Wednesday, September 20, 2017

எழுப்ப வேண்டாம்

                                 எழுப்ப வேண்டாம்

துன்பங்கள் குறையவில்லை; நாட்டி லுள்ள
   துயரங்கள் குறையவில்லை; நலிவோர் கண்ணில்
இன்பங்கள் தெரிவதில்லை; ஆள்வ தற்கு
   யார்யாரோ வருகின்றார்; அவர்க்கு மட்டும்
இன்பங்கள் கூரைகளைப் பிய்த்துக் கொண்டே
   எப்படியோ சொரிகிறது; நாளு மிந்தத்
துன்பத்தைக் காணாமல் ஏழை மக்கள்
   தூங்கட்டும் அவர்களைநாம் எழுப்ப வேண்டாம்.

ஆட்சியாளர் மிகச்சிறந்த கெட்டிக் காரர்;
   அன்றாடம் சாகின்ற ஏழை மக்கள்
காட்சியிலே நன்மைகளைக் காட்டல் இந்தக்
   காலத்தில் நடப்பதில்லை எனத்தெ ரிந்தே
ஆட்சியினை ஆராய்ந்து பார்க்கா வண்ணம்
   அன்றாடம் மயக்கங்கள் கூட்டு கின்ற
மாட்சிகளைத் திறந்துவிட்டார்; மக்க ளெல்லாம்
   மயக்கத்தில் கிடக்கின்றார்; எழுப்ப வேண்டாம்.

ஆண்டவனைக் கேட்டுக்கேட் டயர்ந்து போனார்;
   ஆள்பவனைக் கும்பிட்டுத் தளர்ந்து போனார்;
பூண்டதொரு வறுமையிந்தப் பிறவி தன்னிற்
   போகாது; கண்முன்னே சுகத்தில் நீந்தும்
ஆண்டவர்கள் ஆடுகின்ற ஆட்டம் இங்கே
   அணுவளவும் குறையாதென் றுணர்ந்து நொந்து
மாண்டுவிட மனமின்றி ஏதோ ஒன்றின்
   மயக்கத்தில் மூழ்குகின்றார்; எழுப்ப வேண்டாம்.

எதிலேனும் மயங்கட்டும் தமிழர்; சொந்த
   இதயத்தை மயக்கத்தில் இழந்து விட்டே
எதையேனும் செய்கின்ற மாந்தர் கூட்டம்
   எதைச்செயவும் மாட்டாமல் மயங்கல் நன்றே.
இதயமென ஒன்றுளதே அதனை விற்றே
   இரக்கமென ஒன்றுளதே அதைய ழித்தே
எதையேனும் செய்துவிட்டுத் திணறும் மக்கள்
   இருக்கட்டும் மயக்கத்தில்; எழுப்ப வேண்டாம்.


எழுந்துவந்தால் எதையேனும் தப்பாய்ச் செய்வார்;
   இருக்கின்ற மற்றவர்கள் அதனால் சாவார்.
விழுந்துவிட்ட தறியாமல், நாட்டில் தீமை
   விளைந்துவிட்ட தறியாமல், ஊழ லெங்கும்
அழுந்திவிட்ட தறியாமல், வாக்குச் சீட்டை
   அளிக்குமுறை யறியாமல் கிடக்கும் மக்கள்
எழுந்துவந்து தவறுகளைப் புதுப்பிக் காமல்
   இருக்கட்டும் மயக்கத்தில்; எழுப்ப வேண்டாம்.

மயக்கங்கள் நீங்காத வரைக்கு மிந்த
   மாநிலத்தில் நல்லதுதான்; எழை மக்கள்
மயக்கங்கள் நீங்கியிங்கே கொதித்தெ ழுந்தால்
   மடமடெனக் கொடுமையெலாம் சரிந்தி டாதா?
மயக்குங்கள் அதனால்தான் திறந்து விட்டார்;
   மயக்கத்தில் மக்களினை ஆழ்த்தி விட்டால்
தயக்கமின்றித் தப்புக்கள் செயலா மென்னும்
   தத்துவந்தான் ஆள்வோர்க்கு வேத மாகும்.

                      மதுரை—28-03-1985





No comments:

Post a Comment