Wednesday, July 4, 2012

Re: சவகர்லால்--வானொலிச் சிற்றுரைகள்


             Re: சவகர்லால்--வானொலிச் சிற்றுரைகள்


                        பொறுமை

   வாழ்க்கையின் களங்கள் இரண்டு. ஒன்று வீடு ; இன்னொன்று சமுதாயம்.
 
   ஆணோ பெண்ணோ, இருவரும் வாழ வேண்டிய,இயங்க வேண்டிய
களங்களும் இவை இரண்டும் தாம்.
   நாம் வெற்றி பெற வேண்டிய களங்களும் இவை இரண்டுதாம்.
   வீட்டில் வீசுகின்ற அலைகளும், உண்டாகின்ற அதிர்வுகளும் நம்
உள்ளத்தைத் தாக்கி ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துவது போலவே
வெளியுலகென்னும் சமுதாய அலைகளும், அதிர்வுகளும் நம்மைப்
பாதிக்கவே செய்கின்றன.
   அந்தப் பாதிப்புப் பல நேரங்களில் நாம் அடக்கித் தூங்க வைத்திருக்கும்
ஆத்திரம், சினம் முதலிய உணர்வுகளைத் த்ட்டி எழுப்பி விடுகின்றன.
   ஆத்திரமும், சினமும் பொங்கியெழுந்து நம்மை நிலை  தடுமாறச் செய்து
நம் நிலைக்குப் பொருந்தாத சொற்களைப் பேச வைத்துச்,செயல்களைச்
செய்ய வைத்து விடுகின்றன.
   இவ்வளவு காலமும் நாம் கட்டிக் காத்து வந்த நம் பேரும் புகழும் கேள்விக்
குரியதாகி விடுகின்றன.
   இத்துணைக்குங் காரணம் நம் உள்ளத்தில் ஓங்கி எழுந்த சினம்.அந்தச்
சினத்தை ஓங்கி எழச் செய்த தூண்டல் வீட்டிலோ,வெளியிலோ உள்ளோர்
செய்த தவறான செயல்கள்.
   ஆக,அவர்களுடைய தவறான செய்கையால் தூண்டப் பெற்று,ஆத்திர
வயப்பட்டு நாமும் தவறையே செய்து விடுகிறோம்.
   இப்படி ஒரு தவறு நிகழாமல் தடுக்க என்ன செய்யலாம்?
   ஆன்றோர்கள் தம் பட்டறிவு வாயிலாக நுணுகி நுணுகி ஆய்ந்து பல
கருத்துகளை நம் நெஞ்சில் பதிக்க வேண்டிக் கூறியுள்ளனர்.
   அவைகளுள் தலையாயது பொறுமை.
      பொறுமை என்பது சொல்லளவில் மிகச் சிறியதே. ஆனால் அதை நாம் ஓர்
அணியாக அணிந்து இயங்க வேண்டுமாயின் அது மிக மிகக் கடினமான பயிற்சியே.
பயிலப் பயிலத்தான் பொறுமை உள்ளத்தில் அமரும்.
     எவ்வளவோ பொறுமையாக நாம் இருந்தாலும், திடீரென ஒரு பொறி பட்டுச்
சினமென்னும் நெருப்புக் கொழுந்துவிட்டெரிய அதில் பொறுமை எரிந்து சாம்பலாகி
விடுவதைப் பார்க்கிறோம்.
    ஆத்திரம் அறிவுக்கு எதிரி. ஆத்திரம் எழுந்து விட்டால் அறிவு அட்ங்கி விடுகிறது.
அறிவைப் புதைத்து விட்டு எழுகின்ற ஆத்திரம் உமிழ்கின்ற சொற்கள் அறிவொடு
பொருந்துமா? தவறான சொற்களே தாவி விளையாட அந்த ஆட்டத்தில் நம் புகழ்
இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாகிப் போகிறது.
    இத்தனைக்கும் காரணம் என்ன? எழுந்த ஆத்திரம். அதை அடக்கிவிட்டு நாம்
கொள்ளாத பொறுமை
      நெருப்பை விழுங்குவது போல நம்மைத் தாக்கிய கடுஞ்சொற்களை விழுங்கி விட்டுப்
