Tuesday, November 6, 2012

திருமகள்

                        குற்றவாளிக் கூண்டில் "திருமகள்"
                                  ( சன் தொலைக்காட்சி )
                 நடுவர்; கவிக்கோ அப்துல் ரகுமான்

திருமகளே! உனைக்கூண்டில் நிறுத்திக்குற் றம்சாட்டல்
பெருமளவு கலக்கத்தை எனக்குத் தருகிறது.

ஆனாலும் என்னசெய்ய? அளவில்லாத் தவறுகளால்
தேனான ஓவியங்கள் சிதைபட்டுப் போயினவே!

செல்வத்தின் தேவதைநீ செய்தபல குற்றத்தால்
எல்லாத் திசைகளுமே இடிபட்டுப் போயினவே!

பொருளுக்குத் தேவதையாய்ப் பொறுப்பை உனக்களித்தால்
இருளுக்குத் தலைமைதாங்கி இவ்வுலகை நொறுக்கிவிட்டாய்;

நல்லவை வாழ்வுபெற ராணியென உனைவைத்தால்
அல்லவை ஆட்டமிட அனைத்தும் செய்துவிட்டாய்;

குற்றங்கள் தனையிந்த மன்றத்தில் வைக்கின்றேன்;
குற்றங்கள் எல்லாமே குணமெனவா திடவேண்டாம்;

உனைச்சேறும் துடிப்பில்தான் உயர்பாவச் சுழலாறு
தனைச்சேர்ந்து மூழ்கித் தவியாய்த் தவிக்கின்றார்;

செய்யாத குற்றங்கள் தொகைதொகையாய்ச் செய்வதெலாம்
அய்யோ உனைவீட்டில் அமர்த்திக் கொளத்தானே!

பணக்காரன் ஏழையெனப் பாரிலிரு சாதிப்பூ
மணக்கவைத்துச் சமுதாயம் மயங்க வைத்திட்டாய்;

உன்னருள் இல்லாதான் ஒப்பரிய மேதையென
நின்றாலும் இருக்குமிடம் தெரியாமல் சாகின்றான

உன்னருள் பெற்றவனோ பெரும்பேதை என்றாலும்
நின்று சுடர்வீசி நிலவைவாங்கப் பார்க்கின்றான்;

கொலைகொள்ளை பாவங்கள் எல்லாமே இங்கே
கலகலப்புக் காரியுன்றன் கண்வீச்சால் நடப்பவையே;

குப்பை கூளங்கள் கோபுரத்தில் ஏறுவதும்
தப்புத் தாளங்கள் முழங்குவதும் உன்னால்தான்;

பொருளற்ற ஏழைமகன் வாழ்க்கை முழுதுமோர்
பொருளற்றுப் போனதென்றால் புரிபவள் நீதானே;

பேரழகுப் பெட்டகமாய்ப் பொலிகின்ற பெண்வாழ்க்கை
சீரழிந்து மணமின்றிக் கருகுவதுன் புறக்கணிப்பால்;

பொருள்மலராத் தோட்டத்தில் பூமலர்ந்து பயனென்ன?
அருள்மலரா உன்றன் அணைப்பில்லை யெனும்போது;

படமாடும் கோவில் உண்டியலை நிரப்பும்நீ
நடமாடும் கோவில் வயிற்றைப் புறக்கணிப்பாய்;

காசற்ற மகனையவன் கட்டி யவள்கூட
நேசமுடன் மதிப்பதில்லை; நெஞ்சார அணைப்பதில்லை;

பாசங்கள் எங்கோபோய்ப் பதுங்கிப் புதைந்தோட
மோசங்கள் கொடிகட்டி விளையாடச் செய்கின்றாய்;

குடியாட்சி தனையுன்றன் மடியாட்சி யாக்கிவிட்டுத்
தடியாட்சி தழைத்தோங்கத் தடம்போட்டு விட்டாய்நீ;

கோபுரங்கள் சாய்வதும் குப்பைவான் பறப்பதும்
நூபுர ஒலிநங்காய்!  நீவீசும் புயலால்தான்;

சாதிப் பயிர்வளரத் தழையுரமா யாகின்றாய்;
நீதி வளைவதற்கும் நீண்டகை யளிக்கின்றாய்;

நல்லவர்க்கு நரகத்தை இவ்வுலகில் காட்டிவிட்டு
அல்லவர்க்குச் சொர்க்கத்தை அளித்து மகிழ்கின்றாய்;

இப்போது சொல்நீ!  இந்தஉன்  குற்றங்கள்
தப்பாமல் உலகத்தைச் சாய்த்ததா? இல்லையா?

"மன்ற நடுவரே!  மனதில் நிறுத்துங்கள்;
 என்றும் இவ்ளிடத்தில் இரக்கமே காட்டாதீர் !

தீர்ப்பு இப்படி இருக்கட்டும்;

"நூறாண்டு கடுங்காவல் நலிந்தோரின் குடிசைக்குள்"
யாராண்டு வந்தாலும் தண்டனை நிலைக்கட்டும்;  ;                             

No comments:

Post a Comment