Saturday, June 30, 2012

Re; குறுந்தொகைச் சித்திரம்

                             நான் யார்? நீ யார்?
 
  மாலை மயங்குகிற நேரம்.ஆளை மயக்குகிற சூழல்.தென்றல் தவழ்கிறது
தேமணம் கமழ்கிறது.சோலை மலர்கள் சுந்தரப் பற்கள் காட்டிச் சிரிக்கின்றன.
சின்னஞ்சிறு சிட்டுகள் குறுக்கே பாய்கின்றன.
  அங்கே...அந்தச் சோலையில்...
  அப்போது..அந்த மாலை நேரத்தில்..
  தம்மை மறந்த தனிநிலையில் இருந்தனர் இருவர்.தலைவனின் கையணைப்பில்
தலைவி.
  அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள் தலைவி திடீரென அவள்
கன்னங்களில் கண்ணீர் வழிகிறது. வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே
விழியைக் கூர்மையாக்கிப் பார்க்கிறான் அவன்.

"அன்பே!"
"என்ன?"
"வரக்கூடாத நேரத்தில் வரக்கூடாத கண்ணீர் வருகிறதே. என்ன காரணம்? நான் அதை
அறியலாமா?" தலைவன் கேட்டான்.
  வரக்கூடாத எண்ணங்கள் என் சிந்தனையில் வந்து மோதிய காரணம்தான் இந்தக்
கண்ணீர்." என்றாள்.
  "அப்படி என்ன சிந்தனை அன்பே!"
  "நாம் முதலில் தலைப்பட்டுச் சந்தித்து உள்ளம் பரிமாறிக் கொண்டோமே அந்த நாளை
நினைத்தேன்."
  அந்த நாள்..அதன் தொடர்பான நிகழ்ச்சிகள்..அவன் உள்ளத்திலும் படமென ஓடின.
  அன்று.. வேட்டைக்கென வந்த தலைவன் தன் தோழர்களைப் பிரிந்தான்.
  வெகு தொலைவு வந்து விட்டான்.
  தோழர்கள் வருவாரோ? அன்றி மயங்கித் திரிவாரோ?..என்று மறுகினான்.
  திடீரென ஓர் அலறல்.பெண் குரல். குரல் வந்த திசை நோக்கி ஓடினான்.
  காற்றில் ஆடும் கொடியென நடுங்கிக் கொண்டிருந்தாள் ஒருத்தி. முகத்தில்
பய உணர்வு படர்ந்திருந்தது.சுற்றும் பார்த்தான்.யாரும் இல்லை.யாரவள்?
எப்படி இங்கே வந்தாள்? ஏன் அலறினாள்?
  நெருங்கினான்.
  "பெண்ணே! யாரம்மா நீ? ஏன் அலறினாய்? " கேட்டான் அவன்.
  அவள் நிமிர்ந்தாள்;பார்த்தாள்; தலை கவிழ்ந்தாள்.
  முகத்தில் அச்சம் விலகி நாணம் குடி புகுந்தது.வாய்மலர் மெல்ல அவிழ்ந்தது.
  "நான்..நான்..தோழிகளோடு வந்தேன்.எப்படியோ அவர்களைப் பிரிந்து வழி
தவறி விட்டேன்.அச்சத்தோடு சுற்றும்போது புதருக்குள் ஏதோ சலசலத்தது.
புலியோ எனப் பயந்து அலறி விட்டேன்.அவ்வளவுதான். தாங்கள்

  "நானும் அப்படித்தான். வேட்டைக்கு வந்தவன்; தோழர்களைப் பிரிந்தவன்; வழி தவறியவன்.
ஆனால் இப்பொழுது எனக்குப் புரிகிறது. இருவருமே வழி தவறவில்லை. சரியான வழியில்
தான் வந்திருக்கிறோம். விதி இப்படிச் சேர்த்திருக்கிறது. விதி வழி தவறுமா?
  அவன் குறிப்பை உணர்ந்தாள் அவள். அவள் நெஞ்சம் நெகிழ்ந்தது. நெகிழ்ந்த நெஞ்சத்தில்
அவன் குடியேறினான். அவன் நெஞ்சில் அவள் தவழ்ந்தாள்.

  இருவரும் சேர்ந்த கதை இது. அதன் பிறகு இது தொடர்கதை யாயிற்று. குறித்த நேரத்தில்
குறித்த இடத்தில் குறித்தபடி இணைந்து மகிழ்ந்தனர் அவர்கள்.
  அத்தகைய ஒரு சந்திப்புத்தான் இது. தலைவன் நினைவை விட்டு நிலைக்கு வந்தான்.
  "அன்பே! யாரென்றே அறியாத நம்மை விதி சேர்த்ததே! ஏன் வீண்  சிந்தனை?"
 
" அன்பரே! என்னை உங்கட்குத் தந்து விட்டேன். ஆனால் ஊரறியத் தரவில்லையே! இந்தக்
களவு கற்பில் முடிந்தால் தானே எனக்கு நிறைவு. மணம் நடைபெற ஏதேனும் இடையூறு
ஏற்பட்டு விடுமோ என்று என் உள்ளம் கலங்குகிறது."

  "காரணம் இல்லாத கலக்கம் கண்ணே இது. இடையூறு என்றால் விதி தானே தர வேண்டும்?
நம்மைக் கூட்டுவித்ததே அந்த விதிதானே; கொஞ்சம் சிந்தித்துப் பார்.

  "என் தாயும் உன் தாயும் உறவினர்களா? இல்லையே! என் தந்தைக்கும் உன் தந்தைக்கும்
ஏதேனும் முறையான உறவுண்டா? இல்லையே!  அது போகட்டும். நம்மைக் கூட்டுவித்த
அந்த நிகழ்ச்சிக்கு முன்னால் நான் யார்?  நீ யார்? நம்மிடையே ஏதாவது அறிமுகம் உண்டா?
இல்லையே!..எப்படிச் சேர்ந்தோம்?..அதுதான் விதி.

  "வானத்தில் மேகம் கூடுகிறது; மழையாகப் பொழிகிறது; நிலத்திலே வீழ்கிறது; மண்ணோடு
கலக்கிறது. செம்மண்ணோடு கலந்த நீர் செந்நிறமாகிறது. மண்ணின் நிறம், மணம், குணம்
அனைத்தோடும் அந்த நீர் பிரிக்க முடியாதபடி இணைகிறது. இந்த மண்ணும் நீரும்
இணைவதற்கு முன்னால் அவைகட்கிடையே ஏதேனும் உறவுண்டா? இல்லையே!..ஆனால்
இணைந்த பிறகு பிரிவதில்லையே!...

  "இதேதான் கண்ணே! நம் நிலையும். மண்ணோடு மழைநீர் சேர்கிறது. இரண்டும் ஒன்றாகிறது.
என்னோடு நீ சேர்ந்தாய். இருவரும் ஒருவரானோம். கூட்டுவித்தது விதி. செம்புலத்திலே
பெய்த நீர்போல அன்பு நிறைந்த நெஞ்சங்கள் கலந்து விட்டன. இனிப் பிரிவே இல்லை.
கலங்காதே!" என்று தேற்றுகிறான் தலைவன்.
           பாடல்;
         "யாயும் யாயும் யாரா கியரோ
          எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
          யானும் நீயும் எவ்வழி அறிதும்
          செம்புலப் பெயனீர் போல
          அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!"
                            ---செம்புலப் பெயனீரார்
                              (குறுந்தொகை..40)
.

...
 
..
     Re; குறுந்தொகைச் சித்திரம் 

No comments:

Post a Comment