Saturday, May 4, 2013

நகையே தொழில்

             நகையே தொழில்

புன்னகை யொன்றினால் என்னுளங் கொன்றிடும்
   பெண்ணவள் செயலினைக் கண்டு--சிந்தை
   பின்னிடத் தயங்கினேன் நின்று--அவள்
கண்ணசை வொன்றென தெண்ணமே கொண்டிடக்
   கன்னிபால் உளத்தினை வைத்தேன்--அந்தக்
   கண்ணினில் இதயமே வைத்தேன்.

குறுநகை தந்தெனைப் பெருமகிழ் வாக்கியே
   குழறிடும் வெறியனாய்ச் செய்தாள்--இன்பக்
   கொப்பரை நெய்யினைப் பெய்தாள்--காதற்
சிறுமுகை பூத்துமே செறிமணம் ஈத்திடச்
   செழுங்கன வதனிடை ஆழ்ந்தேன்--அந்தச்
   செங்கனிச் சுவைபெற வாழ்ந்தேன்.

புலர்ந்திடு போதினில் அலர்ந்திடு பூவினிற்
   பொலிமணம் எவர்க்குமே சொந்தம்--அதைப்
   பெறுபவர் புவியினில் அனந்தம்--அங்ஙன்
மலர்ந்திடு பூநகை அலர்ந்திடக் கவர்ந்திடு
   மங்கையும் பொதுவென அறிந்தேன்--அந்த
   மாய்நகை தொழிலெனத் தெரிந்தேன்.
                ----24-04-60

No comments:

Post a Comment