பொறுமை காத்து ஒரு புன்னகையை நெளிய விட்டிருந்தால் எல்லாம் சரியாகி இருக்கும்.
        ஆனால், அது அவ்வளவு எளிதா?
       வீட்டில் விளக்கேற்ற மருமகள் வருகிறாள். ஆயிரம் கனவுகளோடு புகுந்த வீடு வரும்
பெண்ணுக்குப் பிறந்த வீட்டுச் சான்றோர் வழங்கும் அறிவுரை, 'பொறுமை என்னும் நகை
யணிந்து பெருமை கொள்ள வேண்டும்' என்பதே.
      மாமியின் அடக்குமுறை, நாத்தியின் அடங்காமுறை, எனப் பல கோணங்களிலும்
தலைவியைத் தாக்கும் பலவகைக் கணைகளையும் தாங்கிக் கொண்டு தன் பொறுப்பைக்,
கடமைகளைச் செய்து பொறுமையுடன் நற்பெயர் எடுத்து வாழ்வது பெண்கட்கு நெருப்புக்
குளியல்தான்.
    பொறுமை என்ற பண்பைத் தன்னுடைய மன இயல்பாகக் கொண்டுவிட்டால், எல்லாக்
கணைகளும் அவள் காலடியில் வீழ்ந்து நற்பயன் விளைக்கும்.
    ஆண்மகன் வெளியுலகில், சமுதாயத்தில் நடமாடுபவன். நண்பர்கள், பகைவர்கள்,
புதியவர்கள் எனப் பலரையும் சந்தித்து உறவாட வேண்டிய கட்டாயஸ் சூழலில்
உள்ளவன்.
    குறுகிய எல்லைக்குள் இருக்கும் வீட்டுத் தாக்குதல்களைத் தாங்க முடியாமல் ஒரு பெண்
தவிக்கிறாளென்றால் ,பரந்துபட்டுக் கிடக்கும் சமுதாயப் பலகோணத் தாக்குதல்களையும் தாங்கிப்
பொறுமை காத்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகிறான் ஆண்மகன்.
       தன்னை விட வயது, அறிவு, படிப்பு, புகழ், தகுதி - இவை குறைந்தவர் தன்னை இகழ்ந்து பேசு
வதைக் கேட்டால் அவன் உள்ளம் பொங்காதா? ஆத்திரம் எழுந்து அனல் வீசாதா?
     ஆத்திரப் படாதே! என்கிறார் அய்யன்.
     பண்பட்ட நிலத்தைப் பார்! இந்த நிலம் எத்துணை தாக்குதல்கட்கு ஆளாகிறது!
    பயிர் செய்ய, வீடு கட்டச், சுரங்கம் தோண்ட, ஆற்றோட்ட வழி செய்ய, என எத்துணை தாக்குதல்
கட்கு உள்ளாகிறது?
   தன்னைத் தோண்டித் துன்புறுத்துவோரையும் தாங்கி வாழ வைக்கிறதல்லவா நிலம்!
    அந்த மண்ணை விட மனிதனாகிய நீ பண்பிற் குறையலாமா?
   
   "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
     இகழ்வார்ப் பொறுத்தல் தலை."
என்று நமக்கு வள்ளுவர்  கூறுகிறார்.
     இயேசு பெருமான் படாத துயரங்களா? சிலுவையில் அறையப் படும் அந்தக் கொடுமையான
நிகழ்வின் போது கூட அவர்,"இறைவா! தாம் செய்வது இன்னது என்று தெரியாமல் செய்யும்
இவர் பிழையை மன்னியும்! " என்று வேண்டினாரல்லவா?
    அந்தப் பொறுமைதானே அவர்தம் புகழாக நின்று நிலவுகிறது.
 
  "ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
   பொன்றுந் துணையும் புகழ்."
என்ற குறளின் பொருளை மனதிற் கொண்டு ,தகுதி யில்லாதார் மிகையாக ஏதும் செய்தாலும்,
நம் தகுதியால் பொறுமை காத்து அதனால் வென்று வாழ்வோமாக!
.

No comments:

Post a Comment