Friday, May 10, 2013

கட்டுப்பாடு


        கட்டுப்பாடு

அப்பாவென் றொருகுழந்தை அருகில் வந்தே
   அடிவயிற்றைக் காட்டிப்பின் ஏதோ சொல்லும்;
இப்பாலோர் சேய்வந்தே இடுப்பில் தொத்தி
   இன்றேயும் பட்டினியா? என்று கேட்கும்;
அப்பாவோ எமைநீயேன் பெற்றா யென்றே
   அறிவறிந்த பிள்ளையவன் அழுவான் நின்றே;
இப்பாலும் அப்பாலும் தாயின் மார்பை
   இழுத்தாலு மேதுமிலா தேகு மொன்று.

'பெற்றுவிட்ட குழந்தைகளின் பசியைப் போக்கிப்
   பேணவழி யில்லார்க்குப் பிள்ளை ஏனோ?
எற்றுக்கோ இந்தவின்பம் வேண்டாம் சீச்சீ!
   இனிப்பிரமச் சரியமிதே நல்ல மார்க்கம்;
இற்றைக்கு முதலாய்நான் மனையாள் பக்கம்
   ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. கட்டுப் பாடே;
வெற்றுக்குப் பெற்றெடுத்தல் தீமை;" என்றே
   வெளித்திண்ணை படுத்திட்டான் வெறுப்பு மிக்கு.

வெறுத்தொதுங்கிப் படுத்திட்ட அன்று சென்று
   வேனிலொடு பருவங்கள் மாறி, வானில்
கறுத்துநிற்கும் மேகமது காரைக் காட்டக்
   கடுகிவிரைந் தோடியதே ஆண்டின் ஒன்று;
வெறுத்துவிட்டுக் கட்டுப்பா டேற்ற நல்லன்
   வெளித்திண்ணை யிருக்கக்கண் டென்ன வென்றேன்;
சிரித்துக்கொண் டவன்சொன்னான்; " ஒருநா ளேதான்
   சேர்ந்திருந்தோம் மனையிலதோ இடுப்பு நோவு."
     
         -----'தமிழ்நாடு  ஞாயிறு மலர்--23--04--67'

No comments:

Post a Comment