Friday, December 28, 2012

அறுமுகன் வருகை

                    அறுமுகன் வருகை

சிந்திக்கும் நெஞ்சத்துள் தித்திக்கத் தித்திக்கத்
   திகழ்கின்ற மலைக்கொழுந்தே!
 சிந்தனையி லுனையன்றிச் சிறக்கின்ற வேறுபொருள்
   தினமும்நான் உணர்வதில்லை;
நிந்திக்கும் பெருங்கூட்ட நெருக்கடியில் வாழ்கின்றேன்;
   நித்தமுமே வாடுகின்றேன்;
 நினைப்புக்கும் செயலுக்கும் யாதுமொரு தொடர்பில்லா
   நேயரையே கூடுகின்றேன்;
வந்திக்கும் நிறைபொருளா யிளையவனே! உனையேநான்
   வாழ்நாளில் தேடுகின்றேன்;
 வாடுகிற கணந்தோறும் மலருகிற உன்மேனி
   வடிவழகைப் பாடுகின்றேன்;
செந்தமிழின் பாட்டிலொரு சுவைக்கூட்டாய்த் திகழுகின்ற
   சேயவனே! வருகவேநீ!
 திகழ்குன்றக் குடிமலையில் சிறப்பாக விளையாடித்
   திரிகுமர! வருகவேநீ!

துன்பங்கள் கணந்தோறும் எனைவந்து தாக்கியேஎன்
   சிந்தையைக் கலக்கிநிற்கும்;
 தொலையாத இடர்பலவும் அலையாக வீசியெனைத்
   துரும்பாக அலைக்கழிக்கும்;
இன்பத்தின் நிழல்கூட எனைவந்து தொடுவதில்லை
   எனையேனோ புறக்கணிக்கும்;
 இதயத்தில் பலவான பொல்லாத பேய்க்கூட்டம்
   எப்போதும் ஆர்ப்பரிக்கும்;
கண்பாவச் செயல்காணும்; கைபாவச் செயல்செய்யும்;
   கால்பாவ வழிநடக்கும்;
 காதுகளும் பாவத்தின் குரல்கேட்டே மகிழ்ந்திருக்கும்;
   கடும்பாவம் எனைநடத்தும்;
மென்பாவை வள்ளிமயில் விளையாடு தோளழகா!
   முருகான வாவருக!
 முந்துகிற புகழ்கண்ட குன்றத்தின் மேலமர்ந்த
   முத்தான வாவருக!

நாள்தோறும் எனைநாடும் நண்பர்தம் கூட்டத்தில்
   நாடகமே காணுகின்றேன்;
 நெஞ்சிலொரு நினைப்பாகி நாவிலொரு சொல்லாகி
   நடக்கின்றார் நாணுகின்றேன்;
தோள்தழுவி உறவாடும் தோழனேஎன் பின்னிருந்து
   தொல்லைதர வாடுகின்றேன்;
 தூய்மையொடு வாய்மையின் தடங்கூடத் தெரியவில்லை
   தொலைதூரம் தேடுகின்றேன்;
நாள்பலவும் கழிகிறது; நெஞ்சமோஉள் அழுகிறது;
   நல்லகதி வேண்டுகின்றேன்;
 நாட்டிலது கிடைக்குமெனும் நம்பிக்கை எனக்கில்லை;
   நெஞ்சுறுதி தளருகின்றேன்;
வேல்தாங்கி வந்தென்றன் வேதனைகள் ஒழித்திடவே
   வேலவனே! வருகவேநீ!
 மயில்தாங்கி நடந்துவர வளைதாங்கு மயிலோடு
   மால்மருக னேவருகவே!

அறியாமை தனில்மூழ்கிக் கிடக்கின்றார் பாமரர்கள்;
   அவர்கள்தம் தலையிலேயே
 அருமையுடன் மிளகாயை அரைக்கின்றார்; தலைகொடுத்தோர்
   அகமகிழ்ந்து திளைக்கின்றார்;
தெரியாமல் கேட்கின்றேன்; தலையெரிச்சல் தெரியாத
   திறமென்ன திறமதுவோ!
 தெரிந்தாலும் சரியென்று கும்பிட்டுப் பணிசெய்யும்
   செயலென்ன செயலதுவோ!
அறிவுறுத்த முயல்பவரை அச்சுறுத்த முயல்கின்றார்;
   அடிப்பதற்கும் அஞ்சவில்லை;
 அறுமுகனே! சூரரினை அழிக்கவேநீ முனைந்துவந்தால்
   அடியவரே எதிர்ப்படுவார்;
புரியாத நல்லமனப் போக்குகளே புரிந்துசெயப்
   பொன்மயிலு டன்வருக!
 புகழேறு குடியதனில் மலையேறி நிற்கின்ற
   புண்ணியனே வருகவேநீ!

