Saturday, February 4, 2012

vinthayadi nee enakku


       விந்தையடி நீ எனக்கு!

நெஞ்சக் கவலைகள் என்னைப் பிழிகையில்
  நீயென் மடியமர்வாய் -உன்
பிஞ்சுக் கைவிரல் பட்டதும் பஞ்செனப்
  பறக்குது கவலையெல்லாம்

கண்ணொளி மங்கியென் கருத்து மயங்கையில்
  கண்மணி நீவருவாய் -உன்
கண்ணொளி என்னிரு கண்ணின் மணிகளில்
  கவினொளி ஏற்றுதடி!

தத்தி நடந்திடும் உன்னிரு கால்களில்
  துன்பம் மிதிபடுதே! -நீ
கத்தி அழுதிடும் இசையினால் சஞ்சலம்
  காற்றில் மறைந்திடுதே!

ஒருகண் சந்திரன் ஒருகண் சூரியன்
  உன்முகம் வானமடி!-அந்த
இருசுட ரிணைந்தே ஒருபொழு தொளிர்தல்
  எத்தனை விந்தையடி!

உன்னைத் தூக்கிநான் முத்த மிடுகையில்
  என்கையில் சொர்க்கமடி!-நீ
கண்ணைச் சுழற்றியே என்னைப் பார்க்கையில்
  காலடி வானமடி!

என்னவோ வித்தைகள் என்னவோ மாயங்கள்
  எல்லாம் உன்னிலடி!-என்
எண்ணம் சிந்தனை எல்லாம் இனித்திடும்
  விந்தையுன் கண்ணிலடி!

No comments:

Post a Comment