Saturday, May 4, 2013

பாடும் பயனும்

                    பாடும் பயனும்

   கட்டவிழ் கமல நாப்பண்
     கமழ்விரி முல்லை யூடு
   மொட்டவிழ் கொன்றைக் காடு
     முகிழ்த்திடு மல்லி யேனை
   எட்டிய மலர்கள் கூட்டத்
     திடைநுழைந் ததனில் தேனைக்
   கிட்டிய மட்டு மாக்கிக்
     கூட்டுதல் தேனீப் பாடு;

   காட்டிய ஏவ லாக்கிக்
     கையதை மெய்மேற் கட்டிப்
   போட்டசில் லுணவை யுண்டு
     பொழுதெலா மவர்க்கே பாடு
   பட்டுநற் பயன்கள் யாவும்
     பணத்தோ டவர்பாற் சேர
   ஈட்டிய செல்வங் கண்டே
     ஏங்குத லுழைப்போர் செய்கை;

   பட்டவர் பயனைக் காணார்;
     படுதலே அவர்தங் கொள்கை;
   ஈட்டிய தேனில் நன்மை
     ஈக்களே காண்ப தில்லை;
   வாட்டிய உழைப்பி னாக்கம்
     வறியவர் பெறுவ தில்லை;
   கூட்டிய பயனைக் கொள்ளை
     கொடுத்துவிட் டேங்கு வாரே!

No comments:

Post a Comment