Wednesday, January 23, 2013

சொல்லின் செல்வன்

       சொல்லின் செல்வன்

சொல்லின் செல்வ னானவன்;
   சூட்சு மங்க ளுணர்ந்தவன்;
வில்லின் வீரன் இராமனை
   வியக்க வைத்த தூயவன்;
கல்லின் வலிய மேனியான்;
   கடலைத் தாண்டும் வலியினான்;
சொல்லிப் பாட அனுமனே
   தூய நன்மை அருளுவான்;

அஞ்ச னைக்குப் பிறந்தவன்;
   அஞ்சி லொன்றைத் தாண்டியே
அஞ்சி லொன்றை வைத்துமே
   அச்சம் வென்ற விறலவன்;
செஞ்சொற் கிள்ளை சீதையின்
   சிந்தை நோயைத் தீர்த்தவன்;
நெஞ்சில் அவனைப் போற்றியே
   நித்தம் நன்மை எய்துவோம்.

வேத கீதன் நாமமே
   வாயில் வந்த போதிலே
நாத போதம் யாவுமே
   நம்மை வந்து சேருமே!
சீதை நாதன் தூதனைச்
   சிந்தை யேற்றிப் போற்றினால்
யாதும் தீமை யின்றியே
   என்றும் நன்மை யோங்குமே!

நன்மை வந்து சேருமே!
   நாளும் செல்வங் கூடுமே!
தின்மை ஒழிந்து தீயுமே!
   சஞ்ச லங்கள் பொசுங்குமே!
இன்மை யென்ப தின்றியே
   எதுவும் நிறைந்து திகழுமே!
செம்மைத் தூதன் அனுமனின்
   தூய அடிகள் போற்றுவோம்.
        (வேறு)
சொல்லாலே இராமபிரான் உளங்க வர்ந்த
   தூயானைத், தேவர்தம் துயர்கள் தீர்க்க
வில்லெடுத்த நெடியோனின் தொண்ட னாகி
   விறலரக்கர் தமையழித்த வென்றி யானை,
அல்லெடுத்த வனத்திற்குள் தவமி ருந்தாள்
   அல்லலினைத் தீர்த்திட்ட அழகன் தன்னைச்
சொல்லொண்ணாத் துயரத்துள் இராமன் மூழ்கச்
   சிரஞ்சீவி கொணர்ந்தானை வணங்குவோமே!

வேதத்தின் கரைகண்ட வித்தை யானை
   வீரத்தின் எல்லைகண்ட விறல்வல் லானை
நாதத்தின் முதற்பொருளாய்த் திகழ்கின் றானை
   நல்லொழுக்கம் தலைநின்ற மாணி யானைக்
காதத்தைக் கடந்தொளிரும் கால்வல் லானைக்
   காற்றுக்குப் பிறந்தானைத் தேவ ருக்கும்
தீதகற்றத் தென்னிலங்கை தீவைத் தானைச்
   சித்துவல்ல மறையானை வணங்கு வோமே! 

No comments:

Post a Comment