Saturday, February 4, 2012

வேண்டும்

                   வேண்டும்

ஒருநொடியில் காட்சியெலாம் மாற வேண்டும்;
  உயர்கவிதை வரிபாடி முடிக்கு முன்னே
பெருமழையில் குப்பையெலாம் போவ தைப்போல்
  பெருந்தீமை புரிந்தவர்கள் அழிந்து போக
வருபவர்கள் நெஞ்சமெல்லாம் தூய்மை யொன்றே
  விளங்கவேண்டும்; அவராட்சி பீட மேறித்
தெருவெல்லாம் தூய்மையினை விதைக்க வேண்டும்;
  தருமத்தை நேர்மையினை நிறைக்க வேண்டும்;

சிரிப்பவனின் நெஞ்சமுமே சிரிக்க வேண்டும்;
  சிந்தனையில் முதிர்ந்தவர்கோ லோச்ச வேண்டும்;
வறுமையென்றால் என்னவென்று சிறுவ ரெல்லாம்
  வீதிவீதி யாயலைந்து தேட வேண்டும்;
தெருவெல்லாம் முளைத்திருக்கும் காவற் கூடம்
  சிந்தைகவர் படிப்பகமாய் மாற வேண்டும்;
பெருவயிறே இல்லாத காவ லர்கள்
  படிப்பகத்தில் ஆசானாய்த் திகழ வேண்டும்;

நள்ளிரவில் தனியாக அழகு நங்கை
  நகையோடு பத்திரமாய்த் திரிய வேண்டும்;
அள்ளுகின்ற பாசமுடன் காவ லர்கள்
  அவளையவள் வீட்டினிலே சேர்க்க வேண்டும்;
இல்லையொரு தீமையெனக் கும்மி கொட்டி
  இளையபெண்கள் ஆசைதீர ஆட வேண்டும்;
கள்ள்மனம் இல்லாமல் ஆட வர்கள்
  கைகோர்த்தே அவருடனே இணைய வேண்டும்;

No comments:

Post a Comment