Thursday, November 8, 2012

அவன் கணக்கும் இவன் கணக்கும்

               இவன் கணக்கும்--அவன் கணக்கும்
         (கலைமகள் மார்ச் 2000-கி வா. ஜ.நினைவு
             மரபுக் கவிதைப் பரிசு )

இறைவனொரு கணக்கினையே போட்டு மாந்தர்
   இனத்தினையே படைத்திட்டால் அந்த மாந்தன்
மறைவாகப் பலகணக்குப் போட்டு மேலோன்
   மனக்கணக்கைத் தலைகீழாய் மாற்றி அந்த
இறைவனையே குழப்பிவிட்டு மீன்பி டிப்பான்;
   இந்தமண்ணை விருப்பம்போல் ஆட்டி வைப்பான்;
இறைவனுக்கே விதியெழுதும் அவனா? எல்லாம்
   இயக்குகின்ற இறையவனா? யார்தான் மேலோன்?

மனிதஇனம் அவன்படைத்தான்; சாதி யென்னும்
   ' மனக்கொல்லி'  இவன்படைத்தான்; சிந்திக் கின்ற
மனங்களையே அவன்படைத்தான்; தமக்குள் மோதும்
   மதங்களையே இவன்படைத்தான்; பொங்கும் செல்வ
இனங்களையே அவன்படைத்தான்; ஏற்றத் தாழ்வாம்
   இதயநோயை இவன்படைத்தான்; இவன்ப டைப்பால்
மனமயங்கிக் கிறுகிறுப்பான் இறையே என்றால்
   வல்லானின் வாய்க்காலுக் கணைகள் ஏது?

நல்லறத்தை ஒழுக்கத்தைக் கழித்து விட்டோம்;
   நாள்தோறும் போகாத பாதை யில்போய்
அல்லறத்தைத் தீமையினைப் பெருக்கி விட்டோம்;
   அடிதடியும் அடாவடியும் கைக்கொண் டால்தான்
நல்லதெனும் ஒருவழியை வகுத்து விட்டோம்;
   நாசங்கள் மோசங்கள் கூட்டி விட்டோம்;
சொல்லுங்கள் காலமெனும் புத்த கத்தில்
   சுகமான கணக்காநாம் போடு கின்றோம்?

பொய்முகங்கள் வணங்கப்பட் டுயரும் போது,
   பொழுதெல்லாம் தவறுகளில் குளித்து நிற்போர்
பொய்முழக்கம் வேதமென ஆகும் போது,
   பொல்லாங்கின் கொடியுயரப் பறக்கும் போது,
மெய்மையிங்கு குத்துப்பட் டலறும்போது,
   மேலோர்கள் மிதிபட்டுச் சாகும் போது,
மெய்யாக வாய்மையினைப் போற்றி வாழும்
   மனக்கணக்கின் விடைசரியாய் வருமா? சொல்வீர்!

சத்தியத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டுத்
   தர்மத்தின் குரல்வளையை நெரித்து விட்டு,
நித்தமுமே நேர்மையினைச் சிறையில் தள்ளி,
   நெஞ்சாரப் பொய்மைக்கே மாலை யிட்டுச்,
சத்தமிட்டே அதர்மத்தை மேடை யேற்றிச்,
   சிரிக்கின்ற குடியரசில் உண்மை யாகச்
சத்தியந்தான் வாழ்கிறதா? இவ்வி னாத்தான்
   சத்தியமாய் நெஞ்சுகளைக் கீறி நிற்கும்.

மனிதாபி மானத்தைக் காண வில்லை;
   மனத்தினிலே நல்லெண்ணம் பூப்ப தில்லை;
இனிதான சொற்களிங்கு வீழ்வ தில்லை;
   இடர்துடைக்கக் கைகளிங்கு நீள்வ தில்லை;
கனிவான நெஞ்சங்கள் தோண வில்லை;
   கண்களிலே தூயசுடர் ஒளிர்வ தில்லை;
இனியஉள்ளம் நல்லசெயல் எங்கு மில்லை;
   இந்தமண்ணில் மகாத்மாக்கள் தோன்று வாரா?

சாதிக்குச் சங்கங்கள் உண்டே யன்றிச்
   சாதிக்கச் சங்கங்கள் இல்லை; வீணே
மோதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றி
   முனைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; உள்ளம்
பேதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றிப்
   பிணைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; இங்கே
சாதிக்கும் சங்கங்கள் சங்க மித்துச்
   சரியான விடைவருமா? அவன்க ணக்கில்!
 

No comments:

Post a Comment