதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றி
   முனைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; உள்ளம்
பேதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றிப்
   பிணைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; இங்கே
சாதிக்கும் சங்கங்கள் சங்க மித்துச்
   சரியான விடைவருமா? அவன்க ணக்கில்!
 

Wednesday, November 7, 2012

காதல் -ஒரு பார்வை

     இளமைக்குப் பெருமை சேர்க்குமா காதல்?

நானுந்தான் காதலித்தேன்; மணம்பு ரிந்தேன்;
   நங்கைதந்த இன்பத்தில் கிறங்கிப் போனேன்;
தேன்குடித்த நரியாகச் சுற்றிச் சுற்றித்
   திரிந்ததனால் எமைச்சுற்றி மக்கள் கூட்டம்;
தேனாக இனித்தஅவள் இன்றைக் கென்னைத்
   தேளாகக் கொட்டுகிறாள்; தொடச்சென் றாலோ
தானாக முறைக்கின்றாள்; என்றன் காதல்
   தொட்டிலுக்குப் பலியாகிச் செத்துப் போச்சு.

தொட்டிலுக்குப் பலியாகும்; இல்லை யென்றால்
   தோகையவள் பின்னேயே வலமாய் வந்து
கட்டிலுக்குப் பலியாகும்; இந்தக் காதல்
   கட்டிளமைக் கெந்தவகை பெருமை சேர்க்கும்?
விட்டிலொன்று தெரிந்திருந்தும் சுடரைத் தீண்டி
   வீழ்ந்துபடுங் கதைபோல இளமை யெல்லாம்
தொட்டவுடன் கிடைக்கின்ற சுகத்தில் வீழ்ந்து
   துவள்வதன்றி வேறென்ன பெருமை கூட்டும்?

காதலொரு பொல்லாத நோய்தான்; காணும்
   கண்வழியே கிருமிபுகும்; நெஞ்சந் தன்னை
மோதியதை நொறுக்கிவிடும்; சிந்த னைகள்
   முழுதையுமே வயமாக்கிப் பித்தா யாக்கும்;
சாதனைகள் செயத்துடித்த இளமை தன்னைச்
   சவமாக்கி விட்டுவிடும்; எண்ணிப் பார்த்தால்
வேதனையைத் தவிரவேறு எதையும் இந்த
   வியனுலகில் காதலது தருவ தில்லை.

பார்த்தாலும் பறிபோகும்; அவளைச் சற்றுப்
   பார்க்காம லிருந்தாலும் நொறுங்கிப் போகும்;
சேர்த்தாலும் வசமிழக்கும்; சேர்த்த கையைச்
   சிறிதளவே பிரித்தாலும் துடித்துச் சாகும்;
கோர்த்தாலும் நெகிழ்த்தாலும் துன்ப மீயும்
   காதலினால் இளையநெஞ்சம் ப்டும்பாட் டையே
பார்த்தபின்னும் காதலினைப் போற்றி நிற்றல்
   பைத்தியந்தான்; அதுநமக்கே என்றும் வேண்டாம்.

காதலிக்க வேஇளைஞர் அஞ்சு கின்றார்;
   கட்டழகைக் காதலித்து மணந்தால் அந்தக்
காதலியின் பின்னாலே பொருள்க ளேதும்
   கைவராது போகுமென்ற நினைப்பு நெஞ்சக்
காதலினை நொறுக்கிவிடும்; ஆமாம் இன்று
   கரும்புதின்னக் கூலிவந்த பின்னர் தானே
காதலுடன் கரும்பினையே தொடுவார்; இந்தக்
   கொடுமையிலே காதலொரு கேடா? வேண்டாம்.

துணிவில்லா நெஞ்சத்தில் தோன்றும் காதல்
   துணியில்லாப் பெண்ணைப்போல் ஆபா சம்தான்;
துணிவுடனே ஒருத்தியையே காத லித்துத்
   துணையாக மற்றொருத்தி கொள்ளு கின்ற
துணிவுக்கு நம்நாட்டிற் பஞ்ச மில்லை;
   தோற்றவர்யார்? ஆண்மகனா? பெண்ணா? இல்லை;
துணிவில்லா நெஞ்சத்தில் நிலைக்க எண்ணித்
   தோன்றியதே அக்காதல் தனக்கே தோல்வி.       ---------------------------
Azhagi v6.0, www.azhagi.com
---------------------------
Sure you have saved this file with the recent modifications?



NOTE:

If you have not yet saved the file (with the recent modifications) and wish to save the same, click on 'No' and proceed to save the file. Otherwise, you can click on 'Yes' to quit anyway (i.e. even without saving the file).
---------------------------
Yes   No  
---------------------------

Tuesday, November 6, 2012

திருமகள்

                        குற்றவாளிக் கூண்டில் "திருமகள்"
                                  ( சன் தொலைக்காட்சி )
                 நடுவர்; கவிக்கோ அப்துல் ரகுமான்

திருமகளே! உனைக்கூண்டில் நிறுத்திக்குற் றம்சாட்டல்
பெருமளவு கலக்கத்தை எனக்குத் தருகிறது.

