Monday, January 14, 2013

கோபுரம்

                    இவைகள் பேசினால்--கோபுரம்

கோயிலில்லா ஊரினிலே யாரும் என்றும்
   குடியிருக்க வேண்டாமென் றறைந்தார் முன்னோர்;
கோயிலுக்கேன் அத்தகைய சிறப்பை ஈந்தார்?
   கோபுரத்துக் கேனந்த உயரம் தந்தார்?
வாய்தவறி வந்தசொல்லா? சொன்ன வர்தாம்
   வழிதவறிச் செல்பவரா? இல்லை; தங்கள்
வாய்திறந்தால் தெய்வத்தின் பேரு திர்க்கும்
   வாய்மையினை உடையவர்தாம் உணர்ந்து சொன்னார்;
          கோபுரம் பேசுகிறது;
உள்ளிருக்கும் முழுமுதலை வணங்கு தற்கே
   உள்நுழையும் போதினிலே கோபு ரம்போல்
உள்ளங்கள் உயரவேண்டும்; சின்னப் புத்தி
   ஒருசிறிதும் கூடாது; தூய்மை சேர்த்துக்
கள்ளமிலா நெஞ்சோடு பணிந்தால் தானே
   கடவுளருள் முழுமையாகப் பெறலாம்; அந்த
நல்லதொரு தத்துவத்தைக் காட்டு தற்கே
   நிமிர்ந்துநிற்பேன் கோபுரம்நான்; அறிந்து கொள்க!

உயர்ந்தவன்நான் அய்யமில்லை; என்மே லேதான்
   உயிரினங்கள் குடியிருக்கும்; பக்க மெல்லாம்
உயிரில்லாச் சிற்பங்கள் சிரிக்கும்; நாளும்
   உயிருள்ள வௌவாலும் புறாவும் வந்தே
அயர்வோடு குடியிருப்ப தன்றி எல்லா
   அசிங்கமுமே செய்துவைக்கும்; சினக்க மாட்டேன்;
மயக்கத்தில் கிடந்தாலும் குப்பை கூளம்
   மட்டின்றிச் சேர்த்தாலும் திட்ட மாட்டேன்.

வான்தொட்டு நிற்கின்ற தோற்றத் தாலே
   மண்தொட்டு வாழ்கின்ற மனிதர் நெஞ்சை
நான்தொட்டுப் பார்க்கின்றேன் அய்யய் யோஅந்
   நாற்றத்தை என்னசொல்வேன்? சாக்க டைக்குள்
தேன்சொட்டை வீழ்த்துதல்போல் 'இறைவா!' என்று
   தன்வாயால் உதிர்க்கின்றார்; இத்து ணையும்
ஏன்கெட்டுப் போனதென்றே எண்ணிப் பார்ப்பேன்;
   எனக்கொன்றும் புரியாமல் நெடிதாய் நிற்பேன்.

சிலசமயம் என்கீழே பலபேர் நின்று
   சதித்திட்டம் தீட்டிடுவார்; பாவம் செய்யக்
கலங்காமல் அவர்பேசும் பேச்சில் என்றன்
   கட்டுடலும் நடுங்கிவிடும்; யாரைத் தீர்க்க
அழகாகத் திட்டமிட்டுப் பேசி னாரோ
   அவர்வருவார்; எல்லோரும் அணைத்துக் கொள்வார்;
உளமொன்று செயலொன்றைக் கண்டே நான்தான்
   உதிர்த்திடுவேன் காரைகளை; வேறென் செய்ய?

நாட்டிலெங்கும் சத்தியத்தைக் காண வில்லை;
   நடப்பிலெங்கும் நேர்மையதே தெரிய வில்லை;
வீட்டிலெங்கும் அன்புக்கோ வேலை யில்லை;
   வெளியிலெங்கும் கருணைக்கோ இடமே யில்லை;
காட்டிலுள்ள விலங்கினங்கள் ஊர்க்குள் வந்து
   காலிரண்டில் நடந்துதிரி வனவே போல
நாட்டுநடப் பிருக்கிறதே! இந்த மண்ணில்
   நானுயர்ந்து நிற்பதற்கே நாணு கின்றேன்.

வாய்திறந்தால் பொய்மையன்றி வருவ தில்லை;
   மனந்திறந்த பேச்சுக்கு வழியே யில்லை;
சேய்பிறந்து வரும்போதே கையை நீட்டிச்
   சில்லரைகள் கேட்கிறது; நீதி எங்கோ
போய்மறைந்து கிடக்கிறது; நேர்மை லஞ்சப்
   புதருக்குள் மறைகிறது; இந்த மண்ணிற்
போயுயர்ந்து நான்மட்டும் நிற்ப தாலே
   புண்ணியந்தான் ஏதுமுண்டா? நாணு கின்றேன்.
             ------ காரைக்குடி 10-11-91  




No comments:

Post a Comment