Sunday, December 6, 2015

எதற்கு நான் பாடுகிறேன் ?

                      எதற்கு நான் பாடுகிறேன் ?

நானொரு கவிஞன் ஐயமில்லைஇதை
   நான்தான் சொல்வேன் நூறுமுறை;
நான்சொலும் எல்லாம் நற்கவிதைஎன
   யார்சொல வேண்டும்? நான்தானா ?

பள்ளியில் படித்தவை மிகச்சொற்பம்வாழ்வில்
   பட்டுக் கற்றவை மிகஅதிகம்;
சொல்லிவைப் பேனதைக் கவிதைகளில்யார்நான்
   சொன்னதைக் கேட்டுத் திருந்துகிறார் ?

உள்ளே பதியாக் கவிதைகளைக்  கற்போர்
   உளத்தைத் திருத்தாக் கருத்துகளை
வெள்ள மெனப்பொழிந் தென்னபயன் ?— அவை
   வீணே பாறையில் விதைத்தவைதாம்.

ஆண்டுகள் பலவாய்த் தீமைகளைஉலகின்
   அடிவேர்க் கிருமி ஊழலினை
ஈண்டழித் திடவே பாடினேன்நான்; -- மண்ணில்
   எங்கே அழிந்தன அவையெல்லாம் ?

நல்லறம் தழைக்க வேண்டுமெனஇங்கே
   நற்கவி மழையைப் பொழிந்திட்டேன் ;
நல்லறம் தழைப்பதாய்த் தெரியவில்லை ;-- தீயவை
   நாட்டில் குறைவதாய்த் தோன்றவில்லை.

வள்ளுவர் சொல்லா அறிவுரையா ? –அவர்
   வகுத்துக் காட்டா நெறிமுறையா ?
உள்ளே அவருரை பதிந்ததுண்டா? – குறளால்
   உயர்ந்து மன்பதை நிமிர்ந்ததுண்டா ?

எத்துணை எத்துணை நீதிநூல்கள் ? –அறமாய்
   எத்துணை எத்துணை பெட்டகங்கள் ?
எட்டுணை யேனும் ஏற்றதுண்டா ? –மண்தான்
   ஏற்றம் பெற்றே உயர்ந்ததுண்டா ?

பின்னெதற் கிங்கே எழுத்தெல்லாம் ? –வெறும்
   பொழுது போக்காய்ப் படிப்பதற்கா ?
இன்னும் எதற்குநான் பாடுகிறேன் ? –என்னை
   ஏற்று நடக்கவோர் ஆள்வருமா


No comments:

Post a Comment