Wednesday, September 20, 2017

புதுமைப் பெண்

                                   புதுமைப் பெண்

புதுமைப்பெண் பேசுகின்றேன்: இங்கே நீங்கள்
   பணித்திட்ட துணிச்சலொடு வாய்தி றப்பேன்;
புதுமைப்பெண் என்றென்னைச் சொல்ல மாட்டேன்;
   புதிதென்ன வாழ்கிறதாம் எம்மி டத்தில்.
புதுமையென வேறெதையும் சொல்லற் கில்லை;
   பணிபுரிதல் புதுமையெனச் சொலலாம்; ஆனால்
எதுவரைக்கும் எம்முள்ளம் நொறுங்கு தென்ற
   எல்லையினை நினைத்தாரும் பார்ப்ப தில்லை.

பேருந்தில் நுழைந்திடவோ முடிவ தில்லை;
   பெரியநெருக் கடிதன்னைப் பயன்ப டுத்திப்
பேருந்தில் உடலூரும் பூச்சி தன்னைப்
   பொசுக்கிடவோ நெற்றிக்கண் நூறு தேவை.
பேருந்தை விட்டிறங்கித் தலையைப் பார்த்தால்
   பிசாசைப்போல் தெரிகிறது; மறுப டிக்கும்
சீருடனே தலைவாரிப் பொட்டு வைத்துத்
   தினம்பணியைத் தொடருகிறோம்; வேறென் செய்ய?

இருவருமே பணிசெய்து பொருளீட் டித்தான்
   இல்லறத்தை உருட்டுகிறோம்; காலை சென்று
இருவருமே மாலையில்தான் திரும்பு கின்றோம்;
   இதயமுள்ள ஆடவர்காள்! கொஞ்சம் இங்கே
கருதுங்கள்; களைத்தவுடல் இருவ ருக்கும்;
   கால்கைகள் ஓய்வெடுக்கக் கெஞ்சும்; ஆனால்
உருக்கமுள்ள மணவாளன் சோர்வாய்ச் சாய
   ஓடியாடி வீட்டினிலும் உழைப்ப வள்நான்.

கடுக்குங்கால் பிடித்துவிட எம்மை நீங்கள்
   கூப்பிடுதல் தவறில்லை; ஆனால் கால்கை
கடுப்பதுவும் களைப்பதுவும் இருவ ருக்கும்
   கருதுங்கால் பொதுதானே; என்றே னும்நீர்
ஒடிக்கின்ற இடுப்புவலி தீரச் சூடாய்
   ஒத்தடங்கள் தருவதற்கு நினைத்த துண்டா?
துடிப்போடு சிலசமயம் வருவீர்; ஆனால்
   தொல்லையெலாம் அங்கேதான் பிரச விக்கும்.

                        டால்மியாபுரம் – 08-09-1985




2 comments:

  1. நல்ல கவிதை வாழ்த்துக்கள்,,,/

    ReplyDelete
  2. அருமை. பெண்களின் உணர்வை உணர்த்தியுள்ளீர்.

    ReplyDelete