Friday, July 17, 2015

பாரதி பிறந்தான்



                    பாரதி பிறந்தான்

       பாரதி  பிறந்தான்எங்கள்
       பாரதி  பிறந்தான்;

தூங்கு  மிந்த நாட்டு மக்கள்
   துடித்தெ ழுந்தே நிமிரவும்
ஏங்கு கின்ற நெஞ்சம் பொங்கி
   எழுச்சி கொண்டே துள்ளவும்   --( பாரதி )

அடிமை வாழ்வின் சுகத்தில் இன்பம்
   அடைந்து நாளும் தூங்கிடும்
மிடிமை போக்கி விடிவைக் காட்டும்
   மேன்மைக் கதிரோன் என்னவே

சாதிப் பேயைத் தூர ஓட்டும்
   சக்தி மிக்க தெய்வமாய்
நாதி யற்ற மக்கள் வாழ்வை
   நிமிர்த்து கின்ற செல்வமாய்

பெண்ணி னத்தின் விலங்கு யாவும்
   பொடிப்பொ டியாகிச் சிதறியே
கண்ணின் நீல மணிகள் என்றும்
   கதிரை வீசி நிற்கவே

நாட்டின் வேத தத்து வங்கள்
   நெஞ்சி னிக்கும் உயர்வுகள்
கூட்டிப் பாடி நாட்டு மேன்மைக்
   கொடியு யர்த்தும் வேந்தனாய்


சக்தி சக்தி யென்று பாடிச்
   சிந்தை தன்னை உழுதுமே
பக்தி யென்னும் பயிர்வி ளைத்துப்
   பரவ சங்கொள் பக்தனாய்

கீதை சொன்ன ஞானக் கண்ணன்
   கைகள் கோத்த நண்பனாய்ப்
பாதை யொன்று புதிதாய்க் காட்டும்
   பழுத்த சிந்தை ஞானியாய்ப்       ( பாரதி )

ஆடை காக்கத் துடிக்கு மந்த
   அபலைப் பெண்ணின் காட்சியில்
பீடி ழந்தே அடிமை யான
   பார தத்தைக் கண்டவன்.

வீர மில்லா நாய்க ளென்று
   வெடிக்கும் சொற்கள் வீசியே
தீர மில்லாக் கோழை நெஞ்சில்
   திராவ கத்தை எறிந்தவன்.       ( பாரதி )
    
       ------------------------- 07-12-99



   

No comments:

Post a Comment