ஆனாலும் என்னசெய்ய? அளவில்லாத் தவறுகளால்
தேனான ஓவியங்கள் சிதைபட்டுப் போயினவே!

செல்வத்தின் தேவதைநீ செய்தபல குற்றத்தால்
எல்லாத் திசைகளுமே இடிபட்டுப் போயினவே!

பொருளுக்குத் தேவதையாய்ப் பொறுப்பை உனக்களித்தால்
இருளுக்குத் தலைமைதாங்கி இவ்வுலகை நொறுக்கிவிட்டாய்;

நல்லவை வாழ்வுபெற ராணியென உனைவைத்தால்
அல்லவை ஆட்டமிட அனைத்தும் செய்துவிட்டாய்;

குற்றங்கள் தனையிந்த மன்றத்தில் வைக்கின்றேன்;
குற்றங்கள் எல்லாமே குணமெனவா திடவேண்டாம்;

உனைச்சேறும் துடிப்பில்தான் உயர்பாவச் சுழலாறு
தனைச்சேர்ந்து மூழ்கித் தவியாய்த் தவிக்கின்றார்;

செய்யாத குற்றங்கள் தொகைதொகையாய்ச் செய்வதெலாம்
அய்யோ உனைவீட்டில் அமர்த்திக் கொளத்தானே!

பணக்காரன் ஏழையெனப் பாரிலிரு சாதிப்பூ
மணக்கவைத்துச் சமுதாயம் மயங்க வைத்திட்டாய்;

உன்னருள் இல்லாதான் ஒப்பரிய மேதையென
நின்றாலும் இருக்குமிடம் தெரியாமல் சாகின்றான

உன்னருள் பெற்றவனோ பெரும்பேதை என்றாலும்
நின்று சுடர்வீசி நிலவைவாங்கப் பார்க்கின்றான்;

கொலைகொள்ளை பாவங்கள் எல்லாமே இங்கே
கலகலப்புக் காரியுன்றன் கண்வீச்சால் நடப்பவையே;

குப்பை கூளங்கள் கோபுரத்தில் ஏறுவதும்
தப்புத் தாளங்கள் முழங்குவதும் உன்னால்தான்;

பொருளற்ற ஏழைமகன் வாழ்க்கை முழுதுமோர்
பொருளற்றுப் போனதென்றால் புரிபவள் நீதானே;

பேரழகுப் பெட்டகமாய்ப் பொலிகின்ற பெண்வாழ்க்கை
சீரழிந்து மணமின்றிக் கருகுவதுன் புறக்கணிப்பால்;

பொருள்மலராத் தோட்டத்தில் பூமலர்ந்து பயனென்ன?
அருள்மலரா உன்றன் அணைப்பில்லை யெனும்போது;

படமாடும் கோவில் உண்டியலை நிரப்பும்நீ
நடமாடும் கோவில் வயிற்றைப் புறக்கணிப்பாய்;

காசற்ற மகனையவன் கட்டி யவள்கூட
நேசமுடன் மதிப்பதில்லை; நெஞ்சார அணைப்பதில்லை;

பாசங்கள் எங்கோபோய்ப் பதுங்கிப் புதைந்தோட
மோசங்கள் கொடிகட்டி விளையாடச் செய்கின்றாய்;

குடியாட்சி தனையுன்றன் மடியாட்சி யாக்கிவிட்டுத்
தடியாட்சி தழைத்தோங்கத் தடம்போட்டு விட்டாய்நீ;

கோபுரங்கள் சாய்வதும் குப்பைவான் பறப்பதும்
நூபுர ஒலிநங்காய்!  நீவீசும் புயலால்தான்;

சாதிப் பயிர்வளரத் தழையுரமா யாகின்றாய்;
நீதி வளைவதற்கும் நீண்டகை யளிக்கின்றாய்;

நல்லவர்க்கு நரகத்தை இவ்வுலகில் காட்டிவிட்டு
அல்லவர்க்குச் சொர்க்கத்தை அளித்து மகிழ்கின்றாய்;

இப்போது சொல்நீ!  இந்தஉன்  குற்றங்கள்
தப்பாமல் உலகத்தைச் சாய்த்ததா? இல்லையா?

"மன்ற நடுவரே!  மனதில் நிறுத்துங்கள்;
 என்றும் இவ்ளிடத்தில் இரக்கமே காட்டாதீர் !

தீர்ப்பு இப்படி இருக்கட்டும்;

"நூறாண்டு கடுங்காவல் நலிந்தோரின் குடிசைக்குள்"
யாராண்டு வந்தாலும் தண்டனை நிலைக்கட்டும்;  ;