Saturday, November 17, 2012

மைத்துனி

                                  உறவுகள்---'மைத்துனி'
                  ( கவிதை உறவு--ஆண்டுவிழா-18-05-09 )
                     -தலைமை;- கவிஞர் முத்துலிங்கம்--

மைத்துனிகள் என்றாலே மனசிலோர் கிளுகிளுப்பு;
எத்துணையோ உணர்வுவகை எழுந்து தலைகாட்டும்;

மாமியார் வீட்டிற்கு விருந்தென நான்சென்றால்
மாமியொடு என்மனைவி பொழுதெல்லாம் பேசிநிற்பாள்;

கிடைப்பதை உண்டுவிட்டுக் கூரைபார்த்துக் கிடப்பவனை
இடைவந்து சீண்டி, என்னென்ன வோகிண்டிப்,

பேச்சுத் துணையாகி விளையாட்டுக் கையாகி
மூச்செல்லாம் உயிர்மூச்சாய் ஆக்குபவள் மைத்துனிதான்;

கல்லூரி மங்கையவ ளென்பதனால் எம்பேச்சு
உள்ளபடி யேநல்ல சுவைநிறைந்த பேச்சாகும்;

என்துணையோ உள்ளிருந்தே 'என்னடி அரட்டை?'
உன்வாயைக் கொஞ்சம் அடக்கிக்கொள்'  என்றிடுவாள்.

அவளும் பேசமாட்டாள்; அருகமர்ந்து  பேசும்
இவளையும் பேச விடமாட்டாள்;ஆகவேதான்

பெண்ணையே அழகான பேயென்பார் போலும்;
என்னவோ போங்கள்; மைத்துனி மைத்துனிதான்;

இன்னொரு மைத்துனி; இவளோ படுசுட்டி;
என்னையவள் படுத்தும் பாடு இருக்கிறதே!

தாங்காத தொந்தரவா யிருந்தாலும் அதற்குள்ளே
நீங்காத இன்பஅலை வீசிடவே செய்கிறது;

ஓடி வருவாள்; ஒருதுள்ளுத் துள்ளியென்னை
நாடிவந்தே மடியில் நறுக்கென்றே அமர்ந்திடுவாள்;

கழுத்தில் கைபோட்டு முகத்தை இழுத்தணைத்துக்
களுக்கென்று கன்னத்தில் முத்தம் இட்டுவைப்பாள்;

மகிழ்ச்சிக் கரையுடைத்தே மனதில் நீங்காத
நெகிழ்ச்சிதரும் அவள்வயது; திகைக்காதீர்! வெறும்நான்கே;

இப்படி மகிழ்ச்சிதரும் மைத்துனிகள் இல்லையென்றால்
எப்படிநான்  மாமியார்  வீட்டில்  இருப்பதுவாம்?

அத்தான் எனஅழைத்தே கொஞ்சுவதும், எனக்கெனவே
மெத்தஅக் கரையோடு போட்டதா யெடுத்துவந்தே

உப்பிட்ட  தேநீரை   உள்மகிழ   நீட்டுவதும்,
சப்பிமுகம்  சுழிப்பதனைக் கைகொட்டி ரசிப்பதுவும்,

அக்கா!  உன்கணவர் அழகைப்பார்!  என்றவர்கள்
அக்காளை அழைப்பதுவும், அனைத்தும் சுவைதானே!

வீடுவந்த பின்பும்  நீங்காத  நினைவாகி
ஏடுதிருப் புவதைப்போ லினிப்பவை அவைதானே!

கட்டியவள் முறைப்பையும், கனைப்பையும், சுளிப்பையும்
கட்டிவந்த நாள்முதலாய்க்  கண்டுவரும் என்போன்றோர்

கண்மூடி எண்ணிக்  களிப்பதெலாம்  மைத்துனிகள்
எண்ணமுடி யாச்சேட்டை ஈந்த  சுவைதானே!

ஆதலினால் இளைஞர்காள்!  எதெதெற்கோ ஆசைப்பட்டு
மாதவள் தனியாளை மணங்கொள்ள  முயலாதீர்!

மைத்துனி இலாவீடு  மகிழ்ச்சியே  இலாவீடு;
மைத்துனிகள் வாழ்கவென மனங்களித்தே ஆடிடுவோம்.

இளைஞர்களே!    ஓர் அறிவுரை;

கோவிலில்லா ஊரில்  குடியிருக்க வேண்டாம்;
மைத்துனி இலாவீட்டில் பெண்ணெடுக்க வேண்டாம்.

,

No comments:

Post a Comment