Thursday, June 23, 2011

அதுவே சோலை



அதுவே சோலை

புயலைச் சிறுசிமி ழில்அடைத்தே - காலைப்
பணியை அதிற்குழைத்துப் போட்டே
அயலே இருப்பவர்க் கே அளித்தேன் - அவர்
ஆகா இது இனி மை என்றார்.

வேம்பின் காயரைத்துப் போட்டே - அதில்
மெல்லிசைச் சொல்லடுக் கிச்சேர்த்தே
வீம்பிலாச் சுவைஞரி டம்தந்தேன் - அவர்
மிதக்கிறோம் தேனாற் றில்என்றார்.

தென்றலைச் சிறைப்பிடித் தேவந்து - கீற்றுத்
தென்னைச் சலசலப் பைச்சேர்த்து
முன்றிலில் உலவிவ ரச்செய்தேன் - ஆகா
மூளு மிதுகவி தைஎன்றார்.

தீயின் நாக்குளி ரச்செய்தே - அதில்
சிறகுடன் கற்பனை கள்போட்டேன்
தீயின் சுடர்நடு வேசுவைகள் - கண்டே
சிறந்த கவிதை இதோஎன்றார்.

இரவின் விண்மீன் கள்பறித்தே - அவற்றுக்
கெழிலுற வேசந் தம்சேர்த்துக்
குறைவிலாத் தோரண மாய்ச் செய்தேன் - அதைக்
கவிதை வானமென் றேசோன்னார்.
  
தீமைச் சிறகுக ளைக்கொய்தே - அவற்றைத்
தூய கவிநெருப் பில்போட்டேன்
தீமையெதும் எரிந்திட வேயில்லை - என்னைத்
தின்றிட முயல்வதைன் நான் பார்த்தேன்.

ஊழற் புற்றுநோய்ப் பூதமேயிந் - நாட்டின்
ஊனத் திங்கா ரணமென்றேன்
ஆழக் கிழங்கைய கழ்ந்தெடுக்க - இங்கே
ஆரும் முனைந்திட வேகாணோம்

என்னைத் தான்பல ரும்முறைத்தார் - கவிஞன்
இவனுக் கேனிக் கொழுப்பென்றார்
வண்ணக் கவியுனக் குப்போதும் - தீமை
வகையுணர் பார்வைவேண் டாமென்றார்.

என்னதான் இப்பொழு துநான் செய்ய? - கால
இருப்பினைக் காட்டுத லேதப்பா?
கண்ணா  டிதானிங் கேகவிதை - என்னும்
கருத்தெலாம் ஒதுக்கிவிட் டாபாட?

அப்படி ஒருகவி யேவேண்டாம்! - செல்வ
அணிவகுப் பும்விரு துமே வேண்டாம்
இப்படி யேபா டித்திரிவேன் - கிடைப்ப
திடுகா டேயெனி னுமதுசோலை.


No comments:

Post a Comment