Tuesday, August 12, 2014

என்னுரை

                                               என்னுரை--கனல் நெஞ்சம்

            கவிஞன் உள்ளத்தில் ஏதோ ஒன்று எப்படியோ பதிவாகிறது. சில நேரங்களில் உடனே அது கவிதையாகிறது. பல நேரங்களில், பதிவானவையெல்லாம் உள்ளேயே பதுங்கிப் பொதிந்து கிடக்கின்றன.
      சாம்பலுக்குள் பொதிந்து கிடக்கும் கனல் துண்டுகளைப் போல அவை பதுங்கிக் கிடக்கின்றன
      .பதுங்கியிருக்கும் அப் பதிவுகள் வெளியுலகப் பாதிப்பின் ஏதோவோர் பொறிபட்டுச் சுடர்விட்டு நெருப்பாகிக் கவிதையென வெளி வருகின்றன.
       அக் கவிதைகளின் சுடர்வீச்சுச் சிலரைப் பெரிதும் பாதிக்கின்றது.
        பாதிக்க வேண்டுமென்பதே கவிஞனின் நோக்கம்.
        ஆனால் அந்தப் பாதிப்புத் தாக்கத்தின் விளைவாகத் தீய எண்ணங்கள் கவிதைச் சுடரில் வெந்து பொசுங்கித் தூய உணர்வுகள் தோன்றி விடுகின்றனவா? என்பது விடைகிடைக்கா ஒரு வினாவாகிறது.
         மாறாகக் கவிஞனே தாக்கப் படுவதும், புறக்கணிக்கப் படுவதும் நிகழ்கின்றன.
          கவிஞனின் தாக்கத்தால் எப்படித் தீயோர் மாறுவதில்லையோ, அப்படியே அவர்தம் தாக்கத்தால் கவிஞனும் மாறுவதில்லை.
           கவிஞனின் நெஞ்சக் கனல் கவிதைச் சுடரைத் துப்பிக் கொண்டே உள்ளது.
           மருத்துவனிடம் ‘ஏன் உங்கட்கு நோய்கள் மட்டுமே தென்படுகின்றன?’ என்று எப்படிக் கேட்க முடியாதோ, அப்படியே சமுதாயச் செப்பம் வேண்டிப் பாடும் கவிஞனிடம் ,”ஏன் உங்கட்குச் சமுதாயக் குறைகளே தென்படுகின்றன?” எனக் கேட்க முடியாது.
             தீர்வு காணும் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத கவிஞனால் குறைகளைச், சமுதாய நோய்களைச் சுட்டிக் காட்டவே முடிகிறது.
           நோயைக் குணமாக்கிச், சமுதாயம் சீர்ப்படுத்துவது, ஆட்சியிலுள்ளோர்க்கும், அவரை அமர்த்திய மக்கட்கும் பொறுப்பாகிறது. இருவரும் உணர்ந்து செயல்பட்டால் சமுதாயம் செப்பமுறும் என்பதில் ஐயமில்லை.
            இத்தகைய எண்ணங்களின் வெளிப்பாடே என் கவிதைகள்.
            ஆகவே தான், இறை நம்பிக்கையுடைய நான் இறைவனைப் பாடும்போது கூடச் சமுதாய நோய்கள் சுட்டப் படுகின்றன.
             என்ன செய்ய?
              நான் நானாக இருப்பதை இறைவன் முன்னிலையிலும் என்னால் தவிர்க்க இயலவில்லை.
              அந்த ‘ நான்’ ஒழிந்து நன்னிலை பெற இறையருள் கிடைக்கட்டும்.
              இந்த ‘நான்’ ஒழிவது நல்லது தானா?
              இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் 1960 முதல் இன்று வரை பாடியவை.
              அவைகளில் பக்குவம், பக்குவமின்மை இரண்டும் கலந்து வரலாம்.
               படித்துப் பாருங்கள். பாராட்டு, திட்டு- ஏதேனும் ஒன்றைத் தாருங்கள்.
                                            தங்களன்புள்ள
                                              சவகர்லால்

              ( என்னுரை—நெஞ்சக்கனல்-2009 )

No comments:

Post a Comment