Friday, June 27, 2014

முருகா! வருக!

          முருகா! வருக!

அழகே வருக! தெவிட்டாத
   அமுதே! வருக! கொஞ்சுமிளங்
குழகா! வருக! மயிலாடுங்
   குன்றே! வருக! என்றைக்கும்
இளையாய்! வருக! உள்ளத்தில்
   இனிப்பாய்! வருக! குன்றாடுங்
கலையே! வருக! நெஞ்சாடுங்
   கவினே! வருக! வருகவே!

நல்லாய்! வருக! எங்களுளம்
   நடப்பாய்! வருக! எம்நாவிற்
சொல்லா யினிக்கும் மெய்ஞ்ஞானச்
   சுடரே! வருக! ஈடெங்கும்
இல்லாய்! வருக! பூங்காற்றின்
   இனியாய்! வருக! என்றைக்கும்
நல்லா ருள்ளந் தனில்மகிழ்வாய்
   நடமே புரிவாய்! வருகவே!

நெஞ்சில் பூக்கும் நறுமலரே!
   நினைப்பில் மணக்கும் புதுமணமே!
அஞ்சு மடக்கும் அடியார்கள்
   அகத்தில் நிறையும் பெருங்கயமே!
கெஞ்சி நிற்பார் தமையணைப்பாய்!
   கருணை பொழிவாய்! வருகவே!
கொஞ்சுங் கிள்ளை யுடன்மருவுங்
   கோவே! வருக! வருகவே! 

No comments:

Post a Comment