Friday, April 11, 2014

குப்பைக்கோழிகள்

                      குப்பைக் கோழிகள்

நண்பன் நானெது செய்தாலும் - அதில்
   நாற்பது குறைகள் சொல்லிடுவான்;
என்றும் என்செயல் நலக்கூற்றை--அவன்
   இம்மி யளவும் காண்பதில்லை.

என்னவள் என்றன் செயல்களிலே--என்றும்
   எந்த நலமும் காண்பதில்லை;
அன்றும் இன்றும் என்றைக்கும்-- வாழ்வில்
   அவளிடித் துரைப்பவை குறைகளையே.

உறவு நெருக்கம் எல்லாமே - என்னை
   உரசிக் காண்பவை குறைகளையே.
தெரிபவை அவர்க்கே என்னிடத்தில்--உள்ள
   தவறு வழுக்கல் இவைகள்தாம்.

யாரிடம் குறைகள் இங்கில்லை?--வாழும்
   யாரெவர் குறையே இல்லாதார்?
யாரெவர் நிறைபண் பிருப்பிடமாம்--மண்ணில்
   அப்படி யிருப்பின் அவர்தெய்வம்.

குறைகள் நிறைகள் கலந்தவைதாம்--நம்முள்
   குலவும் மனித இனமெல்லாம்;
குறைகள் மிகுந்தால் கீழினமாம்--நிறைவே
   குறையா திருப்பின் தெய்வஇனம்.

என்னைப் பார்ப்பவர் எனைக்கிளறி--அங்கே
   எடுப்பவை யெல்லாம் குறைகளெனில்
மண்ணில் குப்பைப் புழுக்களையே--கிண்டி
   மகிழும் கோழிக் கவருறவா?

குப்பையைக் கிண்டும் கோழியிடம்--நல்ல
   கோமே தகமே கிடைத்தாலும்
அப்படி யேயதை உதைத்தெறியும்;--மண்ணில்
   அவைகளின் தேடல் புழுக்கள்தாம்.

அப்படிப் பழக்கம் மனிதர்க்கே--என்றும்
   அடிப்படைப் பண்பாய் ஆகலாமா?
குப்பைக் கோழி யாகாமல்--மற்றவர்
   குணங்கண் டவரைப் போற்றிடுவோம்.
                   01--10--2010

No comments:

Post a Comment