பொல்லாத மனமென்னைப் பாடாகப் படுத்திநாளும்
   போகாத இடம்செலுத்தும்;
 புரியாத அறிவென்னைப் பெருங்குழப்பந் தனிலாழ்த்திப்
   பொல்லாங்கில் மூழ்குவிக்கும்;
இல்லாத ஆசையெல்லாம் என்னென்ன வோஎழுந்தே
   என்னெஞ்சில் புயலெழுப்பும்;
 என்றைக்கும் நனவாகாக் கனவுகளே என்வாழ்வின்
   ஏக்கமென நிறைந்திருக்கும்;
செல்லாத நெறிசெலுத்தும் சபலங்கள் தேரேறித்
   திசையெல்லாம் ஓடிநிற்கும்;
 செய்வதொன்றும் புரியாமல் திசைவழிகள் தெரியாமல்
   திண்டாடி வீழ்ந்துநிற்பேன்;
கல்லாத எனக்குவழி காட்டிடவே மயிலேறிக்
   காற்றாக வருகவேநீ!
 கலைநிலவு குடியதனில் மலைநிலவி யுயர்ந்துள்ள
   கலைமணியே வருகவேநீ!

பொருள்செய்யும் வழியறியா திவ்வுலகில் நாள்தோறும்
   புண்பட்டு வாடுகின்றேன்;
 பொழுதொன்றும் பொருளின்றிப் போகாத தையுணர்ந்தே
   புலம்பியேநான் ஓடுகின்றேன்;
பொருளுக்கும் நான்கற்ற கல்விக்கும் சற்றுமொரு
   பொருத்தமுமே காணவில்லை;
 பொருள்கூடாக் கற்றவரைப் பூனையுமே மதிப்பதில்லை;
   புவியினிலோர் உயர்வுமில்லை;
மருள்போகக் கற்றவனைப் பொருள்சேர்க்கக் கற்குமொரு
   வழிகாட்டி அருளவேண்டும்;
 வாராத இடரேதும் வந்தாலே நீவந்து
   வாரியணைத் தெடுக்கவேண்டும்;
அருள்தோகை விரித்தமயில் அழகுவள்ளி யுடனாக
   அப்பப்ப! வருகவேநீ!
 அருங்குன்றக் குடியிலுயர் பெருங்குன்றி லாடுகின்ற
   அழகழகா! வருகவேநீ!

எத்தனையோ துன்பங்கள்; எத்தனையோ துயரங்கள்;
   எத்தனையோ மனஉளைச்சல்;
 எத்தனையோ பேராசை; எத்தனையோ மனஓசை;
   எத்தனையோ நெஞ்செரிச்சல்;
எத்தனையோ மனவீழ்ச்சி; எத்தனையோ மனத்தளர்ச்சி;
   எத்தனையோ பேரிகழ்ச்சி
 எத்தனையோ நடிப்பலைகள்; எத்தனையோ இடிப்பலைகள்;
   எத்தனையோ துடிப்பலைகள்;
இத்தனையும் நான்தாங்கி இவ்வுலகில் வாழ்ந்திடஎன்
   இதயத்தில் வலிமையில்லை;
 எனைக்கூட்டி யணைத்தெனக்கோர் வழிகாட்டி நடத்தியெனக்
   கென்றும்நீ அருளவேண்டும்.
இத்தரையில் வந்துகுற வள்ளிமயில் மணந்தவனே!
   எழில்முருக னேவருக!
 எழிலான குடிதன்னில் உயர்வான மலைவாழும்
   இளையவனே! வருகவேநீ!;
 

 

