Saturday, September 22, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                                         நானும் கவிதையும்

   பாடுபொருள் முடிவானவுடன், எந்த வடிவத்தில் இதைச் சிறப்பாகச்
செய்யலாம் எனச் சிந்தித்து வடிவத்தை முடிவு செய்வேன்.
   பாடுபொருளும், வடிவமும் முடிவானதும் ஓர் உணர்வு நிலைக்குச்
சென்று விடுவேன்.சொல்லாட்சி நடமிடத் துவங்கும்.
   பாடுபொருள், வடிவம், உணர்வுநிலை - இம் மூன்றும் சொல்லாட்சி
யைத் தேர்வு செய்கின்றன.
   கவிதை உருவானதும் மறுபடி, மறுபடி படித்துப் பார்ப்பேன்.
பெரும்பாலும் மாற்ற வேண்டிய சொற்கள் இரா. அப்படி இருப்பின்
மாற்றி அமைத்து விடுவேன்.
   சொல்லாட்சிக்கு முதலிடம் கொடுப்பேன்." எந்தப் பொருளை, எந்தச்
சொல்லால், எப்படிச் சொல்ல வேண்டுமோ, அந்தப் பொருளை, அந்தச்
சொல்லால், அப்படிச் சொல்லப் பெரு முயற்சி செய்வது கூட உண்டு.
   கவிதை நிறைவு பெற்றதும், படிப்போர் சுட்டும் குறைகளைக் கேட்டுக்
கொள்வேன்.சொல்மாற்றம் சொன்னால் நான் மாற்றுவதில்லை.
   காரணம்,
கவிஞன் ஏதோவோர் உணர்வுநிலைக்குச் சென்று, கவிதை உருவாக்கும்
போது சொல்லாட்சி நடக்கிறது. அந்த உணர்வுநிலையில் அவன் தேர்ந்
தெடுத்த சொல் அங்கே இடம் பெறுகிறது, பின்னொருநாள் கவிஞனே
அந்த உணர்வுநிலைக்கு மீளச் செல்ல முடியாது என்பதே உண்மை.
பின் ஏன் சொல்லாட்சியை மாற்ற வேண்டும்?
   என் ஒரு கவிதையை என் நண்பர் பார்த்துத் திருத்தம் சொல்கிறார் என
வைத்துக் கொள்வோம்; நானும் அவர் சொல்வதை ஏற்று இரண்டு
இடங்களில் சொற்களை மாற்றிவிட்டால் அதன்பின் அந்தக் கவிதை
முழுமையாக என்னுடையதாக எப்படி இருக்க முடியும்?
   இரண்டு இடங்களில் அவர்தம் சொல்லாட்சி அல்லவா சிரித்துக்
கொண்டிருக்கும்!
   இன்னொன்று;
நண்பர் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமல்லவா? என்று குறிப்பிட்டுப்
பரிந்துரைக்கும் சொற்கள், கவிதை உருவாகும் போது எனக்கும் தெரிந்த
சொற்கள்தாமே; பின் ஏன் அவை தவிர்க்கப் பட்டன? அதை முடிவு செய்தது
அந்த உணர்வுநிலைதான்
   எனவே, கவிதை, நிறை, குறைகளோடு அப்படியே இருக்க வேண்டும்.
ஆய்வாளன் அதைச் சுட்ட வேண்டும். அவன் சுட்டுவான்.
   சுவைஞன் கதையே வேறு. இருவரும் ஒருவராக இருத்தல் அரிது.
இருக்கிறார்கள்.
   இவை எல்லாமே வளர்ந்து, முதிர்ந்து, புகழ்பெற்ற கவிஞர்கட்கு
மட்டுமே.
               ------         ----            ----
   உங்கள் இசைவுடன் யாப்பிலக்கணம் பற்றிக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாம்
எனக் கருதுகிறேன். யாரும் தவறாகக் கொள்ளற்க.
   அடிப்படை அலகுகள் நேர், நிரை, என இரண்டு.
   தனிக்குறில்,தனிக்குறில் ஒற்றடுத்து, தனிநெடில், தனிநெடில் ஒற்றடுத்து
வருவது நேரசை யாகும்.
   குறிலிணை, குறிலிணை ஒற்றடுத்து, குறில்நெடில், குறில்நெடில் ஒற்றடுத்து
வருவது நிரையசையாகும்.
   இவை ஈரசைச் சீர்களை உருவாக்கும் போது, நேர்நேர்--தேமா, நிரைநேர்--புளிமா,
நிரைநிரை--கருவிளம், நேர்நிரை--கூவிளம் என வரும்.
   மூவசைச் சீர்கள் உருவாகும் போது, இவைகளுடன் நேர் சேர்ந்தால், தேமாங்காய்,
புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் என வரும்.
   நிரை சேர்ந்தால் கனிச்சீராகும்.
   இவ்வளவுதான் நம் அடிப்படை இலக்கணம்.விளாங்காய்ச் சீரென ஒன்றில்லை.
ஆனால் அப்படி ஒன்றை உருவாக்கலாம் என கி.வா.ஜ. குறித்திருக்கலாம்.
   ' நமசிவாய வாழ்க' என்பதில் முதற்சீரைக் கருவிளங்காய் எனக் கொள்ளலே
நலம்.கருவிளாங்காய் என்பது தேவையில்லை.(இது என் கருத்து)
   நம் இலக்கணம் மிகவும் நெகிழ்ச்சியுடையது. அதையும் மீறியே புதுக்கவிதைகள்
தோன்றின.
   புறம். கலி. இவைகளைப் பார்த்தால் மரபின் நெகிழ்ச்சி தெரியவரும்.
   ' இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்பலின்' என்பதே உண்மை.
   புதிய வடிவங்கள் உலாவந்து, நிலைபெற்று விடின்,அங்கே புதிய இலக்கணம்
தோன்ற வேண்டும்.தமிழ் இலக்கணம் அப்படித்தான் வளர்ந்துள்ளது.
அதனாலேயே தமிழ்மொழி என்றும் நிலைத்து வாழ்கிறது.



No comments:

Post a Comment