Thursday, April 12, 2012

பாட்டுத் திறத்தாலே...


          பாட்டுத் திறத்தாலே

நானென்ன இந்தமண்ணில் பிறந்து சாகும்
  நால்வரிலே ஒருவனாயிங் கதுதா னில்லை;
நானெடுத்த பாட்டாலே அற்பு தங்கள்
  நடத்திவிட்டே ஓய்வேன்நான்; சுந்த ரர்தம்
தேனனைத்த பாட்டாலே முதலை யுண்ட
  சிறுவனையே மீட்டுவர முடிந்த தென்றால்
ஏனென்றன் பாட்டாலே நடந்தி டாதா?
  இறைவனவன் விந்தையினை நிகழ்த்தி டானா?

ஒருநொடியில் காட்சியெலாம் மாற வேண்டும்;
  உயர்கவிதை வரிபாடி முடிக்கு முன்னே
பெருமழையில் குப்பைகூளம் போவ தைப்போல்
  பெருந்தீமை புரிவோர்கள் அழிந்து போக
வருபவர்கள் நெஞ்செல்லாம் தூய்மை யொன்றே
  விளங்கவேண்டும்; அவராட்சி பீட மேறித்
தெருவெல்லாம் தூய்மையினை விதைக்க வேண்டும்;
  தருமத்தை நேர்மையினை நிறைக்க வேண்டும்;

சிரிப்பவனின் நெஞ்சமுமே சிரிக்க வேண்டும்;
  சிந்தனையில் முதிர்ந்தோர்கோ லோச்ச வேண்டும்;
வறுமையென்றால் என்னவென்று சிறுவ ரெல்லாம்
  வீதிவீதி யாயலைந்து தேட வேண்டும்;
தெருவெல்லாம் முளைத்திருக்கும் காவற் கூடம்
  சிந்தைகவர் படிப்பகமாய் மாற வேண்டும்;
பெருவயிறே யில்லாத காவ லர்கள்
  படிப்பகத்தில் ஆசானாய்த் திகழ வேண்டும்;

நள்ளிரவில் தனியாக அழகு நங்கை
  நகையோடு பத்திரமாய் நடக்க வேண்டும்;
அள்ளுகின்ற பாசமுடன் காவ லர்கள்
  அவளையவள் வீட்டினிலே சேர்க்க வேண்டும்;
இல்லையொரு தீமையெனக் கும்மி கொட்டி
  இளையபெண்கள் ஆசைதீர ஆட வேண்டும்;
கள்ளமனம் இல்லாமல் ஆட வர்கள்
  கைகோர்த்தே அவருடனே இணைய வேண்டும்;

இத்தனையும் என்பாட்டால் நடக்க வேண்டும்;
  என்பாட்டின் பரிசாக இவற்றை யெல்லாம்
அத்தனவன் அருளவேண்டும்; இல்லை யென்றால்
  ஆண்டாண்டு காலமாகப் பாட்டுப் பாடி
மெத்தவுமே பாராட்டு புகழ்கள் பெற்று
  விளங்குவதால் பயனென்ன? ஏதோ காற்றில்
அத்தனயும் போகாமல் நன்மை ஈய
  அத்தனைநான் வேண்டுகிறேன்; அருளு வானா?


No comments:

Post a Comment