Saturday, December 22, 2012

கண்ணதாசன்

                               கண்ணதாசன்

வண்ணத்து மயிற்கூட்ட ஆட்டத்திற் கோர்பாடல்
      மனமீர்க்கப் படைத்த ளிப்பாய்;
   மால்வண்ணன் வாயரும்பி மலர்கின்ற குழலிசைக்குள்
      வசமாக்கும் பாட்ட ளிப்பாய்;
எண்ணத்துள் நுழைந்தாடும் காதலர்க்கோர் இணைப்பாடல்
      இன்பமுறத் தொடுத்த ளிப்பாய்;
   இலக்கியத்தின் பிழிவாகத் தொடர்களினைத் தொட்டெடுத்தே
      இன்மணத்து மாலை யீவாய்;
கிண்ணத்துள் மதுவுக்கும் கிறக்கங்கள் வரும்வண்ணம்
      கடும்போதைச் சொற்கள் பெய்வாய்;
   கிறங்கிப்போய்த் திரைக்கூட்ட அலையுன்னைத் தாலாட்டத்
      திரையுலகை ஆட்சி செய்தாய்;
வண்ணப்பொன் உடலழகா! உன்பாட்டைக் கேட்டுள்ளம்
      மயங்காதார் யாரு மில்லை;
   வளமான திரையுலகை வலங்கொண்டும் வளங்காணா
      மாமன்ன! கண்ண தாச!

யார்யாரை எங்கெங்கே வைப்பதென யாருக்கும்
      புரியவில்லை எனஉ ரைத்தாய்;
   யார்யாரோ எங்கெங்கோ அமர்கின்றார்; தன்முனைப்பாய்
      என்னென்ன வோசெய் கின்றார்;
சீருடைய குயில்கட்கும் காக்கைக்கும் வேறுபாடு
      தெரியவில்லை என்று ரைத்தாய்;
   சிக்கலிங்கே அதுதானே! தீர்வெதுவும் தெரியவில்லை;
      திருந்துவோரைக் காண வில்லை;
பார்வாழ நீசொன்ன கருத்துக்கள் தத்துவங்கள்
      பார்வாழ்வோர் கொள்ள வில்லை;
   பாவங்கள் கொடிகட்டிப் பறக்கின்ற விந்தையேதான்
      பக்குவமாய் விளங்கி நிற்கும்;
பேர்வாங்கிப் புகழ்வாங்கிப் பெரியமுத லாளியெல்லாம்
      படையெடுக்க வைத்த மன்னா!
   பாட்டாலே திரையுலகை ஆண்டபெரு மன்னனேஉன்
      பேரெங்கள் மனமி ருக்கும்.

மதுவைநீ குடித்தாயோ மதுவுன்னைக் குடித்ததுவோ
      மயங்கியது நாங்க ளன்றோ!
   மயக்கத்தில் அளித்தாலும் மயக்குகின்ற பாட்டளித்தாய்!
      மகிழ்ந்திட்டார் மக்க ளெல்லாம்;
மதுக்கோப்பைக் குள்ளுனது குடியிருப்பென் றுரைத்தாலும்
      மக்களுள்ள மெலாமி ருந்தாய்!
   வசமாகா உள்ளத்தின் வசப்பட்டு மயங்கினுமுன்
      வசப்பட்டார் உலக மக்கள்;
மதிமயக்கும் கவிவரிசை மட்டுமல்ல உன்னுரையும்
      மயக்கியது நெஞ்ச மெல்லாம்;
   வனவாசம் போல்மனசைத் திறந்துரைத்தா ரிவ்வுலகில்
      யாருமில்லை உண்மை தானே!
நிதியுன்னைத் தினந்தோறும் தேடிவந்து குவிந்தாலும்
      நிற்பதில்லை உன்னி டத்தில்;
   நிதிகொழிக்கும் திரையுலகில் கொழித்தாலும் செல்வத்தில்
      நீகொழிக்க வில்லை மன்னா!

அருத்தமுள்ள இந்துமதம் படித்தவர்க ளெல்லோரும்
      அடடாவென் றதிச யிப்பார்;
   அன்றாட உண்மையுடன் ஆண்டவனின் உண்மையினை
      அணைத்தொன்றாய்ச் சொல்லி வைத்தாய்;
பொருத்தமுடன் நம்வாழ்வில் பொருந்திவரும் செய்திகளில்
      பொருத்திவைத்தாய் ஆன்மீ கத்தை;
   புவிவாழ்க்கைப் போதிமரம் போதித்த பிழிவினைநீ
      பொறித்துவைத்தாய் மற்ற வர்க்காய்;
இருக்குமிந்தப் பேருலக இன்பத்தின் துன்பத்தின்
      எல்லைகளைத் தொட்ட வன்நீ!
   இருந்துகொண்டே செத்தவனாய் இரங்கற்பாப் பாடியேயோர்
      எழுச்சியினைத் தந்த வன்நீ!
கருக்கொண்ட போதிலேயே கவிதையினைக் கற்றதுபோல்
      கவிச்சுவையின் சிகரம் தொட்டாய்!
   கவியரசாய்ப் புவியாண்டு கலையுலகை ஆட்டுவித்த
      கண்ணதாச! நீச காப்தம்.