Saturday, November 10, 2012

தேசத்தைப் பாடுவோம்

                             தேசத்தைப் பாடுவோம்

இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்
           என்றிருந்த கொடுமை தீர்ந்தே
   எல்லோரும் மன்னரென ஆகிவிட்டோம்; குதிகுதித்தே
           இங்காட்டம் போட்டு நின்றோம்;
நம்மவர்க ளாட்சியிலே நன்மையெனப் பலகோடி
           நாடிவரும் என்றி ருந்தோம்;
   நன்மைகளை விடத்தீமை நாள்தோறும் பெருகிவரும்
           நடப்பினையே காணு கின்றோம்;
நம்மவர்கள் குரங்காகிப் பூமாலை பிய்த்தெறிந்தே
           நர்த்தனங்கள் புரியக் கண்டோம்;
   நாட்டினிலே அதர்மங்கள் தலைதூக்கத் தர்மங்கள்
           நடுங்கிப்போ யொடுங்கக் கண்டோம்;
சிம்மமெனக் கருதியவர் சிறுநரியாய் நாட்டுக்குள்
           சிறுசெயல்கள் செய்யக் கண்டோம்;
   சீறிவருந் துன்பங்கள் சிதைந்தோடச் செய்திட்டே
           தேசத்தைப் பாடு வோமே!

ஆடியது பார்த்துநாளும் அடங்கியது போதுமிங்கே
           அச்சங்கள் போக்கி நிற்போம்;
   ஆரடாஅ!  நீயென்றே அதர்மங்கள் புரிவோரை
            அதட்டியே ஒடுக்கி வைப்போம்;
கூடிவரும் நன்மையெனக் கோடிமுறை கும்பிட்டும்
             கூடிவர வில்லை நன்மை;
   கொழுத்தசிறு நரியெல்லாம் தடியாட்சி நடத்திட்டே
             கோலோச்சி வெற்றி காண்பார்;
இடிவீழ்ந்த கதையாக இடுப்பொடிந்து கீழ்வீழ்ந்தே
              இந்தியன்நாம் கிடக்க லாமா?
   எழுந்துநின்று தூய்மைப்போர் முழக்கங்கள் செய்திடுவோம்;
              எடுத்தெறிவோம் ஊழல் தம்மை;
குடியாட்சி குடிமக்கள் தமக்கேயென் றாக்கிவிட்டே
              கொள்கையிலே ஊறி நிற்போம்;
   குலவுமிருள் தனையோட்டி விடிவெள்ளி கொணர்ந்திங்கே
               தேசத்தைப் பாடு வோமே!

ஆத்திரத்தில் நெருப்பள்ளிக் கொட்டுகிறேன் என்றென்னை
               அவசரத்தில் திட்டி டாதீர் !
   அமைதியுறப் பார்த்தாலும் அதுதானே தெரிகிறது;
               அப்புறம்நான் என்ன செய்வேன் ?
தீத்திறத்தில் முதிர்ந்தோரே வென்றுவரக் கண்டுதினம்
                சிந்தைநொந்து வாடு கின்றேன்;
   செம்மைநெஞ்சங் கொண்டவர்கள் அரசியலைப் புறக்கணித்துச்
                செயலற்றே ஒதுங்கக் கண்டேன்;
நாத்திறத்தில் கொடியோச்சும் நல்லவர்கள் ஏனிந்த
                 நாட்டுநலம் புறக்க ணிப்பார்?
   நன்மையெலாம் ஒன்றாகி நிமிர்ந்துவந்தால் தீமையெலாம்
                 நாடுவிட்டே ஓடி டாதா?
தீத்தொழிலே ஆளவிட்டுத் தினமும்நாம் அழுதுநின்றால்
                 செயல்வீரம் பழுதா காதா?
   செம்மைமனங் கொண்டோரே! திரண்டிங்கே எழுந்திடுவீர்!
                  தேசத்தைப் பாடு வோமே!+

    

No comments:

Post a Comment