Wednesday, October 31, 2012

சித்தர்கள்

                                                   சித்தர்கள்
                    (நம் யோகியார் இல்லக் கவியரங்கம்
                                 10--01--10 )

           அழைப்பாளர்--யோகியார்
என்னையிங்கேன் அழைத்தீர்கள் என்று கேட்டால்
  என்பாபா கட்டளையென் றுடனே சொல்வார் ;
அன்புடனே இத்தலைப்பேன்? எனக்கே என்றால்
  அவர்சொன்னார்; நான்கொடுத்தேன்; என்பார். என்றும்
திண்ணமுற உள்ளமெலாம் அவரே யாகத்
  தினமுமுரை யாடிமகிழ் கின்றார்;அந்த
எண்ணமெலாம் நிறையன்பு பக்தி யால்தான்
  இயங்குகிறார்; அவர்யோகி; வணங்கு கின்றேன்.

             தலைவர்--இலந்தையார்
என்நண்பர் இவரென்று கூறும் போதே
  இதயத்துள் சந்தமொன்று துடிக்கக் காண்பேன்;
வண்ணமுற வருஞ்சந்த வரிசை கண்டே
  வாய்பிளந்து கவிதையினைச் சுவைப்பேன்; சொந்த
எண்ணமெலாம் கவிதைக்கே என்றிட் டாலும்
  இவர்கலைகள் பலகற்ற அறிஞர்; அந்த
வண்ணமிகும் இலந்தையாரை வணங்கு கின்றேன்;
  வாயுதிர்க்கும் கவிதைமழை நனைவேன் நானே.
                             ----
கடற்பரப்பின் மேல்நடந்து காததூரம் சென்றடுத்த
          கரைசேர்ந்தே நின்றிடலாம்;
  காணுமொரு நிலவுமுகம் தனைத்தடவி விண்மீன்கள்
          கட்டியெடுத் திங்குவரலாம்;
உடற்பாரம் பஞ்சாக்கி உயர்வானக் காற்றேறி
          ஊர்வலமாய்ச் சுற்றிடலாம்;
  உள்ளத்தின் உள்ளிருக்கும் அழுக்குகளைச் சுட்டெரித்தே
          உலகத்தை வென்றிடலாம்;
மடல்திறந்த இமைமீதே காட்சிகளை வரிசையென
           மலர்ந்துவரச் செய்திடலாம்;
  மனமென்ற குரங்கையொரு மந்திரத்தா லாட்டுவித்து
           மாசற்ற தாக்கிடலாம்;
திடமான சித்தியுடைச் சித்தர்க ளால்மட்டும்
           சாதிக்க இவைமுடியும்;
  சித்தர்கள் பெருமையெலாம் சிந்தையுளே நிறுத்தியேநாம்
           சிரந்தாழ்த்தி வணங்கிடுவோம்.

ஆசைகளை வென்றிடலாம்; தீமைகளைத் தடுத்திடலாம்;
           அடுத்துவரும் செயல்வகுத்தே
  அதையுமொரு நடைமுறையில் உலவிவரக் கண்டிங்கே
           அன்றாடம் மகிழ்ந்திடலாம்;
காசையொரு பொருட்டாக மதிக்காமல் இவ்வுலகில்
            கனவாழ்வு வாழ்ந்திடலாம்;
  கருத்துக்குள் நடமாடும் பேய்களினை ஓட்டியங்கே
             கடவுளையே கண்டிடலாம்;
தூசையெலாம் போக்கியொளிர் துங்கமணிச் சோதியினைத்
             தூக்கியுளம் ஏற்றிடலாம்;
  தோன்றுமொரு பேரின்பம் தொடர்ந்துவரு மகிழ்ச்சிவெள்ளம்
              திளைத்திடலாம் மண்ணிலேயே;
ஆசைகளை விட்டவன்மேல் ஆசையினை வையென்றே
              அறிவுறுத்தும் சித்தருளம்
  அறிந்துவிடில் வாழ்க்கையினை அறிந்தவரா யாகிடுவோம்;
               அவனடியே குறுகிநிற்போம்

