Friday, July 17, 2015

பாட்டுணர்வு நமக்கெதற்கு?



                           பாட்டுணர்வு நமக்கெதற்கு ?

அன்புடைய கவிஞர்காள்! உங்கள் நெஞ்சின்
   அலைவீச்சில் எதிர்நீச்சல் போட்ட துண்டா ?
அன்றாடப் பயன்கருதி நெஞ்சம் ஓடும்;
   ஆர்ப்பாட்டப் பாட்டிற்குச் சுருதி சேர்க்கும்;
வென்றானைப் பாராட்டிப் பரணி பாடும்;
   மேன்மேலும் பொருள்சேர்க்க வழிகள் நாடும்;
நின்றாடும் இந்தநெஞ்சும் அறிவும் மோதி
   நிகழ்த்துகின்ற போரினைநீர் வென்ற துண்டா ?

உம்கவிதை தீயோரைச் சுட்ட துண்டா ?
   உயர்பதவி இருப்போர்கள் தவறு செய்தால்
உம்கவிதை அதைச்சீறிப் பாய்ந்த துண்டா  ?
   ஒடுங்காமல் நடுங்காமல் நிமிர்ந்த துண்டா ?
வம்புசெய்யும் குண்டர்தம் அடித டிக்கே
   வளையாமல் அவர்குற்றம் சொன்ன துண்டா ?
உம்கவிதை கட்சிக்குள் அடைபட் டாலும்
   உண்மையினை அஞ்சாமல் உரைத்த துண்டா ?

குடியாட்சி தடியாட்சி ஆன போது
   கொதிவெந்நீர் மழையாகிப் பொழிந்த துண்டா ?
குடியாட்சி வேரினிலே வெந்நீர் கொட்டும்
   கொடும்பாவி முகத்தினிலே உமிழ்ந்த துண்டா ?
நொடிப்பொழுதில் அதர்மங்கள் கிருமி யாகி
   நாட்டினையே அழிப்பதைநீர் எதிர்த்த துண்டா ?
கடிக்கவரும் புலிஓநாய் இவைகள் முன்னே
   கம்பீர மாய்க்கவிதை படித்த துண்டா?



இத்தனையும் செய்துபார்க்க எனக்கும் ஆசை;
   இடுப்பொடிந்து போய்விடுமோ என்ற அச்சம்;
இத்தகைய அச்சமொடு பேடி மையும்
   யார்யார்க்கோ அடிமையாகும் கோழை நெஞ்சும்
எத்தகைய மனிதனுக்குங் கூடா தென்றே
   இடித்துரைத்தான் நம்கவிஞன்; ஆனால் உள்ளே
எத்தகைய புரட்சித்தீ கொழுந்து விட்டே
   எரிந்தாலும் அதைப்பாடத் தயங்கு கின்றோம்.

ஏனென்று நானிங்கே சொலவா வேண்டும் ?
   இதயத்து நெருப்பைவெளிக் கொட்டித் தீர்த்தால்
ஏனென்று கேட்பதற்கே நாதி யின்றி
   இந்தமண்ணில் அக்கவிஞன் எரிப டானா ?
தேனென்று நஞ்சினையே பாடித் தீர்த்தால்
   செத்தாநாம் போய்விடுவோம் ? என்று தானே
நானின்று நினைக்கின்றேன்; அய்யோ பாவம் !
   நெஞ்சுறுதி புதைத்தவனுக் குய்தி உண்டா ?

காவலர்கள் செயுந்தவற்றைப் பாடி னால்நான்
   கண்மூடித் திறப்பதற்குள் சிறைவா சம்தான்;
மேவிவரும் அராசகத்தைத் திட்டி னாலென்
   மென்னிநெரி பட்டுயிரை இழப்ப துண்மை;
தாவிவருங் குண்டர்க்கு முன்னே என்றன்
   சத்தியமும் நேர்மையுமே பதுங்கி யோடும்;
பாவிமகன் என்கையில் கவிஎ தற்கு ?
   பாட்டுணர்வைக் கடலுக்குள் எறிந்தா லென்ன ?

                              கண்ணதாசன்பிப்- 2002

No comments:

Post a Comment