Friday, April 27, 2012


              விந்தைத் தீ!

தொட்டாற் சுடுவது தீயெனும் உண்மையைத்
  தாரணி முழுதுமே அறிந்திருக்கும்;-இது
விட்டாற் சுடுது; தொட்டாற் குளிருது;
  மேதினி தனிலொரு விந்தைத்தீ!

பார்வைப் பொறியினில் பற்றிடு தீயிது
  பருவ வயசினில் எரியும்தீ1-அவள்
பார்வை நீரினில் அணையும் தீயிது
  பசக்கென நெஞ்சைக் கசக்கும்தீ!

நினைவில் ராகம் இசைத்திடு தீயிது
  நெஞ்சினிற் குளிக்கும் இன்பத்தீ!-இன்பக்
கனவினை நனவாய் மாற்றியே கண்ணுள்
  காட்சிகள் விரிக்குமோர் உணர்வுத்தீ!

படுக்கையை முள்ளென மாற்றும் தீயிது
  பகலிர வெல்லாம் மறக்கும்தீ!-ஒரு
நொடியினை யுகமாய் மாற்றி வதைக்கும்
  நுட்பத் தீயிது கொடுமைத்தீ!

வீரமும் சருகாய் எரிக்கும் தீயிது
  வீரனாய்க் கோழையை ஆக்கும்தீ!-எந்தச்
சாரமு மில்லாச் சக்கையைக் கூடவோர்
  சரித்திர மாக்கும் மாயத்தீ!

உணர்வு நரம்பினில் எரியும் தீயிது
  உவகைப் பண்ணினை இசைக்கும்தீ!-காதல்
உணர்வு கலந்தவள் பார்த்திடு பார்வையில்
  உள்ளம் நனைத்திடும் புதுமைத்தீ!

அவள்பிரி வதனிற் பொசுக்கிடு தீயிது
  ஆசைக் கனவாய் எரியும்தீ!-வந்தே
அவள்மடி வீழ்ந்தே அணைக்கும் அணைப்பினில்
  அணையும் தீயுளம் அணைக்கும்தீ!

பிரிவினாற் சுட்டிடு மவளே வந்தெனைப்
  பாம்பெனப் பின்னி யணைக்கட்டும்!-அந்தப்
பரிவுத் தழுவலால் எரியும் தீயினைப்
  பக்குவ மாக அணைக்கட்டும்!

No comments:

Post a Comment