Monday, October 22, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                           கம்பராமன்   
         காவியத்துக் கம்பராமன்
         காட்டுகின்ற சோதியென்றன்
         ஆவியெல்லாம் உருக்குதுள்ளே சென்று--கம்பன்
         ஆக்கிவிட்ட அவன்சிரிப்பான் நின்று.

         மாடமீது நின்றதேவி
         வளைத்தகண்ணின் வீச்சினிலே
         ஓடவிட்டான் நெஞ்சினையே மாயன்--மேலே
         உயர்ந்துள்ளம் பறிகொடுத்தான் தூயன்.

         பிரிந்தவர்கள் பிறந்துவந்து
         பூமிதனில் கூடியிங்கே
         விரித்தகதை மிதிலைகண்ட தன்று--அதை
         மனம்நினைத்தால் இனித்திடுமே என்றும்.

         தேவியினைப் பிரிந்தபின்னர்
         நடையிடறும் பாதமெல்ல
         மேவினவே கற்பரலின் மேலே--காடு
         மெத்தையென மாறியது கீழே.

         கங்கைநதி வேடனையே
         கட்டியவன் தம்பியெனச்
         சங்கையின்றி உரைத்ததென்ன பாங்கு--அவன்
         தளிரடிக்காய் என்றனுளம் ஏங்கும்.

        வஞ்சிமகள் சூர்ப்பநகை
        வாயுதிர்த்த சொற்களிலே
        கொஞ்சுதடி அவனழகு மேனி--எண்ணிக்
        குழையுதடி என்மனமும் நாணி.

        தேவமகன் கால்நடந்த
        தூசுபட்டுக் கல்லுயிர்த்துப்
        பாவையாகி வந்ததனைக் கண்டோம்--அந்தப்
        பெருவியப்பில் நாம்கல்லாய் நின்றோம்.

        தேவனையே கீழிறக்கி
        மனிதனென நடக்கவைத்து
        மேவியிங்கே காட்டுகிறான் வித்தை--கம்பன்
        வித்தைகண்டு நாம்முழுதும் செத்தோம்.

       ஆயுதங்கள் இழந்துவிட்டுச்
       சாய்ந்ததலை இராவணனைப்
       போயடுத்த நாள்வாநீ என்றான்--அந்தப்
       புகழுரையால் மானுடமாய் வென்றான்.

       மானுடமே வென்றகதை
       இராமனாலே நிகழ்ந்ததென
       ஊனுருகப் பாடினானே கம்பன்--அந்த
       உயர்கவிக்கே ஈடெந்தக் கொம்பன்.

       ஒருசொல்லும் ஓரில்லும்
       ஒருவில்லும் கொண்டுயர்ந்த
       ஒருவனையே போற்றிடுவோம் என்றும்--அவன்
       ஒருவனலால் வேறியாராம் இன்றும்.

       தருமத்தை வாழ்விக்கத்
       தாரமுடன் கான்புகுந்தே
       உருகிநின்றான் அவள்பிரிவால் நித்தம்--அந்த
       உருக்கத்தால் இலங்கைநாசம் மொத்தம்.

       குரங்கினத்தை அரக்கரினைக்
        கூட்டிட்டான் தம்பியெனக்
        கிறங்கடிக்கும் அன்பினையே காட்டி--அவர்
        கிறங்கிநின்றார் உயிரினையே நீட்டி.

        இராமநாமம் சொல்லிடுவோம்
        கம்பநாமம் போற்றிடுவோம்
        இராமனவன் வெற்றிபெற்றான் வில்லால்--இந்தக்
        கம்பநாடன் வெற்றிபெற்றான் சொல்லால்.      


 

No comments:

Post a Comment