Saturday, July 28, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                             பாவேந்தர்

பூவேந்தி நிற்கின்ற இதழ்க ளெல்லாம்
  பொலிவுடனே என்றென்றும் நிலைப்ப தில்லை;
காவேந்தி நிற்கின்ற மரங்க ளெல்லாம்
  கனிகாய்கள் என்றென்றும் தருவ தில்லை;
நாவேந்தி நாம்துப்பும் சொற்க ளெல்லாம்
  நல்லினிமை தந்தென்றும் திகழ்வ தில்லை;
பாவேந்தர் நாவேந்தி உதிர்த்த சொற்கள்
  பைந்தமிழில் என்றென்றும் இனிக்கக் கண்டோம்.

இயற்கையினைப் பாடினாலும் இனிக்கும்; நாட்டை
  இடித்துரைத்துப் பாடினாலும் இனிக்கும்; சமய
மயக்கத்தைப் பாடினாலும் இனிக்கும்; ஏழை
  மக்களினைப் பாடினாலும் இனிக்கும்; பெண்கள்
செயற்கையழ குணர்த்தினாலும் இனிக்கும்; அன்னார்
  சிரிப்பழகைப் பாடினாலும் இனிக்கும்; சற்றும்
மயக்கமில்லாச் சொற்கூட்டி எதைச்சொன் னாலும்
  மனசெல்லாம் இன்பமழை பொழியு தந்தோ!

பாரதியின் தாசனென ஆனார்; அய்யர்
  பாட்டுக்கே நானடிமை எனஉ ரைத்தார்;
பாரதியை இகழ்ந்துவிட முனைவோர் தம்மைப்
  பளிச்செனவே அறைவதுபோல் பாடல் தந்தார்;
பாரதியின் சமுதாயப் பார்வை வித்தைப்
  பரந்துநிற்கும் ஆலமர மென்ன வாக்கி
வீரமுடன் தீரத்தைக் காட்டிச் சொல்லால்
  வெல்லுகின்ற கவிதைகளை விதைத்து நின்றார்.

பெண்களினை எவரிவர்போல் பார்த்தார்? பெண்கள்
  படுந்துயரை எவரிவர்போல் இடித்து ரைத்தார்?
புண்நிறைந்த சமுதாய உடலில் தூய
  புதுரத்தம் எவரிவர்போல் பாய்ச்சி நின்றார்?
கண்களெனும் பெண்களிங்கே கைம்பெண் ணாகிக்
  கோரிக்கை யற்றதொரு வேர்ப்ப லாவாய்க்
கண்குருதி சிந்திடவே நையும் காட்சி
  கவிதையிலே எவரிவர்போல் பாடி வைத்தார்? 

No comments:

Post a Comment