Sunday, December 6, 2015

நீர் பேசுகிறது

                     நீர் பேசுகிறது

நானின்றேல் நீரில்லை; உம்மு டம்பில்
   நேர்பாதிக் கதிகம்நான்; ஆட்ட மெல்லாம்
நானிருக்கும் வரையேதான்; உடம்பி லுள்ள
   நீர்வற்றிப் போய்விட்டால் அழகா யுள்ள
மேனிவற்றிப் போய்விடுமே ! உயிரு மந்த
   மேலுலகம் போய்விடுமே ! ஆகை யாலே
நானிருக்கும் போதேநீர் செய்ய வேண்டும்
   நல்லசெயல் அத்துணையும் செய்து தீர்ப்பீர் !

பட்டெடுக்க வேண்டுமென்று படுத்து கின்ற
   பாவைகண்ணில் பனித்துளிபோல் உருவெ டுப்பேன்;
பட்டெடுக்கக் கணவனவன் மறுத்து விட்டால்
   பாய்ந்துவீழ்வேன் அவள்கண்ணில் அருவி யென்ன.
பட்டெடுத்து விட்டாலோ கடனைத் தீர்க்கப்
   படுகின்ற அவன்கண்ணில் ரத்த மாவேன்;
இட்டஅடி நோகவரு பெண்க ளுக்கே
   இணையற்ற ஆயுதமாம் கண்ணீ ராவேன்.

சிவனென்னைத் தலைமீது தாங்கிக் கொண்டான்;
   திருமாலோ என்மடியில் பள்ளி கொண்டான்;
சிவகுமரன் அறுமுகமாய் என்னி டந்தான்
   தோன்றிட்டான்; கணபதியோ துணையைத் தேடிச்
சிவனேயென் றென்கரையில் அமர்ந்து விட்டான்;
   திருமகளும் கலைமகளும் பிரம்மா என்னும்
அவனுமென்றன் மீதலர்ந்த மலர்கள் மேல்தான்;

   அருந்தெய்வ மத்துணையும் அடக்கம் என்னுள்

No comments:

Post a Comment