Thursday, June 23, 2011

எழுத்தெதற்கு ?


எழுத்தெதற்கு ?

பார்வையில் கூர்மை மிகவேண்டும் - கண்ணிற்
பளிச்சென உண்மை படவேண்டும்.
சீர்மையைப் போற்றும் திறம்வேண்டும் - நிலவும்
தீமைகள் சாடும் உரம்வேண்டும்.

அல்லவை செய்வோர் தமைக்கண்டால் - பாட்டால்
அடிக்கும் துணிவு வரவேண்டும்
நல்லவை செய்வோர் பாதமலர் - போற்றி
நாளும் வணங்கும் உளம்வேண்டும்.

அதிகா ரத்தின் வால்பிடித்தே - வாயால்
அனுதினம் புகழா மனம் வேண்டும்.
எதுதான் வந்து மோதிடினும் - எழுத்தில்
இழுக்குச் சேரா நெறிவேண்டும்

அடிதடிக் கும்பல் அதட்டலுக்கே - சற்றும்
அஞ்சாத் துணிவு மிக வேண்டும்
இடித்துப் பொடியா யாக்கிடினும் - நத்தம்
எழுத்து எழுந்து வர வேண்டும்

பள்ளமே கிடப்போர் மேடுவர - எழுதிப்
பாதிப் புக்கள் தரவேண்டும்.
உள்ளமே நொந்து கிடப்போரை - மயில்
இற்காய்த் தடவும் திற்ம் வேண்டும்.

நல்லவை இவைகள் இல்லையெனில் - இந்த
நாட்டில் எழுத்தே எதற்காக?
அல்லவை ஒழிக்க வில்லையெனில் - எழுத்தே
அரும்புவ தெல்லாம் எதற்காக?

No comments:

Post a Comment