உள்ளிருக்கு மொருபொருளை வெளியிருக்கு மெனக்கருதி
                        ஓடியோடித் தேடுகின்றோம்;
     ஒருபோதுங் காணாமல் மனமோய்ந்து தளர்ந்தேநாம்
                          உளமொடிந்து வாடுகின்றோம்
கல்லிருக்கு மிடமெல்லாம் கடவுளிருப் பாரென்றே
                          காலமெல்லாம் புலம்புகின்றோம்;
      கருத்துக்குள் உள்ளொளியாய் விளங்குமொரு கடவுளைநம்
                            கவனத்துள் போற்றமாட்டோம்;
எள்ளிருக்கும்; அதற்குள்ளே எண்ணெயிருக் குமென்பதனை
                            இதயத்துள் உணர்ந்துவிட்டால்,
     இதயத்தைப் பிழிந்துள்ளே இருப்பவனைக் கண்டுவிட்டால்
                             இவ்வுலகில் வாழ்ந்தவர்நாம்;
கள்ளிருக்கும் போதையெனக் கருத்திருக்கும் சொற்களினைக்
                              கொட்டிடுவார் சித்தரெலாம்;
      மண்ணிருக்கும் வரையிந்த வாழ்விருக்கும் வரையந்தச்
                               சித்தரினை மறக்கமாட்டோம்.

அச்சமெனும் ஒருபேயை ஓட்டிவிடு; நெஞ்சுக்குள்
                                 அவன்நினைப்பைக் குடியேற்று
       அவலமென ஒன்றில்லை; ஆனந்த மென்றில்லை;
                                அனைத்துமொன்றாய் எண்ணிவிடு;
துச்சமெனத் துன்பத்தைத் துடைத்தெறிவாய்; மீட்டுமது
                                 தோன்றாமல் வழிவகுப்பாய்;
           தோணுவதுங் காணுவதும் அவனன்றி வேறில்லை;
                                   சிந்தைக்குள் அதைநிறுத்து;
மிச்சமென இருக்கும்நாள் அவன்நாளே என்றவனின்
                                    மென்பாதம் சரணடைவாய்;
             வித்தையெலாம் கற்றாலும் ஆட்டுபவன் அவனென்றே
                                   மனதுக்குள் பதித்துவிடு;
அச்சமிலை என்றுணர்த்தி அருள்வாழ்வு வாழ்ந்திட்ட
                                   அருளாளர் அவரென்றே
       அன்றாடம் சித்தரினை வணங்கிடுவோம் அவர்நம்மை
                                 அண்டிவந்தே அணைத்திடுவார்.

மூலாதா ரம்தொடங்கி ஆறாதா ரமனைத்தும்
                                முனைப்புடன்கை வரப்பெறுவார்
            முந்திவரு சித்தியெலாம் முன்கையி லாடிடவே
                                  மூவுலகும் வலம்வருவார்;
ஆலாதா ரமாம்வித்தே எத்துணைதான் சிறிதெனினும்
                                   ஆலமரம் விரிவதைப்போல்
               அண்டிவரு சித்தருமே ஆளுருவம் சிறிதெனினும்
                                    ஆற்றலிலே பெரியவர்காண்;
காலாலே கடல்கடப்பார் காற்றுவெளி மீதேறிக்
                                  கதிருடனே கைகொடுப்பார்;
         கடும்புலியும் நாயாகிக் கட்டியமே கூறிவரக்
                                   கானாட்டை ஆண்டிடுவார்;
ஆலகால நஞ்சினையும் அப்படியே விழுங்கிவிட்டே
                                  அப்புறமும் இயங்கிடுவார்;
              அவர்சித்தர்; அவர்காட்டும் அற்புதங்கள் சித்தியென
                                   அன்றாடம் வணங்கிடுவோம்.;  ; ;;.


  

No comments:

Post a Comment