Sunday, June 24, 2012

kurunthokaich chiththiram


                   ஊமையன் காவல்

      பாங்கனுக்குத் தலைவனைப் பார்க்கப் பார்க்க உள்ளம் வேதனையில் மூழ்குகிறது.
எப்படி இருந்தவன்! எத்தகைய வலிமை வாய்ந்த உடம்பு ! எத்துணைச் சுவையான
உரையாடல்! இவைகளில் எதுவுமே இப்பொழுது தலைவனிடம் இல்லை. எங்கே
அவையெல்லாம்?
     வாடிக் குலைந்த மேனியோடு, எதையோ நாடித் தவஞ்செய்யும் முனிவரைப் போல
மோனத்தில் ஆழ்ந்து விட்டான் அவன்.எப்போதும் ஒரே சிந்தனை.தேடித் திரிந்த பொருள்
கிடைக்காத ஒரு தவிப்பு.யாருமில்லாத தனிமையில் ஏதோ ஓர் உருவத்தைக் கண்முன்
கொண்டு வந்து களிக்கும் ஒரு தவிப்பு.
 
எத்தனை நாளாக இது?
பாங்கனுக்குப் புரிந்தது.
  அன்று பாங்கனும் தலைவனும் தான் சென்றார்கள்.சென்று கொண்டேயிருந்த பாங்கன்
திரும்பினான். தலைவனைக் காணோம்.அவன் அப்படித்தான். எங்கேனும் ஆடுகின்ற
மயிலோ, அசைகின்ற மலரோ, தாவுகின்ற சிட்டோ, தட்டுப்பட்டால் அந்த அழகை அங்கேயே
நின்று சுவைப்பான்.அப்படித்தான் எதோ ஓர் அழகு அவனை நிறுத்தி விட்டது என்று கருதி
ஓரிடத்தில் அமர்ந்தான் பாங்கன்.

தலைவன் வரவே இல்லை.

 நேரம் ஓடியது.பாங்கனுக்கு வியப்பு.இவ்வளவு நேரமா இயற்கையழகு அவனை இருத்தி
விட்டது? தேடிச் சென்றான் பாங்கன் அருகிருந்த சோலைக்குள்.
 
  அங்கே கொடி கொம்பைத் தழுவிக் கிடந்தது.தம்மை மறந்த நிலையில் இருவர். எதிர்
பார்க்கவில்லை பாங்கன். எப்படி நேர்ந்தது இது? யார் அவள்? யாருக்குத் தெரியும்?

  ஒரு கனைப்பினால் அவர்கள் தவத்தைக் கலைத்தான். வெட்கித் தலை குனிந்து விலகிச்
சென்றது கொடி. விட்ட தழுவலில் மெய்மறந்து நின்றது கொம்பு.

  அவள் பாங்கியர் சூழப் போய் விட்டாள். அவன் பாங்கனிடம் வந்தான்.

  "நெகிழாத உன் நெஞ்சை நெகிழச் செய்த அந்த நேரிழை யாரோ?" பாங்கன் கேட்டான்.
  "அதுதான் தெரியவில்லை. ஆனால் இதோ இந்த ஊர்தான்." தலைவன் சொன்னான்.
  "என்னப்பா! யாரென்றே தெரியாமலா உள்ளத்தை ஓட விட்டாய்?"
  "நானா ஓட விட்டேன்; அது தானாகவல்லவோ ஓடியது; எப்படி ஓடியது? ஏன் ஓடியது?
யார்க்குத் தெரியும்? ஆனால் ஒன்று சொல்வேன்.இனி அவள்தான் என் தலைவி.
அவளைத்தான் நான் மணப்பேன்." என்றான் தலைவன்.

" சரி சரி வா !" என்றழைத்துச் சென்றான் பாங்கன்.

  அன்று ஏற்பட்ட மாறுதல்தான் தலைவனிடம்.

  நாள் தவறாமல் அதே சோலைக்குச் செல்கிறான். காத்திருந்து காத்திருந்து கவலையோடு
திரும்புகிறான்
   அவள் வரவில்லையே; காண முடியவில்லையே ; அவளை 'இற்செறித்து' விட்டார்களோ?
வீட்டிலேயே சிறை வைத்து விட்டார்களோ? என்று வேதனைப் படுகிறான்.
  வேதனையின் விளைவு அவன் உடல் இளைத்தது.உணர்வுகள் செத்தன.

  பாங்கன் தவித்தான்.தலைவனின் நலம் நாடுபவனல்லவா அவன்.அறிவுரை சொல்லி ஆற்றுப்
படுத்தும் கடமை அவனுக்கிருக்கிறதல்லவா? தவறு கண்டவிடத்து இடித்துரைக்கும் கடப்பாடு
அவனுக்குத்தானே உண்டு.
  "தலைவ! உன் தகுதிக்கும் பெருமைக்கும் இப்படி ஒரு பெண்ணை எண்ணி உருகுவது
ஏற்றதில்லை" என்று இடித்துரைக்கிறான் அவன்.
  தலைவன் தோழனைப் பார்த்துக் கூறுகிறான்;

"இடித்துரைக்கும் நண்பனே! என் மேனி இளைப்பது உனக்குத் தெரிகிறது. காரணமும் புரிகிறது.
நீ இடித்துரைப்பதோடு நில்லாமல் என் மேனி வாடாமல் இருக்க ஏதாவது செய்ய்ஸ் முடியுமானால்
மிக்க நன்றியுடையேனாவேன்; என் தகுதிக்கு இது சரியில்லை என்கிறாய். எனக்கும் அது தெரிகிறது.
என்ன செய்ய? என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே ! அவளை எண்ணி ஏங்கி உருகும் என்
உடல் நலிவைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே!

  நண்ப! இதைக் கொஞ்சம் கேள்! ஒரு பாறை. அதன்மேல் கையில்லாத ஊமையன் ஒருவன். அவனுக்கு
முன்னால் வெண்ணெய். வெய்யில் ஏற ஏற வெண்ணெய் உருகி ஓடுகிறது.கண்ணால் பார்க்கிறான்
ஊமையன்.என்ன செய்வான் அவன்?
  தடுத்து நிறுத்தக் கையில்லையே! அருகுள்ளோரை அழைத்துச் சொல்ல வாயில்லையே! வெயிலில்
வெண்ணெய் உருகிப் பரந்து ஓடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

  அவன் நிலைதான் என் நிலை. வெயில் காய்கிறது; வெண்ணெய் உருகுகிறது. காதல் காய்கிறது; என்
கட்டுடல் உருகுகிறது. ஊமையனால் வெண்ணெய் உருகுவதைத் தடுக்க முடியவில்லை;என்னால் என்
உடல் உருகுவதைத் த்டுக்க முடியவில்லை.நோய் அப்படிப் பரந்து விட்டது. என்ன செய்வேன்?
நீதான் ஏதாவது செய்ய வேண்டும்' என்கிறான் தலைவன்.
    "இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
   நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
   ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
   கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
      வெண்ணெய் உணங்கல் போலப்
      பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே!
                                                               -வெள்ளிவீதியார்
                               குறுந்தொகை--58
(கேளிர்--சுற்றத்தார்,பாங்கன்.குறை--இன்றியமையாத செயல்,அறை--பாறை
   நோன்றுகொளல்--பொறுத்துக்கொளல் )    
.




No comments:

Post a Comment